Tuesday, 19 November 2019
இஸ்லாத்தில் சமூகநீதி - தொடர் 6
உமர் (ரழி) அவர்களின் தீர்ப்புகள்
ஹஜ் காலத்தில் உமர் (ரழி) அவர்கள் மக்களையும் தனது பிரதிநிதிகளையும் ஒன்றாகவே வைத்து உரையாற்றுவார்கள். “ஏ மனிதர்களே! உங்களது உடமைகளைப் பறித்துக்கொள்வதற்கும் உங்களை அடிப்பதற்கும் அல்ல நான் இவர்களைக் (கவர்னர்களை) உங்கள் எவரையாவது இவர்கள் வேறு விதமாக நடாத்தினால் என்னிடம் கூறுங்கள்.” என்றார்கள்.
இவ்வாறு ஒரு ஹஜ் காலத்தில் ஒருவர் உமர் (ரழி) அவர்களிடம் தமது நாட்டு கவர்னர் அநியாயமாகத் தனக்கு 100 கசையடிகள் வழங்கியதாக முறையிட்டார். அதனைத் தீர்க்கமாக விசாரித்து விஷயம் ஊர்ஜிதமானதும் அவ்வாறே 100 கசையடிகள் அவருக்கு அடிக்க உமர் அவர்கள் உத்தரவிட்டார். அம்ர் இப்னு ஆட்சேபனை தெரிவித்தும் உமர் (ரழி) அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு முறையிட்டவரிடம் இது கவர்னரின் அந்தஸ்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் ஒரு காரியம் என்பதால் ஒரு அடிக்கு இரண்டு பொற்காசுகள் வீதம் கொடுத்துவிட்டு தண்டனையிலிருந்து நீங்கச் சொன்னபோது அவ்வாறே செய்தனர்.
அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் எகிப்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தபோது அவர் அங்கிருந்த பள்ளிவாசலொன்றை விரிவுபடுத்துவதற்காக அதன் அருகில் இருந்த கிறிஸ்தவப் பெண் ஒருவரின் வீட்டை உடைத்துவிட்டு அதற்கான இழப்பீட்டுத்தொகையையும் வழங்கினார். ஆனால் அதனை மறுத்த அப்பெண் மதீனாவில் இருந்த கலீபா உமர் அவர்களிடம் வந்து இதுகுறித்து முறைப்பாடு செய்தார். உமர் அவர்கள் கட்டபட்ட அப்பள்ளியின் அப்பகுதியை உடைத்துவிட்டு முன்பிருந்ததுபோல் அப்பெண்ணிண் வீட்டைக் கட்டிக்கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களின் மகன் இன்னுமொரு சாதாரண குடிமகனது புதல்வனுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அவனை அம்ரின் மகன் சாட்டையால் அடித்து விட்டான். இதுகுறித்து உமர் (ரழி) அவர்களிடம் முறைப்பாடு வந்ததும் அம்ரையும் மகனையும் மதீனாவுக்கு அழைத்து விசாரித்தார்கள். விஷயம் உறுதியானதும் அப்பாமரனின் மகனிடம் கசையைக்கொடுத்து அம்ரின் மகனுக்கும் அவ்வாறே அடிக்குமாறு உத்தரவிட்டார். அவனும் அவ்வாறே அடித்தான். பின்னர் உமர் (ரழி) அவர்கள் அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அவர்களைப் பார்த்து “அம்ரே! மனிதர்கள் அனைவரும் சுதந்திரமாகத்தான் பிறக்கின்றார்கள். நீங்கள் அவர்களை அடிமைகளாக நடத்த முனைகின்றீர்களா?” என்று கடிந்துகொண்டார்கள்.
நீதிவழங்குவதிலும் அதன் மூலம் தண்டனையை நிறைவேற்றுவதிலும் சொந்த பந்தம் என்ற பாகுபாடு இல்லாமல் நீதமான முறையில் உமர் (ரழி) அவர்களது நீதிமுறை இருந்திருப்பதைக் காணலாம். இதனையே இஸ்லாமும் வலியுறுத்துகின்றது.
கலீபாவாகவே இருந்தாலும் அவரையும் விசாரனை செய்யும் அதிகாரத்தை நீதிபதிகளிடம் இஸ்லாம் வழங்கியுள்ளது. அவ்விஷயத்தில் நீதிபதிகள் நீதமாக நடக்கவேண்டும் என்றும் கலீபா என்பதற்காக நீதியில் வளைவு சுழிவுகளை ஏற்படுத்தக் கூடாதென்றும் உத்தரவிடுகிறது.
ஒரு முறை உமர் (ரழி) அவர்கள் முஸ்லிமல்லாத ஒருவரிடம் ஓர் குதிரையை விலைக்கு வாங்குகிறார்கள். அக்குதிரையில் சிறிது தூரம் பயணித்ததும் அதில் ஏதோ குறை இருப்பதை அறிந்துகொண்ட உமர் விற்றவரிடம் வந்து அதனைத் திருப்பி ஏற்குமாறு கூற அவர் அதனை முழுமையாகவே மறுக்கின்றார். இருவரும் நீதிபதி சுரைஹ் இடம் வருகிறார்கள். வழக்கை ஆராய்ந்த காழி சுரைஹ் “ஒரு பொருளை வாங்கிய பின்னர் இருவரும் அவ்விஷயத்தைவிட்டு பிரியும் முன் அதனைத் திருப்பிக்கொடுக்கும் உரிமை நுகர்வோனுக்குண்டு. பிரிந்ததன் பின்னர் அதனை ஏற்காது மறுக்கும் உரிமை விற்போனுக்கு உண்டு” என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தார்கள்.
அந்தத் தீர்ப்பில் அகமகிழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அவரை கூபாவிற்கு காழியாகப் பதவி உயர்வுழங்கினார்கள்.
மஸ்ஜிதுந் நபவிக்கு அருகாமையில் ஒட்டியவாறு அப்பாஸ் (ரழி) அவர்களது வீடு அமைந்திருந்தது. அவ்வீட்டின் கூரைத் தண்ணீர் பள்ளியினுள் வீழ்ந்து தொழுகையாளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது. எனவே கலீபா உமர் பள்ளிவாயிலை நோக்கி நீண்டிருந்த கூரைப் பகுதியை அவ்விடம் விட்டு நீக்கச்செய்தார். இதனைக் கண்ட அப்பாஸ் (ரழி) அவர்கள் நீதிபதி உபை இப்னு கஅப் இடம் முறையிடவே கலீபா வரவழைக்கப்பட்டார். உள்ளே காழி ஏதோ வேலையில் ஈடுபட்டிருந்தமையால் வெகுநேரம் கலீபா அவர்கள் வெளியே காத்திருக்கவேண்டி ஏற்பட்டது. காழி வந்ததும் அப்பாஸ் (ரழி) “இது நபி (ஸல்) அவர்கள் காலத்திலிருந்து இருந்து வந்த கூரை. உமர் இதனை எனது அனுமதியின்றியே அகற்றியுள்ளார். இது என் மனதைப் பெரிதும் வருத்தப்படுத்துகிறது.” என தனது நியாயத்தை முன்வைத்தார். உமர் (ரழி) அவர்கள் பதிலுக்கு “மக்களது நலனுக்காவேதான் நான் இதனைச் செய்தேன்” என்றார்கள். அதற்கு அப்பாஸ் (ரழி) “நபியவர்களின் வற்புறுத்தலிற்கமைய நான் அவரது தோல்மேல் ஏறி நின்றே அதனைச் செய்தேன். அதனால்தான் அது அகற்றப்பட்டதையிட்டு நான் பெரிதும் மனவேதனைப்படுகின்றேன்.” என்றார். இதனைக் கேட்டதும் உமர் (ரழி) அவர்களின் மனம் பதைபதைத்தது. உடனே எழுந்து “என்னை மன்னித்து விடுங்கள். இவ்விடயம் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. நீங்களே அக்கூரையை என் தோல்மீது ஏறி நின்று வைத்துவிடுங்கள்.” என்று வருந்திக்கேட்டார். அவ்வாறே செய்த அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்னர் அவ்வீட்டை மஸ்ஜிதுந் நபவிக்கு அன்பளிப்பாக வழங்கிவிட்டார்.
ஒரு காழி வாதியுடனும் பிரதி வாதியுடனும் எவ்வாறு சமத்துவம்பேணி நடந்துகொள்ளவேண்டும் என்பதை பின்வரும் இச்சம்பவம் எடுத்துக்காட்டுகின்றது.
ஒரு முறை உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள் கலீபா உமர் அவர்கள் மீது வழக்கொன்றைத் தாக்கல் செய்தார்.
இருவரும், காழியாக இருந்த ஸைத்பின் ஸாபித்திடம் தீர்ப்புக் கோரிச் சென்றனர். உமர் (ரழி) அவர்களைக் கண்டதும் ஸைத் பின் ஸாபித் அவர்கள் எழுந்து நின்று மரியாதையுடன் வரவேற்றார். உடனே கலீபா “நீர் ஆரம்பமாகவே ஓர் அநீதியைச் செய்துவிட்டீர்” என்றார். பின்பு இருவருக்கும் மத்தியில் வாதப்பிரதிவாதம் நடந்துகொண்டிருக்கும்போது காழியான ஸைத் பின் ஸாபித் அவர்கள் உபை இப்னு கஅப் இடம் உமர் (ரழி) அர்கள் கலீபா என்பதற்காக இவ்வழக்கை விட்டுக் கொடுக்கும்படி சிபார்சு செய்தார். உடனே உமர் (ரழி) அவர்கள் சினம் கொண்டு “இது நீர் செய்த இரண்டாவது அநீதி. உமது பதவியைப் பற்றி நான் சிந்திக்கவேண்டியுள்ளேன்" என்று கண்டித்துக் கூறிவிட்டு சென்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
கியாமத் நாளை நோக்கி குழுமம்
அட்மின் குழு
பதிவு நாள்:20-11-2019.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment