Saturday, 16 November 2019

இஸ்லாத்தில் சமூகநீதி - தொடர் 5


உமர் (ரழி) அவர்களது தீர்ப்புகள்

உமர் (ரழி) அவர்கள் தமது கவர்ணர் அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களுக்கு எழுதிய மடல் இங்கு கவனம் செலுத்தப்படவேண்டிய ஒன்றாகும். அம்மடலில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது. “உங்களது பரிபாலனங்களில் சமத்துவத்தை நிலைநாட்டுங்கள். இதனால் பலமிக்கவர் உம்மிடம் சிறப்புச் சலுகைகளை எதிர்பார்க்காதிருக்கட்டும். பலவீனர் உமது நீதியையிட்டு அவநம்பிக்கை கொள்ளாதிருக்கட்டும்” என்றார்கள்.

முஸ்லிமல்லாத ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் வந்து, ஸியாத் பின் கதீப் என்பவர் தனது குதிரைக்கு ஆயிரம் திர்ஹங்களை வரியாக அறவித்ததாகவும் மீண்டும் அவரைக் கடந்து சென்றபோது மறுமுறையும் ஆயிரம் திர்ஹங்களை வரியாக அறவித்ததாகவும் முறைப்பாடு செய்தார். உடனே கலீபா அவர்கள் ஸியாதைக் கண்டித்துவிட்டு “ஒரு ஆண்டில் ஒரு பொருளுக்கு இறுமுறை வரி அறவிடக்கூடாது” எனக் கட்டளையிட்டார்கள்.

உமர் (ரழி) அவர்கள் தமது
ஆளுநர்களாயிருந்தாலும் நீதியென்று வரும்போது கண்டிப்பாகவே இருந்தார்கள்.

பொதுமக்கள் வறுமையில் வாழும்போது அவர்களை நிர்வகிப்பவர்களோ எக்காரணம் கொண்டும் வளம் கொழிக்கும் ஆடம்பர வாழ்வு வாழக்கூடாது என்பதிலும் நேர்மையுடன் செயற்பட்டார்கள்.
தானும் எளிமையான வாழ்க்கை முறையையே கையாண்டார்.

அயாத் பின் கானம் என்ற உமர் (ரழி) அவர்களின் நிர்வாகி ஒருவர் ஆடம்பரமான வாழ்க்கையில் திளைக்கிறார் என்று கேள்வியுற்றதும் அவர் எப்படியிருக்கின்றாறோ அவ்வாறே தன்னிடம் அழைத்துவருமாறு உமர் அவர்கள் ஆளனுப்பி வைக்கின்றார். அவர் அழைத்துவரப்பட்டதும் விசாரணை செய்துவிட்டு அவர் ஆடம்பர மோகத்தில் வாழ்ந்த குற்றத்திற்காக கண்டித்துவிட்டு கானகம் சென்று மந்தை மேய்க்குமாறு தண்டனை வழங்குகின்றார். அவரைப் பதவி நீக்கம் செய்கின்றார். என்றாலும் கவலையுடன் தலைகுணிந்து அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் அயாத் பின் கானம் அவர்களை மீண்டும் அழைத்து மன்னிப்பு வழங்கிவிட்டு அதே பதவியில் மீண்டும்  அமர்த்துகின்றார்.

அதேபோன்று கூஃபாவில் ஆளுநராக இருந்த சஃதிப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் அங்கு தமக்கென ஒரு அரண்மனையைக் கட்டுவதாகவும் அதன் வாயிற்காவலனுக்கென ஓர் அறையைக் கட்டியிருப்பதாகவும் கேள்வியுற்றபோது உமர் ரலி அவர்கள் முஹம்மத் பின் மஸ்லமா என்பவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்தனுப்பியதோடு அவ்வாயிற் காவலர் அறையை எரித்துவிடுமாறும் கட்டளையிட்டார்கள். அக்கடிதத்தில் பின்வருகின்ற அம்சங்களை அவர் எழுதியிருந்தார். “நீர் பாரசீகப் பேரரசர்கள் போன்று ஓர் அரண்மனை கட்டுவதையும் அவர்களது அரண்மனை வாயிற் கதவுகளை அதற்குப் பயன்படுத்துவதாகவும் அறிகின்றேன். நீரும் அவர்களைப்போல் வாயிற்காவலர்களை வைக்கப்போகின்றீரா?

ஏழைகளும் முஸ்லிம்களும் உம்மிடம் வருவதை நீர் தடுக்கப்போகின்றீரா? அல்லாஹ்வின் தூதரின் வழிமுறைகளை மறந்து பாரசீகப் பேரரசர்களின் பாதையை எடுத்து நரகம் புக விரும்புகின்றீரா?” என்று வினா எழுப்பியிருந்தார்.

மற்றுமொரு முறை கூஃபாவாசிகளில் ஒருவர் மதீனா வந்து உமர் (ரழி) அவர்களிடம் ஆளுனர் ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழி) அவர்கள் பற்றி முறையிட்டார். அப்போது முஸ்லிம்களுக்கும் பாரசீகப்படைக்கும் இடையே போர்வெடிக்க அண்மித்திருந்த வேளை. என்றாலும் உமர் (ரழி) அவர்கள் ஸஃத் (ரழி) அவர்களை மதீனாவுக்கு அழைத்து விசாரனை நடாத்தினார்கள். இந்த அளவு தனது பிரதிநிதிகள் நீதி நெறிகளில் தவறுவிடக்கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள் உமர் (ரழி) அவர்கள்.

ஹஜ் காலத்தில் அனைத்து கவர்னர்களும் அங்கே சமூகம்தர வேண்டும் என்பது உமர் (ரழி) அவர்களது கண்டிப்பான உத்தரவு. அவ்வாறு அங்கு வரும் கவர்னர்களைப் பற்றி மக்களிடம் விசாரித்து அவர்களுக்கிடையே பிரச்சினைகள் தகராறுகள் இருந்தால் அவற்றைத் தீர்த்துவைப்பார்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:17-11-2019.

No comments:

Post a Comment