Tuesday, 8 May 2018

வெற்றியை நோக்கி - 4


குமரி அன்ஸாரி MCA

(கல்வி ஆலோசகர்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»

கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு    செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக் கொண்டவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.     (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ,     இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

இன்றைய மாணவர்கள் நாளைய தலைமை பொறுப்பை கட்டி காப்பவர்கள்! ஆட்சியை ஆளப்போகின்றவர்கள்! அதிகாரிகளாக வரக்கூடியவர்கள்! நிர்வாகம் செய்ய கூடியவர்கள்!. இன்றைய மாணவர்களின் கல்வி எதனை நோக்கிச் செல்கின்றன, இன்னும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய கல்வி அவர்களை எந்த அளவு உள்வாங்கிச் செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, நாளைய உலகத்தை அவர்கள் எவ்வாறு அமைப்பார்கள் மற்றும் அதன் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூற முடியும். கல்வி என்பது கடல் போன்றது. அதை ஒரு முஸ்லிம் தான் மரணிக்கின்ற வரை கற்றுக்கொண்டே இருக்கலாம். அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட நபித்தோழர்களைப் பாருங்கள், தாங்கள் மரணிக்கும் வரையில் கல்வியை கற்பிப்பது மட்டுமல்ல, கற்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அதாவது ஒரு மூஃமின் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்கவேண்டும்.
சமூகத்தில் ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக, அல்லது  இழிவான  தாழ்ந்தவனாக கருதபடுவது அவனிடம் இருக்கும் கல்வியின் மூலம் கிடைக்கும் அறிவை வைத்துதுதான், ஒருவன் அறிவில் மிகுந்த பெரிய அறிஞரை விட  உயர்ந்தவனாக (கண்ணியமானவனாக ) அல்லது மிருகத்தை விட தாழ்ந்தவனாக ஆகுவது ஒருவனின் முறையான கல்வி அறிவின் மூலம் தான், முறையாக  அறிவை வளர்த்தால் அறிஞனாகிறான் முறைகேடாக  விட்டால் மிருகமாகிறான். எனவே  தான் இஸ்லாம் அறிவு வளர்ச்சிக்கு காரணமாக  உள்ள எல்லா கல்வியைக் கற்பதற்கும்  ஆர்வமூட்டுகிறது படிப்பும், எழுத்தும் கல்விக்கு அஸ்திவாரமாக இருப்பதால் இறைவனின் முதல் வசனமே கல்வியை பற்றியதாக  இறைவன்  இறக்கிவைத்தான் .

தற்போதைய கல்வியில் மேற்கத்தியப் கலச்சாரங்கள் மிகுந்து விட்டதன் காரணமாக, சிறு குழந்தைகளில் இருந்து பல்கலைக் கழகங்கள் வரைக்கும் இந்த கலாச்சார சீரழிவினால் தீர்மானிக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தான், அவர்களின் மூளைகளில் ஏற்றி வைக்கப்படுகின்றன. இதே போக்கிலே முஸ்லிம்களும் காலம் காலமாக இந்த மேற்கத்திய சிந்தனை வழிக் கல்வியினூடாகப் பயணம் செய்ததன் விளைவு, அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது சுய அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடிய பிற்போக்குத் தனத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் பரிதாபமான செய்தியாகும்.

இன்றைக்கு  நம் சமுதாய பெற்றோர்களில் பலர் தங்களது குழந்தைகளின் எதிர்கால நிலை என்னவாகும் என்பது குறித்து அச்சம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்காக நாம் சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம். இதன் மூலம் வெற்றிகரமாக, நல்ல ஒழுக்கப் பண்புகளைக் கொண்ட, இஸ்லாமிய சிந்தனையின் மீது ஆசை கொண்ட சமூகத்தை உருவாக்கவும், அந்தக் குழந்தைகளின் வாழ்வில் அவர்கள் பயணிக்கவும் இது பயனுள்ளதாக அமையும்.

இருப்பினும், நம்முடைய குழந்தைகள் பலர் சமுதாய சிந்தையில்லாமல்  இந்த மேற்கத்திய கலாச்சாரங்களுக்குப் பலியாகி விடுகின்றார்கள், நம்முடைய எதிர்பார்ப்பைப் பொய்ப்படுத்தி விடுகின்றார்கள். இந்த மேற்கத்தியப் போக்கு அவர்களது வாழ்வில் ஒழுக்கமின்யையும், மரியாதை தெரியாத பண்பாட்டையும், சுயநலத்தையும் விதைத்து விடுகின்றது. அவர்கள் தங்களது வாழ்வை தங்களது நோக்கப்படி அமைத்துக் கொள்கின்றார்கள். மனம் போன வாழ்வை வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள். மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்களாகவும் மாறி விடுகின்றார்கள்.
இந்த நிலை எவ்வாறு உருவானது என்பதை நாம் சற்று ஆய்வு செய்தோமென்றால், அவர்களுக்கு ஊட்டப்பட்ட கல்விக் கொள்கை தான் காரணமென்பதை வெகு எளிதாக அறிந்து கொள்ளலாம்.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன்  (58:11)

படைத்த இறைவனின் பார்வையில் உயர்ந்த படித்தரத்தை பெற்றுத்தரும் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் தரமான பள்ளிக்கூடங்களே ! அறிவை வளர்க்கும் இப்படிப்பட்ட தரமான பள்ளிக்கூடங்களில், அறிவை அடகு வைக்கும் விதமான வணக்க வழிபாட்டு முறைகள், அறிவிற்கு இடமளிக்காமல் வலுக்கட்டயமாக பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படும் வணக்க வழிபாட்டு முறைகள், மூட நம்பிக்கையை வளர்க்கும் வகுப்புகள், சமூகத்தில் குரோதத்தை வளர்க்கும் விதமான பாடத்திட்டங்கள் என கேடு விளைவிக்கும் அம்சங்களை எந்த பள்ளி பெற்றிருந்தாலும் அது தரமான பள்ளிக்கூடமாக ஆகாது.
எனவே, பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுக்கும் போது அறிவை வளர்க்கும் கூடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அறிவிற்கு பொருத்தமில்லாத காரியங்களை போதிக்கும் மடமைகூடங்களை புறக்கணிக்க வேண்டும்.

(தொடரும்).....

2 comments: