Tuesday, 1 May 2018
இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை -1
விளதை. R. ரய்யான்
இறைவனது அற்புத மார்க்கமான இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பற்றியும், அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டிய விதத்தைப் பற்றியும் உலகிற்கு உரக்கச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஏனென்றால், பெண்களை இஸ்லாமிய சமூகம் அடக்குமுறை செய்வதாகவும், அவர்களது உரிமைகளை பறிப்பதாகவும் தொடர்ந்து தவறான கருத்துகள் பொதுவெளியில் பரப்பப்பட்டு வருகிறது.
இவ்வாறான பொய்க்கருத்துகளை பிரச்சாரம் செய்வோர் உண்மையில் பெண்களைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று ஒருகணம் சிந்தித்து பார்க்க வேண்டும். அதுவே எமது ஆசையும் கூட!
ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகிறான் :-
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன் 4:124
ஆணாயினும், பெண்ணாயினும் அவர்கள் இறைவனை அறிந்து, நம்பிக்கை கொண்டு, பல நல்ல காரியங்களை வேதத்தின் வழிகாட்டுதலின்படி செய்தால் அவர்களை நான் சொர்க்கச் சோலைகளில் நுழைவிப்பேன் என்று மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இறைவன் கூறுகிறான்.
இவ்வசனத்தின் மூலம் இறைவன் ஆண் - பெண் என்ற பாலின வேறுபாட்டின் அடிப்படையில் அல்லாமல், நற்காரியங்களின் அடிப்படையில் மட்டுமே நீதியாக கூலி கொடுப்பான் என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.
மேலும், ஆண்கள் எப்படி பெண்கள் மீது உரிமை எடுத்துக் கொள்கிறார்களோ, அதுபோல பெண்களுக்கும் ஆண்கள் மீது பல்வேறு உரிமைகள் உண்டு என்றும் இம்மார்க்கம் பெண்களுக்கான உரிமைகளை சரியாகக் கொடுத்து பாலின பாகுபாட்டைச் சுக்குநூறாகத் தகர்த்தெறிகிறது.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அல்குர்ஆன் 2:228
இன்றைக்கு எத்தனையோ கணவன்மார்கள் தம்முடைய மனைவியை அடிமைகளை போன்று நடத்துகிறார்கள். தாம் சொல்வதை மட்டுமே மனைவி கேட்டு நடக்க வேண்டும் வேறு எவற்றையும் பேசுவதற்கு கூட சிலர் அனுமதி தருவதில்லை. இவ்வாறு இருப்பதை இஸ்லாம் விரும்பவில்லை! மாறாக, மனைவியிடத்தில் சிறந்தவரே, நற்குணம் கொண்டவர் என்று மனிதனின் நற்குணத்திற்கே அழகிய வரைவிலக்கணத்தை இஸ்லாமிய மார்க்கம் கொடுக்கிறது.
"இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்." அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (1082)
மேலும், மனைவிமார்களை முகத்தில் அடிக்கக்கூடாது என்றும், அவளுக்கான அடிப்படை தேவைகளை சரியாக பூர்த்தி செய்து தர வேண்டுமென்றும், அவள் தவறிழைத்தால் அதனை அன்பான முறையில் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமெனவும் இம்மார்க்கம் வலியுறுத்துகிறது.
அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி) உமது விளைநிலமாகும். உமது விளைநிலங்களுக்கு நீ விரும்பியவாறு சென்று கொள். (அவளைக் கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே!
நூல் : அஹ்மத்
"இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் (கணவன்), இறைநம்பிக்கை கொண்ட பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தாள், அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக!.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (2672)
இஸ்லாம் கூறும் மேற்கண்ட நல்ல போதனைகளின் படி கணவனும், மனைவியும் நடந்துவரும் பட்சத்தில் அவர்களுக்குள்ளே எந்தவொரு பிணக்கங்களும் ஏற்படாது, மேலும் அவர்களது குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்போது அவர்களது குழந்தைகளும் நல்லதொரு மார்க்கச் சிந்தனையோடு வளருவார்கள்.
இதுபோன்று இஸ்லாம் பெண்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு உரிமைகளையும், அவர்களது பாதுகாப்பு நல அக்கறையில் இஸ்லாம் கூறும் தீர்வினையும் அடுத்தடுத்த தொடரில் காண்போம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்!....)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment