Tuesday, 13 March 2018

ஜகரிய்யா அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்-1


ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹழ்ரத் சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகனான ருஜஹீமின் வழியில் வந்த ஆஜரின் மகன் ஆவார்கள். ஜகரிய்யா என்பது இப்ரானி சொல்லாகும். இதன் பொருள் ‘அல்லாஹ்வை என்றும் தியானித்து வருபவர்’ என்பதாகும். தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் 14ஆவது தலைமுறையில் வந்தவர்கள். பைத்துல் முகத்தஸ் மஸ்ஜிதின் திறவுகோல் இவர்களிடம் இருந்து வந்தது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் 1800 வருடங்கள் கழித்து இவர்கள் தோன்றினார்கள்.

ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தச்சு வேலை செய்து வந்தார்கள். அதிகமாக வணக்கத்தில் ஈடுபட்டு வந்தார்கள். பனீ இஸ்ரவேலர்களை நேர்வழிப்படுத்த அல்லாஹ் இவர்களைத் தனது நபியாக அனுப்பியிருந்தான்.

ஹழ்ரத் ஜகரிய்யா நபிக்கு நீண்ட நாட்களாகவே பிள்ளை இல்லாதிருந்தது. அவர்களக்கு அப்போது வயது 130ம் மனைவி ஈஷாவுக்கு வயது 90ம் ஆகியிருந்தது. தமக்குப் பிறகு தவ்ராத் வேதத்தை திறம்பட நடத்திச் செல்லும் ஆற்றல் மிக்க வாரிசு ஒன்று வேண்டும் என்று அவர்கள் மிகவும் கவலையடைந்திருந்தார்கள்.

இதற்காக அல்லாஹ்விடம் உருக்கமாக துஆ கேட்டார்கள். உடனே அல்லாஹ்விடமிருந்து ஓர் அறிவிப்பு வந்தது: ‘ ஓ ஜகரிய்யாவே! உமக்கு ‘யஹ்யா’ என்ற பெயருடன் ஒரு மகனைத் தரப்போகிற நன்மாராயம் கூறுகின்றோம். அந்த மகன் மிகவும் பொறுமையுள்ளவராகவும் இறையச்சம் அதிகமுள்ளவராகவும் எம்முடைய தூதராகவும் இருப்பார்;’ என்று.

என் மனைவி கருவுற்று விட்டாள் என்பதற்கு நான் என்ன அடையாளம் காண முடியும்? என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ் நீர் நல்ல உடல் நிலையிலிருக்கும் பொழுதே திடீரென்று உம்மால் பேசமுடியாது போய்விடும். இதேநிலை உமக்கு மூன்று நாட்கள் வரை நீடிக்கும். அப்போது நீர் காலையிலும் மாலையிலும் எந்நேரத்திலும் என்னை அதிகமாகத் தியானித்துக் கொண்டிரும்’ என்று கூறினான்.

இதற்குப் பின் சிறிது காலம் கடந்ததும் ஹழ்ரத் ஜகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பேசும் சக்தியை இழந்து விட்டார்கள். அல்லாஹ் கூறியபடி இந்த நிலை அவர்களுக்கு மூன்று நாட்கள் நீடித்தது. அந்த மூன்று நாட்களிலும் அவர்கள் இறைதியானத்தில் அதிகமாக மூழ்கியிருந்தார்கள்.

இதை அல்குர்ஆன் 19:3-11தெளிவாகக் கூறுகிறது.

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴
அட்மின் குழு
பதிவு நாள்: 13-03-2018

No comments:

Post a Comment