Wednesday, 11 October 2017

பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.

பிறருடைய வீடுகளுக்குள் நுழையும் முன் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.


நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள்

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்!

"திரும்பி விடுங்கள்!'' என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன் (அல் குர்ஆன் 24 : 27)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

''நபி (ஸல்) அவர்கள் ஒரு சபைக்கு வந்தாலோ அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய முற்பட்டாலோ அனுமதி கேட்டு ஸலாம் கூறினால் மூன்று முறை ஸலாம் கூறுவார்கள்.''
நூல் : புகாரி (6244)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும்''
அறிவிப்பவர் : அபூ ஸயீத்(ரலி) நூல் : புகாரி (6245)

நாம் செல்லும் வீட்டாருக்கு நம்மைப் பற்றி தெளிவாகக் கூறவேண்டும்

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :
''என் தந்தை ஒரு யூதருக்கு கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன்.
அப்போது அவர்கள் ''யார் அது?'' என்று கேட்டார்கள். 
அதற்கு நான் ''நான்தான்'' என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''நான், நான் என்றால்....?'' என அதைவிரும்பாதவர்களைப் போன்று கூறினார்கள்.   நூல் : புகாரி (6250)

பிறருடைய வீடுகளுக்குள் எட்டிப் பார்ப்பதோ ஒட்டுக் கேட்பதோ கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தபோது அவர் மீது நீங்கள் சிறுகல்லைச் சுண்டி எறிய அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை''
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : புகாரி(6902)

ஸஹ்ல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறையின் கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார்.

அப்போது நபி (ஸல்) அவர்களிடம் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது.
அதனால் தமது தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது '' என்னை நீ பார்க்கிறாய் என்பதை நான் (முன்பே) அறிந்திருந்தால் இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன்.

(அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதினாலேயே ''அனுமதி கேட்கவேண்டும்'' என்பது சட்டமாக்கப்பட்டது '' என்று  கூறினார்கள்.  நூல் : புகாரி (6901)

பதிவு நாள்: 12-10-2017.

No comments:

Post a Comment