Tuesday, 19 November 2019

இஸ்லாத்தில் சமூகநீதி - தொடர் 6



உமர் (ரழி) அவர்களின் தீர்ப்புகள்

ஹஜ் காலத்தில் உமர் (ரழி) அவர்கள் மக்களையும் தனது பிரதிநிதிகளையும் ஒன்றாகவே வைத்து உரையாற்றுவார்கள். “ஏ மனிதர்களே! உங்களது உடமைகளைப் பறித்துக்கொள்வதற்கும் உங்களை அடிப்பதற்கும் அல்ல நான் இவர்களைக் (கவர்னர்களை) உங்கள் எவரையாவது இவர்கள் வேறு விதமாக நடாத்தினால் என்னிடம் கூறுங்கள்.” என்றார்கள்.

இவ்வாறு ஒரு ஹஜ் காலத்தில் ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் தமது நாட்டு கவர்னர் அநியாயமாகத் தனக்கு 100 கசையடிகள் வழங்கியதாக முறையிட்டார்.  அதனைத் தீர்க்கமாக விசாரித்து விஷயம் ஊர்ஜிதமானதும் அவ்வாறே 100 கசையடிகள் அவருக்கு அடிக்க உமர் அவர்கள் உத்தரவிட்டார். அம்ர் இப்னு ஆட்சேபனை தெரிவித்தும் உமர் (ரழி) அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு முறையிட்டவரிடம் இது கவர்னரின் அந்தஸ்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் ஒரு காரியம் என்பதால் ஒரு அடிக்கு இரண்டு பொற்காசுகள் வீதம் கொடுத்துவிட்டு தண்டனையிலிருந்து நீங்கச் சொன்னபோது அவ்வாறே செய்தனர்.

அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தபோது அவர் அங்கிருந்த பள்ளிவாசலொன்றை விரிவுபடுத்துவதற்காக அதன் அருகில் இருந்த கிறிஸ்தவப் பெண் ஒருவரின் வீட்டை உடைத்துவிட்டு அதற்கான இழப்பீட்டுத்தொகையையும் வழங்கினார். ஆனால் அதனை மறுத்த அப்பெண் மதீனாவில் இருந்த கலீபா உமர் அவர்களிடம் வந்து இதுகுறித்து முறைப்பாடு செய்தார். உமர் அவர்கள் கட்டபட்ட அப்பள்ளியின் அப்பகுதியை உடைத்துவிட்டு முன்பிருந்ததுபோல் அப்பெண்ணிண் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.

அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களின் மகன் இன்னுமொரு சாதாரண குடிமகனது புதல்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவனை அம்ரின் மகன் சாட்டையால் அடித்து விட்டான். இதுகுறித்து உமர் (ரழி) அவர்களிடம் முறைப்பாடு வந்ததும் அம்ரையும் மகனையும் மதீனாவுக்கு அழைத்து விசாரித்தார்கள். விஷயம் உறுதியானதும் அப்பாமரனின் மகனிடம் கசையைக்கொடுத்து அம்ரின் மகனுக்கும் அவ்வாறே அடிக்குமாறு உத்தரவிட்டார். அவனும் அவ்வாறே அடித்தான். பின்னர் உமர் (ரழி) அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களைப் பார்த்து “அம்ரே! மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகத்தான் பிறக்கின்றார்கள். நீங்கள் அவர்களை அடிமைகளாக நடத்த முனைகின்றீர்களா?” என்று கடிந்துகொண்டார்கள்.

நீதிவழங்குவதிலும் அதன் மூலம் தண்டனையை நிறைவேற்றுவதிலும் சொந்த பந்தம் என்ற பாகுபாடு இல்லாமல் நீதமான முறையில் உமர் (ரழி) அவர்களது நீதிமுறை இருந்திருப்பதைக் காணலாம். இதனையே இஸ்லாமும் வலியுறுத்துகின்றது.

கலீபாவாகவே இருந்தாலும் அவரையும் விசாரனை செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளிடம் இஸ்லாம் வழங்கியுள்ளது. அவ்விஷயத்தில் நீதிபதிகள் நீதமாக நடக்கவேண்டும் என்றும் கலீபா என்பதற்காக நீதியில் வளைவு சுழிவுகளை ஏற்படுத்தக் கூடாதென்றும் உத்தரவிடுகிறது.

ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் முஸ்லிமல்லாத ஒருவரிடம் ஓர் குதிரையை விலைக்கு வாங்குகிறார்கள். அக்குதிரையில் சிறிது தூரம் பயணித்ததும் அதில் ஏதோ குறை இருப்பதை அறிந்துகொண்ட உமர்  விற்றவரிடம் வந்து அதனைத் திருப்பி ஏற்குமாறு கூற அவர் அதனை முழுமையாகவே மறுக்கின்றார். இருவரும் நீதிபதி சுரைஹ் இடம் வருகிறார்கள். வழக்கை ஆராய்ந்த காழி சுரைஹ் “ஒரு பொருளை வாங்கிய பின்னர் இருவரும் அவ்விஷயத்தைவிட்டு பிரியும் முன் அதனைத் திருப்பிக்கொடுக்கும் உரிமை நுகர்வோனுக்குண்டு. பிரிந்ததன் பின்னர் அதனை ஏற்காது மறுக்கும் உரிமை விற்போனுக்கு உண்டு” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள்.

அந்தத் தீர்ப்பில் அகமகிழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அவரை கூபாவிற்கு காழியாகப் பதவி உயர்வுழங்கினார்கள்.

மஸ்ஜிதுந் நபவிக்கு அருகாமையில் ஒட்டியவாறு அப்பாஸ் (ரழி) அவர்களது வீடு அமைந்திருந்தது. அவ்வீட்டின் கூரைத் தண்ணீர் பள்ளியினுள் வீழ்ந்து தொழுகையாளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. எனவே கலீபா உமர் பள்ளிவாயிலை நோக்கி நீண்டிருந்த கூரைப் பகுதியை அவ்விடம் விட்டு நீக்கச்செய்தார். இதனைக் கண்ட அப்பாஸ் (ரழி) அவர்கள் நீதிபதி உபை இப்னு கஅப் இடம் முறையிடவே கலீபா வரவழைக்கப்பட்டார். உள்ளே காழி ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தமையால் வெகுநேரம் கலீபா அவர்கள் வெளியே காத்திருக்கவேண்டி ஏற்பட்டது. காழி வந்ததும் அப்பாஸ் (ரழி) “இது நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இருந்து வந்த கூரை. உமர் இதனை எனது அனுமதியின்றியே அகற்றியுள்ளார். இது என் மனதைப் பெரிதும் வருத்தப்படுத்துகிறது.” என தனது நியாயத்தை முன்வைத்தார். உமர் (ரழி) அவர்கள் பதிலுக்கு “மக்களது நலனுக்காவேதான் நான் இதனைச் செய்தேன்” என்றார்கள். அதற்கு அப்பாஸ் (ரழி) “நபியவர்களின் வற்புறுத்தலிற்கமைய நான் அவரது தோல்மேல் ஏறி நின்றே அதனைச் செய்தேன். அதனால்தான் அது அகற்றப்பட்டதையிட்டு நான் பெரிதும் மனவேதனைப்படுகின்றேன்.” என்றார். இதனைக் கேட்டதும் உமர் (ரழி) அவர்களின் மனம் பதைபதைத்தது. உடனே எழுந்து “என்னை மன்னித்து விடுங்கள். இவ்விடயம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நீங்களே அக்கூரையை என் தோல்மீது ஏறி நின்று வைத்துவிடுங்கள்.” என்று வருந்திக்கேட்டார். அவ்வாறே செய்த அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்னர் அவ்வீட்டை மஸ்ஜிதுந் நபவிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.

ஒரு காழி வாதியுடனும் பிரதி வாதியுடனும் எவ்வாறு சமத்துவம்பேணி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பின்வரும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.

ஒரு முறை உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கலீபா உமர் அவர்கள் மீது வழக்கொன்றைத்  தாக்கல் செய்தார்.
இருவரும், காழியாக இருந்த ஸைத்பின் ஸாபித்திடம் தீர்ப்புக் கோரிச் சென்றனர். உமர் (ரழி) அவர்களைக் கண்டதும் ஸைத் பின் ஸாபித் அவர்கள் எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றார். உடனே கலீபா “நீர் ஆரம்பமாகவே ஓர் அநீதியைச் செய்துவிட்டீர்” என்றார். பின்பு இருவருக்கும் மத்தியில் வாதப்பிரதிவாதம் நடந்துகொண்டிருக்கும்போது காழியான ஸைத் பின் ஸாபித் அவர்கள் உபை இப்னு கஅப் இடம் உமர் (ரழி) அர்கள் கலீபா என்பதற்காக இவ்வழக்கை விட்டுக் கொடுக்கும்படி சிபார்சு செய்தார். உடனே உமர் (ரழி) அவர்கள் சினம் கொண்டு “இது நீர் செய்த இரண்டாவது அநீதி. உமது பதவியைப் பற்றி நான் சிந்திக்கவேண்டியுள்ளேன்" என்று கண்டித்துக் கூறிவிட்டு சென்றார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:20-11-2019.

Saturday, 16 November 2019

இஸ்லாத்தில் சமூகநீதி - தொடர் 5


உமர் (ரழி) அவர்களது தீர்ப்புகள்

உமர் (ரழி) அவர்கள் தமது கவர்ணர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களுக்கு எழுதிய மடல் இங்கு கவனம் செலுத்தப்படவேண்டிய ஒன்றாகும். அம்மடலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “உங்களது பரிபாலனங்களில் சமத்துவத்தை நிலைநாட்டுங்கள். இதனால் பலமிக்கவர் உம்மிடம் சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்காதிருக்கட்டும். பலவீனர் உமது நீதியையிட்டு அவநம்பிக்கை கொள்ளாதிருக்கட்டும்” என்றார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் வந்து, ஸியாத் பின் கதீப் என்பவர் தனது குதிரைக்கு ஆயிரம் திர்ஹங்களை வரியாக அறவித்ததாகவும் மீண்டும் அவரைக் கடந்து சென்றபோது மறுமுறையும் ஆயிரம் திர்ஹங்களை வரியாக அறவித்ததாகவும் முறைப்பாடு செய்தார். உடனே கலீபா அவர்கள் ஸியாதைக் கண்டித்துவிட்டு “ஒரு ஆண்டில் ஒரு பொருளுக்கு இறுமுறை வரி அறவிடக்கூடாது” எனக் கட்டளையிட்டார்கள்.

உமர் (ரழி) அவர்கள் தமது
ஆளுநர்களாயிருந்தாலும் நீதியென்று வரும்போது கண்டிப்பாகவே இருந்தார்கள்.

பொதுமக்கள் வறுமையில் வாழும்போது அவர்களை நிர்வகிப்பவர்களோ எக்காரணம் கொண்டும் வளம் கொழிக்கும் ஆடம்பர வாழ்வு வாழக்கூடாது என்பதிலும் நேர்மையுடன் செயற்பட்டார்கள்.
தானும் எளிமையான வாழ்க்கை முறையையே கையாண்டார்.

அயாத் பின் கானம் என்ற உமர் (ரழி) அவர்களின் நிர்வாகி ஒருவர் ஆடம்பரமான வாழ்க்கையில் திளைக்கிறார் என்று கேள்வியுற்றதும் அவர் எப்படியிருக்கின்றாறோ அவ்வாறே தன்னிடம் அழைத்துவருமாறு உமர் அவர்கள் ஆளனுப்பி வைக்கின்றார். அவர் அழைத்துவரப்பட்டதும் விசாரணை செய்துவிட்டு அவர் ஆடம்பர மோகத்தில் வாழ்ந்த குற்றத்திற்காக கண்டித்துவிட்டு கானகம் சென்று மந்தை மேய்க்குமாறு தண்டனை வழங்குகின்றார். அவரைப் பதவி நீக்கம் செய்கின்றார். என்றாலும் கவலையுடன் தலைகுணிந்து அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் அயாத் பின் கானம் அவர்களை மீண்டும் அழைத்து மன்னிப்பு வழங்கிவிட்டு அதே பதவியில் மீண்டும்  அமர்த்துகின்றார்.

அதேபோன்று கூஃபாவில் ஆளுநராக இருந்த சஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அங்கு தமக்கென ஒரு அரண்மனையைக் கட்டுவதாகவும் அதன் வாயிற்காவலனுக்கென ஓர் அறையைக் கட்டியிருப்பதாகவும் கேள்வியுற்றபோது உமர் ரலி அவர்கள் முஹம்மத் பின் மஸ்லமா என்பவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பியதோடு அவ்வாயிற் காவலர் அறையை எரித்துவிடுமாறும் கட்டளையிட்டார்கள். அக்கடிதத்தில் பின்வருகின்ற அம்சங்களை அவர் எழுதியிருந்தார். “நீர் பாரசீகப் பேரரசர்கள் போன்று ஓர் அரண்மனை கட்டுவதையும் அவர்களது அரண்மனை வாயிற் கதவுகளை அதற்குப் பயன்படுத்துவதாகவும் அறிகின்றேன். நீரும் அவர்களைப்போல் வாயிற்காவலர்களை வைக்கப்போகின்றீரா?

ஏழைகளும் முஸ்லிம்களும் உம்மிடம் வருவதை நீர் தடுக்கப்போகின்றீரா? அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளை மறந்து பாரசீகப் பேரரசர்களின் பாதையை எடுத்து நரகம் புக விரும்புகின்றீரா?” என்று வினா எழுப்பியிருந்தார்.

மற்றுமொரு முறை கூஃபாவாசிகளில் ஒருவர் மதீனா வந்து உமர் (ரழி) அவர்களிடம் ஆளுனர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் பற்றி முறையிட்டார். அப்போது முஸ்லிம்களுக்கும் பாரசீகப்படைக்கும் இடையே போர்வெடிக்க அண்மித்திருந்த வேளை. என்றாலும் உமர் (ரழி) அவர்கள் ஸஃத் (ரழி) அவர்களை மதீனாவுக்கு அழைத்து விசாரனை நடாத்தினார்கள். இந்த அளவு தனது பிரதிநிதிகள் நீதி நெறிகளில் தவறுவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள் உமர் (ரழி) அவர்கள்.

ஹஜ் காலத்தில் அனைத்து கவர்னர்களும் அங்கே சமூகம்தர வேண்டும் என்பது உமர் (ரழி) அவர்களது கண்டிப்பான உத்தரவு. அவ்வாறு அங்கு வரும் கவர்னர்களைப் பற்றி மக்களிடம் விசாரித்து அவர்களுக்கிடையே பிரச்சினைகள் தகராறுகள் இருந்தால் அவற்றைத் தீர்த்துவைப்பார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:17-11-2019.

Thursday, 14 November 2019

இஸ்லாத்தில் சமூகநீதி - தொடர் 4



அபூபக்கர் (ரழி) அவர்களது தீர்ப்புகள்

முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்தபோது அதனை ஜீரணிக்க முடியாமல் ஸஹாபாக்கள் அங்கு வீற்றிருக்க உமர் (ரழி) அவர்கள் உருவிய வாளோடு யாராவது நபியவர்கள் மரணித்ததாகச் சொல்லும்வரை காத்திருந்தார்கள் தலையைக் கொய்தெடுக்க. இந்த நேரத்தில் அங்குவந்த அபூபக்கர் (ரழி) அவர்கள் நிலைமையை அழகான முறையில் சீர்செய்தார்கள். உமர் பொட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டார்.

முஸ்லிம் சமூகத்தின் அரசின் பொறுப்பை நபி (ஸல்) அவர்களின் பின் யார் ஏற்பது என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையும் அதனால் தோன்றவிருந்த மிகப்பெரிய சமூகப் பிளவையும் அபூபக்கர் (ரழி) அவர்கள் யாருக்கும் அநியாயம் நேர்ந்துவிடாமல் யதார்த்த நிலையை எடுத்து முன்வைத்து அந்த பிரச்சினையைத் தீர்த்துவைத்தார்கள்.

நபியவர்கள் மரணித்ததும் அன்னாரின் உடலை முஹாஜிர்கள் மக்காவிலும் அன்ஸாரிகள் மதீனாவிலும் அடக்கம் செய்யவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு உருவாகிவிட்டது. இதன்போது அபூபக்கர் (ரழி) அவர்கள் நபிமார்கள் எங்கு வஃபாத்தானார்களோ அதே இடத்தில்தான் அடக்கம் செய்யப்படவும் வேண்டுமென்ற நபிமொழியை நினைவூட்டி அப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அபூபக்கர் (ரழி)  அவர்கள் இரண்டு வருடங்களே ஆட்சிசெய்தார்கள் என்பதால் பெரியளவில் சச்சரவுகள் தோன்றி அவற்றுக்குத் தீர்ப்புகள் வழங்க காலம் இருக்கவில்லை.

ஆனாலும் அதன் பின்பு கலீஃபாவாக வந்த உமர் (ரழி) அவர்கள் சுமார் பத்து வருடங்கள் ஆட்சி செய்தார்கள் என்பதாலும் அவரது காலப்பிரிவிலேயே இஸ்லாமிய சாம்ராஜ்யம்  விரிவுபட்டதென்பதாலும் பல்வேறு வழக்குகளை விசாரிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

ஆரம்பத்தில் அமீருல் முஃமினீன் அவர்களே தோன்றிய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தாலும் சாம்ராஜ்யம் விரிவுபடவே அப்பொறுப்பை நீதிவான்களுக்கும் சிலபோது காழிமார்களுக்கும் வழங்கினார்கள்.

எனவே உமர் அவர்களின் காலத்திலிருந்து நீதி முறைமைகளுக்கான நடைமுறை நிகழ்வுகளை அதிகமாகவே இங்கே எடுத்துக்காட்ட முடியும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:14-11-2019

Wednesday, 13 November 2019

இஸ்லாத்தில் சமூகநீதி தொடர் - 3


நீதி வழங்குவதில் நபிகளார்

நுபுவ்வத்திற்கு முன்பு நபியவர்களின் 35 ஆம் வயதில் கஃபா புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அதன்போது ஹஜருல் அஸ்வத் கல்லை யார் தூக்கி அதன் உரிய இடத்தில் வைப்பது என்பதில் பெரும் ரகலையே ஏற்பட்டுவிட்டது. கோத்திர வாழ்க்கையைப் பின்பற்றிய அந்த மக்கள் தமது கோத்திரத் தலைமையின் கீழ் தாமே அதற்குத் தகுதியானவர்கள் என்று வாதாடினர். இறுதியில் அதற்காகப் போர் செய்யவும் வாள்களைக் கையில் உருவியெடுத்தனர். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது மதியூகத்தினால் உருவாக இருந்த மாபெரும் கலவரத்தைத் தடுத்து இலகுவான, அழகானதொரு தீர்ப்பை வழங்கினார்கள். நபியவர்கள் ஒரு துணியின்மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அத்துணியின் ஓரங்களை ஒவ்வொரு குலத்தலைவரையும் பிடித்து உயர்த்துமாறு கூறி இறுதியில் நபியவர்களே அதனை உரிய இடத்தில் பொருத்தினார்கள். இது அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தது.

வழக்குகளை விசாரனைக்கு உட்படுத்தும்போது நீதிபதி வாதியினதும் பிரதி வாதியினதும் வாதங்களை அல்லது நியாயங்களை அவர்கள் யாராயிருந்தாலும் எப்பதவியை வகிப்பவராக இருந்தாலும் தீர்க்கமாகக் கேட்டுவிட்டே நீதிவழங்கவேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பட மொழிந்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களைப் பார்த்து “ஏ அலியே! இரண்டு பேர் உம்மிடம் நீதிகேட்டு வந்தால் முதலாமவரை தீர விசாரித்ததுபோன்றே மற்றவறையும் விசாரிக்காதவரை தீர்ப்பளிக்கவேண்டாம் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மதி)

நபியவர்கள் நீதிவழங்குவதில் குல பேதமோ மத பேதமோ காட்டியதில்லை. ஒரு முறை உயர் குலத்துப் பெண்மனியொருவர் திருட்டுக் குற்றத்தைச் செய்து அது நபியவர்களிடம் வந்தபோது அப்பெண்மனியின் கரத்தைத் துண்டித்து உரிய தண்டனையை வழங்குவது என்று முடிவானது. எனினும் அப்பெண்மனியின் குலகௌரவத்திற்காக அப்பெண் சார்பில் சில முஸ்லிம்களே பரிந்துரைக்க வந்தபோது நபியவர்கள் கூறிய வார்த்தைகள் நீதி வழங்குவதில் எந்தளவு திடமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. நபியவர்கள் கூறினார்கள். “நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் அழித்தோம். ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் வசதிவான்கள் திருடியபோது தண்டிக்காது விட்டுவிட்டார்கள். ஏழைகளை அவர்கள் தவறு செய்தபோதெல்லாம் தண்டித்தார்கள். இறைவன் மீது ஆனையாக முஹம்மதின் மகளான பாத்திமாவே திருடியிருந்தாலும் நான் கையைத் துண்டிக்கச் சித்தமாக இக்கின்றேன்” என்றார்கள்.

நீதி வழங்குவதில் தரவேறுபாடு மட்டுமன்றி மத வேறுபாடுகூட இருக்கக்கூடாது எனன்பதைனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பின்வரும் சம்பவம் இதனை இன்னும் வலுப்படுத்துகிறது. மதீனாவில் வைத்து திருட்டுச்செயலில் ஈடுபட்ட ஒரு முஸ்லிமைக் காப்பாற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஒரு யூதனைக் குற்றவாளியாக்க முனைந்த சில முஸ்லிம்களின் துர்குணத்தை அல்லாஹ் கண்டித்து யூதர்கள் இஸ்லாத்திற்கு முரணான வகையில் நடந்துவந்தாலும் அநியாயமிழைக்கப்படக் கூடாது என்பதை விளக்கினான்.

நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் தம்மிடம் வந்த வழக்குகளை அழகான முறையில் அல்குர்ஆனின் நிழலில் வஹியின் ஒளியில் தீர்த்துவைத்தார்கள். அன்றிருந்த ஸஹாபாக்கள் அதனைக் கண்டு, கேட்டு தம் வாழ்விலும் முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட்டார்கள்.

பிந்தைய காலங்களில் வந்த கலீபாக்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் காழி மார்களும் நபியவர்களின் அவ்வழிகாட்டலின் அடிப்படையில் தாம் சந்தித்த பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கினார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....