Tuesday, 13 March 2018

மறுமை வாழ்க்கையே நிரந்தரமானது - 3


அல்ஹாபிழ் அ.சதாம் உசேன் ஹசனி (B.A Arabic)

உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் இந்த உலக வாழ்வின் உண்மைத்துவத்தை சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றான்.

இதை  தவிர்த்து அல்லாஹ்வும் இந்த மனித சமூகத்தின் மீதுள்ள அளவு கடந்த பரிவின் காரணமாக தன் தூதுவர்களின் மூலமும் இந்த உலக கலியாட்டங்களில் மூழ்கி கிடந்த மக்களை எச்சரித்துமிருக்கின்றான்.

இன்னும் தன் அருள் மறையிலும் இந்த உலக வாழ்வின் உண்மைத்துவம் பற்றி மிகத் தெளிவாக பாடம் கற்பிக்கின்றான்.

குர்ஆனை புரட்டும் எவராயினும் அவர் கண்டிப்பாக குர்ஆனின் ஒவ்வொரு பக்கங்களிலும் இந்த உலக வாழ்வு அற்பமானது என்ற உண்மையையும் மறுமை வாழ்வு நிரந்தரமானது என்ற உண்மையையும் பெற்றுக் கொள்வார்.

இன்னும் இந்த மனித சமூகம் எப்படியாவது நிரந்தரமான மறுமை வாழ்வில் வெற்றி பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் எத்தனையோ உதாரணங்களை கூறியும் விளக்கப்பட்டிருப்பதை குர்ஆனில் அவர் பெற்றுக் கொள்வார்.

இன்னும் இந்த உலக கலியாட்டங்களில் தங்களை அர்பணித்தவர்களின் கெட்ட முடிவு எவ்வாறு இருந்தது என்பதையும் பெற்றுக் கொள்வார்.

இந்த மனித சமூகத்தில் பெறும் பான்மையினர் எந்த உலக வாழ்வை பெறுவதற்காக போட்டி போட்டுக் கொண்டும்; அதை சம்பாரிப்பதே தன் இலட்சியமாக எண்ணிக் கொண்டும் தங்களின் உயிர்களையும்; உடமைகளையும்; மனைவி; மக்களையும் தூக்கி எறிந்து விட்டு செயல்படுகின்றார்களோ அந்த உலகைப் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்பதை சற்று சிந்தித்துப் பார்க்க நாம் கடமை
பட்டிருக்கின்றோம்.

"அறிந்து கொள்ளுங்கள் இவ்வுலக வாழ்வு விளையாட்டும்;வீணும்;கவர்ச்சியும்;
உங்களுக்கு மத்தியில் செல்வத்தாலும்;
குழந்தைப் பேற்றாலும் ஒருவர் மற்றொருவரிடம் பெருமையடிப்பதே ஆகும்.
 அல்குர்ஆன் (57:20).

இவ்வுலகம் ஏமாற்றக் கூடியது என்றும் அதே வசனத்தின் இறுதியில் கூறப்பட்டுள்ளது.

"இவ்வுலக வாழ்வோ மனிதனை ஏமாற்றக் கூடிய அற்பமானதே." அல்குர்ஆன் (57:20)

இப்படி இந்த உலக வாழ்வின் பல உண்மைகளை குர்ஆன் தெள்ளத் தெளிவாக இந்த மனித சமுதாயத்திற்கு கோடிட்டுக் காட்டுகிறது.

குர்ஆன் கூறுவது போலவே நிச்சயமாக இவ்வுலகம் ஏமாற்றக் கூடியதே!

மனிதன் பிறக்கும் சமயம் இவ்வுலகை புதுமையாக காண்கின்றான்.

இதற்கு முன்பு இருட்டறைக்குள் இருந்த மனிதன் இப்பொழுது விசாலமான மிக வசதிமிக்க பூமியையும்; வானத்தையும் கண்டு மதிமயங்கி இவ்வுலக வாழ்வின் வீணும் விளையாட்டுமே நோக்கமாக அவனுக்கு மாறிவிடுகிறது.

இன்னும் தன் வாழ்வே இந்த கலியாட்டங்களில் கழிப்பதற்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தவறாக புரிந்து கொள்கின்றான்.

இதனால் "தான் யார்?

தன்னைப் படைத்தவன் யார்?

நீண்ட நெடிய வானத்தை படைத்தவன் யார்?

பிரம்மாண்டமான பூமியை படைத்தவன் யார்?

என்பதை எல்லாம் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறாமலேயே இவ்வுலக வாழ்வின் ஏமாற்றத்திற்கு பழியாகிவிடுகின்றான்.

மனிதன் உலக வாழ்வில் ஏமாறும் விதம்:

மனிதன் குழந்தையாக இருக்கும் சமயம் அவனுக்கு உலக வாழ்வு என்றாலே அவன் தந்தை வாங்கிக் கொடுத்த பொம்மைதான் .
அது தான் அவனுக்கு முழுஉலகமாக காட்சியளிக்கும். அதேபோன்று யார் அவனுக்கு பொம்மைகளை வாங்கிக் கொடுக்கின்றார்களோ அவர்களை அவன் நேசிக்கின்றான்.

ஆனால் யாரேனும் அவனுடைய கையிலிருந்து அந்த பொம்மையை பிடுங்கிக் கொண்டால்; தன் உலகமே பிடுங்கப்பட்டதாக துடியாய் துடித்துவிடுகின்றான்.

எவர் பிடுங்கினாரோ அவரை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகின்றான்.

பிறகு படிப்படியாக அவன் ஓடியாடும் பருவத்தை அடையும் சமயம் எந்த பொம்மையை தன்னுடைய முழு உலகமாக எண்ணியிருந்தானோ அதனை முழுவதும் வெறுக்க ஆரம்பித்து விடுகின்றான்.

அவனிடத்தில் யாராவது பொம்மையை கொடுத்தால் அவரை ஏளனமாக பார்க்க ஆரம்பித்து விடுகின்றான்.

ஏனென்றால் இப்பருவத்தில் அவன் கண்ணா மூச்சி போன்ற பெரிய விளையாட்டுகளை விளையாட ஆரம்பித்து விட்டான்.

இப்படியே தன் பருவம் படிப்படியாக உயர்ந்து வாலிப பருவத்தை அடைகின்றான்.

அப்பொழுது தான் விளையாடும் அனைத்து பொருட்களையும் புறந்தள்ளிவிட்டு;

தன்னை அலங்கரிப்பதில் ஈடுபட ஆரம்பிக்கின்றான்.

தன் ஆடைகளை சுருங்காத நிலையிலும் இன்னும் உடல் முழுவதும் வாசனை திறவியங்களை பூசியவனாகவும்;
தன் தலையை பலமுறைகளில் சீவியும் தன்னை கவர்ச்சியாக்கிக் கொள்கின்றான்.

இச்சமயம் அவனுடன் கண்ணாமூச்சி விளையாடிவர்கள் அவனை அழைத்தால் அவர்களை கேவலமாக காண ஆரம்பித்து
விடுகின்றான். எந்ந விளையாட்டை தன் நோக்கமாக கொண்டு இருந்தானோ அதனை மிகவும் வெறுப்பவனாக மாறிவிடுகின்றான்.

அதை விளையாடுபவர்களையும் இழிவாக எண்ண ஆரம்பித்து விடுகின்றான்.

அச்சமயம் "தான்" செய்யும் அலங்காரமே சிறந்தது என்று எண்ணி முழுவதும் அதில் ஈடுபடுகின்றான்.

பிறகு இப்படியே தன்னுடைய வாழ்க்கையில் பெரும் கட்டங்களை கடந்துவிடுகின்றான்.

பிறகு தன் மனைவி மக்களை உயர்வாக வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை மிகைக்கின்றது.

அதற்காக தன்னை பல வேலைகளிலும்; பசி பட்டிணிகளை பொருத்துக் கொள்வதிலும் அர்ப்பனிக்க ஆரம்பித்து விடுகின்றான்.

தனக்கென்று அழுக்கு படிந்த ஆடையையும்;
பரட்டைத் தலையான முடிகளையும் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்.

அச்சமயம் யாரேனும் அவனிடம் உங்களுடைய ஆடையை சுத்தமாக வைக்கமாட்டீர்களா? என்று கேட்டால்!

"கேட்டவரை மிக ஏழனமாக பார்ப்பான்.

இன்னும் அவரை முழுவதும் விமர்சிக்க ஆரம்பிப்பான்.

ஆனால் இதற்கு முன்பு இதே வாழ்வைத்தான் மிக உயர்வானதாக எண்ணிக் கொண்டிருந்தான். இப்பொழுது அதை விமர்சனம் செய்கின்றான்.

பிறகு சிறிது காலம் தன் மனைவி
மக்களுக்கென்று கழித்துவிட்டு மரணத்தையும் சந்திக்கின்றான்.

அப்பொழுதுதான் அவனுக்கு மறுமையின் வாழ்வு கண்ணிற்கு முன்பு வருகின்றது.
அப்பொழுது தனக்கு முன் சென்ற அத்தனை கட்டங்களும் தன்னை ஏமாற்றிவிட்டதே என்று கத்தி கூச்சலிடுவான்.

தன் முந்திய கால கட்டங்களை எல்லாம் திட்டி தீர்ப்பான். இன்னும் தான் நஷ்டம் அடைந்துவிட்டதை அப்பொழுதுதான் உணர்ந்து கொள்வான்.

அப்பொழுது இவ்வாறு கூறுவான்.....

"அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் (உலகில்) மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று இறைநிராகரிப்பாளன் கூறுவான்.. அல்குர்ஆன்  (78:40).

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

No comments:

Post a Comment