தமிழக முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்திற்குத் தேவை இந்திய முஸ்லிம்களின் வரலாறும் இன்னொரு வரலாற்றுக்கான திட்டமிடுதலும்
கல்விக்கான தேடலில் முஸ்லிம் சமூகம் சரியான திசையில் செல்கிறதா? என்ற தலைப்பில் இஸ்லாமியப் பெண்மணியும் -டீக்கடை பேஸ்புக் குழுமமும் நடத்திய கட்டுரைப்போட்டியில் 2ம் இடம் பெற்ற சகோதரி அன்னு அவர்களின் கட்டுரை இது. கல்வியில் இஸ்லாமிய சமூகத்தின் ஆரம்பகால எழுச்சிமிக்க பக்கங்களும், வீழ்ந்த காரணங்களும் என வரலாற்று ஆய்வுடன் எழுதப்பட்ட இக்கட்டுரை ஒவ்வொர் முஸ்லிமும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டியது! முழுமையாக படியுங்கள். மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துக்கொள்ளுங்கள்!!!
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம்
இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிகிதமாக இருக்கிறார்கள். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் 2 அல்லது 3 சதவிகிதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.
முஸ்லிம்களில் 7.2 சதவிகிதத்தினர் மட்டுமே உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள். அதிலும் 4 சதவிகிதத்தினர் மட்டுமே பள்ளிப்படிப்பைத் தாண்டி கல்லூரிக்குச் செல்கிறார்கள். பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வெறும் 1.2 சதவிகிதத்தினர் மட்டுமே.
இந்திய முஸ்லிம்களில் 94.8 சதவிகிதத்தினர் வறுமைக்கோட்டுக் கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் நகரங்களில் வசிக்கும் முஸ்லிம்களில் 28.3 சதவிகிதத்தினர் மிக மோசமான வறுமையில் வாழ்கிறார்கள்.
நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.
நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவிகிதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவிகிதம் மட்டுமே.
தலித்துகளில் 23 சதவிகிதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கையில் முஸ்லிமகளில் 19 சதவிகிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.
தலித்துகளில் 32 சதவிகிதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிகிதத்தினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.
பொதுத்துறை (7.2%) சுகாதாரத்துறை (4.4%) ரயில்வே துறை (4.5%) போன்ற பல்வேறு அரசு சார்ந்த துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.
தற்போதைய நாடாளுமன்றத்தில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகையான 13.4 சதவிகிதத்திற்கு சுமார் 70 - 75 முஸ்லிம் எம்.பி-க்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய முஸ்லிம் எம் பி-க்களின் எண்ணிக்கை 33 மட்டுமே!
மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்களே. அதுபோல சேரிகளில் வாழ்பவர்களிலும் முஸ்லிம்களே அதிகம்.
இப்படிப் போகிறது அந்த அறிக்கை A1.
யாருடைய அறிக்கை? ஏழு வருடங்களுக்கு முன், 2005இல் அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கால் முஸ்லிம்களின் சமூக, பொருளாதார கல்வி நிலை குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட ‘சச்சார் கமிட்டி’யின் அறிக்கைA2.
யாரைப் பற்றி?
"இந்திய விடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது." என இல்லஸ்டிரேட்டட் வீக்லி 29-12-1975 தேதியிட்ட இதழில் எழுதினாரே குஷ்வந்த்சிங், அந்த இந்திய இஸ்லாமியர்களைப் பற்றி....
சுருக்கமாக சொன்னால்,
தலித்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற சிறுபான்மை மக்களைவிடவும் முஸ்லிம்கள் மிக மோசமாகத் தாழ்ந்து கிடக்கிறார்கள்.
முஸ்லிம்கள் இந்திய மக்கள் தொகையில் 14%க்கு மேல் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த சதவீதம் வெறுமனே 2.5% மட்டுமே என்பவைதான் அந்த அறிக்கை தரும் அதிர்ச்சி.
நிற்க. 2005இல் இந்த அறிக்கை வெளியாகியதிலிருந்து, நம் சமூகத்தை முன்னேற்றப்பாதையில் இட்டுச்செல்ல நாம் என்ன திட்டங்கள் செய்துள்ளோம்?? இன்று நம் சமுதாயத்தில் அதிக அளவிலான குழந்தைகள் கல்வி கற்றுக்கொண்டுள்ளன. ஆயினும் ஒரு தனி மனிதனின் கல்வி பற்றிய சிந்தனைக்கும், நம் சமூகத்தின் வளர்ச்சிக்கும் இடையே எத்தனை எத்தனை பிளவுகள்??? ஏன் இந்த நிலை? அரசு தன் வாக்குறுதிகளை பொய்ப்பிக்கிறது என்று வரலாற்றின் அத்தனை பக்கத்திலும் தெரிந்து கொண்ட பின்னரும், நம் சமுதாயத்தை முன்னேற்ற நாம் ஏன் எந்த அடியையும் இன்னும் எடுக்கவில்லை? யார் இதற்கு காரணம்? ஏன் இதை நிவர்த்தி செய்ய முயலாமலே நாம் ஓடிக்கொண்டுள்ளோம்? எதனை நோக்கி? இந்த ஓட்டத்தில் நம் தமிழக முஸ்லிம் சமுதாயம் எத்தனை தாக்குப் பிடிக்க முடியும்? சிந்தித்தோமா??? இனியும் சிந்திப்போமா??? வாருங்கள் பொன்னேட்டில் பதியப்பட்ட நம் வரலாற்றையும், வளமான எதிர்காலத்திற்கான இப்போதைய திட்டங்களையும் சற்றே மறு ஆய்வு செய்வோம். இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment