இஸ்லாமிய வரலாற்றில் இன்று
ரஜப் பிறை 13
✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி
அபுல் ஹஸன்’ ‘அபூ துராப்’ என்ற புனை பெயர்களைப் பின்னர் பெற்றுச் சிறந்த அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், ‘அப்ரஹா’வால் தோன்றிய யானைச் சகாப்தத்தின் முப்பதாம் ஆண்டில் ஒரு ரஜபு மாதம் 13-ம் நாள் வெள்ளிக்கிழமையன்று பிறந்தார்கள்.
அலி ரலியல்லாஹு அன்ஹு
அபூதாலிப்- ஃபாத்திமா ஆகியோருக்கு 4வது மகனாக கி.பி. 600ல் மக்காவில் பிறந்தார்கள். இவர்களின் அன்னை இவர்களுக்கு சூட்டிய பெயர் அஸத். தந்தையார் அலீ என்று பெயரிட்டனர். இவர்களின் அன்னை இவர்களைக் கருவுற்றிருக்கும் போது, அவர்களுக்கு கஃபாவின் அண்மையில் வைத்து பிரவச வேதனை ஏற்பட்டது என்றும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கஃபாவிற்கு செல்லுமாறு கூறினர். அங்கேயே இவர்கள் பிறந்தனர். அவர்களை அண்ணலார் ஜம்ஜம் நீர் கொண்டு கழுகினர்.
மக்காவில் பஞ்சநிலை ஏற்பட்டபோது மிகவும் கஷ்ட நிலையிலிருந்த அபூதாலிப் அவர்களிடமிருந்து அலீ அவர்களை வளர்க்கும் பொறுப்பை அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றனர். அலீ அவர்களும் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இளைஞர்களில் முதன்முதல் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவர்களே! அச்சமயம் இவர்களுக்கு 13-14 வயதிருக்கலாம்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற சமயம் அவர்களின் படுக்கையில் அலி நாயகம் அவர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த இவர்களின் தியாகம் ஈடு இணையற்றதாகும்.
பத்ரு போரில் இவர்கள் காட்டிய வீரத்திற்குப் பரிசாகவே அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவை திருமணம் முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உஹத் போரிலும் இவர்கள் வீரப் போர் செய்துள்ளனர்.
அகழ்ப்போரின் போது 1000 வீரர்களுக்கு நிகரான மாமல்லன் என்று கருதப்பட்ட அம்ரு இப்னு அப்தூத் என்பவனுடன் துல்பிகார் எனும் வாளேந்தி போர் புரிந்து அவனை வெட்டி வீழ்த்தினர்கள். அப்போது, 'லாஃபத்தா இல்லா அலீ, லா ஸைஃப இல்லா துல்ஃபிகார்'( அலீ போன்ற இளைஞருமில்லை. துல்ஃபிகார் போன்ற வாளுமில்லை) என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்கள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
கைபர் போரின்போது எவராலும் வெற்றி கொள்ள இயலாதிருந்த காமூஸ் கோட்டையை, கண் வலியால் அவதிபட்டிருந்த நிலைமையிலும் இவர்களே வெற்றி கொண்டனர். அப்போது காமூஸ் போட்டையின் கதவை கையில் கேடயமாக பிடித்துக் கொண்டு போர் புரிந்ததும், மஹ்ரப் என்ற வீராதி வீரனை வெட்டி வீழ்த்தியதும் இவர்களின் வீரம், போர்திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.
மக்கா வெற்றியின் போது இவர்கள் தோள் மீது ஏறி நின்றுதான் ஹுபல் என்ற உருவச் சிலையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவர்களால் தூக்க இயலவில்லை. எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோள் மீது ஏறி நின்றே அலி அவர்கள் அதனை உடைத்தெறிந்தனர்.
காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனூ ஜதீமா கூட்டத்தினருக்கு செய்த கொடுமைக்கு இழப்புத் தொகை தருவதற்கும், பனூதாய் கூட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட படையெடுப்புக்கும், ஸூரா கராத்' இறைவனிடமிருந்து வந்ததும் அதை அவ்வாண்டு ஹஜ் செய்ய சென்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு அனுப்பப்பட்டவர்களும் இவர்களே!
இறுதிச் ஹஜ்ஜின் போது, அண்ணலாருடன் இருந்த இவர்கள், அண்ணலார் கொண்டு வந்த 100 ஒட்டகங்களில் 63 ஒட்டகங்களை அறுத்துப் பலியிட மீதியை இவர்களே அறுத்தனர். அண்ணலார் ஆற்றிய இறுதிப் பேருரையையும் இவர்களே உரத்தக் குரலில் திருப்பிக் கூறினர்.
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் இவர்களின் ஆலோசனைப்படியே ஹிஜ்ரி ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டபின் 5 நாட்களுக்கு பின் ஹிஜ்ரி 35 துல்ஹஜ் பிறை 25 வெள்ளியன்று இவர்கள் கலீபா பதவியை ஏற்றுக் கொண்டனர்.
இவர்களின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது. அபூபக்கர்,உமர் ஆகியோரின் காலத்தில் இவ்விதம் குழப்பம் இல்லையே! உதுமானுடையவும் , உங்களுடைய காலத்திலும்தான் குழப்பமாக உள்ளது? என்று ஒருவர் இவர்களிடம் கேட்க, 'நாங்கள் அவ்விருவருக்கும் உதவியாக நின்றோம். இப்போது எனக்கு தாங்களும், தங்களைப் போன்றவர்களும் உதவியாக இருப்பதே அதற்கு காரணம்' என்று பதிலுரைத்தார்கள்.
ஒட்டகைச் சண்டையின்போது இவர்களை எதிர்த்து நின்றஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை 40 பெண்களுடன் மரியாதையாக மதீனாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள்.
பின்னர் கூஃபா சென்ற இவர்கள் தம்முடைய அதிகாரத்தை எதிர்த்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஸிப்ஃயீன் எனுமிடத்தில் போரிட்டனர். போரில் 500 திருக்குர்ஆன் பிரதிகளை ஈட்டியில் ஏந்தி முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சமாதானம் கோரியபோதுஇ இவர்கள் அதை ஏற்று போரை நிறுத்தினார்கள். அமைதியை விரும்பி சமாதானத்தில் தமக்குப் பாதகமான முடிவு ஏற்பட்டபோதும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதன்காரணமாக இவர்களின் கட்சியில் சிலர் அப்துல்லாஹ் பின் வஹ்ப் அல் ராஸிபி என்பவரின் தலைமையில் ஒன்று கூடி, இவர்களை எதிர்த்தனர். இவர்களுக்கு 'காரிஜிகள்' என்று பெயர் ஏற்பட்டது. அவர்களை 'வஹதுல் நஹ்ர்' எனுமிடத்தில் நடந்த போரில் இவர்கள் தோற்கடித்தனர். இதன்பின் கூஃபா திரும்பிய இவர்கள் ஹிஜ்ரி 40, ரமலான் பிறை 17 வெள்ளியன்று அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் ஸாமிரி என்னும் காரிஜியினால் ஒரு வழியே சென்று சொண்டிருக்கும்போது( மற்றொரு ரிவாயத்தின்படி சஜ்தாவிலிருக்கும்போது) நஞ்சூட்டப்பட்ட வாளினால் நெற்றியில் தாக்கப்பட்டனர். 3 நாட்கள் கழித்து தம் 63வது வயதில் மறைந்தார்கள்.
இழிஞன் இப்னு முல்ஜமினால் கொல்லப்பட்டார்கள்.
இவர்களைத் தாக்கிய இடத்திலேயே தாக்கியவன் கிழத்தெறியப்பட்டான் என்றும், அவ்விடம் இன்றும் கறுப்பாக இருக்கிறது என்றும் அதில் புற்பூண்டுகள் கூட முளைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர்களை இவர்களின் இரு மக்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இரவில் நல்லடக்கம் செய்துவிட்டனர்.பிற்காலத்தில் கலீபா ஹாரூன் அல் ரஷீத் வேட்டையாட சென்றபோது கூஃபாவின் அண்மையில் நஜப் என்னும் இடத்திலிருந்த அடக்கவிடத்தில் அலி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதுவே அலி அவர்களின் அடக்கவிடம் எனக் கருதி அங்கு ஒரு கட்டடம் எழுப்பினார்.அதுவே இப்போது அவர்களின் அடக்கவிடம் என்று கருதப்பட்டு வருகிறது. இது அல் முகைரா இப்னு ஷுபா அத்தகஃபி என்ற நபித் தோழரின் அடக்கவிடம் என்றும் சிலர் கூறுகின்றனர்.
பதிவு நாள்:26-03-2019.
கியாமத் நாளை நோக்கி குழுமம்
No comments:
Post a Comment