தலாக்கும் சமநீதியும்
இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் செய்யத் துணியாத காரியத்தை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களோ, உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் உள்ளவர்களோ செய்யத் துணிவதா?
இஸ்லாமிய ஷரிஅத் சட்டத்தை மாற்றும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் உள்ளதா?
இந்திய இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்ளுமா?
உச்சநீதிமன்றமும், முஸ்லிம் பெண்களை குஜராத்தில் கற்பழித்து , எரித்துக் கொன்றவர்களும் ”முத்தலாக்” முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது போன்று பேசியுள்ள நிலையில் , தலாக்கும், முத்தலாக்கும் சமநீதியானதே என்பதை கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை மண்ணடி சலாமத் பதிப்பகம் வெளியீட்டில் நான் எழுதி வெளியிட்ட “பொதுசிவில் சட்டம்” எனும் நூலில் இருந்து இவ்விடம் தருகிறேன்.
தலாக்கும் சமநீதியும்
தலாக் எனும் விவாகரத்து முடிவு ஆண்கள் கையில் மட்டும் தரப்பட்டு, பெண்களுக்கு அத்தகைய விவாகரத்து பெறும் வாய்ப்பைத் தராமல் இருந்தால் மட்டுமே சமூக அநீதியாகும்.
ஆனால், முஸ்லிம் ஷரிஅத் சட்டம் 1937 (shariya Act 1937 or Muslim Personal Act 1937) இல் உள்ள குலா, ஃபஸ்கு எனும் இரண்டு விவாகரத்து முடிவுகள் பெண்ணின் வசம் தரப்பட்டுள்ளது.
குலா என்பது, பெண்ணே நேரடியாக கணவனிடம் விவாகரத்து கோரும் முறையாகும். ஃபஸ்கு என்பது பெண், தன் தரப்பு திருமண முறிப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் அல்லது அரசு காஜியிடம் கூறிய பின்பு, காஜி மணமுறிவு செய்வதாகும்.
ஆக ஆண்களுக்கு தலாக் முறை விவாகரத்து முடிவு தரப்பட்டிருப்பதைப் போன்று பெண்களுக்கும் குலா, ஃபஸ்கு என இரண்டு விவாகரத்து வாய்ப்புகள் ஷரிஅத் சட்டத்தில் தரப்பட்டுள்ளன. நிச்சயமாக இது சமூகநீதியாகும்.
மேலும், நியாயமான காரணங்களுக்காக ஒரு ஆண் தனது மனைவியை தலாக் விடும் முறைகளில் இரண்டு வழிமுறைகளை மட்டுமே இஸ்லாம் பாவமற்றதாகக் கருதுகின்றது. அவ்விரண்டு வழிமுறைகள் பின்வருமாறு,
(அ) தலாக்கே அஹ்ஸன் : மனைவியின் தூய்மையான காலத்தில், அந்த தூய்மையான நாட்கள் முழுவதிலும் அவளை உடலுறவு கொள்ளாத நிலையில் இருக்கின்ற போது ஒற்றை தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒற்றை தலாக் கொடுத்து இத்தா காலம் முடிவடைந்து விடுகின்றது எனில், இந்த வகையான தலாக்குக்கு ‘தலாக்கே அஹ்ஸன்’ (மிக அழகிய விவாகரத்து) என்று கூறப்படும்.
இத்தகைய தலாக்கை ஒரு கணவன் நினைத்தவுடன் உடனே சொல்லிவிட முடியாது. ‘மாதவிடாயை விட்டும் பரிசுத்தமாக இருக்கின்ற, அதிலும் உடலுறவு கொள்ளாத நாட்களில் மட்டுமே பயன்படுத்த இயலும். அதுவரை அவன் காத்திருக்க வேண்டும். அதிலும் ஒரு தலாக்கை மட்டுமே அவன் பயன்படுத்த வேண்டும்.
(ஆ) தலாக்கே ஹஸன் : மனைவி தூய்மையான நிலையில் இருக்கின்றபோது ஒரு தலாக் கொடுக்க வேண்டும். அவளுக்கு இரண்டாவது தடவை மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைந்த நிலையில் இருக்கின்றபோது, இரண்டாவது தலாக் கொடுக்க வேண்டும்.
அடுத்து மூன்றாவது தடவை மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையான நிலையை அடைந்த பிறகு மூன்றாவது தலாக் கொடுக்க வேண்டும். இவ்வாறு மூன்று தவணைகளில் இடைவெளி விட்டு மூன்று தலாக் சொல்வதைத் தான் ‘தலாக்கே ஹஸன்’ (அழகிய விவாகரத்து) எனப்படும்.
இஸ்லாத்தில் இந்த வகையான தலாக்குக்கும் அனுமதி இருக்கின்றது. இவ்வாறு மூன்று தலாக்குகளை கூறுவதற்கு கணவனுக்கு சுமார் மூன்று மாதங்கள் ஆகும். மூன்றாவது தலாக் கூறும் முன்பு அவ்விருவருக்கும் மத்தியில் இணக்கம் உண்டானால், சேர்ந்து வாழ ஷரிஅத் சட்டம் அனுமதிக்கும்.
மேற்கண்ட இரண்டு வகையான தலாக் முறையையும் நியாயமான காரணங்களுக்காக ஆண் பயன்படுத்திட ஷரிஅத் அனுமதிக்கும். எனினும் இவ்விரண்டில் எதனையும் பயன்படுத்திட சில நாட்கள் அவன் காத்திருக்க வேண்டும்.
இவ்விரண்டு தலாக் கூறும் முறையுடன் மூன்றாவது ஒரு வகையும் இருக்கின்றது. அது ஷரிஅத் கடுமையாக கண்டித்துள்ள தலாக் வகையாகும். அது பின்வருமாறு,
(இ) தலாக்கே பித்அத்: மூன்றாவது வகை நூதனமான தலாக் ஆகும். இது இஸ்லாத்தில் வன்மையாக கண்டிக்கப்பட்ட வகை. பின்வருபவை இப்பிரிவு தலாக்கில் அடங்கும்.
(1)ஒரே மூச்சில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலாக் கொடுத்தல்
(2) (மூன்று தூய்மையான காலத்தில் ஒவ்வொரு தலாக் ஆகக்கூறி மூன்று மாத இடைவெளியில் மூன்று தலாக்குகளையும் நிறைவு செய்யாமல்) ஒரு தூய்மையான நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலாக்குகளை இடைவெளி விட்டு கூறி விவாகரத்து செய்தல்
(3)மனைவியின் மாதவிடாய் காலத்தில் தலாக் கூறி விவாகரத்து செய்தல். ஒரு தலாக் இவ்வாறு சொன்னாலும் அது இப்பிரிவில் அடங்கவே செய்யும்.
(4) மாதவிடாய் ஏற்படாத அவளின் பரிசுத்த நாட்களில் உடலுறவு கொண்டுள்ள நிலையில் அவளை தலாக் கூறி விவாகரத்து செய்தல். இச்சமயம் அவன் ஒரு தலாக் கூறி விவாகரத்து செய்தாலும் இப்பிரிவில் அது அடங்கவே செய்யும்.
‘தலாக்கே பித்அத்’ பிரிவில் கூறப்பட்டுள்ள இந்நான்கில் ஏதாவது ஒன்றின்படி கணவன் மனைவியை தலாக் கூறுவதை இஸ்லாம் வன்மையாக கண்டித்துள்ளது. இவ்வாறு கூறுபவர் பாவியாக கருதப்படுவார்.
ஆக நியாயமான காரணங்கள் இருந்தாலும் கூட ஓர் ஆண் பாவியாகாமல் தலாக் கூற வேண்டுமெனில், (அ) தலாக்கே அஹ்ஸன், (ஆ) தலாக்கே ஹஸன் ஆகிய இரண்டு வழிமுறைகளை மட்டுமே கடைபிடிக்க முடியும்.
ஆனால், அவ்விரண்டு தலாக்குகளிலும் அவனால் உடனே தலாக் கூறிவிட முடியாது. அதற்கு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் ஆகவே செய்யும்.
ஆனால், பெண்ணுக்கு தரப்பட்டுள்ள குலா மற்றும் ஃபஸ்கு அடிப்படையிலான விவாகரத்தில் இத்தகைய கால தாமதங்கள் இல்லை.
குலா என்ற அடிப்படையில் ஒரு பெண் தனது கணவனை விவாகரத்து செய்தால், உடனே விவாகரத்து நிகழ்ந்துவிடும்.
அவ்வாறே ஃபஸ்கு என்ற அடிப்படையில் நியாயமான காரணங்களுக்காக காஜியிடம் விவாகரத்துக் கோரி, விசாரணைக்குப் பிறகு பெண் தரப்பில் நியாயம் இருப்பதாகக் அவர் கருதினால், உடனே அவரால் விவாகரத்து ஆணை பிற்பிக்க முடியும்.
ஆக நியாயமான, பாவமற்ற விவாகரத்து முடிவில், ஆணை விட பெண்ணுக்கே உடனே விவாகரத்து பெறும் சாதகமான சூழ்நிலை இருக்கின்றது.
முத்தலாக்கை ஏன் கைவிடக்கூடாது?
ஈரான், மொராக்கோ, எகிப்து, இந்தோனேசியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் முத்தலாக்கை கைவிட்டுள்ள நிலையில், இந்தியாவில் ஏன் கைவிடக்கூடாது? இது முத்தலாக் குறித்து விவாதிப்போரின் கேள்வி.
இதற்கான பதில், (கைய்ருல் குரூன் எனும்) முகமது நபி (ஸல்) இன் தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை அதனை முழுமையாக தடை செய்யாமல் வைத்திருப்பதன் காரணம்
என்னவெனில், ‘அரிதினும் அரிது’ (Rarest of the rare) எனும் சில சூழ்நிலையிலும் மனிதனுக்கு ஷரிஅத் சமநீதியை வழங்க வேண்டும் என்பதினால்தான்.
“ ஒருவர் வெளிநாட்டில் இருந்து வந்து ஒருமாத காலம் தங்கியிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டு, பின்பு அந்த ஒருமாத காலத்திற்குள் வெளிநாட்டிற்கு அவளை அழைத்துச் செல்ல விரும்பினார். திருமணம் செய்த பின்பு அவள் மண வாழ்க்கைக்கு தகுதியற்றவள் என்று தெரியவந்தது.
ஒரு தலாக் விட்டுவிட்டு பின்பு இரண்டாவது தடவை இந்தியா வந்து ஒரு தலாக், அதற்குப் பின்பு மூன்றாவது தடவையாக இந்தியா வந்து மூன்றாவது தலாக் விடுவதற்கு குறைந்தபட்சம் மூன்று மாதகாலம் ஆகும். அதுவரை கால அவகாசம் அவனுக்கில்லை.
ஒருதலாக் விடவும் அவன் மாதவிடாய் ஏற்படாத, உடலுறவு கொள்ளாத காலம் வரையில் அவன் காத்திருக்க வேண்டும். மேலும், ஒரு தலாக் விட்டால், சுமூகம் ஏற்படுத்தவதாகக் கூறி அவனது காலநேரத்தை வீணடிக்கவும் வாய்ப்புண்டு.
இத்தகைய சூழ்நிலையில், ஓர் ஆணுக்கு அநீதி நிகழாமல் இருக்கவே ‘அரிதினும் அரிது’ (Rarest of the rare) என்ற அடிப்படையில் ‘முத்தலாக்’ என்பது தலாக் முறைகளில் நீக்கப்படாமல் உள்ளது.
எவ்வளவு நுணுக்கமான சமநீதி, தலாக் விஷயத்தில் ஷரிஅத் சட்டத்தில் பேணப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதுமட்டுமல்ல.. ஒரு ஆண் தனது மனைவி இன்னொருவருடன் அந்தரங்க உறவில் ஈடுபட்டிருப்பதை நேரடியாகக் கண்டார். இப்போது ‘லிஆன்’ என்ற அடிப்படையில் மனைவியை நீதிமன்றத்தில் குற்றவாளியாக்கி, சத்தியம் செய்து விவகாரத்து செய்வதை விடவும் சிறந்தது முத்தலாக் விடுவதே ஆகும்.
(லிஆன் என்றால், மனைவி இன்ன நபருடன் தவறான உறவில் இருந்தாள். நான் பார்த்தேன் என்று நான்கு முறை சபையில் , காஜி முன்னிலையில் சத்திய செய்து, ஐந்தாவது முறையில் அல்லாஹ்வின் மீதாணையாக எனது கூற்றில் நான் பொய்யனாக இருப்பின் என் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக என்று கணவர் கூறுவதாகும். இவ்வாறு செய்த பின்பு காஜி முத்தலாக் என்ற அடிப்படையில் கணவன் - மனைவி இருவரிடையே (நிரந்தரமான பிரிவாக) திருமண உறவை ரத்து செய்வார்.)
திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். “நல்ல முறையில் வாழுங்கள். அல்லது அழகிய முறையில் விவகாரத்து செய்துவிடுங்கள்.” (அல்குர்ஆன் 2:229)
ஆக தேவையற்ற முறையில் முத்தலாக் மட்டுமல்ல.. ஒரு தலாக்கும் ஷரிஅத் அடிப்படையில், மகத்துவம் வாய்ந்த அல்லாஹ்விடம் பாவம் தான். அந்த பாவச்சுமையின் கனத்தினால் அல்லாஹ்வின் அரியணை அதிர்கிறது என்பது இறைத்தூதரின் (ஸல்) எச்சரிக்கை.
எனினும் தேவைக்கு பயன்படுத்தவே ஒருதடவை தலாக் கூறுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை.
அவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களுக்குப் பின்பு நபித்தோழர்களும், தாபியீன்களும், தபவுத் தாபியீன்களும், பன்னெடுங்கால இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்களும் ‘தேவைக்கு பயன்படுத்தவே‘ முத்தலாக்கை ஷரிஅத் சட்டத்தில் இருந்து அகற்றவில்லை. முத்தலாக் என்ற நிகழ்வே இஸ்லாமிய ஷரிஆவில் இல்லை என்று அறிவிக்கவில்லை.
இஸ்லாமிய சட்டத்துறை அறிஞர்கள் செய்யத் துணியாத காரியத்தை இந்திய நாடாளுமன்றத்தினாலோ, உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் உள்ளவர்களோ செய்ய இயலுமா? என்ன?
செய்தால் இந்திய இஸ்லாமிய சமூகம் ஒப்புக் கொள்ளுமா? என்ன?
தொகுப்பு :
பேராசிரியர் அபுல் ஹஸன் ஃபாஸி
சதகத்துல்லாஹ் அப்பா கல்லூரி (பாளையங்கோட்டை)
(தலைமை இமாம் ரஹ்மானிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் - மேலப்பாளையம்)
(பேராசிரியர் - மன்பவுல் பாகியாத் மகளிர் அரபிக்கல்லூரி - மேலப்பாளையம்)
(மேலாய்வாளர் - தப்சீர் ஹமீத்)
(காப்பாளர் - சிராதுல் முஸ்தகீம் பதிப்பகம் - சென்னை)
மேலும் தகவல்களுக்கு.. காண்க: ”பொதுசிவில் சட்டம் ” நூல்
No comments:
Post a Comment