Wednesday, 13 November 2019
இஸ்லாத்தில் சமூகநீதி தொடர் - 3
நீதி வழங்குவதில் நபிகளார்
நுபுவ்வத்திற்கு முன்பு நபியவர்களின் 35 ஆம் வயதில் கஃபா புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. அதன்போது ஹஜருல் அஸ்வத் கல்லை யார் தூக்கி அதன் உரிய இடத்தில் வைப்பது என்பதில் பெரும் ரகலையே ஏற்பட்டுவிட்டது. கோத்திர வாழ்க்கையைப் பின்பற்றிய அந்த மக்கள் தமது கோத்திரத் தலைமையின் கீழ் தாமே அதற்குத் தகுதியானவர்கள் என்று வாதாடினர். இறுதியில் அதற்காகப் போர் செய்யவும் வாள்களைக் கையில் உருவியெடுத்தனர். எனினும் நபி (ஸல்) அவர்கள் தமது மதியூகத்தினால் உருவாக இருந்த மாபெரும் கலவரத்தைத் தடுத்து இலகுவான, அழகானதொரு தீர்ப்பை வழங்கினார்கள். நபியவர்கள் ஒரு துணியின்மீது ஹஜருல் அஸ்வத் கல்லை வைத்து அத்துணியின் ஓரங்களை ஒவ்வொரு குலத்தலைவரையும் பிடித்து உயர்த்துமாறு கூறி இறுதியில் நபியவர்களே அதனை உரிய இடத்தில் பொருத்தினார்கள். இது அனைவருக்கும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
வழக்குகளை விசாரனைக்கு உட்படுத்தும்போது நீதிபதி வாதியினதும் பிரதி வாதியினதும் வாதங்களை அல்லது நியாயங்களை அவர்கள் யாராயிருந்தாலும் எப்பதவியை வகிப்பவராக இருந்தாலும் தீர்க்கமாகக் கேட்டுவிட்டே நீதிவழங்கவேண்டும். இதனை நபி (ஸல்) அவர்கள் தமது சொற்பட மொழிந்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களைப் பார்த்து “ஏ அலியே! இரண்டு பேர் உம்மிடம் நீதிகேட்டு வந்தால் முதலாமவரை தீர விசாரித்ததுபோன்றே மற்றவறையும் விசாரிக்காதவரை தீர்ப்பளிக்கவேண்டாம் என்றார்கள். (அஹ்மத், அபூதாவூத், திர்மதி)
நபியவர்கள் நீதிவழங்குவதில் குல பேதமோ மத பேதமோ காட்டியதில்லை. ஒரு முறை உயர் குலத்துப் பெண்மனியொருவர் திருட்டுக் குற்றத்தைச் செய்து அது நபியவர்களிடம் வந்தபோது அப்பெண்மனியின் கரத்தைத் துண்டித்து உரிய தண்டனையை வழங்குவது என்று முடிவானது. எனினும் அப்பெண்மனியின் குலகௌரவத்திற்காக அப்பெண் சார்பில் சில முஸ்லிம்களே பரிந்துரைக்க வந்தபோது நபியவர்கள் கூறிய வார்த்தைகள் நீதி வழங்குவதில் எந்தளவு திடமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது. நபியவர்கள் கூறினார்கள். “நிச்சயமாக உங்களுக்கு முன்னிருந்தவர்களை நாம் அழித்தோம். ஏனெனில் அவர்கள் தங்களுக்குள் வசதிவான்கள் திருடியபோது தண்டிக்காது விட்டுவிட்டார்கள். ஏழைகளை அவர்கள் தவறு செய்தபோதெல்லாம் தண்டித்தார்கள். இறைவன் மீது ஆனையாக முஹம்மதின் மகளான பாத்திமாவே திருடியிருந்தாலும் நான் கையைத் துண்டிக்கச் சித்தமாக இக்கின்றேன்” என்றார்கள்.
நீதி வழங்குவதில் தரவேறுபாடு மட்டுமன்றி மத வேறுபாடுகூட இருக்கக்கூடாது எனன்பதைனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. பின்வரும் சம்பவம் இதனை இன்னும் வலுப்படுத்துகிறது. மதீனாவில் வைத்து திருட்டுச்செயலில் ஈடுபட்ட ஒரு முஸ்லிமைக் காப்பாற்றிவிட்டு அதற்குப் பதிலாக ஒரு யூதனைக் குற்றவாளியாக்க முனைந்த சில முஸ்லிம்களின் துர்குணத்தை அல்லாஹ் கண்டித்து யூதர்கள் இஸ்லாத்திற்கு முரணான வகையில் நடந்துவந்தாலும் அநியாயமிழைக்கப்படக் கூடாது என்பதை விளக்கினான்.
நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்நாளில் தம்மிடம் வந்த வழக்குகளை அழகான முறையில் அல்குர்ஆனின் நிழலில் வஹியின் ஒளியில் தீர்த்துவைத்தார்கள். அன்றிருந்த ஸஹாபாக்கள் அதனைக் கண்டு, கேட்டு தம் வாழ்விலும் முன்னுதாரணமாகக்கொண்டு செயற்பட்டார்கள்.
பிந்தைய காலங்களில் வந்த கலீபாக்களும் அவர்களால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் காழி மார்களும் நபியவர்களின் அவ்வழிகாட்டலின் அடிப்படையில் தாம் சந்தித்த பிரச்சினைகளுக்குத் தீர்ப்பு வழங்கினார்கள்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment