Sunday, 18 February 2018
நாமும் சர்காரி முசல்மான்களில் ஒருவரா?
- அஹ்மத் அன்சார் இப்னு முஹம்மத் சர்புதீன்
குறிப்பு: இந்த கட்டுரை யாரையும் நீ தான் உண்மையான முஸ்லிம், நீ காஃபிர் என்று சான்றிதழ் கொடுக்கும் பதிவல்ல. நம்மை நாமே சுய ஆய்வு செய்யும் ஒரு உளவியல் பயிற்சியே. (Psychological Exercise)
2010-க்கு பிறகு ஏற்பட்ட சமூக ஊடகங்களின் எழுச்சிக்கு பின்னர் இந்தியாவை மையமாகக் கொண்டு வெளிவரும் வலைதள செய்திகள், முகநூல், ட்விட்டர் பதிவுகளில் புதிய வடிவிலான சொல்லாடல்கள் உருவெடுத்தன. உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோதிக்கு துதி பாடுபவர்கள் பக்த் (Bhakt) என்று அழைக்கப்படுகின்றனர். இதுவே மருவி தமிழ் அரசியல் விமர்சகர்கள், மீம் மற்றும் நையாண்டி ட்ரோல் செயற்பாட்டாளர்களால் பக்தாள் என்று பரவலாக பகிரப்படுகிறது.
சங்பரிவார், RSS, இந்துத்துவ சிந்தனையாளர்களை ‘சங்கி’ (Sanghi), ‘ஐட்டி கேங்’ (Chaddi Gang) மற்றும் ‘டவுசர்கள்’ என்றும், தங்களுடைய அரசியல் தலைவர்களை அல்லது கொள்கைகளை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்களை அவர்கள் விபச்சாரம் புரிவோர் என்னும் தொனியில் ப்ரஸ்டிட்யூட் (Presstitute) என்றும், ஒருதலைபட்ச மதச்சார்பின்மை (Secularism) பேசி அசிங்கப்படுவோர்களை ‘சிக்யூலர்ஸ்’ (Sickulars) என்றெல்லாம் பட்டப்பெயர்களை இந்த சமூக ஊடக உலகம் வழங்குகிறது.
நம் முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு பெயரை அவர்கள் வைத்துள்ளனர். தமிழ் முஸ்லிம்களுக்கு ஏற்கனவே துலுக்கன், துலுக்கச்சி என்ற பெருமையான வார்த்தைகள் இன்றளவும் இருப்பது போக, வட இந்தியர்களால் மிக வீரியமாக ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களை குறிக்கும் சொல்லாக இன்று திகழ்ந்துவருகிறது ‘முல்லா’ (Mullah). முஸ்லிம் பெண்களை அழைக்கும் போது ‘பீபி’ (Beebi) என்பர். நம்மில் பலருக்கு இதுபோன்ற பலவார்த்தைகள் ஏற்கனவே அறிமுகமாகியிருக்கலாம்.
சரி, விடயத்திற்கு வருவோம். மார்கத்தையும், இந்திய அரசியலையும் ஓரளவிற்காவது விளங்கிய முஸ்லிம்கள் தங்கள் உம்மாவில் அங்கம் வகிக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களை விமர்சிக்கும் சொல்லொன்றும் இருக்கிறது. அதுதான் ‘சர்காரி முசல்மான்’ (Sarkari Musalman). தமிழில் மொழிபெயர்ப்பு செய்யும்பொழுது ‘அரசாங்க முஸ்லிம்’ என்ற பொருளில் வரும். அதாவது சுய இலாபத்திற்காக அரசாங்கத்திற்கு அடிவருடும் முஸ்லிம்கள். இன்னும் புரியும்படி சொன்னால், இஸ்லாத்தில் நாங்கள் மிதவாதத்தை கடைபிடிக்கிறோம் என்று மார்தட்டும் நவநாகரீக ‘மாடரேட், நடுநிலை முஸ்லிம்கள்’ (Moderate Muslims).
இவர்களின் பிரச்சினை இரண்டே இன்மையை தவிர வேறு ஒன்றும் இருப்பதாக தெரிவதில்லை. முதலாவது மார்க்க அறியாண்மை. இரண்டாவது அரசியல் தெளிவின்மை. இதில் ஏதாவது ஒன்றில் புலமை பெற்றிருந்தால் கூட சர்காரி முசல்மான் பட்டியலிலிருந்து நாம் தப்பித்திருப்போம். அப்படியானால் மார்க்க அறிவில்லாமல் வெறும் அரசியல் விழிப்புணர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு நாம் சுவனத்தை அடைந்துவிடமுடியுமா? என்று சிலர் கேள்வி எழுப்புவார்கள். நான் கூறியதற்கு அது பொருளல்ல. மார்க்க விடயத்தில் அரைவேக்காடாக இருந்தாலும், அந்த அரைவேக்காட்டுத்தனம் தொடராமல் நம்மை பாதுகாக்கும் மிகப்பெரும் அரணாக அரசியல் நகர்வுகளை பகுப்பாயும் நமது ஆற்றல் விளங்குகிறது.
எவனொருவன் தான் நேசிக்கும் சமூகம், தான் பெருமைப்படும் கலாச்சாரத்திற்கு எதிராக பின்னப்படும் அரசியல் சதிவலைகளை இனம் கண்டு கொள்கிறானோ, அவனே மார்க்க விவகாரங்களில் தன்னுடைய பங்களிப்புகளை சீர்படுத்த முயற்சி மேற்கொள்வான்.
நானோ, நீங்களோ தொழுகைகளிலும், இன்னபிற வழிபாடுகளை தாண்டிய இஸ்லாமிய நற்காரியங்களிலும் குறையுடையவர்களாக இருக்கலாம். இந்த குறைகளையெல்லாம் சிறிது. சிறிதாக நிவர்த்தி செய்யும் ஊக்கியாக அரசியல் புரிதல் விளங்குகிறது என்பதை சுய அனுபவத்தின் மூலமாக உணருபவன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்களை பகிர்கிறேன். ஏனென்றால், இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் இந்த நயவஞ்ச போரில் சிக்குண்டு பலவருடங்களாக சர்காரி முசல்மானாக இருந்து கடந்த ஆண்டில் செயல்படும் முஸ்லிமாக (Practising Muslim) மார்க்த்தை தழுவியோர்களில் நானும் ஒருவன். அல்ஹம்துலில்லாஹ்.
அப்போ, நம் அரசியல் பார்வைகளை எவ்வாறு மெருகேற்றிக்கொள்வது? இந்த சதிகளையெல்லாம் எப்படி இனம்கண்டு கொள்வது? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கான விடைகளும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இணையதளத்திடமே உள்ளது. நம்மில் பலர் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளின் தலைப்புகளை மட்டுமே வாசித்து அவசர கதியில் கோபப்படுவோராக அல்லது மகிழ்ச்சியில் மெய்சிலிர்பவர்களாக உள்ளோம். இந்த போக்கை களைந்து சமூக ஊடகங்களில் வரும் அப்பட்டமான முஸ்லிம் விரோத பதிவுகள், பாராட்டுவது போல் வரும் நயவஞ்சக செய்திகளையெல்லாம் இஸ்லாமிய வரலாற்றோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அதற்கு மார்க்கத்தில் கற்றறிந்த மிகப்பெரும் ஆலிமாக நாம் உருவாக வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை.
அடிப்படை இஸ்லாமிய வரலாறு கூட தெரியாமல் நம்மில் இன்னும் நிறைய பேர் இருக்கிறோம்???/!!! முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்கை வரலாறு கூட ஒரு பகுதி மறைக்கப்பட்டு மற்றொரு பகுதி மட்டும் ஊடகங்களால் அவர்களின் இலட்சியத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அறியாண்மைக்காரர்களான நாமும் BBC-யோ அல்லது CNN தொலைக்காட்சியோ, ஏதேனும் ஒரு ஈத் பெருநாள் தினத்தன்றோ அல்லது ரமலான் மாதத்திலோ Prophet Muhammad என்று தலைப்பிட்டு ஏதேனும் ஒரு செய்தி ஒளிபரப்பினால் உடனே, நம்ம நபிய பத்தி BB-லயே கட்டுரை எழுதீருக்காங்க என்று பெருமைப்பட்டுக்கொள்வோம். இன்றைக்கு ஈத் பெருநாள் தொழுகைகளை எத்துணை தமிழ் ஊடகங்கள் ஒளிபரப்பியது தெரியுமா? என்றெல்லாம் நமக்கு நாமே தன்னிறைவு அடைந்து மகிழ்ச்சி கொள்வோம்.
சேத்தன் பாகத் (Chetan Bhagat) என்ற இன்றைய கல்லூரி இளசுகளால் விரும்பப்படும் ஒரு எழுத்தாளரின் ஆங்கில புத்தகம் வெளிவந்த உடனேயே, அதை தானும் வாங்கி அட்டைப்படத்தை புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்து பெருமையடிக்கும் முஸ்லிம்களில் எத்துணை பேர், ரசூலுல்லாஹ்வின் வரலாற்று நூல்களையோ அல்லது நேர்வழிகாட்டப்பட்ட நான்கு கலீஃபாக்களின் சரித்திர புத்தகங்களையோ படிப்பதில் ஆர்வம் காட்டியிருப்போம்? ஏன் நமது தாய்மொழியான தமிழில் இந்த இஸ்லாமிய புத்தகங்களெல்லாம் வந்ததே இல்லையா? அல்லது ஆங்கிலத்தில் தான் நான் படிப்பேன் என்றாலும், இந்த சஹாபாக்களின் தியாக வரலாறு குறித்தான படைப்புக்களை வாங்குவதில் எந்தளவிற்கு நாம் முயற்சி எடுத்திருப்போம்?
இப்போது நம்மில் பலருக்கு ஓரளவிற்கு புரிந்திருக்கும் நாம் எதில் பின்தங்கியிருக்கின்றோம் என்று.
இறுதியாக ‘சர்காரி முசல்மான்’ பட்டியலில் நாம் இருக்கின்றோமா, இல்லையா? எந்த அளவிற்கு நம் நோய் அதிகமாகி விட்டது? யாரெல்லாம் சர்காரி முசல்மான்கள் என்பன போன்ற சந்தேகங்களுக்கு உளவியல் ரீதியான பார்வைகள் கீழே தரப்பட்டுள்ளன. இதனை படித்து, புரிந்து நம்மை நாம் சீர்படுத்திக்கொள்வோம். நான் உட்பட.
1. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:
நயவஞ்சக ஊடக செய்தி: உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், நவீனமயமாக்கப்படாத மதரசாக்களை இழுத்து மூடுவேன் என சூளுரை.
மறைக்கப்படும் செய்தி: போலிச்சாமியாருமான யோகி முஸ்லிம்களை வேரறுக்க சூளரை.
சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: அவரு முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்றாலும், இந்த மேட்டர்ல நான் அவருக்கு தேங்க்ஸ் சொல்றேன். நம் சமுதாயத்தில் மதரசா வகுப்பிற்கு செல்வோர்கள், இந்த டிஜிட்டல் இந்தியாவில் வெறும் மார்க்க கல்வியை மட்டும் வைத்துக்கொண்டு பொழப்பு நடத்த முடியாது.
2. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:
நயவஞ்சக ஊடக செய்தி: மாணிக்க மலராய பூவி பாடலில் வெடித்தது சர்ச்சை. ஹைதராபாத் இஸ்லாமிய அமைப்பு ப்ரியாவிற்கெதிராக ஃபத்வா.
மறைக்கப்படும் செய்தி: பத்மாவத் திரைப்பட சர்ச்சை போல எந்த ஒரு அமைப்பும் வீதியில் வந்திறங்கி பொது சொத்துக்களை சேதப்படுத்தவில்லை. எந்தவொரு சுன்னி உலமா பேரவையும் ஃபத்வா விடுக்கவில்லை. வெறும் நான்கு இளைஞர்களின் புகாரால் இதுவரை FIR மட்டுமே அரசியலமைப்பு உரிமையின்படி பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் ஒமர் லுலு என்பன், இதற்கு முன்னர் ஒரு வெளிநாட்டு ஆபாச நடிகையை தன் ஆபாச படமொன்றில் நடிக்க வைக்க முயற்சி எடுத்து அதை தன் வாயாலேயே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தவன்.
சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: இந்த ஹஜ்ரத்மார்களுக்கு வேற வேலையே இல்லையா? ஏன் சமுதாயத்தின் மானத்தை வாங்குகிறார்கள்? நபியையும், அவரு மனைவியையும் புகழ்ந்து தான பாட்டு வந்திருக்கு?
குறிப்பு: பல சர்காரி முசல்மான்கள், RSS சங்கிகளைப்போலவே ஆலிம்களை முல்லாக்கள் என்று அழைக்கின்றனர் என்பது கொசுறு செய்தி.
3. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:
நயவஞ்சக ஊடக செய்தி: இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இஸ்லாமியர்களின் முகமது நபி குறித்த ஈரானிய இயக்குனர் மாஜித் மஜீதியின் திரைப்படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார்.
மறைக்கப்படும் செய்தி: தன்னுடைய தொழிலின் ஆரம்ப கட்டத்தில், 90-களில் எதுக்கு பொண்டாட்டி, என்ன சுத்தி வப்பாட்டி என்ற பாடலுக்கும் இசையமைத்துள்ளார் A.R. ரகுமான். ஏன் ஓரிரு வருடத்திற்கு முன்பு கூட நபி (ஸல்) எதிர்த்த திருமணமில்லா பாலியல் உறவுமுறை குறித்தான மணிரத்தினத்தின் திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். மேலும் அமெரிக்கர்களும், யூதர்களும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் அந்த இயக்குனர் ராஃபிதி ஷியா பிரிவை சேர்ந்தவர். மாஷா அல்லாஹ். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹூ அக்பர். ங்கொக்கா, மக்கா. பாய், இந்த படம் மட்டும் வெளீல வந்திருச்சுனா வைங்க, அப்புறம் எல்லாரும் நம்ம ஆளுகளா மாறிடுவானுக. ச்செ, சான்ஸே இல்ல. நம்ம தமிழ் பையன் ரஹ்மான் சமுதாயத்த வேற லெவலுக்கு கொண்டு போயிட்டிருக்காரு. எவன் பாய் சொல்லீருக்கான் இதுவரையும், ஆஸ்கார் மேடையில எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று?
4. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:
நயவஞ்சக ஊடக செய்தி: “முஸ்லிம்களும் எங்க அப்பத்தாவுக்கு பொறந்தங்கதான். தமிழ்நாட்டுல எங்களை பிரிக்க யாராலும் முடியாது. தமிழர்களுக்கு எங்க அப்பன் முருகன்தான்டா கடவுள். உங்க ராமனின் ஆட்டம் இங்கே செல்லுபடியாகாது”, கோவையில் நடந்த நாம் தமிழர் கட்சி மாநாட்டில் சீமான் அனல் பறக்கும் பேச்சு.
மறைக்கப்படும் செய்தி: தப்பித்தவரி நாளை அதிசயமாக ஆட்சியை பிடித்தால் இப்படி மாற்றி பேசினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்பன் முருகனின் தம்பி விநாயகன், ஆகையால் எனது முஸ்லிம் சகோதரர்களும் தங்களது தமிழ் பெருமையை போற்றும் வகையில் விநாயகனை வணங்க வேண்டும்.
சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: மாப்ள, எனக்கென்னமோ இப்ப இருக்குற தமிழ்நாட்டோ அரசியல் வெற்றிடத்த சீமான் அண்ணன் வந்தாதான் சரியா நிரப்புவாருனு தோணுது. ஹூமாயுன்னு பேர வச்சிருக்கு ஒரு முஸ்லிம் கூட என்ன அருமையா நமக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறார். பேசாம, இந்த ம.ம.க. முஸ்லிம் லீக்லயெல்லாம் இருந்து வெலகீட்டு சீமான் கூட போய் சேரலாம் வா.
5. இவன்/இவள் ஒரு சர்காரி முசல்மான்:
நயவஞ்சக ஊடக செய்தி: “முஸ்லிம் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பார்த்து ஒரு பிரதமராத என்னால் இன்னும் அமைதியா இருக்கமுடியாது” முத்தலாக் குறித்தான பாராளுமன்ற விவாதத்தில் நரேந்திர மோதி உணர்ச்சி மல்க கண்ணீர் விடுத்தார்.
மறைக்கப்படும் செய்தி: மார்க்கத்தை விளங்காத வெளிநாட்டில் வசிக்கு வடஇந்திய முஸ்லிம்களே இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அதுவு வெகு சிலரே. மற்ற மதங்களில் மனைவிகளுக்கெதிராக கொலைவெறித் தாக்குதல், மண்ணெண்ணை ஊற்றி எரிப்பு போன்ற சம்பவங்களெல்லாம் அரங்கேறுகின்றது. இந்த சட்டம் நிறைவேறினால் இதுநாள் வரையில் சந்தேகத்தின் பெயரில் முஸ்லிம் ஆண்களை கைது செய்து கொண்டும் போக்கு இன்னும் அதிகமாகும். மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி முத்தலாக் விடுத்தார் என போலியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிறையிலடைப்பார்கள்.
சர்காரி முசல்மான் ரியாக்ஷன்: என்னதான் குஜராத்தில் 2000 முஸ்லிம்களை கொன்றாலும், இப்ப அவரு நம்ம நாட்டோட பிரதமர். அவரு செய்யுற நல்ல விஷயத்தையும் பாராட்டலாம்ல? நாளைக்கு நம்ம வீட்டுக்காரனும் முத்தலாக் கூறி மிரட்டினால் என்ன பண்ணுறது?
குறிப்பு: வளர்ந்துவரும் மார்க்க விழிப்புணர்வின் காரணமாக கணவன்மார்கள் ஒருவேளை வழிதவறி போனாலும் கூட இவர்களே அவர்களுக்கு இறையச்சத்தை ஊட்டுவதை தமிழகத்தில் எத்தனையோ மொஹல்லாக்களில் பார்க்கமுடிகிறது. இருந்தாலும் இந்த தேவையில்லா முத்தலாக்கோஃபோபியா.
முடிவுரை:
நான் குறிப்பிட்டது வெறும் ஐந்து உதாரணங்கள் மட்டுமே. இதுபோல் எத்தனையோ நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் நீங்கள் அனுபவித்திருக்கலாம். அதை மார்க்க வரலாற்றோடு தொடர்புபடுத்தி சரி எது, தவறு எது என்பதை பகுத்தறிய முயற்சிப்போமாக. இன்ஷா அல்லாஹ். வல்ல இறைவன் நம் அனைவரையும் அறியாண்மையிலிருந்து பாதுகாத்து, நம் கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக. ஆமீன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment