Tuesday, 20 March 2018

ஜகரிய்யா (அலை) வாழ்க்கை வரலாறு - 7


ஜக்கரிய்யா (அலை) அவர்களிடமிருந்து 6 துவா உத்திகள்

(அல் குர்’ஆன் 19:1-3]

1. நிதா’- இதன் பொருள், தவிப்புடனும், தேவையுடனும் அழைத்துக் கேட்பது. மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சூழ்நிலைகளில் நாம் இப்படித்தான் நாம் நேசிப்பவர்களை அழைப்போம். உதாரணமாக, ஒரு தாய் வெளிநாட்டுக்குச் செல்லும் தன் ஒரே மகனை வழியனுப்பும்போது, பாதுகாப்பாக இருக்கும்படியும், அவனுடைய உடல்நலத்தைப் பற்றி தனக்கு அடிக்கடி தெரிவிக்கும்படியும் வேண்டிக்கொள்வாள். இன்னொரு உதாரணம், ஒரு சூடான சண்டைக்குப் பின் உங்கள் அன்பான துணைவர் உங்களை விட்டு போகப்போகிறார், அப்போது, தவிப்புடன், “தயவு செய்து போகாதீர்கள்!” என கதறுவீர்கள். இதைப் போன்ற உணர்வு தான் ‘நிதா’ என்ற சொல்லில் உள்ளது, மேலும், நம்முடைய பிரார்த்தனைகளில் நாம் அதைத் தான் கொண்டு வர வேண்டும்.

2. ஹாஃபிய்யா – அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவன் என்பதில் ஜக்கரிய்யா (அலை) மிகவும் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார். அவனை அவர் தனிமையில் தாழ்ந்த குரலில் கேட்டது இந்த உண்மையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளம். தன்னுடைய அதிபதி எங்கிருந்தாலும் செவியேற்பவன் என்பதில் ஜக்கரிய்யாவுடைய இந்த உறுதி, வானவர்கள் அவரிடம் வந்து அல்லாஹ் அவருடைய துவாவை ஏற்றுக் கொண்ட நற்செய்தியைக் கூறியபோது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. வானவர்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக அவர் அல்லாஹ்வுக்கு நேரடியாக பதிலளிக்கிறார்.

மேலும், அல்லாஹ்வைத் தனிமையில் பிரார்த்திப்பது நாம் பிறருக்கு காட்டிக் கொள்வதற்காக அல்லது ரியா என்ற பாவத்திலிருந்து நம்மைக் காக்கும்.

(அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்துவிட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! … [அல் குர்’ஆன் 19:4-5]

3. அவர் துவாவைத் தொடங்கும் முறையைப் பாருங்கள். தனக்கு வேண்டியதை நேரடியாக அவர் கேட்கவில்லை. மாறாக, தன்னுடைய பிரச்சினைகளை விளக்குகிறார், அல்லாஹ்விடம் தன் பயங்களையும், கவலைகளையும் கூறுகிறார்.

4. ரப்பீ – என்னுடைய அதிபதியே, அன்பு மற்றும் நெருக்கமாக அல்லாஹ் அஸ்ஸவஜலை அழைக்கும் முறை – ரப்புக்கும், அடிமை (அப்து)க்கும் உள்ள உறவைக் காட்டுகிறது.

ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக! “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப்பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக! [அல் குர்’ஆன் 19:5-6]

5. துவாவுடைய காரணத்தை விளக்குவது: தன் மரணத்திற்குப் பின்னால் அல்லாஹ்வுடைய தீன் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய விரும்புகிறார்.

6. ‘யாகூப் (அலை) அவர்களுடைய குடும்பத்திற்கும்’ – அவருடைய வார்த்தைகளில் அவர் எத்தனை கவனமாக இருக்கிறார் என்பதைக் கவனியுங்கள் – யாகூப் (அலை) அவர்களின் சந்ததிகளில் எல்லோரும் வாரிசாவதற்கு தகுதியானவர்களாக இல்லை. அவர்களில் சிலர் தீயவர்களாகவும் இருந்தார்கள்.

ஜகரிய்யா நபியின் வரலாறு முடிவுற்றது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 21-03-2018.

ஜகரிய்யா (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாறு - 6


இதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறை அல்குர்ஆன் 3:44ல் கூறுகிறான்:

ذَٰلِكَ مِنْ أَنبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ ۚ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ

‘(நபியே) இவை (யாவும் நீர் அறியாத) மறைவான செய்திகளாகும். இவற்றை நாம் உமக்கு வஹீயின் மூலம் அறிவிக்கின்றோம். அன்றி மர்யமை (வளர்க்க) அவர்களில் எவர் பிணையேற்றுக் கொள்வதென்று (குறி பார்த்து அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்தபோதும்,நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தர்க்கித்துக் கொண்டபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை’

அவ்வாறு செய்ததும் ஹழ்ரத் ஜகரிய்யா நபி அவர்களின் எழுதுகோலைத் தவிர மற்றெல்லாவர்களின் எழுதுகோலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அதன்படி குழந்தை மர்யமை அன்னவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அக்குழந்தையை மிகவும் பேணிப்போடு வளர்த்து வந்தார்கள். குழந்தை சற்று பெரியதானதும் தங்கள் வீட்டினருகேயே ஒரு சிறு வீட்டைக் கட்டி அதில் அவர்களை இருக்கச் செய்து உணவுகளை அவர்களுக்கு கொடுத்து வந்தார்கள்.

இவ்வாறு சில காலம் சென்றபின் சிறுமி மர்யமின் வீட்டிற்குள் நுழைந்த ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு விதவிதமான கனிவர்க்
கங்கள் இருக்கக் கண்டு மிகவும் அதிசயத்துப் போனார்கள். மேலும் அந்தந்த பருவங்களில் விளையும் கனிவர்க்கங்களுக்கு மாற்றமாக புதிய கனிகள் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றையெல்லாம் யார் உங்களுக்குத் தருகிறார்கள்? என்று மர்யமிடம் கேட்டார்கள் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள்.

இவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து வருகின்றன. அவன் தான் நாடியவர்களுக்கு இவ்வாறெல்லாம் உணவளிக்கிறான்’ என்று கூறினாள் சிறுமி மர்யம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 21-03-2018.

ஜகரிய்யா அலை அவர்களின் வாழ்க்கை வரலாறு - 5



فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنبَتَهَا
 نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا ۖ كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا ۖ قَالَ يَا مَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا ۖ قَالَتْ هُوَ مِنْ عِندِ اللَّهِ ۖ إِنَّ اللَّهَ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ

3:37. அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம் அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார் “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?”என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது – நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்”என்று அவள்(பதில்) கூறினாள்.

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ ۖ قَالَ رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

3:38. அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”

மறுநாள் காலை குழந்தை மர்யமை ஒரு துணியால் போர்த்திக் கொண்டு மஸ்ஜித் நிர்வாகிகளை சந்தித்து தாம் அல்லாஹ்விடம் நேர்ந்து கொண்டதை சொல்லி அதற்காக இதை ஒப்புக் கொள்ளும்படி சொன்னார்கள்.

குழந்தை அழகாக இருந்ததால் பலரும் குழந்தையை வளர்க்க போட்டி போட்டார்கள். ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நான் வயதில் மூத்தவனாக இருக்கிறபடியால் இக்குழந்தையின் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள். மேலும் என் மனைவி ஈசாஉ ஹன்னாவின் சகோதரியாகவும் இருக்கிறார் என்றார்கள்.

அங்கு இவர்களையும் சேர்த்து மொத்தம் 21பேர் இருந்தனர். அவர்களில் எவரும் ஹழ்ரத் ஜகரிய்யா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ளவில்லை. இறுதியில், ஒவ்வொருவரும் தத்தம் எழுதுகோலின் மீது அவரவர் பெயர்களை எழுதி உர்துன் ஆற்றில் எறிய வேண்டியது. அவ்வாறு எறியப்படும் எழுதுகோலில் எவருடைய எழுதுகோல் தண்ணீரில் அடித்துச் செல்லப்படாது ஒரே இடத்தில் மிதந்து கொண்டு தங்கிவிடுகிறதோ அந்த எழுதுகோலுக்குரியவர்களிடம் அந்தக் குழந்தையை ஒப்படைத்து விடுவது என்று முடிவெடுத்தனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
பதிவு நாள்: 21-03-2018.

Thursday, 15 March 2018

ஐவேளை தொழுகையின் அவசியம்


✍நஸீமா இப்ராஹிம்

1.தொழுகை தீமையை தடுக்கும்:

நிச்சயமாகத் தொழுகை, மானக்கேடானதை விட்டும் வெறுக்கப்பட்டதை விட்டும் (தொழுபவரைத்) தடுக்கும். (சூரா அல் அன்கபூத்:45)

2.தொழுகையாளிக்கு கடந்த காலத்தைப் பற்றிய பயமுமில்லை. வருங்காலத்தை பற்றிய கவலையுமில்லை.

நிச்சயமாக எவர்கள் (ஓரிறை) நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்கள் செய்து தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய (நற்) கூலி அவர்களுடைய ரப்பிடத்தில் இருக்கிறது - இன்னும் அவர்களுக்கு எவ்வித பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
(சூராஅல் பகரா:277)

3.மரணம் வருவதற்கு முன் தொழுது கொள்ளுங்கள்:

(உண்மையாக) நம்பிக்கை கொண்ட என்னுடைய அடியார்களுக்கு; எந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் (பலனளிக்கக் கூடியதாக) இல்லையோ, அந்த ஒரு நாள் வருவதற்கு முன்னதாகவே, தொழுகையை அவர்கள் கடைப்பிடிக்கவும்; அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்யவும்' என்று (நபியே,) நீர் கூறுவீராக!
(சூரா இப்ராஹீம்:31)

4.தொழுகையை நிலைநாட்ட துஆ:

என்னுடைய ரப்பே என்னையும் என்னுடைய சந்ததியிலுள்ளோரையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாயக! எங்களுடைய ரப்பே! (இந்த) என்னுடைய பிரார்த்தனையை நீ ஏற்றுக் கொள்வாயாக!
(சூரா இப்ராஹீம்:4)

5.தொழுகை நேரங்கள்:

 (நபியே,) சூரியன் (உச்சியை விட்டுச்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (யுள்ள லுஹர், அஸர், மஃரிப், இஷா முதலிய) தொழுகையையும் இன்னும் பஜ்ருத் தொழுகையையும் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக ஃபஜ்ருடைய தொழுகை (மலக்குகளின்) வருகைக்குரியதாக இருக்கிறது. (பனீஇஸ்ராயீல் :78)

6.வெற்றியாளர்கள் யார்?

இன்னும், அவர்கள் தம் தொழுகைகளின் மீது கவனமுள்ளவர்கள். (அல்முஃமினூன்:9)

7.பாங்கு சொல்லப்பட்டவுடன் பள்ளிக்கு விரையுங்கள்:

விசுவாசங் கொண்டோரே, வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக (நீங்கள்) அழைக்கப்பட்டால், அல்லாஹ்வை நினைவு கூர்வதின் பால் நீங்கள் விரைந்து செல்லுங்கள்; இன்னும் அந்நேரத்தில்) வாணிபத்தை விட்டுவிடுங்கள் - நீங்கள் (இதன் பலனை) அறிந்தவர்களாயிருந்தால் இதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
(அல்ஜூமுஆ:9)


Wednesday, 14 March 2018

ஏப்ரல் - ஸாலிஹ் (அலை) அவர்களின் வாழ்க்கை தொடர்


ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்பித்தது

ஸாலிஹ் நபியை அவரது சமுதாயம் பொய்யரெனத் தூற்றியது ஸமூது(கூட்டமு)ம் எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தது.

"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.

"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).

இவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அல்லாஹ் பின்வருமாறு பதிலளித்தான்.

"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்?" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.

அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக! (அல்குர்ஆன் 54:23-27)

அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹ்; "நீங்கள் (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா?" எனக் கூறியபோது

"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய (இறை) தூதன் ஆவேன்.

"ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; எனக்கும் வழிப்படுங்கள்.

"மேலும், இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை நிச்சயமாக எனக்குரிய கூலி அகிலங்களின் இறைவனிடமே இருக்கிறது.

"இங்குள்ள (சுகபோகத்)தில், நீங்கள் அச்சந்தீர்ந்தவர்களாக விட்டு வைக்கப்படுவீர்களா? (அல்குர்ஆன்: 26:141-145)

அத்தாட்சியாக அனுப்பப்பட்ட ஒட்டகம்

ஸாலிஹ் (அலை) அவர்களைப் பொய்யரெனக் கருதியதோடு அவரைச் சூனியக்காரர் என்றும் வர்ணித்தார்கள். மேலும் ஸாலிஹ் நபி இறைதூதர் தாம் என்பதை நிரூபிக்க ஓர் அடையாளத்தைக் கொண்டு வருமாறு வேண்டினர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க அல்லாஹ் அற்புதமான ஓர் ஒட்டகத்தைச் சான்றாக அனுப்பினான்.

"நீரும் எங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி (வேறு) இல்லை எனவே, நீர் உண்மை சொல்பவராக இருந்தால் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரும்" (என்றனர்).

அவர் சொன்னார்; "இதோ (அத்தாட்சியாக) ஒரு பெண் ஒட்டகம்! (கிணற்றிலிருந்து) அதற்கு (ஒரு நாள்) தண்ணீர் குடிப்புண்டு உங்களுக்கும் குறிப்படப்பட்ட ஒரு நாளில் தண்ணீர் அருந்தும் முறை வரும்."
(அல்குர்ஆன்: 26:153,154)

இன்னும், அ(வ்வொட்டகத்)தை எவ்விதத் தீங்கைக் கொண்டும் நீங்கள் தீண்டாதீர்கள்; அவ்விதமாக(க எதுவும் செய்வீர்களா)யின், கடினமான ஒரு நாளின் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்."

அவர்கள் அதன் கால் நரம்பதை; துண்டித்து (கொன்று) விட்டனர். அதனால் அவர்கள் கைசேதப்பட்டவர்களாகவே ஆகிவிட்டார்கள்.
 (அல்குர்ஆன்:26:155, 156)

ஆக, அல்லாஹுவால் ஸமூது சமுதயாத்திற்கு அத்தாட்சியாக வழங்கப்பட்ட ஒட்டகம் ஏனைய ஒட்டகங்களைவிட முற்றிலும் வேறுப்பட்டுதான் இருக்கும் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. மேலும் ஸமூது சமுதயாத்திற்கென்றுள்ள கிணற்றில் ஒரு நாள் அந்த சமுதாய மக்கள் நீர் பருக வேண்டும். மற்றொரு நாள் ஒரு சமுதாயம் அருந்தும் நீரை ஒரே ஓர் ஒட்டகம் அருந்தவேண்டுமென்று அல்லாஹ் கட்டளை பிறப்பிக்கின்றான் என்றால் அந்த ஒட்டகம் மிக மிக பிரம்மாண்டமானது என்பதையும் விளங்கி கொள்ள முடிகிறது. அதே சமயம் அந்த பிரம்மாண்டம் உடல் அமைப்பிலா? உருவத்திலா? என்று எந்த வித முடிவுக்கும் நம்மால் வர முடியாது.

ஸாலிஹ் நபியின் சமுதாயம் ஸாலிஹ் நபியை நபியென விசுவாசம் கொள்ள ஓர் அத்தாட்சியைக் கேட்டன. அதற்காக அல்லாஹ் ஒட்டகத்தை அத்தாட்சியாக அனுப்பினான். இதுவே திருமறை குறிப்பிடும் உண்மை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

விடுமுறையும் விளையாட்டும்


வாழ்க்கை மனிதனுக்கு கிடைத்த மாபெரும் முதலீடு. ஒவ்வொரு விநாடியும் விலை மதிப்பற்றது. தனது முதலீட்டின் மூலம் அபரிமிதமான லாபம் சம்பதிப்பவன்தான் அறிவாளி. இஸ்லாமும் உயர்தரமான நோக்கத்துக்காக வாழ்வதையே வலியுறுத்துகிறது. வீனானவர்றை புறக்கனிப்பவர்களையே உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் என்பது இறைமறையின் வாக்கு (23:03) வீண் விளையாட்டில் காலம் கழிப்பவன் லட்சியவாதியாக இருக்க முடியாது . அதற்காக அறவே விளையாடக் கூடாது என்று சொல்லவில்லை.

 உடலையும் உள்ளதையும் உற்சாகப்படுத்தும் அளவுக்கு மார்க்கம் அனுமதித்த முறையில் விளையாடுவதில் தவறில்லை. ஹதீஸ்களில் காணப்படும் விளையாட்டுகள் அனைத்தும் உயர்ந்த நோக்கம் கொண்டவை. விளையாட்டும் கூட வீண் போகக் கூடாது. வீரியம்மிக்கதாக இருக்க வேண்டும் என்று கருதும் உயர்ந்த மார்க்கமாக இஸ்லாம் மட்டுமே இருக்க முடியும்.

அம்பு எறிவது, குதிரை சவாரி, மனைவியுடன் விளையாடுவது. இவை தவிர ஒரு முஸ்லிமுடைய அனைத்து விளையாட்டும் வீணானவை என நபி (ஸல் ) சொன்னார்கள்.(திர்மிதீ ) இவை மூன்றும் வெறும் விளையாட்டல்ல. அம்பு எறிவதும், குதிரை சவாரியும் அக்காலத்தின் மிகச்சிறந்த யுத்தப் பயிற்சி.

கடைசியாக சொன்ன விளையாட்டு மனித இனம் நிலைப்பதற்கும் பல்கிப் பெருகுவதற்கும் காரணமாக இருக்கிறது. நீச்சல் கற்றுக் கொள்வதையும் ஹதீஸில் சிலாகித்து கூறப் பட்டுள்ளது. அது நல்ல உடற் பயிற்சியாகவும் தற்காப்பு பயிற்சியாகவும் இருப்பதோடு தற்க்காலத்தில் சிறந்த யுத்தப் பயிற்சியாகவும் இருக்கிறது. ஓட்டப் பயிற்சியும் பயனுள்ள விளையாட்டுகளின் பட்டியலில் சேரும். அதனால் உடல் ஆரோக்கியமாகும். உற்சாகமடையும் என்பதில் சந்தேகமில்லை.

நபித்தோழர்களுக்கு மத்தியில் ஓட்டப் பந்தயம் நடைபெற்ற பல நிகழ்வுகளை வரலாற்றில் காணமுடிகிறது.
 உமர் (ரலி) அவர்களுக்கும் ஜூபைர் (ரலி) அவர்களுக்கும் இடையில் இரண்டு தடவை ஓட்டப்பந்தயம் நடந்தது.ஆளுக்கொருமுறை வெற்றிபெற்று போட்டியை சமன் செய்தார்கள்.

விளையாடலாமா?

சிரமப்பட்டு படித்து பரீச்சை எழுதிய பிள்ளைகளை பெற்றோர்கள் விடுமுறை காலங்களில் கொஞ்சம் சுதந்திரமாகவே விட்டுவிடுவார்கள். எனினும் மார்க்கத்தை படித்துக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவ்வப்போது விளையாட அனுமதித்தாலும் மார்க்கம் விதித்த வரம்புக்குட்பட்டு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

1. சதுரங்கம் (செஸ் ), சொக்கட்டான், மிருகங்களை மோதவிடுதல், போன்ற ஷரீஅத்தில் பகிரங்கமாக தடுக்கப்பட்ட விளையாட்டாக இருக்கக் கூடாது.

2. அனுமதிக்கப்பட்ட விளையாட்டாக இருந்தாலும் அதில் ஹராம் கலக்கக் கூடாது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறைக்க வேண்டிய இடங்களை முழுமையாக முறையாக மறைக்க வேண்டும். உடல் உறுப்புகளை எடுத்துக் காட்டும்படியாக ஆடை இருக்கக் கூடாது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து விளையாடக்கூடாது. தற்காலத்தில் கிரிக்கெட் முதல் அனைத்து விளையாட்டிலும் மலிந்து கிடக்கும் சூதாட்டம் அறவே கூடாது. மற்றவர்களுக்கு தொல்லை தரக்கூடாது.

ஒரு மனிதர் கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருந்தார், இதைக் கண்ட அப்துல்லாஹிப்னு முகFப்பல் (ரலி) அவர்கள், கல்லெறிந்து விளையாடாதீர். நபி (ஸல்) கல்லெறிவதை தடை செய்திருக்கிறார்கள். அதன் மூலம் வேட்டையாடவும் முடியாது, விரோதியைதாக்கவும் முடியாது. எனினும் இந்தக் கல் யாருடைய பல்லையும் உடைத்துவிடும், கண்ணை பிடுங்கி விடும் என்று கூறினார்கள். (புகாரி )

3.விளையாட்டின் மூலம் தொழுகை போன்ற கடமைகளும் குர்ஆன், ஹதீஸ், பிக்ஹு போன்றவற்றை படிப்பது உட்பட செய்யவேண்டிய வேலைகளும் வீணாகி விடக்கூடாது.

உமர் (ரலி) அவர்களுடன் ஒரு குழு ஹஜ்ஜுக்கு புறப்பட்டது, போகும் வழியில் 'கவ்வாத்' என்பவரை கவி பாடுமாறு மக்கள் வேண்டினர். அவரும் கவி பாடிக் கொண்டு வந்தார். Fபஜ்ரு நேரம் வந்தவுடன் உமர் (ரலி) அவர்கள் கவ்வாத் அவர்களே! நிறுத்துங்கள் தொழுகைக்கு நேரமாகி விட்டது என்று கூறினார்கள். குறிப்பிட்ட எல்லை நிர்ணயித்து ஓடுபவர்களாகவும் ஒருவருக்கொருவர் சிரிப்பவர்களாகவும் சஹாபாக்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இரவு நேரம் வந்துவிட்டால் துறவிகளாக (வணங்கக் கூடியவர்களாக) ஆகிவிடுவார்கள் என்று பிலாலிப்னு ஸஅத் (ரஹ் ) அவர்கள் கூறுகிறார்கள். (மிஷ்காத்)

4. விளையாட்டு உடற்ப்பயிற்சியாக இருக்கவேண்டும். அதனால் ஆரோக்கியம் மேம்பட வேண்டும். எதிரியை எதிர்கொள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். குறைந்த பட்சம் மன அழுத்தத்தையும், சோர்வையும் நீக்குவதற்கு விளையாட்டு பயன் படவேண்டும். வெறும் டைம்பாஸுக்காக விளையாடுவதோ, பொழுதும் அதிலேயே மூழ்கிக் கிடப்பதோ கூடாது.

இப்னு அப்பாஸ்( ரலி )அவர்கள் நீண்ட நேரம் குர்ஆன், ஹதீஸ் பேசிவிட்டு பிறகு தோழர்களிடம் கொஞ்சம் ருசியை மாற்றி கொள்ளலாம். என்று கூறி வரலாறு மற்றும் கவிதைகளை சொல்லி உற்சாகப் படுத்துவார்கள்.

எனவே கூறப்பட்ட நிபந்தனைகளின்படி வரும் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இறைவன் அருள் புரிவானாக!

நன்றி:மிஹ்ராப் மலர்கள்

Tuesday, 13 March 2018

சிரியா - வரலாறும் படிப்பினையும் - 01


✍சே.ச.அனிப் முஸ்லிமின்

சிரிய தேசம் இன்று முஸ்லீம்களின் கவலை தேசம்.

இன்று சிரியாவின் நிலை நமக்கு பல பாடங்களை தரக்கூடியது. சிரிய தேசம் குறித்த சில தகவல்கள் இங்கு…

சிரியா

சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இது மேற்கில் லெபனானையும்,தென்மேற்கில் இசுரேலையும யோர்தானையும், கிழக்கில் , வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நவீன சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. ஆனாலும், அதன் இருப்பை கி.மு நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை காணலாம். சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சுன்னி முஸ்லிம்களாவர், மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும், 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது. ஏறத்தாள கி்.மு. 10,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே,நியோலிதிக் கலாசாரத்தின் நிலையமாக சிரியா விளங்கியது. அங்கே, உலகின் முதல் கால்நடை வளர்ப்பு, விவசாயச் செய்கை என்பன மேற்கொள்ளப்பட்டது. நியோலிதிக் காலப்பகுதியில், முரீபத் பண்பாட்டின் செவ்வக வடிவிலான வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன.

சிரியாவும் நபிகள் நாயகமும்:

நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் இன்றைய சிரியா சியாம் என்று அழைக்கப்பட்டது. முகம்மது நபியவர்களுக்கும், சிரியாவின் மக்கள் மற்றும் கோத்திரங்களுக்கும் இடையிலான முதலாவது தொடர்பு ஜுலை, 626 இல் துாமதுல் ஜன்தல் படையெடுப்புடன் ஆரம்பித்தது

பல நபி மொழிகள் சிரியா தொடர்பாக இருப்பதை நாம் நபி நூல்களில் காணலாம்.

அவற்றில் மிக முக்கியமான நபிமொழி:

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  ”இறைவா! எங்கள் சியாம் நாட்டிற்கும் யமன் நாட்டிற்கும் நீ பரக்கத் செய்வாயாக!“ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் “எங்கள் நஜ்து நாட்டிற்கும் (பிரார்த்தியுங்கள்)“ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் “அங்குதான் குழப்பங்களும் பூகம்பங்களும் ஏற்படும். அங்கு தான் ஷைத்தானின் கொம்பு தோன்றும்“ என்று கூறினார்கள்.
(ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 15.
ஆனால் இந்த சியாம் இன்றைய சிரியா, லெபனான், பாலஸ்தீன் மற்றும் ஜோர்டான் ஆகிய நான்கு நாடுகளை குறிக்கும்.

இன்னும் நபி ஈஸா அலை அவர்கள்  வந்து இறங்கும் வெள்ளை பள்ளியும் உள்ள இடம் இந்த சிரியா.

சிரியாவின் வரலாற்றுச் சிறப்புக்கள்

சிறிய தேசம் பல நபிமார்களையும் பல நபி தோழர்களையும் கண்ட பூமியாகும்.

வரலாற்றில் பல ஆட்சி மாற்றங்களை சந்தித்த சிரியாவை கடைசியாக ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்து ஹிஜ்ரி 12 ல் அபூபக்கர் (ரலி) தலைமையிலான இஸ்லாமிய கிலாபத் ஆட்சியில் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தலைமையிலான இஸ்லாமியப் படை சிரியாவின் தென்மேற்கு பகுதியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அதன் பின் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் தலைமையிலான படை டமஸ்கஸ் உள்ளிட்ட முழு சிரியாவையும் இஸ்லாத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. அன்றைய சிரியாவின் இஸ்லாமிய ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். உமையாக்களின் ஆட்சியில் சுமார் 90 வருடங்கள் சிரியாவின் தலை நகராக டமஸ்கஸ் இருந்தது.
இஸ்லாமிய கிலாபதின் ஐந்தாம் கலீபா முஆவியா அவர்களின் தலைநகரமா கொண்ட பூமி சிரியா. அவரை தொடர்ந்து பல ஆண்டுகள் கிலாபத் மையம் கொண்டு இருந்த பூமி சிரியா ஆகும்.  இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.

பல மார்க்க அறிஞர்களையும் கொண்ட பூமி. இஸ்லாமிய வரலாறை எழுதினால் மக்கா மதினாவுக்கு பிறகு தவிர்க்க முடியாத ஒரு பெயர் சியாம் என்ற சிரியா ஆகும்.

நவீன சிரியா

உமையா ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின்னர் சிரியா பிரான்ஸ் நாட்டில் காலனி நாடாக மாறியது. உலக போரின் தாக்கத்தால் சிரியா 1936 இல் பிரான்சிடமிருந்து மக்கள் ஆணை மூலம் விடுதலைப் பெற்றது. இருந்தும் எப்ரல் 16 1946 ல் தான் முழுமையாக சுதந்திரம் பெற்றது.

சிரியாவும் பாத் கட்சியும்

1947 ‘ல் ஹிஸ்ப் அல் பாத் என்பவரால் பாத் கட்சி என்ற சோசியலிச கட்சி தொடங்க படுகிறது. பாத் என்றால் மறுமலர்ச்சி என்று பொருள். இந்த ஒற்றுமை, புரட்சி, சோசியலிசம் என்ற கொள்கையை முன்னிறுத்தியது. 1957’ல் நடந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்றது இந்த கட்சி. 1958 ம் ஆண்டு எகிப்துடன் இடம்பெற்ற ஓர் ஒப்பந்ததத்தின் மூலம் எகிப்து, சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் ஐக்கிய அரபு குடியரசு என்று தங்களை அறிமுகப்படுத்தின. சலாஹ் ஜதீத் சிரிய அதிபராக 1966 முதல் 1970 வரை இருந்தார். அந்த அரசின் ராணுவ அதிகாரத்தை ஹாஃபீஸ் அஸ்ஸாத் பெற்றிருந்தார். 1963 ‘ல் பாத் கட்சியினர் புதிய அரசை உருவாக்கினர்.
இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் 1967 ல் நடந்த யுத்தத்தில் சிரியா எகிப்துக்கு ஆதரவாக முக்கிய பங்காற்றியது. அதில் இஸ்ரேலின் பார்வை சிரியா மீது திரும்பி 48 மணி நேரத்தில் சிரியாவை வீழ்த்தியது இஸ்ரேல். இந்த தோல்வி அதிபர் ஜதீதுக்கும் இராணுவ தளபதி அஸ்ஸாதுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியது.

அதன்பின் 1970ல் யாசர் அரஃபாத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருக்கும், ஜோர்டானுக்கும் இடையே காஸா பகுதியால் ஏற்பட்ட பிரச்சனையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இராணுவ தளபதியான ஹஃபீஸ் அஸ்ஸாத் படைகளை அனுப்பி இராணுவ உதவிகளையும் செய்தது ஜோர்னானின் மன்னர் ஹீசைன் தலைமையிலான படைக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஹஃபீஸ் அஸ்ஸாத் பெரும் தலைவராக மாறினார் பின் தனக்கு இருந்த இராணுவ பலத்தை கொண்டு அதிபராக இருந்த ஜதீதிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றினார் பின் நண்பரான ஜதீதையே கைது செய்து சிறையில் அடைத்தார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

மரணத்தை நினைவு கூர்வோம் - 1


ஆலிமா நஜ்மா சித்தீக்கியா MA

இவ்வுலகை படைத்த ஏக இறைவனின்  மாபெரும் படைப்புக்களில் ஒன்றே வாழ்க்கையும் மரணமுமாகும்.
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்
 ‘அவன் எத்தகையவனென்றால், உங்களில் சிறந்த முறையில் நற்காரியத்தில் ஈடுபடுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான்.’ (அல்முல்க்: 02)

உலகில் வாழும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஒரு நாள் மரணம் என்னும் முடிவை அடைந்தே தீர வேண்டும்.
மரணம் எனும் விடையில்லா பயணத்தின் நேரம், நாள், இடம், காரணம் ஆகியவற்றை அறியாமலேயே அற்ப உயிரனமாகிய
கொசு முதல் பகுத்தறிவு பெற்ற மனிதர் வரை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கும், இவ்வுலக இன்ப துன்பங்களை
அடைவதற்கும் விரும்புவது போல் மரணம் எனும் முடிவு எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏற்படலாம்
எனும் சிந்தையை மனிதர்கள் ஒவ்வொருவரும் தமக்குள்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)

உலகம் தோன்றிய காலம் முதல் இன்றைய காலம் வரை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று ஒருவரைக் கூட நம்மால் முன்னிறுத்த முடியாது. உலகம் முழுவதும் என்னிலடங்காத பிறப்புகளும், இறப்புகளும் அன்றாடம்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, இவ்வுலகில் வாழும்
ஒவ்வொரு ஜீவராசிகளும் நமக்கு மரணம் எனும் எல்கை இருக்கிறது என்பதை  உணர்ந்து வாழவேண்டும்.
உண்மையான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும்
அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.

ஒருவர் உலகில் பிறந்து அல்லாஹ்வையும் இறை தூதர் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நல்லவனாக வாழ்ந்தால் அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு ஏற்படும் நிலையும், அதைப் போல் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமாக நடந்து கெட்டவனாக வாழ்ந்தால் அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு ஏற்படும் நிலையை பற்றி பார்ப்போம்.

தீய ஆத்மாவின் உயிர் பறிக்கப்படும் முறை

“அவர்கள் (மரணிக்கும் போது) அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய பின் புறங்களிலும் அடித்தவர்களாக மலக்குகள் உயிர்களைக் கைப்பற்றுவார்கள். (திருக்குர் ஆன் 47:27)

நபி (ஸல்) கூறினார்கள் : கெட்டவர்களின் உயிரை கைப்பற்றும் வானவர்கள் அவனது தலைப்பக்கம் வெறுப்பிலும் கோபத்திலும் வெளியேறு என்று கூறுவார்கள். அப்போது அந்த உயிர் ஈரமான கம்பளியை முள்ளில் போட்டு இழுப்பது போன்ற கடுமையான வேதனையுடன் பிடுங்கப்படும். (அவனுடைய நரம்புகளும், எலும்புகளும் தெறித்து விடுவது போன்ற வேதனை ஏற்படும்.)

 நல்ல ஆத்மாவின் உயிர் பறிக்கப்படும் முறை:

நல்லோர்களின் உயிரை கைப்பற்றும் வானவர்கள் அவனது தலைப்பக்கம் அமர்ந்து கொண்டு ‘ நல்ல ஆத்மாவே அல்லாஹ்வின் மன்னிப்பிலும், பொருத்தத்திலும் வெளியேறுவாயாக! என்று கூறுவார்கள். உடனே அவ்வடியானின் உயிர் தண்ணீர் பாத்தரத்தில் இருந்து தண்ணீர் விழுவதைப் போன்று (எவ்வித கஷ்டமின்றி) வெளியேறிவிடும்.”  (நூல் : அபூதாவூது. நஸயி, அஹமது, ஹக்கிம்.)

தீய ஆத்மாவின்  நிலை :
கெட்டவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் செத்த பிணங்களின் நாற்றத்தை விட கடுமையான நாற்றம் வெளிப்படும் என்று நபி(ஸல்) கூறிவிட்டு தனது மேலாடையை எடுத்து தனது மூக்கை பொத்திக் கொண்டார்கள். பிறகு கம்பளியில் சுருட்டப்பட்ட அந்த உயிரை மலக்குகள் முதலாவது வானத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். வானத்தில் உள்ள மலக்குகள் “ இந்த கெட்ட வாடையுடைய உயிர் யாருடையது என்று கேட்பார்கள்” உலகில் வாழ்ந்த ஒரு கெட்டவனுடைய உயிர் இது என்று கூறுவார்கள். தொடர்ந்து வானத்தை திறந்து விடுமாறு கூறுவார்கள். அவனுக்கு வானம் திறக்கப்படமாட்டாது. என்று கூறிய நபி(ஸல்) பின்வரும் இறைவசனத்தை ஒதினார்கள்.
“ எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றை புறகணித்து) பெருமையடித்தார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா, மேலும், ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்வர்களுக்குக் கூலி கொடுப்போம்.”            (திருக்குர் ஆன் : 7.40).

அதன் பின் இவனுடைய பெயரை பாவிகளின் பெயர்களை பதியும் (ஸிஜ்ஜீன்) என்ற ஏட்டில் எழுதி பூமியின் அடிவாரத்தில் அந்த உயிர் எடுத்து செல்லப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.  ( நூல் : அபூதாவூது. நஸயி,அஹமது, ஹக்கிம்.)

“ குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில் உள்ளது. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படி தெரியும் ? (அது பாவிகளின் செயல்கள்) பதிவு செய்யப்பட்ட புத்தகம்”. (திருக்குர் ஆன் 83:7-9)

நல்ல ஆத்மாவின்  நிலை :
நல்லவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் அதை சுவனத்து துணியிலும்  நறுமணத்திலும் வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும், அதை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். அங்கே உள்ள வானவர்கள் வானத்தின் வழியை திறப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வானத்தின் ஆத்மாவுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வார்கள். கடைசியாக ஏழாவது வானத்திற்கு அந்த ஆத்மா சென்றதும், எனது நல்லாடியார்களின் உயிரை இல்லய்யூன் எனும் (நன்மை செய்தோரின் பட்டியல்) ஏட்டில் எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
“நிச்சயமாக நல்லோர்களின் செயலேடு இல்லிய்யீனில் இருக்கும். இல்லிய்யீன் என்பது என்னவென்று (நபியே!) உமக்கு அறிவித்தது எது? (அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம்” (திருக்குர் ஆன் 83:18:-20)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஜனாஸாவை (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் போது அந்த மைய்யத் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள், என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக (கெட்ட மைய்யத்தாக) இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். (அறிப்பவர் : அபூஸயீதுல்குத்ரி(ரலி) நூல் : புகாரி 1380)

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

மறுமை வாழ்க்கையே நிரந்தரமானது - 3


அல்ஹாபிழ் அ.சதாம் உசேன் ஹசனி (B.A Arabic)

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்வின் உண்மைத்துவத்தை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றான்.

இதை  தவிர்த்து அல்லாஹ்வும் இந்த மனித சமூகத்தின் மீதுள்ள அளவு கடந்த பரிவின் காரணமாக தன் தூதுவர்களின் மூலமும் இந்த உலக கலியாட்டங்களில் மூழ்கி கிடந்த மக்களை எச்சரித்துமிருக்கின்றான்.

இன்னும் தன் அருள் மறையிலும் இந்த உலக வாழ்வின் உண்மைத்துவம் பற்றி மிகத் தெளிவாக பாடம் கற்பிக்கின்றான்.

குர்ஆனை புரட்டும் எவராயினும் அவர் கண்டிப்பாக குர்ஆனின் ஒவ்வொரு பக்கங்களிலும் இந்த உலக வாழ்வு அற்பமானது என்ற உண்மையையும் மறுமை வாழ்வு நிரந்தரமானது என்ற உண்மையையும் பெற்றுக் கொள்வார்.

இன்னும் இந்த மனித சமூகம் எப்படியாவது நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் எத்தனையோ உதாரணங்களை கூறியும் விளக்கப்பட்டிருப்பதை குர்ஆனில் அவர் பெற்றுக் கொள்வார்.

இன்னும் இந்த உலக கலியாட்டங்களில் தங்களை அர்பணித்தவர்களின் கெட்ட முடிவு எவ்வாறு இருந்தது என்பதையும் பெற்றுக் கொள்வார்.

இந்த மனித சமூகத்தில் பெறும் பான்மையினர் எந்த உலக வாழ்வை பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டும்; அதை சம்பாரிப்பதே தன் இலட்சியமாக எண்ணிக் கொண்டும் தங்களின் உயிர்களையும்; உடமைகளையும்; மனைவி; மக்களையும் தூக்கி எறிந்து விட்டு செயல்படுகின்றார்களோ அந்த உலகைப் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க நாம் கடமை
பட்டிருக்கின்றோம்.

"அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலக வாழ்வு விளையாட்டும்;வீணும்;கவர்ச்சியும்;
உங்களுக்கு மத்தியில் செல்வத்தாலும்;
குழந்தைப் பேற்றாலும் ஒருவர் மற்றொருவரிடம் பெருமையடிப்பதே ஆகும்.
 அல்குர்ஆன் (57:20).

இவ்வுலகம் ஏமாற்றக் கூடியது என்றும் அதே வசனத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

"இவ்வுலக வாழ்வோ மனிதனை ஏமாற்றக் கூடிய அற்பமானதே." அல்குர்ஆன் (57:20)

இப்படி இந்த உலக வாழ்வின் பல உண்மைகளை குர்ஆன் தெள்ளத் தெளிவாக இந்த மனித சமுதாயத்திற்கு கோடிட்டுக் காட்டுகிறது.

குர்ஆன் கூறுவது போலவே நிச்சயமாக இவ்வுலகம் ஏமாற்றக் கூடியதே!

மனிதன் பிறக்கும் சமயம் இவ்வுலகை புதுமையாக காண்கின்றான்.

இதற்கு முன்பு இருட்டறைக்குள் இருந்த மனிதன் இப்பொழுது விசாலமான மிக வசதிமிக்க பூமியையும்; வானத்தையும் கண்டு மதிமயங்கி இவ்வுலக வாழ்வின் வீணும் விளையாட்டுமே நோக்கமாக அவனுக்கு மாறிவிடுகிறது.

இன்னும் தன் வாழ்வே இந்த கலியாட்டங்களில் கழிப்பதற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தவறாக புரிந்து கொள்கின்றான்.

இதனால் "தான் யார்?

தன்னைப் படைத்தவன் யார்?

நீண்ட நெடிய வானத்தை படைத்தவன் யார்?

பிரம்மாண்டமான பூமியை படைத்தவன் யார்?

என்பதை எல்லாம் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறாமலேயே இவ்வுலக வாழ்வின் ஏமாற்றத்திற்கு பழியாகிவிடுகின்றான்.

மனிதன் உலக வாழ்வில் ஏமாறும் விதம்:

மனிதன் குழந்தையாக இருக்கும் சமயம் அவனுக்கு உலக வாழ்வு என்றாலே அவன் தந்தை வாங்கிக் கொடுத்த பொம்மைதான் .
அது தான் அவனுக்கு முழுஉலகமாக காட்சியளிக்கும். அதேபோன்று யார் அவனுக்கு பொம்மைகளை வாங்கிக் கொடுக்கின்றார்களோ அவர்களை அவன் நேசிக்கின்றான்.

ஆனால் யாரேனும் அவனுடைய கையிலிருந்து அந்த பொம்மையை பிடுங்கிக் கொண்டால்; தன் உலகமே பிடுங்கப்பட்டதாக துடியாய் துடித்துவிடுகின்றான்.

எவர் பிடுங்கினாரோ அவரை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகின்றான்.

பிறகு படிப்படியாக அவன் ஓடியாடும் பருவத்தை அடையும் சமயம் எந்த பொம்மையை தன்னுடைய முழு உலகமாக எண்ணியிருந்தானோ அதனை முழுவதும் வெறுக்க ஆரம்பித்து விடுகின்றான்.

அவனிடத்தில் யாராவது பொம்மையை கொடுத்தால் அவரை ஏளனமாக பார்க்க ஆரம்பித்து விடுகின்றான்.

ஏனென்றால் இப்பருவத்தில் அவன் கண்ணா மூச்சி போன்ற பெரிய விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்து விட்டான்.

இப்படியே தன் பருவம் படிப்படியாக உயர்ந்து வாலிப பருவத்தை அடைகின்றான்.

அப்பொழுது தான் விளையாடும் அனைத்து பொருட்களையும் புறந்தள்ளிவிட்டு;

தன்னை அலங்கரிப்பதில் ஈடுபட ஆரம்பிக்கின்றான்.

தன் ஆடைகளை சுருங்காத நிலையிலும் இன்னும் உடல் முழுவதும் வாசனை திறவியங்களை பூசியவனாகவும்;
தன் தலையை பலமுறைகளில் சீவியும் தன்னை கவர்ச்சியாக்கிக் கொள்கின்றான்.

இச்சமயம் அவனுடன் கண்ணாமூச்சி விளையாடிவர்கள் அவனை அழைத்தால் அவர்களை கேவலமாக காண ஆரம்பித்து
விடுகின்றான். எந்ந விளையாட்டை தன் நோக்கமாக கொண்டு இருந்தானோ அதனை மிகவும் வெறுப்பவனாக மாறிவிடுகின்றான்.

அதை விளையாடுபவர்களையும் இழிவாக எண்ண ஆரம்பித்து விடுகின்றான்.

அச்சமயம் "தான்" செய்யும் அலங்காரமே சிறந்தது என்று எண்ணி முழுவதும் அதில் ஈடுபடுகின்றான்.

பிறகு இப்படியே தன்னுடைய வாழ்க்கையில் பெரும் கட்டங்களை கடந்துவிடுகின்றான்.

பிறகு தன் மனைவி மக்களை உயர்வாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை மிகைக்கின்றது.

அதற்காக தன்னை பல வேலைகளிலும்; பசி பட்டிணிகளை பொருத்துக் கொள்வதிலும் அர்ப்பனிக்க ஆரம்பித்து விடுகின்றான்.

தனக்கென்று அழுக்கு படிந்த ஆடையையும்;
பரட்டைத் தலையான முடிகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.

அச்சமயம் யாரேனும் அவனிடம் உங்களுடைய ஆடையை சுத்தமாக வைக்கமாட்டீர்களா? என்று கேட்டால்!

"கேட்டவரை மிக ஏழனமாக பார்ப்பான்.

இன்னும் அவரை முழுவதும் விமர்சிக்க ஆரம்பிப்பான்.

ஆனால் இதற்கு முன்பு இதே வாழ்வைத்தான் மிக உயர்வானதாக எண்ணிக் கொண்டிருந்தான். இப்பொழுது அதை விமர்சனம் செய்கின்றான்.

பிறகு சிறிது காலம் தன் மனைவி
மக்களுக்கென்று கழித்துவிட்டு மரணத்தையும் சந்திக்கின்றான்.

அப்பொழுதுதான் அவனுக்கு மறுமையின் வாழ்வு கண்ணிற்கு முன்பு வருகின்றது.
அப்பொழுது தனக்கு முன் சென்ற அத்தனை கட்டங்களும் தன்னை ஏமாற்றிவிட்டதே என்று கத்தி கூச்சலிடுவான்.

தன் முந்திய கால கட்டங்களை எல்லாம் திட்டி தீர்ப்பான். இன்னும் தான் நஷ்டம் அடைந்துவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்து கொள்வான்.

அப்பொழுது இவ்வாறு கூறுவான்.....

"அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் (உலகில்) மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று இறைநிராகரிப்பாளன் கூறுவான்.. அல்குர்ஆன்  (78:40).

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

ஜகரிய்யா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு - 4


இதன்பின் சில மாதங்களில் இம்ரான் இறந்து விட்டார். அவரது மறைவிற்குப் பிறகு ஹன்னா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.

அவர் தமக்கு ஆண் குழந்தைதான் பிறக்கும் என்ற நம்பி மிகவும் ஆசையோடு இருந்தார். அதனால் அவருக்கு ஏமாற்றமாக போய்விட்டது. பெண் மகவை பள்ளியில் தங்கியிருக்க அனுமதிக்க மாட்டார்களே! தமது நேர்ச்சை என்னாவது? என்று பெரும் துக்கப்பட்டார்கள். இச்சமயத்தில் அன்றிரவு அவரது கனவில் ஓர் அசரீரி குரல் பின்வருமாறு ஒலித்தது.

ஓ ஹன்னாவே! நீ நேர்ந்து கொண்டபடி உனது குழந்தையை மஸ்ஜிதின் பணிக்கு ஒப்படைத்து விடு. அல்லாஹ் உனது காணிக்கையை ஏற்றுக்கொண்டான்’.

இதனைக் கேட்டதும் திடுக்கிட்டு விழித்தெழுந்த ஹன்னா தமது குழந்தைக்கு மர்யம் என்று சூட்டினார்கள். மர்யம் என்றால் வணக்கம் புரிபவர் என்ற பொருளும் இறை இல்லத்தில் ஊழியம் புரிபவர் என்ற பொருளும் உண்டு.

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنثَىٰ وَاللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنثَىٰ ۖ وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

3:36. (பின் தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்”எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண் பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும் அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 13-03-2018.

ஜகரிய்யா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு - 3


ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரவேலர்களிடம் அறவழிபோதம் செய்துக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் போதனைக்கு செவியேற்று அவர்கள் மீது விசுவாசம் கொண்டு ‘இம்ரான்’ என்பவர் செயலாற்றிக் கொண்டிருந்தார்.

இம்ரான் அல்லாஹ்வின் நல்லடியாராக இருந்தார் அவரது மனைவி ஹன்னாவும் ஒரு நல்லடியாராகவே இருந்தார். இத்தம்பதிகளுக்கு நீண்ட நாட்களாகவே மக்கள்பேறு இல்லாதிருந்தது. ஒரு நாள் ஹன்னா பைத்துல் முகத்தஸ் நீண்ட நாட்களாகவே மக்கள்பேறு இல்லாதிருந்து வருகிறது. நீ எங்களுக்கு ஓர்ஆண் மகவு அருளினேயானால் நான் அந்தக் குழந்தையை முழுக்க முழுக்க உன் இல்லத்தின் சேவைக்கே அர்ப்பணித்து விடுவேன் என்று நேர்ச்சை செய்து கொண்டார்.

இம்மாதிரி ஹன்னா நேர்ந்து கொண்ட சிறிது நாட்களிலேயே கருவுற்று விட்டாள். தாம் கருவுற்றதை அறிந்து சந்தோஷப்பட்டு பைத்துல் முகத்தஸுக்கு சென்று யா அல்லாஹ் எனக்கு ஆண் குழந்தையைக் கொடுப்பாயாக! அதை உன் இல்லத்தில் தங்கி சேவை செய்துவர அர்ப்பணித்த விடுவேன் என்று வேண்டிக் கொண்டார்.

இதனை

إِذْ قَالَتِ امْرَأَتُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي ۖ إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

‘இம்ரானின் மனைவி “என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்; எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும்> நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்”என்று கூறியதையும்

– அல்குர்ஆன் 3:35.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 13-03-2018.

ஜகரிய்யா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு - 2


نَادَىٰ رَبَّهُ نِدَاءً خَفِيًّا

19:3 அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).

قَالَ رَبِّ إِنِّي وَهَنَ الْعَظْمُ مِنِّي وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَلَمْ أَكُن بِدُعَائِكَ رَبِّ شَقِيًّا

19:4. (அவர்) கூறினார்: “என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.

وَإِنِّي خِفْتُ الْمَوَالِيَ مِن وَرَائِي وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا فَهَبْ لِي مِن لَّدُنكَ وَلِيًّا

19:5. “இன்னும் எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும் என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக!

يَرِثُنِي وَيَرِثُ مِنْ آلِ يَعْقُوبَ ۖ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا

19:6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார் யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக் கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!”

يَا زَكَرِيَّا إِنَّا نُبَشِّرُكَ بِغُلَامٍ اسْمُهُ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُ مِن قَبْلُ سَمِيًّا

19:7. “ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை” (என்று இறைவன் கூறினான்).

قَالَ رَبِّ أَنَّىٰ يَكُونُ لِي غُلَامٌ وَكَانَتِ امْرَأَتِي عَاقِرًا وَقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا

19:8. (அதற்கு அவர்) “என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?” எனக் கூறினார்.

قَالَ كَذَٰلِكَ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَقَدْ خَلَقْتُكَ مِن قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا

19:9. “(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து நானே உம்மை படைத்தேன்”என்று இறைவன் கூறினான்.

قَالَ رَبِّ اجْعَل لِّي آيَةً ۚ قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَ لَيَالٍ سَوِيًّا

19:10. (அதற்கவர்) “என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக! ”என்று வேண்டினார்; “நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்”என்று கூறினான்.

فَخَرَجَ عَلَىٰ قَوْمِهِ مِنَ الْمِحْرَابِ فَأَوْحَىٰ إِلَيْهِمْ أَن سَبِّحُوا بُكْرَةً وَعَشِيًّا

19:11. ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர் “காலையிலும்> மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹு செய்யுங்கள்”என்று உணர்த்தினார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 13-03-2018.

ஜகரிய்யா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்-1


ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ருஜஹீமின் வழியில் வந்த ஆஜரின் மகன் ஆவார்கள். ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் ‘அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர்’ என்பதாகும். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 14ஆவது தலைமுறையில் வந்தவர்கள். பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் திறவுகோல் இவர்களிடம் இருந்து வந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 1800 வருடங்கள் கழித்து இவர்கள் தோன்றினார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தச்சு வேலை செய்து வந்தார்கள். அதிகமாக வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள். பனீ இஸ்ரவேலர்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் இவர்களைத் தனது நபியாக அனுப்பியிருந்தான்.

ஹழ்ரத் ஜகரிய்யா நபிக்கு நீண்ட நாட்களாகவே பிள்ளை இல்லாதிருந்தது. அவர்களக்கு அப்போது வயது 130ம் மனைவி ஈஷாவுக்கு வயது 90ம் ஆகியிருந்தது. தமக்குப் பிறகு தவ்ராத் வேதத்தை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க வாரிசு ஒன்று வேண்டும் என்று அவர்கள் மிகவும் கவலையடைந்திருந்தார்கள்.

இதற்காக அல்லாஹ்விடம் உருக்கமாக துஆ கேட்டார்கள். உடனே அல்லாஹ்விடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது: ‘ ஓ ஜகரிய்யாவே! உமக்கு ‘யஹ்யா’ என்ற பெயருடன் ஒரு மகனைத் தரப்போகிற நன்மாராயம் கூறுகின்றோம். அந்த மகன் மிகவும் பொறுமையுள்ளவராகவும் இறையச்சம் அதிகமுள்ளவராகவும் எம்முடைய தூதராகவும் இருப்பார்;’ என்று.

என் மனைவி கருவுற்று விட்டாள் என்பதற்கு நான் என்ன அடையாளம் காண முடியும்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் நீர் நல்ல உடல் நிலையிலிருக்கும் பொழுதே திடீரென்று உம்மால் பேசமுடியாது போய்விடும். இதேநிலை உமக்கு மூன்று நாட்கள் வரை நீடிக்கும். அப்போது நீர் காலையிலும் மாலையிலும் எந்நேரத்திலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிரும்’ என்று கூறினான்.

இதற்குப் பின் சிறிது காலம் கடந்ததும் ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசும் சக்தியை இழந்து விட்டார்கள். அல்லாஹ் கூறியபடி இந்த நிலை அவர்களுக்கு மூன்று நாட்கள் நீடித்தது. அந்த மூன்று நாட்களிலும் அவர்கள் இறைதியானத்தில் அதிகமாக மூழ்கியிருந்தார்கள்.

இதை அல்குர்ஆன் 19:3-11தெளிவாகக் கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 13-03-2018

Monday, 12 March 2018

இஸ்லாத்தை விட்டும் தடம்புரளும் இஸ்லாமிய சமுதாயம் - 3 - இறுதித் தொடர்

ஆக்கம் - விளதை ரய்யான்

சென்ற தொடரின் தொடர்ச்சி.... (இறுதி தொடர்) 

இன்றைய இளைஞர் சமுதாயமே நாளைய முன்னேற்றத்திற்கு அடிக்கல்லாக இருக்கிறார்கள். ஆதலால், இஸ்லாத்தை பிறருக்கு சொல்வதில் மிகப்பெரிய சக்தியாக இளைஞர் சமுதாயம் உருவெடுக்க வேண்டும். இதை ஆழமாக தமது கவனத்தில் கொண்டு இஸ்லாமிய இளைஞர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் இஸ்லாத்தை விட்டும் மக்கள் திசை திருப்பப்படாமல் தடுக்க முடியும்; சிறுவர்களை சிறுபிராயத்திலிருந்து மார்க்க பற்றோடு வார்த்தெடுக்க முடியும்.

இளைஞர்களானோர் இளைய மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சிறியோர் தவறிழைக்கும்போது அவர்களை சரிபடுத்தி நேரான வழியின்பக்கம் தொடர்ந்து அழைத்துச் சொல்ல வேண்டும். அவர்களிடம் முடிந்தவரை இணக்கத்தையே ஏற்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

"நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்." - அல்குர்ஆன்  49:10

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

" ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.  எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று! "
அறிவிப்பவர்: அனஸ் பின்  மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6065

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம்களாக இருக்கும் நாம் நமக்குள்ளாக ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகப் பிணங்கிக் கொள்ளக் கூடாது.

அதே சமயத்தில் இறைக் கட்டளைக்கு மாற்றமாக ஒருவர் நடக்கும் பட்சத்தில் அவருடன் பேச வேண்டுமென்ற அவசியம் இல்லை.  ஏனென்றால், அல்லாஹ் கூறுகிறான் :

"நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்."
அல்குர்ஆன்  49:9

உதாரணமாக, நம்முடைய நண்பர்  மார்க்கம் அனுமதிக்காத ஓர் செயலில் ஈடுபட நம்மை அழைக்கும் போது நாம் அதை மறுத்து விட வேண்டும். அந்த முரணாண காரியத்தை நாமும் செய்யக்கூடாது. பிறருக்கும் இக்காரியத்தில்  துணைபோகுதல் கூடாது!

நன்மையான மற்றும் இறையச்சத்தை ஏற்படுத்தக்கூடிய காரியத்தில் மட்டுமே  ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டுமென மார்க்க  கட்டளை உள்ளது.

"நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். " அல்குர்ஆன்  5:2

அல்லாஹ்விற்காக மட்டுமே நட்புக்கொண்டு, அல்லாஹ்விற்காக மட்டுமே பிரியக்கூடிய மார்க்க அடிப்படையிலான நல்லதொரு நட்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :

" யார் அல்லாஹ்வுக்காக நேசித்தும், அல்லாஹ்வுக்காகக் கோபம் கொண்டும், அல்லாஹ்வுக்காக கொடுத்தும், அல்லாஹ்வுக்காக வெறுத்தும் வருகிறாரோ அவர் பூரணமான ஈமானை அடைந்து விட்டார்''  அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் (4061)

அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த முறையின்படி நம்முடைய நட்பை அமைத்துக்கொண்டு, அல்லாஹ்விற்காக இம்மார்க்கத்தை நோக்கி பிற மக்களை அழைக்கும்படியான ஒரு நல்லதொரு பணியை மேற்கொள்வதற்கான முயற்சியை நாம்  ஒவ்வொருவரும் மேற்கொள்ளுதல் அவசியம்!

இவ்வாறான முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பட்சத்தில், நம்முடைய சமுதாய மக்களையும், இளைய தலைமுறையினரையும் மார்க்க நெறியோடு தொடர்ந்து வைத்திருக்க முடியும்.

இஸ்லாமிய இளம் சிறார்களை அழைப்புப்பணி செய்யக்கூடிய பிரச்சாரகர்களாக மாற்ற முடியும். நன்மையை ஏவ முடியும்; தீமையை தடுக்க முடியும்! இப்படிப்பட்ட மக்கள்தான் வெற்றிபெற்றோர் என்று அல்லாஹ்வும் கூறுகிறான்.

"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். " அல்குர்ஆன்  3:104

அல்லாஹ்வின் மேற்கண்ட வேத வசனத்தின்படி நம்முடைய பணிகளை செய்வதன் மூலம் வழிதவறக்கூடிய பிற மக்களையும் நேர்வழியை போதித்து, நாமும் அந்நேர்வழியிலேயே பயணித்து ஈருலக நன்மையை அடைய முடியும்!.
ஆதலால், நன்மையை ஏவி, தீமையையும் தடுத்து அழைப்புப்பணி செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல ரஹ்மான் நாம் அனைவரையுமே ஆக்கி அருள்புரிவானாக!

அல்லாஹும்ம ஆமீன்.

வெற்றியை நோக்கி - 3

குமரி அன்ஸாரி - (கல்வி ஆலோசகர்)

கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி  நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகள் பல நமக்கு விளக்குகின்றன. உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள். இன்னும் திர்மிதியில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற  நபிமொழியில், ‘யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கின்றாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கின்றார்.

முஸ்லிம்களின்  கல்வி கொள்கையை ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால் ஈருலகிலும் இறை அருளை வெல்லும் கல்வியை தேடலாக அமைய வேண்டும். அந்த கல்வி கொள்கை என்ன? அதை எப்படி புரிந்துக் கொள்ளலாம்? இஸ்லாமிய மார்க்கத்தில் கற்றல் என்பது என்ன என்பதை முதலில் காண்போம்.

முதலாவதாக இறைவன் எதை நாடுகிறானோ அதன் படியே தன் வாழ்வை அமைக்க வேண்டும். இரண்டாவதாக இஸ்லாம் கூறும் நற்குணங்கள் கொண்டு தம்மை பக்குவப்படுத்த வேண்டும். மூன்றாவதாக ஒவ்வொரு மாணவனும் தனி மனித ஒழுக்கத்தில் சரியாக இருப்பது.
இப்படி ஒரு கொள்கை விவரிக்கப்படும்போது, கல்வி கற்பது என்பது ஒரு இபாதத்தாக, இறைவணக்கமாக, கட்டாயக் கடமையாக ஆகிவிடுகிறது. இதனாலேயே இஸ்லாத்தில் இல்மும், அமலும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே.
முந்தைய கால கல்வி எவ்வாறு இருந்தது என்பதை அலசுவோம்.

இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியில்  பல்வேறு விதமான கல்விக்கூடங்கள் நிறுவப்படுகின்றன. மக்தபுகள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் கல்வி நிலையங்களாயின. கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளிவாசலும் அப்போது ஒரு தொடக்கப் பள்ளியாக இருந்தது. இன்றைய பள்ளிகளை போன்று , ஆடம்பரங்களை யோசிக்காத, யோசிக்கத் தெரியாத காலம் அது. இஸ்லாமிய கல்வி கொள்கையை அன்றைய அறிஞர்கள் இரு வகைகளாக பிரித்திருந்தார்கள். கட்டாய அறிவியல் மற்றும் விருப்ப அறிவியல்
கட்டாய அறிவியல் பாடத்தில்  அறிவியல், அதனோடு தொடர்புடைய விஷயங்கள், மொழியியல் மற்றும் இலக்கண, இலக்கியம் போன்ற விஷயங்களை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும். விருப்ப அறிவியலை இரண்டாக பிரித்து வைத்திருந்தனர்.

முதலாவதாக  மார்க்க அறிவியல்

1. நான்கு அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, ஸஹாபாக்களின் கூற்றுக்கள்)
2. அதன் கிளைகள் (மார்க்க சட்டங்கள், மார்க்க நீதி போதனைகள்)
3. மொழியியல் மற்றும் இலக்கணம்
4. திருமறை ஓதுதல், தஃப்ஸீர், மார்க்க சட்டங்களின் மூலம்,  முறைப்படுத்தப்பட்ட சரித்திரக் குறிப்புகள், மனிதப் பரம்பரை பற்றிய ஆய்வு

இரண்டாவதாக  உலக அறிவியல்

1. மருத்துவம்
2. கணிதம்
3. கவிதைகள்
4. வரலாறு

நபி ஸல்) அவர்கள் கூறினார்கள்  “உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் தொழ கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழச் சொல்லுங்கள்” என்பதை நபி மொழி வாயிலாக அறிகிறோம்.
பத்து வயதை அடைந்தனுக்கு தொழுக்கைக்கான சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதன் சாரம். வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால் நேர்மையை இழந்து தவிக்கிறது நம் சமூகம். ஏழைகளிடம் எப்படி பழக வேண்டும், பிறர் புன்படாதவாறு எவ்வாறு பேச வேண்டும். பெற்றோர்களையும், பெரியவர்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாததால் சொந்தப் பெற்றோரை பத்தோடு பதினொன்றாக பார்க்கிறார்கள். நம் முனோர்களின் கல்வி கொள்கை இறை நம்பிக்கையை தூண்டும் விதமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நமது சமுதாய மாணவர்களின் நிலமையோ  நாம் எதற்காக வாழ்கிறோம் எந்த நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்ற சட்டங்கள் தெரியாததால், தெரிந்துகொள்ள முன்வராததால் இன்று நம் சமூகம் கேளிப் பொருளாக பார்க்கபப்டுகிறது.

இந்தியாவில் ஆங்கிலேய அரசு வருவதற்கு முன்,  ஒழுங்குமுறையான கல்வியும், நல்வாழ்வும் எல்லா மக்களிடமும் இருந்தது. இந்து மக்களும் சரி, முஸ்லிம் சமுதாயமும் சரி, கல்வியிலும், வளர்ச்சியிலும் ஆங்கிலேய நாடுகளை மிஞ்சிக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனால் வணிகர்களாய் வந்து ஆட்சியை பிடித்த ஆங்கிலேயர்களின்  அராஜக ஆட்சியின் முதல் படியிலேயே தெரிந்தது. என்ன அது? இந்தியாவின் கல்வியையும், நல்வாழ்வையும் திட்டமிட்டு அழிப்பது. ஆட்சியில் அமர்ந்த நொடிப்பொழுதுகளில் அதை அமலாக்கவும் செய்தனர்.

ஒழுக்கத்துடன் கூடிய கல்வி தன் கண் முன்னால் அழிக்கப்படுவதை கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் இனியும் மொளனமாக இருந்தால் ஷரி அத் சட்டங்களை அடியோடு மறக்கடிக்கப்படும் சமூகம் உருவாக்கப்படுமோ என பயந்து சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்போதைய  கவர்னர் ஜெனெரலாக இருந்த ‘வாரன் ஹேஸ்டிங்க்கை சந்திக்க வைத்தனர். விளைவு, காலனி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவின் முதன் முதல் கல்லூரி 1781இல் தொடங்கியது. ’கல்கத்தா மத்ரஸா’ அல்லது ‘மொஹம்மதன் கல்லூரி’ எனப் பெயர் பெற்ற அந்த மதரஸா, ஆங்கிலேய அரசின் கீழ் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்லூரி உருவானது. அதுவரையிலும் உலகப்பாடத்தையும், மார்க்கத்தையும் பள்ளிகளில் ஒரு சேர தந்த  அறிஞர்கள் இனி ஷரி அத் சட்டங்களை மட்டுமே பாடமாக நடத்துவார்கள் என சட்டம் இயற்றினர்.  மார்க்கமும், நடைமுறை வாழ்வும் வேறு வேறு என்னும் கருத்தை ஆங்கிலேய அரசாங்கம்  திணித்தது. 1844இல் மதரஸாவில் படித்தவர்களுக்கு அரசு வேலைகள் நிராகரிக்கப்பட்டன. காலம் காலமாக அரசு அலுவல்களிலும், அத்தியாவசிய பத்திரங்களிலும் ஆட்சி மொழியாக இருந்த பாரசீகத்தை தடுத்து ஆங்கிலத்தை புகுத்தினர்.
ஏற்கனவே இந்திய சுதந்திர போராட்டத்திர்க்காக ஆங்கிலத்தைப் புறக்கணித்துக் கொண்டிருந்த முஸ்லிம்  சமூகத்திற்கு ஆங்கிலேய சூழ்ச்சி இன்னும் பெரிய நஷ்டத்தை தந்தது. மதரஸா படிப்பிற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இன்னும் அதிகமான பிளவை ஏற்படுத்தியது. ஆங்கில வழிப்பாடங்களை படிப்பவர்களுக்கும், மதரஸாவில் படிப்பவர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரண்டோடியது. இதன் தாக்கம், மதரஸா பாடங்களில் உலக அறிவை மேம்படுத்தும் பாடங்கள் குறைந்து கொண்டே போனது அல்லது இல்லாமல் ஆகியது. மார்க்க சட்ட திட்டங்களும் வணக்கங்கள் மட்டுமே வாழ்வு, உலக வாழ்வுக்கு, நமக்கும் தொடர்பில்லை என்னும் நிலைக்கு மதரஸா மாணாக்கர்களும், உலமாக்களும் தள்ளப்பட்டனர். இதன் பாதிப்பால் மதரஸா பாடத்திட்டங்களிலிருந்து உலகக்கல்வி வெளியேற்றப்பட்டது. கல்வியை கைப்பற்றி தங்களது அரக்க ஆட்சியை நிறுவிய ஆங்கிலேயர்கள், அங்கு தங்களது கல்வி நிலையங்கள் பலவற்றை நிறுவினார்கள் அந்த மேர்கத்திய கல்வி கொள்கையில் தான் முஸ்லிம்களும் பயின்றனர். அதன் தொடராக இன்றைய கல்விக் கொள்கையில் மேற்கத்தியப் போக்குகள் மிகுந்து விட்டதன் காரணமாக, குழந்தைகளில் இருந்து பல்கலைக் கழகங்கள் வரைக்கும் இந்த மேற்கத்திய போக்கினால் தீர்மானிக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தான், அவர்களின் மூளைகளில் ஏற்றி வைக்கப்படுகின்றன. இதே போக்கிலே முஸ்லிம்களும் காலம் காலமாக இந்த மேற்கத்திய சிந்தனை வழிக் கல்வியினூடாகப் பயணம் செய்ததன் விளைவு, அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது சுய அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடிய பிற்போக்குத் தனத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் பரிதாபமான செய்தியாகும். இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள், கற்புநெறி, இறையச்சம் போன்றவை போதிக்கபடாத காரணத்தினால் மேற்கத்திய காலச்சாரத்திற்கு பலியாகி இஸ்லாத்தைப் பற்றி தெரியாமலேயே அதனை விமர்சிக்கும் அறிவு (?) ஜீவிகளாக மாறிவிடுகின்றனர்.

இன்றைய அவசிய தேவை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய நல்லொழுக்க பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் இஸ்லாமிய சட்டம், குர்ஆன் விளக்கவுரை, போன்றவற்றைக் கற்பிப்பது மிகவும் அவசியம். நம் சமுதாய கல்லூரிகளின் நிலையே இதுவென்றால் அரபி மதரஸாக்கள் முழுக்க முழுக்க ஆன்மீக வட்டத்திற்குள்ளேயே நிற்கின்றன. இத்தகைய மதரஸாக்களில் பட்டம் பெற்று வெளிவரும் ஆலிம்கள் இன்றைய நவீன பிரச்சனைகளான இன்சூரன்சு, மல்ட்டி லெவல் மார்க்கட்டிங்,  குளோனிங், ஷேர் மார்க்கெட் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு கூற தயக்கம் காட்டுகின்றனர். இன்று ஆலிம்கள் தொழுகை, நோன்பு போன்றவற்றோடு தம் பணியை சுருக்கிக் கொள்வதினால் படிப்பறிவு மிக்க சில முஸ்லிம் இளைஞர்கள் வலைமனைகளில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டாலும் மார்க்க சட்ட விளக்கங்களுக்கு ஆலிம்களையே சார்ந்திருக்கின்றனர். மதரஸாக்களில் மார்க்க கல்வியுடன் நவீன தொழில் நுட்ப கல்வியும் சேர்த்தால் இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறலாம்.

(இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Friday, 9 March 2018

பிப்ரவரி 2018 வெற்றியாளர்கள்

🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇🥇

கியாமத் நாளை  நோக்கியின் பிப்ரவரி 2018 வெற்றியாளர்கள்:

🎁🎁🎁 முதல் பரிசு 🎁🎁🎁

இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்

      🥇யாசர் அரஃபாத் - காயல்பட்டணம் 89

💰 இரண்டாம் பரிசு 💰

இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்

🥇நெய்னா முஹம்மது அலி -ஜெகதாப்பட்டினம் 87

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்

🥈பீர் முஹம்மது  - திருநெல்வேலி  87

 🚏 மூன்றாம் பரிசு🚏

🥉ராஜா முஹம்மது - கட்டுமாவடி 85

இரண்டாவது குழுமத்தில்  உள்ள சகோதரர்

🥉நஜ்முதின் - கூத்தாநல்லூர் 85

❇❇ சிறப்பு பரிசு❇❇

💢💢💢💢💢💢💢💢💢💢💢

இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்

☂🥇 அப்பாஸ் அலி - சென்னை 86

முதல் குழுமத்தில் உள்ள சகோதரர்கள்

☂ 🥈 அப்துல் மாலிக் - முஹம்மது பந்தர்(தஞ்சை மாவட்டம்) 86

♻♻♻♻♻♻♻♻♻♻♻

🎁🎁🎁 ஆறுதல்  பரிசு 🎁🎁🎁

💍💍💍💍💍💍💍💍💍💍💍

இரண்டாவது குழுமத்தில் உள்ள சகோதரர்கள்:

🍅 அஜாருதீன் - கும்பகோணம் 84

 🍅 முஹம்மது யூசுப் சேட் - திருநெல்வேலி 84

🍅 சுல்தான் - திருநெல்வேலி 85

முதல் குழுமத்தில்உள்ள சகோதரர்கள்:

🍅 முஹம்மது முஸ்தபா - சென்னை 84

🍅 முஹம்மது சஃபி -வலையப்பட்டி(நாமக்கல்) 84

🍅 ரம்ஜான் - திருநெல்வேலி 82

🍅 அபு தல்ஹா - திருநெல்வேலி 81

🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖🔖

🎁🎁🎁 ஊக்க பரிசு 🎁🎁🎁

🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪🎪

🥇முதல் குழுமத்தில் உள்ளா நபர்கள்:

1. மஹதி -திருச்சி 80

2. அப்துல் ஃபத்தாஹ் - கூத்தாநல்லூர் 77

3. அப்துல் பாசித் - காயல்பட்டணம் 74

4. முஹம்மது ஹனிபா 74

5. காதர் உசேன் - மலேசியா 74

6. அப்துல் ஜப்பார் -முஹம்மது பந்தர் (தஞ்சை மாவட்டம்) 49

7. ஜாகிர் உசேன் - சென்னை 29

8. சுலைமான் - அம்பாசமுத்திரம் 23

9. முஹம்மது பயாஸ் - சென்னை 16

10. அப்துல் சலீம் - சென்னை 14

11. அமீர் அப்பாஸ் - கல்பாக்கம் 07

12. பஹத் மைதீன் - வீரவ நல்லூர் 06

 இரண்டாவது குழுமத்தில் உள்ள நபர்கள்:

13. பதுருசமான் - கீழக்கரை 79

14. அப்துல் காதர் - திருநெல்வேலி 78

15. ஷேக் ஷஃபி - துபாய் 60

16. சாதிக் - சவுதி 59

17. முகம்மது ஆசிக் - வழுத்தூர் 46

18. நூர் முகமது அஜீஸ் - சிவகாசி 44

19. அல்லாபாகஷ் - சென்னை 40

20. முஸம்மில் - திருநெல்வேலி 28

🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯🎯

இந்த குழுமத்தின் நோக்கத்தையும் கொள்கையையும் நீண்ட நாட்களாக கவனித்து நமது குழுமத்தை மேலும் ஒருபடி உயரத்திற்க்கு கொண்டு சென்று தங்களின் பங்களிப்பாக கேள்விபதில் நிகழ்ச்சியில் பரிசளிக்கும் "இல்மிற்கு உதவும் கரங்கள்" கியாமத் நாளை நோக்கி_யின் நன்றிகளை துஆகளாக எஞ்சுவோம்..

"இல்மிற்கு உதவும் கரங்கள்" இறை பணி மேலும் உயர சிறந்த நல்நோக்கங்களில் வெற்றி பெற இவ்வுலக வாழ்வில் நீண்ட ஆயுளுடன்  அனைத்திலும் வெற்றிபெற்று மறுமையில் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தார்க்கும் சுவனத்தை தந்தருள எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக..ஆமீன்

கியாமத் நாளை நோக்கியின் பயணத்தை சிறந்த முறையில் நல்கிய ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்

இதில் குழுமியுள்ள அனைவர்களையும் கியாமத் நாளை நோக்கி பயணிக்க நோக்கி அழைத்து செல்லும் தளமாக ஆக்கிதர அல்லாஹ்விடம் கையேந்தி மேலும் சிறக்க வல்ல ரஹ்மான் துணைபுரிவானாக..ஆமீன்

பரிசுகள் வென்ற அனைத்து சகோதரர்களுக்கும்  அல்லாஹ் அருள்புரிவானாக..

" கியாமத் நாளை நோக்கியின் வாழ்த்துக்கள்"

இக்குழுமத்தில் இணைந்திருக்கும் அனைத்து சகோதரர்களும் தினமும் கேட்கபடும் கேள்விக்கு பதிலளித்து இக்குழுமத்திலும் மறுமையிலும் வெற்றிபெற்றவர்களாக முயலுவோம்

சகோதரர்கள் அனைவருக்கும்

ஜஜகல்லாஹ் ஹைர்

🔊 கியாமத் நாளை நோக்கி குழுமம் மற்றும் "இல்மிற்கு  உதவும் கரங்கள்" இணைந்து வழங்கும் பரிசு அளிப்பு‼

கியாமத் நாளை நோக்கி குழுமத்தின் அன்பு சொந்தங்களே நமது தளத்தின் அன்றாட நிகழ்வுகளை பார்த்தும், மேலும் மார்க்கத்தை அனைவரும் அறிய செய்ய, அனைவருக்கும் பயனளிக்கும் தளமாக சிறந்து விளங்குவதை கருத்தில் கொண்டு (எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) அல்லாஹ்வின் நாட்டப்படி  மார்க்க கேள்வி நிகழ்ச்சி   வெற்றிகரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதில் வெற்றிபெறும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் மாதந்தோறும்
(இன்ஷா அல்லாஹ்).

1. முதல் பரிசு: 900 ₹ மதிப்புள்ள அல் குர்ஆன் தமிழ் தர்ஜூமா + இஸ்லாமிய புத்தகம் + புஹாரி மூன்றாம் பாகம் (அல்லது) முஸ்லிம் மூன்றாம் பாகம் (1நபருக்கு)

2. இரண்டாம்பரிசு: 450₹
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)
         
3. மூன்றாம் பரிசு: 300₹
மதிப்புள்ள இஸ்லாமிய புத்தகங்கள் (2 நபர்களுக்கு)

 4. சிறப்பு பரிசு: 200₹
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (2 நபர்களுக்கு)

5. ஆறுதல்  பரிசு: 100₹
மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (ஏழு நபர்களுக்கு)

6. ஊக்கப் பரிசு: 20₹ மதிப்புள்ள கியாமத் நாளை நோக்கி மாத இதழ் (இருபது நபர்களுக்கு)

நமது நோக்கம் மார்க்கத்தை அனைவரும் அறியவேண்டும், பரப்பவேண்டும்.

எண்ணங்கள், நோக்கங்கள் நிறைவேற அல்லாஹ்விடம் துஆ புரிவோம்.
இத்தளத்தை சிறந்த தளமாக ஆக்கிதந்த எல்லாம்வல்ல அல்லாஹ்விற்கு நன்றி.
இந்த தளத்தின் மேன்மையை கண்ணியத்தை  காத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

🌴 கியாமத் நாளை நோக்கி குழுமம் 🌴 
 அட்மின் குழு




Thursday, 8 March 2018

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு பகுதி-3


மகன் திருந்தாவிட்டால்

எல்லா மனிதர்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாம் எவ்வளவு தான் அறிவுரைகளையும் உபதேசங்களையும் கூறினாலும் சிலர் அதைக் கேட்காமல் தன் இஷ்டம் போல் தடம்புரண்டுச் செல்வார்கள். பெற்றோர்களின் சொல்லுக்கு கட்டுப்படமாட்டார்கள்.

இத்தகைய பிள்ளைகள் நமக்கு இருந்தால் அவர்களைத் திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தும் திருந்தாவிட்டால் அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் நேர்வழி கிடைக்கும் என்பதை கவனத்தில் வைத்து பொறுமை காக்க வேண்டும். அவனுக்கு நேர்வழியை தருமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

நூஹ் (அலை) அவர்களின் மகன் கெட்டவனாக இருந்தான். நூஹ் (அலை) அவர்களுக்கு அவன் கட்டுப்பட மறுத்தான். இறைநிராகிப்பாளனாக மரணித்தான். இந்த வரலாற்றை அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறியுள்ளான்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக்கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.

“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப் பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகிவிட்டான்.

(அல்குர்ஆன் 11 : 42)

நூஹ், தம் இறைவனை அழைத்தார். “என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்” என்றார்.

“நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்” என்று அவன் கூறினான்.

“இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள்புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்” என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 11 : 45)

நம்மையும் நமது குழந்தைகளையும் அல்லாஹ் நேரான வழியில் செலுத்துவானாக.

நோய்க்காக ஓதிப்பார்க்கலாம்

நோயிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒதிப்பார்ப்பதற்கு அனுமதியுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக்கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள்” என்று சொன்னார்கள்.

அறி : அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்),

நூல் : புகாரி 5741

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக்கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

அறி : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி 4439

ஓதிப்பார்க்கும் முறை

திருக்குர்ஆனுடைய குறிப்பிட்ட சில சூராக்களை ஓதி குழந்தைகளின் உடம்பில் ஊதுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்தவாறு மட்டுமே ஓதிப்பார்க்க வேண்டும். அவர்கள் செய்யாத எந்த ஒரு காரியத்தையும் சேர்த்துவிடக்கூடாது.

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் “குல் ஹுவல்லாஹு அஹத்’, “குல் அஊது பிரப்பில் ஃபலக்’, “குல் அஊது பிரப்பின் னாஸ்’ ஆகிய (112, 113, 114) அத்தியாயங்களை ஓதி ஊதிக்கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக்கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறி : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி (5017)

நோயாளி குணமாவதற்காக செய்ய வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள். குழந்தைகள் நோயுறும் போது அவற்றை நாம் ஓதிக்கொள்ள வேண்டும்.

நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் “அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன்” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா?” என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), “சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்)” என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த, ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்’ என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)

அறி : அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்),

நூல் : புகாரி 5742

சூரத்துல் பாத்திஹாவை வைத்தும் ஓதிப்பார்க்கலாம். புகாரி (5736)

இணைவைப்பு இருக்கக்கூடாது

நாங்கள் அறியாமைக் காலத்தில் ஓதிப் பார்த்துவந்தோம். எனவே (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது குறித்து தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம்), “நீங்கள் ஓதிப்பார்ப்பதை என்னிடம் சொல்லிக்காட்டுங்கள். (இறைவனுக்கு) இணை கற்பித்தல் இல்லையானால் ஓதிப்பார்த்தலில் எந்தக் குற்றமும் இல்லை” என்று கூறினார்கள்.

அறி : அவ்ஃப் பின் மாலிக்,

நூல் : முஸ்லிம் 4427

தாயத்தை தொங்க விடக் கூடாது

குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும் போது பெற்றோர்கள் அவர்களை தர்ஹாக்களுக்கு அழைத்துச் சென்று தாயத்து என்றக் கருப்புக் கயிறை வாங்கி குழந்தைகளின் மேல் மாட்டிவிடுகிறார்கள். அல்லாஹ்வின் மீது வைக்கவேண்டிய நம்பிக்கையை அற்பக் கயிற்றின் மீதும் இறந்தவர்கள் மீதும் வைத்துவிடுகிறார்கள். இவ்வாறு செய்வது மார்க்கத்தில் தடுக்கப்பட்டிருக்கிறது.

கயிறுக்கோ இரும்பு வளையத்திற்கோ நோயை அகற்றும் சக்தி இருக்கிறது என்று ஒருவன் நம்பினால் அவன் அல்லாஹ்விற்கு இணை கற்பித்தவனாகிவிடுகிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் (பத்து பேரைக் கொண்ட) சிறிய குழு ஒன்று வந்தது. ஒன்பது பேர்களிடத்தில் உறுதிப்பிரமானம் வாங்கினார்கள். ஒருவரிடத்தில் மாத்திரம் (பைஅத்) செய்யவில்லை. அப்போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒன்பது நபர்களிடத்தில் (பைஅத்) உறுதிப்பிரமானம் வாங்கினீர்கள். இவரை விட்டுவிட்டீர்களே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் மீது தாயத்து உள்ளது என்று கூறினார்கள். உடனே (தாயத்து அணிந்திருந்தவர்) தன் கையை (ஆடைக்குள்) விட்டு தாயத்தை அகற்றினார். பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் பைஅத் செய்துவிட்டு எவன் தாயத்தை தொங்கவிடுகிறானோ அவன் இணைவைத்துவிட்டான் என்று கூறினார்கள்.

அறி : உக்பா பின் ஆமிர் (ரலி),

நூல் : அஹ்மத் 16781

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய பிரயாணம் ஒன்றில் அவர்களுடன் இருந்தேன். அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் தூதுவர் ஒருவரை அனுப்பி,”எந்த ஒட்டகத்தின் கழுத்திலும் (ஒட்டக வாரினால் ஆன, கண் திருஷ்டி கழிவதற்காகக் கட்டப் படுகின்ற) கயிற்று மாலையோ அல்லது (காற்று, கருப்பு விரட்டுவதற்காகக் கட்டப்படுகின்ற) வேறெந்த மாலையோ இருக்கக் கூடாது. அப்படியிருந்தால் கட்டாயம் அதைத் துண்டித்து விட வேண்டும்” என்று (பொது மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறி : அபூ பஷீர் (ரலி),

நூல் : புகாரி (3005)

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

நன்றி:இணையம்

Wednesday, 7 March 2018

இஸ்லாமியப் போராளிகள் - பகுதி 1


ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரழியல்லாஹு அன்ஹு 

பிறப்பு‬

ஸையுதுனா ஹஸ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு 'அல் கலீபா உஸ் ஸாலிஹ்' பரிசுத்தவானாய்த் திகழ்ந்த கலீபா, 'அல் கலீபா அல் காமிஸ்' நேர்வழி சென்ற ஐந்தாவது கலீபா என பரவலாக அழைக்கப்படுகிறார்கள்.

இவர்கள் எகிப்தின் ஆளுனர் அப்துல் அஸீஸின் மகனார். ஸையுதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயர்த்தி உம்மி ஆஸிமின் மகனார்.

ஹிஜ்ரி 63 (கி.பி 682)ல் எகிப்து ஹல்வான் கிராமத்தில் பிறந்தார்கள். மதீனாவில் தன் தாய்மாமனார் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களின் மேலான வழிகாட்டலின் கீழ் கல்வி கேள்விகளை கற்றுத் தேர்ந்தார்கள். ஓர் இமாமாக திகழ்ந்தார்கள். அறிஞர்கள் அவர்களிடம் வந்து ஞான விளக்கம் பெற்றார்கள்.

ஸையுதுனா உமர்இப்னு அப்துல் அஸீஸ் தன்னுடைய மாமனார் கலீபா அப்துல் மாலிகின் மகளார் பாத்திமாவை திருமணம் செய்துக் கொண்டார்கள்.

மதீனாவின் ஆளுனராக கி. பி 706ல் நியமிக்கப்பட்டு, பின் இஸ்லாமிய உலகின் கலீபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

சிறப்பு‬

கலீபாக்களுக்குரிய அத்தனை ஆடம்பர வாழ்க்கையையும் விட்டொழித்தார்கள்.

தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று தடுத்துவிட்டார்கள்.

பைத்துல்மால் ஊடாகவே தனக்குரிய செலவுகள் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.

எளிமையான ஆடைகளையே அணிவார்கள்.

பாமரர்களின் வாழ்வு தனக்கு போதும் என்று சிறு குடிசையிலேயே வாழ்ந்தார்கள்.

அப்போதுதான் பாதிக்கப்பட்ட மக்களை தன்னால் விரைவில் அடைய முடியும் என்று கூறினார்கள்.

பின் பிம்பர் மேடை மேல் ஏறி, பின்வருமாறு கூறினார்கள், "சகோதரர்களே, என்னுடைய விருப்பத்துக்கு மாறாகவே நான் கலீபாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளேன். இப்போதுகூட நீங்கள் என்னை புறம் தள்ளிவிட்டு உங்களுக்கு விருப்பமானவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும்." அத்தனை பேரும் சத்தமிட்டு அழுது, "நீங்களே எங்கள் கலீபா... நீங்களே எங்கள் கலீபா" என்று கூறினர்.

பின் அனைவருக்கும் தூய்மையான வழியில் உறுதியாக இருக்குமாறு கூறினார்கள்.

பின் தன் மக்களை பார்த்து 'தான் அல்லாஹ் ரஸூலின் வழிக்கு மாற்றமாக நடப்பதைக்கண்டால் அவர்கள் தனக்கு பைஅத் எனும் உறுதி பிரமாணம் செய்துக் கொண்டதை வாபஸ் வாங்கிக் கொள்ளும்படி கூறினார்கள்.

நிர்வாகம்‬

ஈருலகுக்கும் மக்களுக்கு ஆற்றக்கூடிய பணிகளை ஆற்றினார்கள்.

கடுமையாக உழைத்தார்கள். அரிதாகவே ஓய்வு கொண்டார்கள்.

ஸையுதுனா உமர் ரலியல்லாஹு அன்ஹுவை முன் உதாரணமாகக் கொண்டார்கள்.

இதனாலேயே ஸையுதுனா ஸுப்பியானுத் தவ்ரி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள், "நேர்வழி நடந்த கலீபாக்கள் ஐவர்:- ஸையுதுனா அபூபக்ர், ஸையுதுனா உமர், ஸையுதுனா உத்மான், ஸையுதுனா அலி, ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹும்."

மிகக் குறுகிய காலமே ஆண்டாலும், தனக்கு முன் ஆண்டவர்களினால் இல்லாமல் செய்யப்பட்ட ஜனனாயகத்தை மீண்டும் நிலைநிறுத்தினார்கள்.

உமையாக்கள் காலத்திலிருந்த ஊழல் மிகுந்த ஆட்சியை இல்லாதொழித்தார்கள்.

உமையாக்களால் அநீதியாய் அபகரிக்கப்பட்ட சொத்துக்களை மீட்டுக் கொடுத்தார்கள்.

தன் அசையும் அசையா சொத்துக்கள் அத்தனையையும் பைத்துல்மாலுக்கு ஒப்படைத்தார்கள். கலீபா வலீதால் தனக்கு பரிசாக தரப்பட்ட மோதிரத்தை கூட ஒப்படைத்தார்கள். இதைக் கண்ட அவர்களின் விசுவாசமான அடிமை மஸாஹிம்கூட மனமுருகி கண்ணீர்விட்டு கேட்டார் "நாயகரே, நீங்கள் எதைதான் உங்கள் பிள்ளைகளுக்கு விட்டுச் செல்கிறீர்கள்?" அதற்கு அவர்களின் பதில், "அல்லாஹ்!"... ஸுப்ஹானல்லாஹ்! என்னவென்போம் இவர்கள் நேர்மையை.

‪‎சேவை‬

தனது விரிந்து பரந்த சாம்ராஜ்யமெங்கனும் ஆயிரக்கணக்கான கிணறுகள் வெட்டப்பட்டன, தங்குமிட வசதிகள் செய்யப்பட்டன.

இலவச மருத்துவ மனைகள் நிறுவப்பட்டன.

வழியேதுமற்ற பயணிகளுக்கு அரசாங்க உதவிகள் வழங்கப்பட்டன.

தீர்வு‬

உமையாக்கள் பொதுமக்களின் செல்வத்தை சுரண்டி ஆடம்பரமாக வாழ்ந்தவர்கள். கலீபாவின் கட்டுபாடுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அத்தனைபேரையும் விருந்துக்கழைத்தார்கள் கலீபா. சாப்பாட்டை தாமதமாகப் பரிமாறு சேவகர்களுக்கு கூறினார்கள். உமையா விருந்தாளிகள் பசியால் துடித்து கத்தினார்கள். உடனே அவர்களுக்கு காய்ந்த விதைகள் பரிமாறப்பட்டன. அத்தனையையும் வயிறு நிறைய தின்று தீர்த்தார்கள். இப்போது அவர்களுக்கு சுவையான உணவு பரிமாறப்பட்டது. அவர்களால் உண்ண முடியவில்லை. கலீபா கூறினார்கள்,

​​"சகோதரர்களே! உங்களாலும் சாதாரண உணவை உண்டு வாழமுடியும் என்றிருக்கும்போது ஏன் மற்றவர்களுடைய உரிமைகளோடு விளையாடுகிறீர்கள்? நெருப்பை நெருங்குகிறீர்கள்." அத்தனை பேரும் கண்ணீர்விட்டு அழுதார்கள்.

கண்ணீர்‬

ஒருமுறை தொழுகையில் அழத் தொடங்கிவிட்டார்கள். அவரது மனைவி பதறி, "அன்பரே, ஏன் அழுகிறீர்கள்?" என்று கேட்டார்கள். "பாத்திமா என்னை மக்கள் ஆட்சியாளனாக நியமித்துள்ளார்கள். இந்த பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தில் எத்தனை பேர் பசியால் வாடிக்கொண்டிருப்பார்கள்? எத்தனை வயோதிபர் தவித்துக் கொண்டிருப்பார்கள்? எத்தனை பேர் அதிகாரம் பெற்றவர்களால் அடக்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்? எத்தனைபேர் அநீதியாய் சிறையிலிடப்பட்டிருப்பார்கள்? எத்தனைபேர் ஆடையின்றி இருப்பார்கள்? எத்தனை பேர் பெருங் குடும்பச் சுமையால் தவித்துக் கொண்டிருப்பார்கள்? நோய்களினால் தவித்துக் கொண்டிருப்பார்கள்?" அத்தனை பேருக்காகவும் நான் நாளை மறுமையில் விசாரிக்கப்படுவேன் பாத்திமா. தப்ப முடியாது பாத்திமா" என்று அழுதார்கள்.

கண்டிப்பு‬

ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்கள் அன்பான தந்தையார். ஆனால் அதற்காக ஒருபோதும் தன் பிள்ளைகளை ஆடம்பரமாக வாழ அனுமதிக்கவில்லை. ஒருமுறை அவரது மகளாருக்கு மக்கள் முன் வரவேண்டிய தேவை ஏற்பட்டது. அறைகுறை ஆடையோடு அவரால் வரமுடியவில்லை. இறுதியில் அவரது மாமி அவருக்கு ஆடை வாங்கிக் கொடுத்தார்.

அவர்கள் ஒருபோதும் யாரிடமிருந்தும் பரிசுகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். சொல்லுவார்கள்,"சந்தேகமில்லாமல் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. அவை பரிசுகள். ஆனால் எனக்குத் தரப்படுவது லஞ்சம்!"

முடிவு‬

ஒருநாள் அவர்களின் அடிமை கடுமையான ஒரு நஞ்சை அவர்களுக்கு கொடுத்துவிட்டான். தான் நஞ்சூட்டப்பட்டு விட்டேன் என்பதை அறிந்ததும் கலீபா அவர்கள் அவனை அழைத்து காரணத்தை கேட்டார்கள். அவன் இந்தப் பணியை முடிக்க தனக்கு 1000 தீனார் லஞ்சமாக தரப்பட உள்ளதைக் கூறினான். உடனே பொது நிதியத்திலிருந்து அவனுக்கு 1000 தீனாரை கொடுக்கச் செய்து, அவனை உடனே தப்பிப் ஓடும்படி பணித்தார்கள். இவ்வாறு தன் இளம் பருவத்தில் , தனது 36வது வயதில், கி.பி 719ல், இவ்வுலகை நீத்து அகால மரணமடைந்தார்கள். ஹோம்ஸில் நல்லடக்கமானார்கள்.

ஸையுதுனா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரலியல்லாஹு அன்ஹு இப்பூவலகில் வாழ்ந்த நல்லாத்மாக்களில் ஒருவர். அவர்களின் உயிர் தியாகம் முழு இஸ்லாமிய உலகையே துக்கத்தில் ஆழ்த்தியது. இன்றும் ஆழ்த்துகிறது. அவரிடம் மீதமாய் இருந்தது வெறும் 17 தீனார்கள் மாத்திரமே!

✍அப்துர் ரஹீம் முஹம்மது ஜௌபர்

Monday, 5 March 2018

இத்தா- வேண்டியவைகளும் வேண்டாதவைகளும்


✍மௌலவி முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி

இத்தாவின் வகைகள்:

1.தலாக் விடப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் இத்தா இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:228)

2.தங்களின் கணவர்கள் மரணித்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் இத்தா இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 2:234)

3.மாதவிடாயிலிருந்து நிராசையான பெண்களும், இதுவரை மாதவிடாய் ஏற்படாத பெண்களும் கணவர் தலாக் விட்டுவிட்டால் மூன்று மாதங்கள் இத்தா இருக்க வேண்டும்.
(அல்குர்ஆன் 65:4)

4.கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் இத்தா காலம் குழந்தை பெற்றெடுக்கும் வரையுமாகும். (அல்குர்ஆன் 65:4)

குறிப்பு: இத்தாவுயை கால அளவுகளை பிறைக் கணக்கின் அடிப்படையில் சந்திர ஆண்டில் அடிப்படையில் கணக்கிட வேண்டும். ஆங்கிலக் காலண்டரின் அடிப்படையில் கணக்கிடக் கூடாது.

இத்தா வேண்டியவைகளும் வேண்டாதவைகளும்

கணவர் இறந்ததற்காக இத்தா இருக்கும் பெண்கள் அலங்காரத்தை தவிர்க்க வேண்டும். கவர்ச்சியான சாயம் பூசப்பட்ட ஆடைகளை அணிவது, வாசனை - எண்ணெய்த் திரவியங்களை பாவிப்பது, கண்ணுக்குச் சுர்மா இடுவது, மருதாணி பூசுவது, நகைகள் அணிவது அனைத்தையும் தவிர்க்க வேண்டும். (மேலும் பார்க்க:புகாரி 5341, 5342, 5343, 5336, 5337)

கணவனின் மரணித்திற்காக 4 மாதங்கள் 10 நாட்களுக்கும் இத்தாவில் காத்திருக்கும் பெண் அந்த கால எல்லை முடியும் வரை மணமுடிக்கக்கூடாது.

கணவன் உயிரோடு இருக்கும்போது கடைபிடித்து வந்த அத்தனை ஆடை அலங்காரங்கள் மற்றும் மேனி அலங்காரங்களையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

அவள் தனது கணவனின் இழப்பை எண்ணி வாழ்கிறாள் என்ற நிலையில்தான் இருக்க வேண்டும். சாதரணமான அலங்காரமற்ற ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். அதற்காக வெள்ளைப் புடவை மட்டும் அணிந்து சோகத்துடன் தலைவிரி கோலமாக குடும்ப உறவுகளுடனான தொடர்புகளை துண்டித்து கொண்டு தனி அறையில் ஒதுங்கி இருக்க வேண்டும் என்பதல்ல. அப்படி கட்டளையிப்படவுமில்லை.

இத்தாவுடைய பெண் வெள்ளை புடவை அணிவது கடமையல்ல என்றும் நகம் வெட்டுதல், அக்குள் முடிகள் மர்மஸ்தான முடிகள் கலைதல் தடுக்கப்பட்டவையல்ல. அவை அனுமதிக்கப்பட்டவை என்றும் இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களும், இமாம் இப்னு கைய்யும் (ரஹ்) அவர்களும் தெளிவுபடுத்துகிறார்கள்.
(நூல்:ஃபத்ஹுல் பாரி9/402,அஸ்ஸாதுல் மஆத் 5/705)

இத்தாவின்போது அலங்காரங்களிலிருந்து இப்பெண் தவிர்ந்து கொள்வதோடு சுத்தமாக ஆரோக்கியமாக அன்றாட நடவடிக்கைகளில் பங்கு பெறக்கூடியவளாக இருக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட எந்த ஒழுங்குகளையும் தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு விதிக்கப்படவில்லை. அவள் கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்துவதற்கான நிலையில் இருப்பதனால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு சொல்லப்படவில்லை. அன்றாட நடைமுறையில் கணவனோடு தலாக் சொல்லப்பட்ட முன் எப்படி இருந்தாலோ அப்படியே தலாக்குடைய காலத்திலும் இருந்து கொள்ளலாம்.

இத்தா குறித்து மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள்:

வயது போன பெண்கள் 40 நாட்கள் இத்தா இருந்தால் போதும்.

அவர்கள் இருட்டறையில் இருக்க வேண்டும்.

ஆண்பிள்ளைகள், சிறுவர் எவரையும் அப்பெண் பார்க்கவோ பேசவோ கூடாது.

கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றில் ஆண்பிள்ளை இருக்கலாம் என்பதால் கர்ப்பிணிகளும் அவர்களை பார்க்கக் கூடாது.

வெண்ணிற உடை அணிவது, தலையனை மற்றும் கண்ணாடிக்கு வெண்ணிற உறையை மட்டும் பயன்படுத்துவது.

இத்தா காலத்தில் மட்டும் அந்நிய ஆண்களை பார்க்கக் கூடாது.(பெண் எக்காலத்திலும் அந்நிய ஆண்களை பார்க்கக் கூடாது என்பதுதான் இஸ்லாத்தின் சட்டமாகும்.)

இத்தாவிலுள்ள பெண் அண்டை வீட்டு பெண்களுடன் பேசக்கூடாது.அவர்கள் நோய்வாய்ப்பட்டால் சென்று பார்க்கக் கூடாது.

உறவினர்களில் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால்
சென்று நோய் விசாரிக்கக் கூடாது.

நல்ல காரியங்களில் பங்கு கொள்ளக் கூடாது.

மரணித்தவர்களை சென்று பார்க்கக் கூடாது.

நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனைக்கு செல்லக் கூடாது.

புதிதாக மணம்முடித்த தம்பதிகளை பார்க்க விடாமல் தடுப்பது.

நாட்டு நடப்புகளை அறிய விடாமல் தடுப்பது.

இவ்வாறு பல்வேறு மூடநம்பிக்கைள் பரவி கிடக்கின்றன.இவைகள் அனைத்தும் மாற்று மதத்தவரிடமிருந்து காப்பி அடிக்கப்பட்ட விஷயங்களாகும்.இவைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எந்ந சம்மந்தமும் இல்லை.

பார்க்கக் கூடாத ஆண்கள் உண்டா?

ஒரு அந்நிய ஆண்மகனை ஒரு அந்நிய பெண்ணை பருவ வயதை அடைந்த காலத்திலிருந்து தனிமையில் பார்க்கக் கூடாது; பேசக் கூடாது; அந்த இடத்தில் இருக்கக் கூடாது. பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் மஹ்ரமிய்யத்தான (திருமணம் முடிப்பதற்கு தடுக்கப்பட்டுள்ள முஸ்லிமான) ஒருவரின் முன்னிலையில் பேச வேண்டும். அவசரதேவை கருதி பேச வேண்டி வந்தாலும் ஒழுக்க வரம்புகளை பேணி நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய சட்டமே தவிர கணவன் மரணித்த பின் மட்டும் அப்பெண் அந்நிய ஆணை பார்க்கக் கூடாது என்ற சட்டம் கிடையாது.

இத்தாவின் போது திருமணம் பேசலாமா?

இத்தாவில் காத்திருக்கும் அப்பெண்ணுக்கு இத்தா முடியும் முன் திருமணம் பேசக் கூடாது. திருமணம் நிச்சயப்படுத்தக் கூடாது. சாடையாக எடுத்துக் கூறலாம். வேண்டுமானால் மறுமணத்திற்கான அவசியத் தேவைப் பற்றி உணர்த்தலாம்.

(இவ்வாறு இத்தாவில் காத்திருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப் பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் திருமணம் பற்றி வாக்குறுதி செய்த கொள்ளாதீர்கள். ஆனால் இதுபற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்.
இன்னும் இத்தாவின் கெடு முடியும் வரை திருமண பந்நத்தைத் தீர்மானித்து விடாதீர்கள். அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
(அல்குர்ஆன் 2:235)

தேவை ஏற்படின் வெளியில் செல்லலாமா?

இத்தாவுடைய காலத்திலுள்ள பெண்ணுக்கு மருத்துவ தேவை உட்பட அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் வெளியில் சென்று இரவு நேரத்திற்கு முன்பாக வந்துவிட வேணடும் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

என் தாயின் சகோதரி தலாக் சொல்லப்பட்ட பெண்ணாவாள். இத்தாவின் போது தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிப்பதற்காக வெளியில் செல்ல விரும்பினாள்.அப்போது நீர் வெளியே செல்லக் கூடாது என ஒரவர் கண்டித்தார். ஆகவே என் தாயின் சகோதரி நபி ஸல் அவர்களிடம் வந்து இது குறித்து வினவினார். அப்போது நபியவர்கள் ஆம்! நீர் சென்று உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக் கொள். ஏனெனில் அதில் கிடைக்கும் வருமானத்தில் நீ தர்மம் செய்யக் கூடும். அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும் என்றார்கள்.
(அறிவிப்பவர்:ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழி நூல்:முஸ்லிம் 2727)

நபிகளாரின் காலத்தின் பின் இமாம்கள் காலத்திலும் இந்த அனுமதி பேணப்பட்டுள்ளது என்பதற்கு இந்த ஹதீஸின் விளக்கவுரையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இமாம்களான இமாம் மாலிக் ரஹ், இமாம் ஷாபி ரஹ், இமாம் அஹ்மத் ரஹ்,இமாம் லைஸ் ரஹ் ஆகியோர் இத்தாவிலுள்ள பெண் பகல் பொழுதில் வெளியில் செல்லலாம் என இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகின்றனர்.
(நூல்:ஷரஹ் முஸ்லிம்)

பெண்கள் வீடுகளில் பாதுகாப்பான சூழலில் தொழிலில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தால் உதாரணமாக தையல் தொழில்,கைப்பணித் தொழில் போன்றவற்றில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்தால் இத்தாவுடைய காலத்திலும் அந்த தொழிலை முறையாக தாரளாமாக செய்யலாம்.

கட்டுரை சம்மந்தமான சந்தேகங்களுக்கு:+91-7010408632

Saturday, 3 March 2018

ஹதீஸ்களை தொகுத்து வழங்கிய ஹதீஸ் கலை வல்லுனர் இமாம் அபூ அப்தில்லாஹ் அல்ஹாகிம் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள்


இயற்பெயர்  : முஹம்மத் பின் அப்தில்லாஹ்

குறிப்புப்பெயர் : அபூ அப்தில்லாஹ்

பட்டப்பெயர் : இவர் குறிப்பிட்ட காலம் நீதிபதியாக இருந்ததால் ஹாகிம் (நீதிபதி) என்றழைக்கப்பட்டார்.

தந்தைபெயர் : அப்துல்லாஹ்

குலம்  : அள்ளப்பீ குலத்தைச் சார்ந்தவர்

பிறப்பு  : நைசாபூர் என்ற ஊரில் ஹிஜ்ரீ 321 வது வருடம் பிறந்தார்.

கல்வி: 9 வது வயதிலே கற்க ஆரம்பித்தார். 20 வது வயதை அடைந்திருக்கும் போது ஈராக் குராஸான் இன்னும் நதிகள் பல கடந்து கற்றுள்ளார். நைசாபூர் போன்ற ஊர்களில் 2000 ஆசிரியர்களிடமிருந்து ஹதீஸைக் கற்றுள்ளார்.

ஆசிரியர்கள்  : இப்னு ஹிப்பான், முஹம்மத் பின் யஃகூப், அஹ்மத் பின் சுலைமான், தஃலஜ் பின் அஹ்மத் இன்னும் பல ஆசிரியர்கள் இவருக்கு உள்ளனர். ஹதீஸ்கலை அறிஞர்களின் ஆசிரியர் என்று இமாம் தஹபி அவர்கள் கூறியுள்ளார். இவர் மார்க்கப் பற்று மற்றும் பேணுதல் உள்ளவராக இருந்தார் என இப்னு கசீர் கூறியுள்ளார்.

மாணவர்கள் : இமாம் பைஹகி, அபூ யஃலா, அபூதர் அல்ஹர்வீ போன்ற கல்விச் செம்மல்கள் இன்னும் பலர் இவருடைய மாணவர்கள் ஆவார்கள்.

அறிஞர்களின் கூற்று : இவர் சிறப்புக்குரியவர். கல்வி ஞானம் வழங்கப்பட்டவர். ஹதீஸ் கலையில் பல தொகுப்புகள் இவருக்கு உள்ளது என்று இமாம் ஹதீப் பஹ்தாதீ கூறியுள்ளார். இவர் தன்னுடைய காலத்தில் ஹதீஸ் கலை இமாமாகவும் அதை உண்மையான அடிப்படையில் விளங்கியவராகவும் இருந்தார் என அப்துல் ஹஃப்பார் என்பார் கூறியுள்ளார்.

குறைகள் : இமாம் ஹாகிம் அவர்கள் அறிவிப்பாளர்களை எடைபோடும் போது பல பலஹீனமான அறிவிப்பாளர்களை நம்பகமானவர்கள் என்று கவனக் குறைவாக கூறியுள்ளார்கள். பல பலஹீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமான செய்தி என்று குறிப்பிடுவதால் இவர் அலட்சியப் போக்குடையவர் என்ற அறிஞர்களால் வர்ணிக்கப்படுகிறார்.

படைப்புகள் : கிதாபுல் அர்பயீன், அல்அஸ்மாஉ வல்குனா, அல்இக்லீலு ஃபீ தலாயிலுன் நுபுவ்வா, அமாலில் அஷிய்யாத், அல்அமாலி தாரீஹு நய்சாபூர், கிதாபுத் துஆ, அல்லுஅஃபா, இலலுல் ஹதீஸ், ஃபளாயிலு ஃபாத்திமா, ஃபவாயிது ஷுயூஹ், அல்மத்ஹல், அல்முஸ்தத்ரக், மஃரிஃபது உலூமில் ஹதீஸ், மனாகிபுஷ் ஷாஃபி இன்னும் பல புத்தகங்களைத் தொகுத்துள்ளார்.

மரணம் : இவர் ஹிஜ்ரீ 405 வது வருடத்தில் மரணித்தார்