ஆக்கம் - விளதை ரய்யான்
சென்ற தொடரின் தொடர்ச்சி.... (இறுதி தொடர்)
இன்றைய இளைஞர் சமுதாயமே நாளைய முன்னேற்றத்திற்கு அடிக்கல்லாக இருக்கிறார்கள். ஆதலால், இஸ்லாத்தை பிறருக்கு சொல்வதில் மிகப்பெரிய சக்தியாக இளைஞர் சமுதாயம் உருவெடுக்க வேண்டும். இதை ஆழமாக தமது கவனத்தில் கொண்டு இஸ்லாமிய இளைஞர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் இஸ்லாத்தை விட்டும் மக்கள் திசை திருப்பப்படாமல் தடுக்க முடியும்; சிறுவர்களை சிறுபிராயத்திலிருந்து மார்க்க பற்றோடு வார்த்தெடுக்க முடியும்.
இளைஞர்களானோர் இளைய மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சிறியோர் தவறிழைக்கும்போது அவர்களை சரிபடுத்தி நேரான வழியின்பக்கம் தொடர்ந்து அழைத்துச் சொல்ல வேண்டும். அவர்களிடம் முடிந்தவரை இணக்கத்தையே ஏற்படுத்த வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
"நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்." - அல்குர்ஆன் 49:10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
" ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று! "
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 6065
இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம்களாக இருக்கும் நாம் நமக்குள்ளாக ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்காகப் பிணங்கிக் கொள்ளக் கூடாது.
அதே சமயத்தில் இறைக் கட்டளைக்கு மாற்றமாக ஒருவர் நடக்கும் பட்சத்தில் அவருடன் பேச வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஏனென்றால், அல்லாஹ் கூறுகிறான் :
"நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக்கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்."
அல்குர்ஆன் 49:9
உதாரணமாக, நம்முடைய நண்பர் மார்க்கம் அனுமதிக்காத ஓர் செயலில் ஈடுபட நம்மை அழைக்கும் போது நாம் அதை மறுத்து விட வேண்டும். அந்த முரணாண காரியத்தை நாமும் செய்யக்கூடாது. பிறருக்கும் இக்காரியத்தில் துணைபோகுதல் கூடாது!
நன்மையான மற்றும் இறையச்சத்தை ஏற்படுத்தக்கூடிய காரியத்தில் மட்டுமே ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள வேண்டுமென மார்க்க கட்டளை உள்ளது.
"நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். " அல்குர்ஆன் 5:2
அல்லாஹ்விற்காக மட்டுமே நட்புக்கொண்டு, அல்லாஹ்விற்காக மட்டுமே பிரியக்கூடிய மார்க்க அடிப்படையிலான நல்லதொரு நட்பை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
இதோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :
" யார் அல்லாஹ்வுக்காக நேசித்தும், அல்லாஹ்வுக்காகக் கோபம் கொண்டும், அல்லாஹ்வுக்காக கொடுத்தும், அல்லாஹ்வுக்காக வெறுத்தும் வருகிறாரோ அவர் பூரணமான ஈமானை அடைந்து விட்டார்'' அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: அபூதாவூத் (4061)
அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த முறையின்படி நம்முடைய நட்பை அமைத்துக்கொண்டு, அல்லாஹ்விற்காக இம்மார்க்கத்தை நோக்கி பிற மக்களை அழைக்கும்படியான ஒரு நல்லதொரு பணியை மேற்கொள்வதற்கான முயற்சியை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்ளுதல் அவசியம்!
இவ்வாறான முயற்சிகளை நாம் மேற்கொள்ளும் பட்சத்தில், நம்முடைய சமுதாய மக்களையும், இளைய தலைமுறையினரையும் மார்க்க நெறியோடு தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
இஸ்லாமிய இளம் சிறார்களை அழைப்புப்பணி செய்யக்கூடிய பிரச்சாரகர்களாக மாற்ற முடியும். நன்மையை ஏவ முடியும்; தீமையை தடுக்க முடியும்! இப்படிப்பட்ட மக்கள்தான் வெற்றிபெற்றோர் என்று அல்லாஹ்வும் கூறுகிறான்.
"நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். " அல்குர்ஆன் 3:104
அல்லாஹ்வின் மேற்கண்ட வேத வசனத்தின்படி நம்முடைய பணிகளை செய்வதன் மூலம் வழிதவறக்கூடிய பிற மக்களையும் நேர்வழியை போதித்து, நாமும் அந்நேர்வழியிலேயே பயணித்து ஈருலக நன்மையை அடைய முடியும்!.
ஆதலால், நன்மையை ஏவி, தீமையையும் தடுத்து அழைப்புப்பணி செய்யக்கூடிய நன்மக்களாக வல்ல ரஹ்மான் நாம் அனைவரையுமே ஆக்கி அருள்புரிவானாக!
அல்லாஹும்ம ஆமீன்.
No comments:
Post a Comment