Wednesday, 26 April 2017

☪ரஜபில் நடந்த முக்கிய நிகழ்வுகளும் ,அதன் படிப்பினைகளும் தொடர் -3 ☪


வரலாற்றுச் சிறு குறிப்பு

*******************************
🇬🇷ஜெருஸலம் நகரானது கி.பி.637 ஹிஜ்ரி16 ல் உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் முஸ்லீம்களால் மீட்டிக் கொண்டு வரப்பட்டது.  இது வரை இருந்து வந்த அடக்குமுறை ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதற்கு முன் அந்தப் பகுதியை எகிப்தியர்களும், கிரேக்கர்களும், பெர்ஸியர்களும் பின்பு ரோமர்களாலும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள். ரோமர்களை எர்முக் என்ற இடத்தில் வைத்து போர் செய்து முஸ்லிம்கள் வெற்றி பெற்றவுடன், இந்த அடக்குமுறைகள் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன. ரோமர்களின் கவர்னராக இருந்து ஆட்சி செய்து வந்தவர், புனித நகரை விட்டு ஓடிச் சென்று, முஸ்லிம்களிடம் சரணடைந்து, அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இது போலவே இன்னும் ஏனைய நகரங்களும் முஸ்லிம்களுடன் அமைதி ஒப்பந்தங்கள் செய்து கொண்டன. ஆனால் மற்ற நகரங்களின் மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும், ஜெருஸலம் நகர மக்கள் செய்து கொண்ட அமைதி ஒப்பந்தத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. அதாவது, முஸ்லிம்களின் இரண்டாவது கலீபாவாக மதினா நகரில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் உமர் (ரலி) அவர்கள் நேரடியாக வந்து இந்த நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதே, அந்த மக்களின் வேண்டுகோளாக இருந்தது.

♻மேலும் பைத்துல் முகத்தஸ் உடைய சாவியை முஸ்லிம்களின் படைத்தளபதி அபூ உபைதா( ரலி) அவர்களிடம் ஒப்படைக்க அனைத்து பாதிரிகளும் ஒப்புக் கொண்ட போதிலும் அவர்களில் வயது முதிர்ந்த ஒரு பாதிரி மறுத்துவிட்டார். காரணம் இந்த சாவியை வாங்குவதற்கு தகுதி உடையவர் உமர் ( ரலி) அவர்கள்தான் எனவே அவரிடம்தான் ஒப்படைப்பேன் என்றார். அவ்வாறு அந்த பாதிரி கூறியதற்கும் ஒரு காரணம் உண்டு. உமர் ( ரலி) அவர்களுக்கு 25 வயது இருக்கும் சமயத்தில் நபி( ஸல்) அவர்களுக்கு நபி பட்டம் வழங்கப்படுவதற்கு முன்பு உமர் ( ரலி)  அவர்கள் வியாபார நிமித்தம் ஷாம் தேசம் சென்றிருந்தார்கள் அங்கு அவர்கள் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது ஒருவன் வேண்டுமென்றே தகராறு செய்தான். அவனை உமர் ரலி ஓங்கி அடிக்க அவன் இறந்து விடுகிறான். மக்கள் உமர் (ரலி) அவர்களை அடிக்க துரத்தி வருகின்றார்கள் உமர் ரலி பைத்துல் முகத்தஸில் நுழைந்து விடுகிறார்கள் அங்கே ஒரு பாதிரி இருக்கிறார் அவரிடம் நடந்த விபரத்தை கூறுகின்றார்கள். இதைக்கேட்ட பாதிரி இவ்வாறு கூறினாராம் ஒரு காலம் வரும் அன்று இந்த நகரத்தையும் இந்த பைத்துல் முகத்தஸையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள்  அன்றைய நாளிள் என் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று இப்பொழுதே எனக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்றார். உமர் ரலி அவர்களுக்கு அவர் சொன்னது புதிராக இருந்தது நான் இந்த நகரத்தை வெற்றி கொள்வேனா? என்று வியந்தார்கள். மீண்டும் மீண்டும் பாதிரி வற்புருத்தவே வேறு வழியின்றி கையெழுத்திட்டார்கள். எனவேதான் அந்த பாதிரி உமர் வரவேண்டும் அவரிடம்தான் சாவியை ஒப்படைப்பேன் என்றார்.

🌾இதனையறிந்த உமர் (ரலி) அவர்கள், அலி (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, ஜெருஸலம் நகர் வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றாார்கள். பைத்துல் முகத்தஸ் சாவியை அந்த பாதிரி ஒப்படைக்கும் பொழுது உமர் ரலி எழுதிக் கொடுத்த சீட்டையும் கான்பித்தார் அப்பொழுதுதான் தம்முடைய 25 ஆம் வயதில் நடந்த அந்த நிகழ்வு அவர்களுக்கு ஞாபகம் வந்ததாம். இதுவரை ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் எல்லாம், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அந்த மக்களை அடக்குமுறையின் கீழ் வைத்திருந்ததற்கு மாறாக, உமர் (ரலி) ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அன்றே அந்த மக்கள், இஸ்லாத்தின் உன்னதத்தைக் கண்டு கொண்டார்கள்.

🚩தொழுகைக்கான நேரம் வந்த சமயத்தில், உமர் (ரலி) அவர்களை கிறிஸ்த்தவர்களின் கோயிலில் தொழுது கொள்ளும்படி அந்த மக்கள் வேண்டிக் கொண்ட பின்பும், அதில் தொழ மறுத்துவிட்டதுடன், பின்பு வரக் கூடிய என்னுடைய சமூகம் இது எங்கள் உமர் நின்று தொழுத இடம் என்று வாதிடாமல் இருக்கத் தான் நான் தொழ மறுக்கின்றேன் என்று கூறி அன்றே அந்த மக்களின் மத, மற்றும் சகோதர நல்லிணக்கத்திற்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார்கள். மேலும், அங்கு வாழக்கூடிய மக்களின் மத வணக்க வழிபாடுகள், அவர்களின் சின்னங்கள், வணக்கத் தளங்கள் ஆகியவற்றை எக்காரணம் கொண்டும் , ஆக்கிரமிக்கவோ, அகற்றவோ கூடாது என உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

🎓மேற்கண்ட இந்த உத்தரவு அங்கு வாழ்ந்த கிறிஸ்த்தவர்களுக்கு மட்டுமல்ல, யூதர்கள் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்குமாறு உமர் (ரலி) அவர்கள் கட்டளையிட்டார்கள். இந்தப் புண்ணிய பூமியில் வாழ்ந்த இவர்கள், நிம்மதியாக யார் காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால், அது கிறிஸ்த்தவர்களான ரோமானியர்களின் ஆட்சிக் காலத்தில் அல்ல. மாறாக அது முஸ்லிம்களின் ஆட்சிக்காலத்தில் தான் என்பது உண்மையான வரலாறாகும். உமர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற அந்தக் காலத்தில் யூதர்களும், கிறிஸ்த்தவர்களும் தங்களுக்குள் கடுமையான பகைமையைக் கொண்டிருந்தார்கள். காரணம், கிறிஸ்த்தவர்களான ரோமர்கள் யூதர்களைப் படுகொலை செய்ததது மட்டுமல்லாது, கி.பி. 325 ல் அந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்து கொண்டிருந்த ரோமப் பேரரசர் காண்ஸ்டான்டின் என்பவர், யூதர்களை ஜெருஸலம் உட்பட்ட பகுதிகளுக்குள் வரவே கூடாது என்ற ஒரு உத்தரவையும் பிறப்பித்தார்.

🌎முஸ்லிம்கள் ஜெருஸலம் நகரைக் கைப்பற்றிய பின்னர் தான், அவர்கள் இந்தப் புனித பூமிக்குள்ளேயே நுழைய முடிந்தது. ஆக, இந்த யூதர்கள் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அங்கெல்லாம் அவமானப்படுத்தப்பட்டார்கள். ஆனால், முஸ்லிம்களின் ஆட்சியில் தான் இவர்கள் நிம்மதியைப் பெற்றார்கள்.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: *27-04-2017*

No comments:

Post a Comment