குமரி அன்ஸாரி - (கல்வி ஆலோசகர்)
கல்வி கற்க வேண்டியதன் அவசியம், அதன் முக்கியத்துவத்தைப் பற்றி நபி (ஸல்) அவர்களின் நபிமொழிகள் பல நமக்கு விளக்குகின்றன. உங்களில் சிறந்தவர் யாரெனில், கல்வியைக் கற்பவரும், அதனைப் பிறருக்குக் கற்றுக் கொடுப்பவருமே என்றார்கள். இன்னும் திர்மிதியில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற நபிமொழியில், ‘யாரொருவர் கல்வியைக் கற்றுக் கொள்ளச் செல்கின்றாரோ, அத்தகையவர் திரும்பும் வரை அவர் அல்லாஹ்வின் பாதையில் (போரடக் கூடிய போராளியாக) இருக்கின்றார்.
முஸ்லிம்களின் கல்வி கொள்கையை ஒரு வாக்கியத்தில் சொல்வதென்றால் ஈருலகிலும் இறை அருளை வெல்லும் கல்வியை தேடலாக அமைய வேண்டும். அந்த கல்வி கொள்கை என்ன? அதை எப்படி புரிந்துக் கொள்ளலாம்? இஸ்லாமிய மார்க்கத்தில் கற்றல் என்பது என்ன என்பதை முதலில் காண்போம்.
முதலாவதாக இறைவன் எதை நாடுகிறானோ அதன் படியே தன் வாழ்வை அமைக்க வேண்டும். இரண்டாவதாக இஸ்லாம் கூறும் நற்குணங்கள் கொண்டு தம்மை பக்குவப்படுத்த வேண்டும். மூன்றாவதாக ஒவ்வொரு மாணவனும் தனி மனித ஒழுக்கத்தில் சரியாக இருப்பது.
இப்படி ஒரு கொள்கை விவரிக்கப்படும்போது, கல்வி கற்பது என்பது ஒரு இபாதத்தாக, இறைவணக்கமாக, கட்டாயக் கடமையாக ஆகிவிடுகிறது. இதனாலேயே இஸ்லாத்தில் இல்மும், அமலும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றே.
முந்தைய கால கல்வி எவ்வாறு இருந்தது என்பதை அலசுவோம்.
இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியில் பல்வேறு விதமான கல்விக்கூடங்கள் நிறுவப்படுகின்றன. மக்தபுகள், மதரஸாக்கள், பள்ளிவாசல்கள் அனைத்தும் கல்வி நிலையங்களாயின. கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளிவாசலும் அப்போது ஒரு தொடக்கப் பள்ளியாக இருந்தது. இன்றைய பள்ளிகளை போன்று , ஆடம்பரங்களை யோசிக்காத, யோசிக்கத் தெரியாத காலம் அது. இஸ்லாமிய கல்வி கொள்கையை அன்றைய அறிஞர்கள் இரு வகைகளாக பிரித்திருந்தார்கள். கட்டாய அறிவியல் மற்றும் விருப்ப அறிவியல்
கட்டாய அறிவியல் பாடத்தில் அறிவியல், அதனோடு தொடர்புடைய விஷயங்கள், மொழியியல் மற்றும் இலக்கண, இலக்கியம் போன்ற விஷயங்களை கண்டிப்பாக படித்தே ஆக வேண்டும். விருப்ப அறிவியலை இரண்டாக பிரித்து வைத்திருந்தனர்.
முதலாவதாக மார்க்க அறிவியல்
1. நான்கு அடிப்படைகள் (குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, ஸஹாபாக்களின் கூற்றுக்கள்)
2. அதன் கிளைகள் (மார்க்க சட்டங்கள், மார்க்க நீதி போதனைகள்)
3. மொழியியல் மற்றும் இலக்கணம்
4. திருமறை ஓதுதல், தஃப்ஸீர், மார்க்க சட்டங்களின் மூலம், முறைப்படுத்தப்பட்ட சரித்திரக் குறிப்புகள், மனிதப் பரம்பரை பற்றிய ஆய்வு
இரண்டாவதாக உலக அறிவியல்
1. மருத்துவம்
2. கணிதம்
3. கவிதைகள்
4. வரலாறு
நபி ஸல்) அவர்கள் கூறினார்கள் “உங்கள் குழந்தைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் தொழ கற்றுக் கொடுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழச் சொல்லுங்கள்” என்பதை நபி மொழி வாயிலாக அறிகிறோம்.
பத்து வயதை அடைந்தனுக்கு தொழுக்கைக்கான சட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதே இதன் சாரம். வியாபாரம் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாததால் நேர்மையை இழந்து தவிக்கிறது நம் சமூகம். ஏழைகளிடம் எப்படி பழக வேண்டும், பிறர் புன்படாதவாறு எவ்வாறு பேச வேண்டும். பெற்றோர்களையும், பெரியவர்களையும் எப்படி மதிக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாததால் சொந்தப் பெற்றோரை பத்தோடு பதினொன்றாக பார்க்கிறார்கள். நம் முனோர்களின் கல்வி கொள்கை இறை நம்பிக்கையை தூண்டும் விதமாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைய நமது சமுதாய மாணவர்களின் நிலமையோ நாம் எதற்காக வாழ்கிறோம் எந்த நோக்கத்திற்காக வாழ்கிறோம் என்ற சட்டங்கள் தெரியாததால், தெரிந்துகொள்ள முன்வராததால் இன்று நம் சமூகம் கேளிப் பொருளாக பார்க்கபப்டுகிறது.
இந்தியாவில் ஆங்கிலேய அரசு வருவதற்கு முன், ஒழுங்குமுறையான கல்வியும், நல்வாழ்வும் எல்லா மக்களிடமும் இருந்தது. இந்து மக்களும் சரி, முஸ்லிம் சமுதாயமும் சரி, கல்வியிலும், வளர்ச்சியிலும் ஆங்கிலேய நாடுகளை மிஞ்சிக் கொண்டிருந்தார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. ஆனால் வணிகர்களாய் வந்து ஆட்சியை பிடித்த ஆங்கிலேயர்களின் அராஜக ஆட்சியின் முதல் படியிலேயே தெரிந்தது. என்ன அது? இந்தியாவின் கல்வியையும், நல்வாழ்வையும் திட்டமிட்டு அழிப்பது. ஆட்சியில் அமர்ந்த நொடிப்பொழுதுகளில் அதை அமலாக்கவும் செய்தனர்.
ஒழுக்கத்துடன் கூடிய கல்வி தன் கண் முன்னால் அழிக்கப்படுவதை கண்ட இஸ்லாமிய அறிஞர்கள் இனியும் மொளனமாக இருந்தால் ஷரி அத் சட்டங்களை அடியோடு மறக்கடிக்கப்படும் சமூகம் உருவாக்கப்படுமோ என பயந்து சில இஸ்லாமிய அறிஞர்கள் அப்போதைய கவர்னர் ஜெனெரலாக இருந்த ‘வாரன் ஹேஸ்டிங்க்கை சந்திக்க வைத்தனர். விளைவு, காலனி ஆதிக்கத்தின் பிடியில் சிக்கியிருந்த இந்தியாவின் முதன் முதல் கல்லூரி 1781இல் தொடங்கியது. ’கல்கத்தா மத்ரஸா’ அல்லது ‘மொஹம்மதன் கல்லூரி’ எனப் பெயர் பெற்ற அந்த மதரஸா, ஆங்கிலேய அரசின் கீழ் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கல்லூரி உருவானது. அதுவரையிலும் உலகப்பாடத்தையும், மார்க்கத்தையும் பள்ளிகளில் ஒரு சேர தந்த அறிஞர்கள் இனி ஷரி அத் சட்டங்களை மட்டுமே பாடமாக நடத்துவார்கள் என சட்டம் இயற்றினர். மார்க்கமும், நடைமுறை வாழ்வும் வேறு வேறு என்னும் கருத்தை ஆங்கிலேய அரசாங்கம் திணித்தது. 1844இல் மதரஸாவில் படித்தவர்களுக்கு அரசு வேலைகள் நிராகரிக்கப்பட்டன. காலம் காலமாக அரசு அலுவல்களிலும், அத்தியாவசிய பத்திரங்களிலும் ஆட்சி மொழியாக இருந்த பாரசீகத்தை தடுத்து ஆங்கிலத்தை புகுத்தினர்.
ஏற்கனவே இந்திய சுதந்திர போராட்டத்திர்க்காக ஆங்கிலத்தைப் புறக்கணித்துக் கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்திற்கு ஆங்கிலேய சூழ்ச்சி இன்னும் பெரிய நஷ்டத்தை தந்தது. மதரஸா படிப்பிற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இன்னும் அதிகமான பிளவை ஏற்படுத்தியது. ஆங்கில வழிப்பாடங்களை படிப்பவர்களுக்கும், மதரஸாவில் படிப்பவர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் புரண்டோடியது. இதன் தாக்கம், மதரஸா பாடங்களில் உலக அறிவை மேம்படுத்தும் பாடங்கள் குறைந்து கொண்டே போனது அல்லது இல்லாமல் ஆகியது. மார்க்க சட்ட திட்டங்களும் வணக்கங்கள் மட்டுமே வாழ்வு, உலக வாழ்வுக்கு, நமக்கும் தொடர்பில்லை என்னும் நிலைக்கு மதரஸா மாணாக்கர்களும், உலமாக்களும் தள்ளப்பட்டனர். இதன் பாதிப்பால் மதரஸா பாடத்திட்டங்களிலிருந்து உலகக்கல்வி வெளியேற்றப்பட்டது. கல்வியை கைப்பற்றி தங்களது அரக்க ஆட்சியை நிறுவிய ஆங்கிலேயர்கள், அங்கு தங்களது கல்வி நிலையங்கள் பலவற்றை நிறுவினார்கள் அந்த மேர்கத்திய கல்வி கொள்கையில் தான் முஸ்லிம்களும் பயின்றனர். அதன் தொடராக இன்றைய கல்விக் கொள்கையில் மேற்கத்தியப் போக்குகள் மிகுந்து விட்டதன் காரணமாக, குழந்தைகளில் இருந்து பல்கலைக் கழகங்கள் வரைக்கும் இந்த மேற்கத்திய போக்கினால் தீர்மானிக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தான், அவர்களின் மூளைகளில் ஏற்றி வைக்கப்படுகின்றன. இதே போக்கிலே முஸ்லிம்களும் காலம் காலமாக இந்த மேற்கத்திய சிந்தனை வழிக் கல்வியினூடாகப் பயணம் செய்ததன் விளைவு, அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது சுய அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடிய பிற்போக்குத் தனத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் பரிதாபமான செய்தியாகும். இஸ்லாம் கூறும் நல்லொழுக்கங்கள், கற்புநெறி, இறையச்சம் போன்றவை போதிக்கபடாத காரணத்தினால் மேற்கத்திய காலச்சாரத்திற்கு பலியாகி இஸ்லாத்தைப் பற்றி தெரியாமலேயே அதனை விமர்சிக்கும் அறிவு (?) ஜீவிகளாக மாறிவிடுகின்றனர்.
இன்றைய அவசிய தேவை முஸ்லிம்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய நல்லொழுக்க பாடத்தை கட்டாயம் கற்பிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது இஸ்லாமிய அறிஞர்களின் உதவியுடன் இஸ்லாமிய சட்டம், குர்ஆன் விளக்கவுரை, போன்றவற்றைக் கற்பிப்பது மிகவும் அவசியம். நம் சமுதாய கல்லூரிகளின் நிலையே இதுவென்றால் அரபி மதரஸாக்கள் முழுக்க முழுக்க ஆன்மீக வட்டத்திற்குள்ளேயே நிற்கின்றன. இத்தகைய மதரஸாக்களில் பட்டம் பெற்று வெளிவரும் ஆலிம்கள் இன்றைய நவீன பிரச்சனைகளான இன்சூரன்சு, மல்ட்டி லெவல் மார்க்கட்டிங், குளோனிங், ஷேர் மார்க்கெட் போன்ற சர்ச்சைக்குரிய பிரச்சனைகளுக்கு மார்க்கத்தீர்ப்பு கூற தயக்கம் காட்டுகின்றனர். இன்று ஆலிம்கள் தொழுகை, நோன்பு போன்றவற்றோடு தம் பணியை சுருக்கிக் கொள்வதினால் படிப்பறிவு மிக்க சில முஸ்லிம் இளைஞர்கள் வலைமனைகளில் இஸ்லாமிய சேவையில் ஈடுபட்டாலும் மார்க்க சட்ட விளக்கங்களுக்கு ஆலிம்களையே சார்ந்திருக்கின்றனர். மதரஸாக்களில் மார்க்க கல்வியுடன் நவீன தொழில் நுட்ப கல்வியும் சேர்த்தால் இன்றைய நவீன உலகில் முஸ்லிம்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறலாம்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)
No comments:
Post a Comment