Tuesday, 13 March 2018
மரணத்தை நினைவு கூர்வோம் - 1
ஆலிமா நஜ்மா சித்தீக்கியா MA
இவ்வுலகை படைத்த ஏக இறைவனின் மாபெரும் படைப்புக்களில் ஒன்றே வாழ்க்கையும் மரணமுமாகும்.
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்
‘அவன் எத்தகையவனென்றால், உங்களில் சிறந்த முறையில் நற்காரியத்தில் ஈடுபடுபவர் யார் என்பதை சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான்.’ (அல்முல்க்: 02)
உலகில் வாழும் உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் ஒரு நாள் மரணம் என்னும் முடிவை அடைந்தே தீர வேண்டும்.
மரணம் எனும் விடையில்லா பயணத்தின் நேரம், நாள், இடம், காரணம் ஆகியவற்றை அறியாமலேயே அற்ப உயிரனமாகிய
கொசு முதல் பகுத்தறிவு பெற்ற மனிதர் வரை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதர்கள் இவ்வுலகில் வாழ்வதற்கும், இவ்வுலக இன்ப துன்பங்களை
அடைவதற்கும் விரும்புவது போல் மரணம் எனும் முடிவு எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமென்றாலும் ஏற்படலாம்
எனும் சிந்தையை மனிதர்கள் ஒவ்வொருவரும் தமக்குள்
ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்:
'ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே! கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். நரகத்தை விட்டும் தூரமாக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அனுப்பப்பட்டவர் வெற்றி பெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் வசதிகள் தவிர வேறில்லை'. (அல்குர்ஆன்: 3 : 185)
உலகம் தோன்றிய காலம் முதல் இன்றைய காலம் வரை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று ஒருவரைக் கூட நம்மால் முன்னிறுத்த முடியாது. உலகம் முழுவதும் என்னிலடங்காத பிறப்புகளும், இறப்புகளும் அன்றாடம்
நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, இவ்வுலகில் வாழும்
ஒவ்வொரு ஜீவராசிகளும் நமக்கு மரணம் எனும் எல்கை இருக்கிறது என்பதை உணர்ந்து வாழவேண்டும்.
உண்மையான இறைநம்பிக்கையும், அதையொட்டிய செயல்பாடுகளும்
அந்த நேரத்தில் மனிதனை பாதுகாக்கும் பயன்மிகு ஆயுதங்களாக இருக்கும்.
ஒருவர் உலகில் பிறந்து அல்லாஹ்வையும் இறை தூதர் நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி நல்லவனாக வாழ்ந்தால் அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு ஏற்படும் நிலையும், அதைப் போல் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களின் கட்டளைக்கு மாற்றமாக நடந்து கெட்டவனாக வாழ்ந்தால் அவனுடைய மரணத்திற்கு பிறகு அவனுக்கு ஏற்படும் நிலையை பற்றி பார்ப்போம்.
தீய ஆத்மாவின் உயிர் பறிக்கப்படும் முறை
“அவர்கள் (மரணிக்கும் போது) அவர்களுடைய முகங்களிலும், அவர்களுடைய பின் புறங்களிலும் அடித்தவர்களாக மலக்குகள் உயிர்களைக் கைப்பற்றுவார்கள். (திருக்குர் ஆன் 47:27)
நபி (ஸல்) கூறினார்கள் : கெட்டவர்களின் உயிரை கைப்பற்றும் வானவர்கள் அவனது தலைப்பக்கம் வெறுப்பிலும் கோபத்திலும் வெளியேறு என்று கூறுவார்கள். அப்போது அந்த உயிர் ஈரமான கம்பளியை முள்ளில் போட்டு இழுப்பது போன்ற கடுமையான வேதனையுடன் பிடுங்கப்படும். (அவனுடைய நரம்புகளும், எலும்புகளும் தெறித்து விடுவது போன்ற வேதனை ஏற்படும்.)
நல்ல ஆத்மாவின் உயிர் பறிக்கப்படும் முறை:
நல்லோர்களின் உயிரை கைப்பற்றும் வானவர்கள் அவனது தலைப்பக்கம் அமர்ந்து கொண்டு ‘ நல்ல ஆத்மாவே அல்லாஹ்வின் மன்னிப்பிலும், பொருத்தத்திலும் வெளியேறுவாயாக! என்று கூறுவார்கள். உடனே அவ்வடியானின் உயிர் தண்ணீர் பாத்தரத்தில் இருந்து தண்ணீர் விழுவதைப் போன்று (எவ்வித கஷ்டமின்றி) வெளியேறிவிடும்.” (நூல் : அபூதாவூது. நஸயி, அஹமது, ஹக்கிம்.)
தீய ஆத்மாவின் நிலை :
கெட்டவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் செத்த பிணங்களின் நாற்றத்தை விட கடுமையான நாற்றம் வெளிப்படும் என்று நபி(ஸல்) கூறிவிட்டு தனது மேலாடையை எடுத்து தனது மூக்கை பொத்திக் கொண்டார்கள். பிறகு கம்பளியில் சுருட்டப்பட்ட அந்த உயிரை மலக்குகள் முதலாவது வானத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். வானத்தில் உள்ள மலக்குகள் “ இந்த கெட்ட வாடையுடைய உயிர் யாருடையது என்று கேட்பார்கள்” உலகில் வாழ்ந்த ஒரு கெட்டவனுடைய உயிர் இது என்று கூறுவார்கள். தொடர்ந்து வானத்தை திறந்து விடுமாறு கூறுவார்கள். அவனுக்கு வானம் திறக்கப்படமாட்டாது. என்று கூறிய நபி(ஸல்) பின்வரும் இறைவசனத்தை ஒதினார்கள்.
“ எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றை புறகணித்து) பெருமையடித்தார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்படமாட்டா, மேலும், ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள். இவ்வாறே குற்றம் செய்வர்களுக்குக் கூலி கொடுப்போம்.” (திருக்குர் ஆன் : 7.40).
அதன் பின் இவனுடைய பெயரை பாவிகளின் பெயர்களை பதியும் (ஸிஜ்ஜீன்) என்ற ஏட்டில் எழுதி பூமியின் அடிவாரத்தில் அந்த உயிர் எடுத்து செல்லப்படும் என்று நபி(ஸல்) கூறினார்கள். ( நூல் : அபூதாவூது. நஸயி,அஹமது, ஹக்கிம்.)
“ குற்றவாளிகளின் ஏடு ஸிஜ்ஜீனில் உள்ளது. ஸிஜ்ஜீன் என்பது என்னவென உமக்கு எப்படி தெரியும் ? (அது பாவிகளின் செயல்கள்) பதிவு செய்யப்பட்ட புத்தகம்”. (திருக்குர் ஆன் 83:7-9)
நல்ல ஆத்மாவின் நிலை :
நல்லவர்களின் உயிர் பிடுங்கப்பட்டவுடன் அதை சுவனத்து துணியிலும் நறுமணத்திலும் வைத்து விடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும், அதை சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கி சென்று வானத்தை திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். அங்கே உள்ள வானவர்கள் வானத்தின் வழியை திறப்பார்கள். இவ்வாறு ஒவ்வொரு வானத்தின் ஆத்மாவுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்வார்கள். கடைசியாக ஏழாவது வானத்திற்கு அந்த ஆத்மா சென்றதும், எனது நல்லாடியார்களின் உயிரை இல்லய்யூன் எனும் (நன்மை செய்தோரின் பட்டியல்) ஏட்டில் எழுதுங்கள் என்று அல்லாஹ் கூறுவான் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
“நிச்சயமாக நல்லோர்களின் செயலேடு இல்லிய்யீனில் இருக்கும். இல்லிய்யீன் என்பது என்னவென்று (நபியே!) உமக்கு அறிவித்தது எது? (அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம்” (திருக்குர் ஆன் 83:18:-20)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஜனாஸாவை (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் சுமந்து செல்லும் போது அந்த மைய்யத் நல்லறங்கள் புரிந்ததாக இருக்குமானால் என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள், என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக (கெட்ட மைய்யத்தாக) இருக்குமானால், கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்? என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். (அறிப்பவர் : அபூஸயீதுல்குத்ரி(ரலி) நூல் : புகாரி 1380)
இன்ஷா அல்லாஹ் தொடரும்......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment