Friday, 16 February 2018

🔰🔰எது உலகப்பொதுமறை🔰🔰

--ஆலிமா எஸ்.நஜ்மா சித்தீக்கிய்யா M.A

மனிதன் உயிர் வாழ காற்று, நீர், உணவு, இருப்பிடம் ஆகியவை இன்றியமையாதது என்பதை நாம் அறிந்து வைத்திருக்கின்றோம். இவ்வாறு உயிர் வாழும் மனிதன் அவனது சிந்திக்கும் ஆற்றலால் மட்டுமே இன்ன பிற உயிரினங்களிலிருந்து வேறுபடுகின்றான். மனிதர்களை "மாக்களாய்"அல்லாமல் மக்களாய் வாழ வைக்க வேண்டும் என்றால் நன்மை,தீமையை பகுப்பாய்வு செய்யக்கூடிய சிந்திக்கும் ஆற்றலால் மட்டுமே சாத்தியமான விஷயம் எனலாம்.உலகம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான கொள்கைகளும், கோட்பாடுகளும், வேதங்களும், சித்தாத்தங்களும், தத்துவங்களும் நிறைந்திருக்கின்றன. இதில் சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் தாங்கள் வாழும் காலக்கட்டத்திற்கும், சூழலுக்கும் ஏற்றார் போல் ஒரு கொள்கையை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் மூதாதையர்கள் பின்பற்றியதை முன்னிறுத்தி வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலரோ தனக்கென கொள்கையோ, கோட்பாடோ இல்லாமல் மனம் போல வா(வீ)ழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறாக எல்லா தரப்பு மக்களும் தாங்கள் பின்பற்றும் கொள்கையோ அல்லது சித்தாந்தமோ மட்டும் உலகம் முழுவதற்கும் ஏற்றமிகு சிந்தைகளை அள்ளித்தரும் அரிய பொக்கிஷம் என்று எண்ணுகின்றனர்.

இத்தகைய சூழலில் நம் இந்திய நாட்டில் பரவலாக மக்களால் போற்றப்பட்டுக் கொண்டிருக்கும் சில வேதங்களையும்,புத்தகங்களையும் உலக பொதுமறை என்ற இந்த தலைப்பில் அலச  கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு புத்தகத்தை உலக பொதுமறை என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் கருத்துக்கள் உலகம் முழுவதாலும் பின்பற்றத்தக்க சிந்தனைகளை ஊட்டிடும் புத்தகமாக இருக்க வேண்டும் என்பது தலையாய விஷயம். உதாரணமாக இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களாக கருதப்படும் இந்துக்களின் வேதமான பகவத் கீதையை எடுத்துக் கொண்டோமேயானால்  கீழ்சாதிக்காரர்களுக்கு கிருஷ்ணனின் உபதேசம்:நானே நான்கு வர்ணங்களையும் படைத்தேன் (பகவத் கீதை 4:13)“நீ ஒரு சாதாரண செருப்புத் தைப்பவனாகஇருந்தாலும், உனது மரணத்திற்கு பின் அடுத்த ஜென்மத்தில் நீ பெறவிருப்பும் வாழ் வை உத்தேசித்து அதே செருப்பு தைக்கும் தொழிலைத்தான் செ ய்யவேண்டுமே தவிர, ஒரு வீரம் செறிந்த ராணுவ வீரனாகவோ , ஒரு சிறந்த கல்வி மானகவோ வர விரும்பவே கூடாது. எவ்வளவு கீழான கேவலமானதாயினும் அந்த உன் சாதித் தொழிலிலிருந்து மாறாமல் நீ இருந்தா யானால், அடுத்த பிற வியில் உனக்கு விடிவு உண்டு” (ஆதாரம் நூல்: கீதை பற்றிய உண்மை, ஆசிரியர்: வீ.ஆர். நார்லா, பக்கம்:169 ).(பகவத் கீதை 3:4)
கீதையின் மேற்சொன்ன வசனம் அடிமைத்தனத்தை ஆதரிப்பதாய் உள்ளது.மனிதர்களின் அறிவுக்கும் திறனுக்கும் ஏற்றார்போல் அவரவரது வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள உத்தரவிடுவதாய் மட்டுமே ஒரு உலகப்பொதுமறை இருக்க வேண்டும்.மாறாக குலத்தொழில்கள் மட்டுமே சந்ததிகள் செய்ய வேண்டும் என்றால் நவீன விஞ்ஞான வளர்ச்சி,இயந்திரமாக்குதல் போன்றவை சில குலத்தொழில்களையே இல்லாமல் ஆக்கி விட்டது.இந்நிலையில் அந்த சந்ததிகள் நிலமை என்ன?இந்திய அளவில் கூட வட நாட்டுக்கு ஒரு விதமாகவும் தென்னாட்டுக்கு ஒரு விதமாகவும் இப்புத்தகம் இருக்கிறது.எனவே இந்நூலை நாம் எப்படி உலக பொதுமறை என அங்கீகரிப்பது??.

மேலும் இந்திய மக்களில் சிறுபான்மை சமூகமாகிய கிறிஸ்தவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் பைபிளை உலகப் பொதுமறை என அங்கீகரிக்க இயலுமா என அலசுவோம்.ஒரு வேதம் அல்லது உலகப்பொதுமறை என்பது உலக மக்கள் யாவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்க முக்காலத்திற்கும் ஏற்ற அம்சங்களை உள்ளடக்கியதாய் இருக்க வேண்டும்.உதாரணமாக “சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும்.(லேவியராகமம் 15:19-24) என்ற இவ்வசனம் பெண்களுக்கு இயற்கையாய் ஏற்படும் மாதவிடாயை மாபெரும் தீட்டு என்று சித்தரிக்கிறது.இவ்வித இயற்கை உபாதை ஏற்பட்ட பெண்கள் உட்காரும் இடம் முதல் படுக்கும் இடம் வரை தீட்டு ஏற்படும் என்றால் மனிதர்கள் எப்படி பொதுவான இடங்களிலும் வெளிப்பகுதிகளிலும் சஞ்சரிப்பார்கள்??. மனிதர்கள் பொது இடங்களுக்கு செல்வதையும் பஸ்களில் பிரயாணம் செய்வதையும் கூட தடை செய்ய நேரிடுமே!!!.உலகளாவிய மக்களுக்கு உபதேசம் செய்யும் ஓர் இறைமறை ஏற்றமிகு கருத்துக்களை எடுத்தியம்ப வேண்டுமே தவிர ஏற்கத்தக்கா கருத்துக்களை விதைக்க கூடாது.தமிழ் மொழி இலக்கியங்களில் தலையாயதாய் கருதப்படும் திருக்குறள் பரவலாக தமிழ் மக்களால் உலகப்பொதுமறை என ஏற்றுக்கொள்ளப்படுவதால் அதைப் பற்றியும் ஆராய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்."கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்(அதிகாரம்:புலால் மறுத்தல்,திருக்குறள்.) உயிரைக் கொல்லாதவனையும்,ஊனை உண்ணாதவனையும் உலக உயிர்கள் வணங்கி நிற்கும் என்பது இக்குறளின் பொருள்.மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும் பல சிறந்த கருத்துக்களை திருக்குறள் உள்ளடக்கியது என்றாலும் உலகப்பொதுமறை என ஏற்றுக்கொள்ள இயலாது என்பதற்கு இதுவே ஓர் சிறந்த உதாரணம்.புலால் உண்ணாமையை வலியுறுத்தி ஒரு அதிகாரமே இருக்கிறது என்றால் பனிப்பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களின் நிலை என்ன?அங்கு என்ன விளைச்சல்கள் செய்ய முடியும்?பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலிருந்து சைவ உணவுகள் என்பது சாத்தியமற்றதே.இவ்வாறு உலகளாவிய அளவில் செயல்படுத்துவதற்கு முடியாத சில முரண்பாடுகள் திருக்குறளிலும் இடம்பெறுகிறது.
இத்தகைய சூழலில் முக்காலத்திற்கும் பொருந்துவதாய்,உலகம் முழுமைக்கும் உகந்ததாய்,எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாய் இன்றளவும் எவ்வித மாற்றமும் இன்றி அரிய பல கருத்துக்களை உள்ளடக்கியதாய் ஒரு அற்புதம் இருக்கிறது என்றால் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட அல் குர்ஆன் மட்டுமே எனலாம்.இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!” என்று. அல்குர்ஆன் 10:37-38இத்தகு மேன்மைமிகு மாமறை கூறும் வழியில் வாழ்ந்து  ஈருலகிலும் வெற்றி பெறுவோம்!

No comments:

Post a Comment