Friday, 16 February 2018
வெற்றியை நோக்கி - 2
குமரி அன்ஸாரி MCA
"உங்களில் இறைநம்பிக்கையாளர்களுக்கும், கல்வி கொடுக்கப்பட்டவர்களுக்கும் பல படித்தரங்களை அல்லாஹ் உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிபவன்.” (திருக்குர்ஆன் 58:11)
குர்ஆன் இறங்கிய அந்த பொழுதிலேயே கற்றலை முன் வைத்தே ஆரம்பமாகிறது. அது கல்விக்கு குர்ஆன் தரும் முக்கியத்துவம். கிபி ஏழாம் நூற்றாண்டில் ஹிரா குகையில் கல்வி என்பது என்னவென்று தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்களை தன் தூதராக அல்லாஹ் தேர்ந்தெடுக்கின்றான். அன்றே நபி (ஸல்) அவர்களுக்கு தன் வானவர் மூலம் வஹி என்ற இறை செய்தியை அறிவிக்கின்றான்.
நபி (ஸல்) அருகில் வந்த வானவர் ஜிப்ரீல் ‘ஓதுவீராக’ என்கிறார்.
கல்வி ஞானம் இல்லாத ‘உம்மி’ யான (எழுத வாசிக்க தெரியாத) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எப்படி ஓதுவார்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஓதத் தெரியாதே’ எனத் தன் நிலையை வெளிப்படுத்துகிறார். ஜிப்ரீல் கட்டியணைத்து, ஓதுவீராக என அவரை ஓதவைக்கிறார். அன்றுதான் அகிலத்தை மாற்றி அமைத்த, அறியாமையை அடியோடு சாடி அழித்த, அடிமைத் தனத்தை இருந்த இடம் தெரியாது இல்லாது ஒழித்த, பெண் விடுதலையைக் கண்போன்று தந்த, அறிவுப் புரட்சியை, சிந்தனைப் புரட்சியை ஏற்படுத்தி அறிவொளி பரப்பி காட்டுமிராண்டி தனமான அரேபியாவில் அகிலத்தின் முதல் கல்வி புரட்சியை தொடக்கி வைத்த அந்தப் புனிதமிகு குர்ஆனின் முதல் வசனம் இறங்கி அருளப்பட்டது.
இன்றைய உலகம் மார்க்க கல்வியைப் உலகக் கல்வியில் இருந்து வேறுபடுத்தியே பார்க்கின்றது. மார்க்க கல்வி வேறு. விஞ்ஞானக் கல்வி, அறிவியல் கல்வி, பௌதிகக் கல்வி, வானியல் கல்வி, இரசாயனக் கல்வி, பொறியியற் கல்வி, மருத்துவக் கல்வி, உடற்கூற்றுக் கல்வி, தத்துவக்கல்வி, பொருளாதாரக் கல்வி, வணிகக்கல்வி, கணனிக் கல்வி, நிர்வாகக் கல்வி போன்ற ஒவ்வொன்றையும் வேறு, வேறு என்றவாறு பிரித்துப் பார்க்கின்றது.
மார்க்கக் கல்வி என்பது மேலே கூறிய கல்விகளுக்கு உட்பட்டதல்ல என்ற எண்ணத்தில், பள்ளிகளில் அவை அப்படியே பிரித்து நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றன. முஸ்லிம்கள்கூட மார்க்கக் கல்வி பிற கல்விகளோடு தொடர்பற்றவை அல்லது அவற்றுக்கு எதிரான அல்லது ஈடு கொடுக்க முடியாதவை போன்ற மாயையில் உள்ளனர் என்பது வருத்தம் தரும் கசப்பான செய்தி. இத்தன்மை, மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் குர் ஆனைச் சரியாக விளங்கிக் கொள்ளாமையை வெளிப்படுத்தி நிற்கின்றது. மார்க்க கல்விக்குள் அனைத்து அறிவியற் கல்விகளும் அடக்கம் என்பதே இஸ்லாமிய குர்ஆனின் நிலைப்பாடு.
குர்ஆன் முழுவதிலும் கற்றலை, கல்வியை, சிந்தனையை, படிப்பினையை, வானியலில், உளவியலில், மருத்துவத்தில், உடற்கூற்றில், பௌதிகத்தில், பொருளாதாரத்தில், வணிகத்தில், நிதியில், நீதியில், நில, நீர் வளத்தில், மழையில், கடலில், நிர்வாகத்தில், போரில், சமாதானத்தில், தாவரத்தில், வியாபாரத்தில் இப்படி வகை தொகையின்றி எல்லையற்றுப் பேசிக்கொண்டே போகின்றது.
சிந்திக்கும் திறன் கொண்டவர்களை அல்லாஹ் பார்வைத்திறன் கொண்டவர்கள் என்றும் நல்ல செவிப்புலனுடையவர்கள் என்றும் கூறுகின்றான். சிந்திக்காத மனிதனை அல்லாஹ் பார்வையிருந்தும் அவன் குருடனைப்போல மற்றும் செவிகள் இருந்தும் அவன் செவிடனைப்போல என்று சிந்திக்காதவர்களை அல்லாஹ் தாழ்மைப்படுத்திக் கூறுகின்றான். மனிதன் படைப்பால் ஒன்றுபட்டாலும் அவனுடைய செயல்களால் வேறுபடுகின்றான்.
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
இவை அனைத்திலும் அறிவு கொட்டிக் கிடப்பதாகக் கூறி,
நம்மையெல்லாம் அதனைப் பற்றிச் சிந்திக்க மாட்டீர்களா? அவற்றிள்ள அறிவைப் பெற்றுக் கொள்ள மாட்டீர்களா? உய்த்துணர்ந்து நல்லறிவு பெற்றிட மாட்டீர்களா? படிப்பினை பெறமாட்டீர்களா? இதயங்களில் பூட்டுப் போடப்பட்டுள்ளனவா? பார்வைகள் திரையிடப்பட்டுள்ளனவா? செவிகளில் அடைப்பான் போடப்பட்டுள்ளனவா? என வினாக்களை விடுத்து, தட்டி எழுப்பி, தயவாகவும், அதட்டலாகவும் கூறி, எம்மைச் செயற்பட உற்சாகத்தையும் ஊக்குவிப்பையும், விழிப்புணர்வையும் தருகிறது.
பள்ளிக் கல்வி வேறு, மத்ரஸாக் (மார்க்க ) கல்வி வேறு என்ற தவாறான எண்ணம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இன்றைய நவீன கல்வி முறை கல்வியாளர்களை உருவாக்குவதல்லாமல் நல்ல மனிதர்களை உருவாக்கவில்லை. உதாரணமாக பள்ளி பாடபுத்தகங்களில் குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற டார்வின் தத்துவம் போதிக்கப்படுகிறது. ஆனால் இதை அறிவியல் இன்று வரை நிரூபிக்கவும் இல்லை. உலகம் படைக்கப்பட்டு பல லட்சம் வருடங்களாகியும் இன்று வரை ஒரு குரங்கும் மனிதராக மாறிய சரித்திரமும் இல்லை. இந்த தவறான கல்வி முறையை தான் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இதைப் போன்று ஏராளமான முரண்பாடுகளை இன்றைய நவீன பாடத்திட்டத்தில் காணலாம். கல்வி சாலைகளில்
ஆண், பெண் கலப்பு, ஆண், பெண் தனிமை, இஸ்லாமிய கலாசாரத்திர்க்கு அப்பால் செல்லுதல், அடிப்படையான ஹலால், ஹராமை மீறுதல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. ஆனால் அது நிச்சயமாக தவிர்க்கப்பட முடியுமானவை. அதைப்போன்று கல்வி சுற்றுலாவின் போது முஸ்லிம் மாணவர்கள் மதுபானம் அருந்துவதும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இடையில் தகாத உறவுகள் ஏற்படுவதும் சகஜமாக நடக்ககூடிய நிகழ்வுகள். அதுபோக சில கல்வி கூடங்களில் மாணவர்கள் போதைப் பொருள்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் பள்ளி நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்கள் வேடம் அணிவதும், இசை போன்ற ஹராமான செயல்களை செய்வதும் கண்கூடாக பார்க்கிறோம்.
இவற்றை இஸ்லாமிய சிந்தையில் செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது. எடுத்துக் காட்டாக ஒரு கல்விச் சுற்றுலாவின் போது சுற்றுலா பற்றிய இஸ்லாமிய கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்து வைக்கலாம். பிரயாணத்தின் போது ஓதவேண்டிய துஆக்களை நினைவுப் படுத்தலாம். இஸ்லாமிய கலாச்சாரத்திற்குப் பதிலாக பிற மத கலாச்சாரங்களை புகுத்தபடுவதே இன்றைய நவீன கல்வி சாலைகளில் உள்ள நிலை.
நபி(ஸல்)கூறினார்கள்
யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி
நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர்
என்பது நபிமொழி.
நூல்: அபூதாவூத் 3512.
இன்றைய இந்திய கல்வி முறைப் பற்றி தொடரில் கண்டோம் இன்ஷா அல்லாஹ் காலங்களில் கல்வி எவ்வாறு இருந்தது என்பதை தொடராக பார்ப்போம்.
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment