✍முஹம்மது இப்ராஹிம் யூசுஃபி
இறைவனின் சட்டமான தலாக்கை நீதிமன்றத்திற்கு இழுத்தார்கள்,இறைவனோ நீதிமன்றத்தை தெருவில் இழுத்து விட்டுவிட்டான்...
இஸ்லாம் பெண்களுக்கு முத்தலாக் சட்டத்தின் மூலம் அநீதி இழைக்கிறது.நாங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு நியாயம் வழங்குகிறோம் எனக் கூறி முத்தலாக் தடை மசோதாவை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்திற்கு மாறாக கொண்டுவர துடிக்கும் மத்திய பா.ஜ.க ஆட்சியில்தான் நீதி தெருவிற்கு வந்துள்ளது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை குற்றம் சாட்டி மற்ற நான்கு நீதியரசர்களும் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளனர்.
குற்றச்சாட்டின் பிண்ணனி என்ன?
தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இன்றைய ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர் என்று ஒரு கருத்து பரவலாக உள்ளது.சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர் நரேந்திர மோடிக்கு மிகவும் வேண்டியவரும்,பா.ஜ.க வின் அகில இந்திய தலைவருமரும்,சொராபுதீன் கொல்லப்பட்ட போது உள்துறை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா அவர்கள்.
அமித்ஷாவும் நூறுகோடி பேரமும்
மிகவும் நேர்மையானவர் என அறியப்பட்டிருந்த நீதிபதி லோயா சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் தீர்ப்பளிக்க இருந்த நிலையில் மர்மமான முறையில் இறந்தார்.அப்படி இறப்பதற்கு முன் அந்த வழக்கில் அமித்ஷாவுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு நூறுகோடி ரூபாய் அளிப்பதாக கூறப்பட்டது.அதை அவர் மறுத்ததால் வேறுவழியின்றி கொலைசெய்யப்பட்டிருக்கிறார்.
நீதிபதி லோயாவின் மர்மமான மரணம் பற்றிய விசாரணை தற்பொழுது நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.அந்த வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட்டால் பல உண்னைகள் வெளிவரும்.அரசியல் மாற்றங்களும் நிகழும்.
இதுபோல பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.இந்த வழக்குகளை சரியான முறையில் சகநீதிபதிகளுக்கு மிஸ்ரா ஒதுக்குவதில்லை என்பதுதான் மிஸ்ராவின் மீது வைக்கப்படும் பிரதானமான குற்றச்சாட்டாகும்.
இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தலையிடாது என்று கூறி அவர்களின் மீது சந்தேகப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஆராய்ந்து பார்த்தால் முழுக்க முழுக்க மிஸ்ரா பா.ஜ.க விற்கு ஆதாரவாக செயல்படுவது தெரியவரும்.அதைத்தான் மறைமுகமாக நான்கு நீதியரசர்களும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்கள்.
நீதித்துறையில் இஸ்லாம்!
நீதமும் நேர்மையும் ஆட்சியாளரின் உறைவிடம் என எடுத்துரைக்கிறது இஸ்லாம்.
நேர்மையான ஆட்சியாளர் நாளை மறுமையில் அர்ஷின் நிழலுக்கு கீழ் வீற்றிருப்பார் என்பது நபிமொழியாகும்.
தவறுசெய்பவர்கள் உறவினர்களாக இருப்பினும்,பெற்றோர்களாக இருப்பினும் நியாயமான தண்டனையை வழங்கி நீதியை நிலைநாட்ட பணிக்கிறது இஸ்லாம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் கையை வெட்டியிருப்போன் எனக்கூறியது இதற்கு சான்றாகும்.
பணக்காரர்களுக்கு ஒரு நீதியும்,ஏழைக்கு ஒரு நீதியும் என்பது இஸ்லாத்தில் இல்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் உயர்குலத்துப் பெண் ஃபாத்திமா திருடிவிடுகிறாள்.அவள் உயர்குலத்து பெண்மனியாக இருப்தால் அக்குலத்தின் தலைவர்கள் ஸஹாபாக்களை அணுகி ஃபாத்திமாவிற்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சிபாரிசு செய்யுமாறு வேண்டினர்.ஸஹாபாக்களும் நபியவர்களிடம் அப்பெண்ணுக்காக சிபாரிசு செய்தனர்.
நீதியின் பிறப்பிடமான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிபாரிசு செய்த ஸஹாபாக்களை எச்சரிக்கை செய்தார்கள்.குலம் கோத்திரத்திற்கும் பணம் காசுக்கும் விலைபோவதல்ல நீதி என்ற அடிப்படையில் அப்பெண்ணுக்கு தண்டனையை நிறைவேற்றினார்கள்.
ஜனாதிபதியாக இருந்தாலும் குற்றம் சுமத்தப்பட்டுவிட்டால் கூண்டில் ஏறிவிட வேண்டுமென்பதே இஸ்லாத்தின் நியதியாகும்.
ஜனாதிபதியான அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது யூதன் ஒருவன் குற்றம் சுமத்தினான்.அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவ்வழக்கிற்காக கூண்டில் ஏறினார்கள்.தங்களின் பதவியை வைத்து அவர்கள் கூண்டில் ஏறுவதை விட்டும் விலக்கு பெறவில்லை.
இஸ்லாமிய நீதித்துறையைப் போல இந்திய நீதித்துறையும் மாறவேண்டும் என்பதே சாமானியர்களின் விருப்பமாகும்.
No comments:
Post a Comment