Thursday, 27 July 2017

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! 06

السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته ورضوانه

 🌾 🌾 صباح الخير 🌾 🌾
உங்கள் மீதும்
அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையும் சாந்தமும் சமாதானமும் பரக்கத்தும் ரஹ்மத்தும் பாவமன்னிப்பும் பொருத்தமும் உண்டாவதாக!!!!

بارك الله لنا و لكم بالخير والنجاة والعرفان
امين امين يارب العالمين

☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕ ☕

🕋 🕋 🕋 🕋 🕋 🕋 🕋🕋

ஹஜ்ஜுக்கு புறப்பட்டு வாருங்கள்! 06

========================

தவாபுல் குதூம் என்னும் முதல் தவாப்!

பொதுவாக எந்தப் பள்ளியில்
நுழைந்தாலும், முதலில் 2 ரக்அத் நபில் தொழுவது சிறந்தது. ஆனால்
மஸ்ஜிதுல் ஹராமின் உள்ளே நுழைந்ததும்
கடமையான ஜமாஅத் தொழுகை
நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம்
தவிர, மற்ற நேரங்களில் முதலில் தவாப் செய்வதே சிறந்தது. அதுவே முறையும் கூட.
ஹஜ் அல்லது உம்ராச் செய்ய, புனித
மக்காவுக்கு வரும்போது முதலில் செய்யும் தவாபுக்கு ‘தவாபுல் குதூம்” என்று
பெயர். கஃபாவை ஏழு முறை சுற்றி வருவது
ஒரு தவாப் ஆகும். மஸ்ஜிதுல் ஹராமுக்கு ஏராளமான நுழைவாயில்கள் உள்ளன. எந்த
வழியாகவும் உள்ளே நுழையலாம். அவரவர்
வந்து சேரும் வழிகளில் உள்ள நுழைவாயில் வழியே
உள்ளே நுழைகின்றனர். அவரவர் தம் தவாபுல்
குதூமை அழகாகத் தொடங்குகின்றனர்.
‘நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைந்தார்கள். ஹஜருல்
அஸ்வதை முத்தமிட்டார்கள். பின்பு வலப்புறமாக (கஃபாவை)
சுற்றலானார்கள். மூன்று சுற்றுக்கள்
விரைவாகவும் நான்கு சுற்றுக்கள்
சாதாரணமாகவும் நடந்து சுற்றினார்கள்.
பிறகு மகாமே இப்ராஹீம் எனும் இடத்திற்கு
வந்தார்கள். மகாமே இப்ராஹீமில்
தொழுமிடத்தை ஏற்படுத்திக்
கொள்ளுங்கள் (2:125) என்ற வசனத்தை
ஓதிவிட்டு, தமக்கும் கஃபாவுக்கும் இடையே
மகாமே இப்ராஹீம் இருக்குமாறு 2
ரக்அத்கள் தொழுதார்கள். பின்னர்
ஹஜருல் அஸ்வதுக்கு வந்து அதைத்
தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு
ஸஃபாவுக்குச் சென்றார்கள்.
‘நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும்
அல்லாஹ்வின் சின்னங்களில்
உள்ளவையாகும் (திருக் குர்ஆன் 2: 158) என்ற வசனத்தை
 அவர்கள் ஓதியதாக எண்ணுகிறேன்”
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: திர்மிதி
(784)

ஹஜருல் அஸ்வத் கல் இருக்கும் இடத்திலிருந்து
ஹாஜிகள் தவாபைத்
தொடங்குகின்றனர். இயன்றால் ஹஜருல் அஸ்வதைத் தொட்டு
முத்தமிடட்டும், இயலாவிட்டால்
தூரத்திலிருந்தே கைகளால் சைகை செய்தும் தவாஃபத்
 தொடங்கலாம். நபி صلى الله عليه وسلم
அவர்கள் தமது வாகனத்தின் மீதமர்ந்து
தவாப் செய்தார்கள். ஹஜருல்
அஸ்வதுக் கருகே வந்த போது அதை நோக்கி சைகை
செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه  ஆதாரம்: திர்மிதி (793)

‘ஹஜருல் அஸ்வத் சுவர்க்கத்திலிருந்து
இறங்கியதாகும். அது பாலை விட
வெண்மையாக இருந்தது. ஆதமுடைய
மக்களின் பாவங்கள் அதைக் கறுப்பாக்கி
விட்டன” என்று நபி صلى الله عليه وسلم
கூறினார்கள்.
 இப்னு அப்பாஸ் رضي الله عنه  திர்மிதி (803)
கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள்
கொண்டதாகவும், பேசும் நாவு
கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை
(அல்லாஹ்) எழுப்புவான். யார் இதை
முத்தமிட்டரோ அவருக்காக அது சாட்சி கூறும்
என்று நபி صلى الله عليه وسلم  அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் رضي الله عنه
ஆதாரம்: திர்மிதி (884)
தவாபின் ஒவ்வொரு சுற்றின் போதும்
ஹஜருல் அஸ்வதை முத்தமிடவோ அல்லது அதை
நோக்கி சைகை செய்யவோ வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து
கஃபாவை தவாப் செய்தார்கள்.
ஹஜருல் அஸ்வதின் பக்கம்
வரும்போதெல்லாம் சைகை
செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் رضي الله عنه  ஆதாரம்: புகாரி (1612)
ஹாஜிகள் தவாபைத்
தொடங்குகிறார்கள். ஒரே சீராக, ஒழுங்கு
 முறையுடனும், மிகுந்த
கட்டுப்பாட்டுடனும் சுற்றி வருகிறார்கள்.
இலட்சக் கணக்கான மக்கள் சுற்றிக்
கொண்டே இருக்கிறார்கள். இரவும் பகலும்
 இடைவிடாது சுற்றிக் கொண்டே
இருக்கிறார்கள்.அரசர்களும், ஆண்டிகளும்,
ஆட்சி செய்யும் அதிகாரிகளும்,
முதலாளிகளும், தொழிலாளிகளும்,
ஏழைகளும், செல்வந்தர்களும், ஏற்றத்
தாழ்வின்றி சுற்றுகிறார்கள்.
படித்தவர்களும், பாமரர்களும், பாகுபாடின்றி
சுற்றுகிறார்கள். ஆண்களும். பெண்களும்,
சிறியோரும், பெரியோரும், வாலிபர்களும்,
வயோதிகரும் அனைத்து வகை மனிதர்களும்
அழகாகச் சுற்றுகிறார்கள்.
தள்ளாத வயதில் பெற்றோரைத் தம் முதுகில்
சுமந்தபடி தாம் பெற்றக் குழந்தைகளைத் தம்
தோளில் சுமந்தபடி வளரும் சிசுக்களைத் தம் வயிற்றில்
 சுமந்தபடி மறுமை பயத்தைத் தம்
மனதில் சுமந்தபடி இறையச்சத்தைத் தம்
இதயத்தில் சுமந்தபடி திருமறை குர்ஆனைத் தம் கரங்களில்
 சுமந்தபடி
-திக்ருகளைத் தம் நாவுகளில்
மொழிந்த படி பாவ மன்னிப்புக்
கேட்டுத் தம் கைகள் ஏந்தியபடி கவலையுடன்
அழுதழுது கண்ணீர் சொரிந்தபடி
சுற்றுகிறார்கள். சுற்றுகிறார்கள். சுற்றிக்
கொண்டே இருக்கிறார்கள்.
1400 ஆண்டுகளாக, ஆயிரமாயிரம் கோடிப்
பேர்கள் சுற்றினார்கள். இந்தக் கணப்
பொழுதிலும் இலட்சக் கணக்கானோர் சுற்றிக்
 கொண்டிருக்கிறார்கள். இறுதி நாள் வரை
 இன்னும் எத்தனை எத்தனை கோடிகளோ!
எண்ணிக்கை எந்த எண்ணிலும் அடங்காது.
ஏட்டிலும் அடங்காது.
ஏழு முறை கஃபாவைச் சுற்றுவது ஒரு தவாப்
ஆகும். ஏழு சற்றுக்களை நிறைவு செய்தவர்கள்,
எவ்வளவு இதமுடன் வெயியேறுகின்றனர்!
தவாபை முடித்தவர்முடித்தவர்கள், சிறுகச் சிறுக
வெளியேற தவாபைத்
தொடங்குபவர்கள் பக்குவமாக
நுழைகின்றனர். சங்கிலித் தொடராக
இந்தச் சுற்றுக்கள்
தொடர்கின்றன.தொடர்ந்துக் கொண்டே
 இருக்கின்றன. முதல்
தவாபில் முதல் மூன்று சுற்றுக்களில் மட்டும் தோள்களைக்
 குலுக்கியவாறு கொஞ்சம் வேகமாக
 (ஆண்கள்) ஓட வேண்டும்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள், ஹஜ்ஜிலும் உம்ராவிலும் முதல்
மூன்று சுற்றுக்களில் ஓடுவார்கள்.
(மீதமுள்ள) நான்கு சுற்றுக்களில் நடந்து
செல்வார்கள். அறிவிப்பவர்:
அப்துல்லாஹ் பின் உமர் رضي الله عنه  ஆதாரம்: புஹாரி (1604)

தவாபை முடித்ததும், அடுத்த செயல்
மகாமே இப்ராஹீமில் இரண்டு ரக்அத்
தொழவேண்டும். ஏனெனில் நபி صلى الله عليه وسلم அவர்கள் இப்படித்தான்
செய்தார்கள்.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் மக்கா வந்த போது கஃபாவை ஏழு
 முறை வலம் வந்தார்கள். பிறகு
மகாமே இப்ராஹீமுக்குப் பின்னால் இரண்டு
ரக்அத் தொழுதார்கள். பிறகு ஸஃபாவி(ல்
 ஓடுவத)ற்காகப்
புறப்பட்டார்கள். ‘நிச்சயமாக
அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய
 முன் மாதிரி உள்ளது” என இறைவன்
கூறுகிறான். அறிவிப்பவர்: இப்னு உமர் رضي الله عنه
ஆதாரம்: புகாரி(1627)

மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள். (திருக்
குர்ஆன் 2:125)
தவாபை நிறைவு செய்த ஹாஜிகள்,
மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று இரண்டு ரக்அத்
 தொழுகின்றனர். மகாமே
இப்ராஹீமுக்கு மிக அருகில் தான் நின்று
தொழ வேண்டும் என்பதில்லை.
நபி صلى الله عليه وسلم  அவர்கள் (தம் ஹஜ்ஜை முடித்து)
மக்காவிலிருந்து புறப்பட நாடினார்கள்.
தவாப் செய்யாத நிலையில் நானும்
புறப்பட ஆயத்தமானேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள்
 ‘சுப்ஹுத் தொழுகைக்காக
இகாமத் சொல்லப்பட்டவுடன்
மக்கள் தொழுது
கொண்டிருக்கும்போது நீ ஒட்டகத்தின்
மீதமர்ந்து தவாப் செய்துக் கொள்” எனக் கூறினார்கள்.
அவ்வாறே நான் செய்தேன். இதனால்
(இரண்டு ரக்அத்துகளை) பள்ளிக்கு வெளியே
வந்த பிறகே தொழுதேன். அறிவிப்பவர்:
உம்மு ஸலமா رضي الله عنها  ஆதாரம்: புகாரி
(1626)

மகாமே இப்ராஹீமுக்கு அருகில் நின்று
தொழுவது, தவாபு சுற்றுபவர்களுக்கு
இடையூறாக இருக்கும். நெரிசலில் சிலர் அவசர அவசரமாக, ருகூவு செய்யவும்
முடியாமல், ஸஜ்தாச் செய்யவும்
முடியாமல், சிரமப்பட்டு தொழுவதைக்
காணலாம். தொழுகை என்பது நிறுத்தி
நிதானமாகச் செய்ய வேண்டிய ஒரு
வணக்கமாகும்.
எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப் படுத்த மாட்டோம்
 (திருக் குர்ஆன் 23:62)
என்று அல்லாஹ்வின் திருமறை கூறுகிறது. எனவே கடுமையான
 சிரமத்துக்கு மத்தியில் அந்த மகாமே
 இப்ராஹீமுக்கு அருகில் நின்று
தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹராமின்
எந்தப் பகுதியிலும் தொழுகையை நிறைவேற்றிக்
கொள்ளலாம். விபரம் அறிந்த ஹாஜிகள்,  தவாபின் இரண்டு ரக்அத் தொழுகையை
 மஸ்ஜிதுல் ஹராமில்
வசதிப் பட்ட இடங்களில் நிறைவேற்றுகின்றனர்.
கஃபாவின் வட பகுதியில் அரை வட்டத்துக்குச்
சிறிய சுவர் ஒன்று எழுப்பப் பட்டுள்ளது. இதற்கு ஹிஜ்ர்
 இஸ்மாயீல் என்று பெயர். நான் கஃபா
 ஆலயத்துக்குள் நுழைந்து அதில்
தொழ விருப்பம்
கொண்டிருந்தேன். அப்போது நபி صلى الله عليه وسلم அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை
நுழையச் செய்து, ஆலயத்தின் உள்ளே நுழைய
விரும்பினால் இங்கே
தொழுவாயாக! ஏனெனில் இதுவும்
 ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும்
உனது கூட்டத்தினர் கஃபாவைக் கட்டிய போது அதைச்
சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை
விட்டும் அப்புறப் படுத்திவிட்டனர்.” என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர்: ஆயிஷா رضي الله عنها
ஆதாரம்: திர்மிதி: (802)

ஹாஜிகளில் பலர், இந்த ஹிஜ்ருக்குள் நுழைந்து தொழுது
 கொள்கின்றனர்.
இங்கு நின்று பிரார்த்திக்கின்றனர். கஃபாவின் மேற்குப்
 பகுதியில் மழை நீர் வடிவதற்காகக் குழாய்
ஒன்று  வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ' மீஜாபுர்
 ரஹ்மத்” என்று  பெயர். இதுவும்
பிரார்த்தனை அங்கீகரிக்கப்படும் இடங்களில்
ஒன்றாகும். ஹாஜிகள் இந்த இடத்திலும்
நின்று பிரார்த்திக்கின்றனர்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் தொடரும்...

தொகுப்பு...

S. S. ஷேக் ஆதம் தாவூதி.

கடலங் குடி.

பதிவு நாள்:27-07-2017

No comments:

Post a Comment