Wednesday, 9 May 2018

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு தொடர் 4

தஹ்னிக்

குழந்தை பிறந்த உடன் பேரித்தம்பழத்தை மெண்டு அதன் வாயில் தடவும் வழமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்தது. இதற்கு தஹ்னீக் என்று அரபு மொழியில் சொல்லப்படுகிறது.

(முஹாஜிர்களிலேயே) இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தை அப்துல்லாஹ் பின் ஸ‏இபைர் ஆவார். (அவர் பிறந்தவுடன்) அவரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓரு பேரிச்சம் பழத்தை எடுத்து அதை மென்று அவரது வாய்க்குள் நுழைத்தார்கள். அவரது வயிற்றினுள் முதலாவதாக நுழைந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உமிழ் நீரே ஆகும். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி 3910)

எனக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தவுடன் அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுவந்தேன். நபி (ஸல்) அவர்கள் அதற்கு இப்ராஹீம் என்று பெயர் வைத்துவிட்டு பேரித்தம்பழத்தை மெண்டு அதன்வாயில் தடவினார்கள். அதற்காக பிரார்த்தனை செய்துவிட்டு என்னிடம் ஒப்படைத்தார்கள். (இப்ராஹீம்) அபூமூஸாவின் மக்களில் மூத்தவராக இருந்தார். (அறிவிப்பவர் : அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 5467)

பெயர் சூட்டுதல்

குழந்தை பிறந்தவுடன் அடுத்ததாக அக்குழந்தைக்கு ஒரு நல்லப் பெயர் சூட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்படுகின்றோம். அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் அக்குழந்தைத் திகழ வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்குப் பெயர் சூட்டுகிறோம். பலர் தங்களுடைய குழந்தைகளுக்கு அழகிய பெயர்களை வைத்தாலும் சிலர் மோசமானப் பெயர்களை சூட்டிவிடுகிறார்கள்.

இதனால் எந்த பாதிப்பும் பிற்காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படாது என்று நினைக்கின்றார்கள். உதாரணமாக மைதீன் பிச்சை, சீனி, பக்கீர், நாகூரா, ஆத்தங்கரையா, காட்டுபாவா போன்ற விகாரமானப் பெயர்களை வைக்கின்றார்கள். இன்னும் பொருள் தெரியாத பல பெயர்களையும் சூட்டுகிறார்கள்.

இது போன்றப் பெயர்களை சூட்டப்பட்டவர்கள் பள்ளிக் கல்வியை கற்கும் போது சக நண்பர்களால் கேலி செய்யப்படுகிறார்கள். பிறரிடத்தில் தன்னை அறிமுகம் செய்யும் நேரத்தில் தன் பெயரைக் கூற வெட்கப்படுகிறார்கள். தன் பெயரைக் கூறி யாராவது அழைத்தால் அவர்களுக்குள்ளே ஒரு கூச்சம் தோன்றுகிறது.

அப்பெயரை மாற்றுவதற்கான முழு முயற்சியில் ஈடுபடுகின்றார்கள். இதற்காக அதிகமாக பொருட் செலவும் உடல் உழைப்பும் செய்ய நேரிட்டாலும் சகித்துக் கொண்டு பெயரை மாற்றிக் கொள்கிறார்கள்.

இன்னும் பலர் தங்கள் பகுதியில் அல்லது தான் அறிந்த வகையில் யாரும் வைக்காத பெயரை குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு பெயரின் ஓசைக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால் அதன் பொருளை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். இது விரும்பத்தக்கது அல்ல.

சிறந்த பெயர்களை வைப்போம்

பொதுவாக எல்லா விஷயங்களையும் அழகுற செய்ய வேண்டும். இந்த விதியை அவசியம் பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டும். ஏனென்றால் அழகானதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 147)

அல்லாஹ்வின் பெயருடன் அப்துல் (அடிமை) என்ற வார்த்தையை சேர்த்து பெயர் வைப்பது அல்லாஹ்விற்கு மிக விருப்பமானதாகும்.

உங்கள் பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். (அறிவிப்பவர் : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4320)

மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 20704)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்கும் சகுணம் பார்த்ததில்லை. (வரி வாங்குவதற்கு) அதிகாரியை அவர்கள் அனுப்பும் போது அவருடையப் பெயரைப் பற்றிக் கேட்பார்கள். அவருடையப் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் சந்தோஷம் அடைவார்கள். அவர்களுடைய முகத்தில் அதனால் மகிழ்ச்சி தென்படும். அவருடைய பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களது முகத்தில் தென்படும். அவர்கள் ஓரு ஊருக்குச் சென்றால் அதன் பெயரைப் பற்றி விசாரிப்பார்கள். அதன் பெயர் அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதனால் சந்தோஷம் அடைவார்கள். அதனால் அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி தென்படும். அதன் பெயரை அவர்கள் வெறுத்தால் அதன் வெறுப்பு அவர்களின் முகத்தில் தென்படும். (அறிவிப்பவர் : புரைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத் 3419)

மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தும் நல்லப் பெயர்களை வைக்க வேண்டும் என்று கூறுகின்றது.

நபிமார்களின் பெயர்களை வைக்கலாம்

எனக்கு ஆண் குழந்தையொன்று பிறந்தது. அக்குழந்தையை நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டுசென்றேன். நபி (ஸல்) அவர்கள் அக்குழந்தைக்கு "இப்ராஹீம்' எனப் பெயர் சூட்டிப் பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதைத் தடவினார்கள். (அறிவிப்பவர் : அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு, நூல் முஸ்லிம் : 4342)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு யூசுஃப் என்று பெயர் வைத்துவிட்டு எனது தலையை தடவிக்கொடுத்தார்கள். (அறிவிப்பவர் : யூசுஃப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 15809)

பெயரில் இணைவைப்பு இருக்கக்கூடாது

அல்லாஹ்வுடைய தன்மையைக் குறிக்கும் பெயர்களை சூட்டுவது கூடாது. இன்று வழக்கில் ஷா ஆலம் (பிரபஞ்சத்தின் அரசன்) ஜஹாங்கீர் (உலகை வெற்றி கொண்டவன்) ஷாஜஹான் (உலகின் அரசன்) ஷாகுல் ஹமீது புகழுக்குரியவனின் அரசன் ஆகிய பெயர்கள் சூட்டப்டுகின்றன. இவற்றில் இணைவைப்பு கலந்திருப்பதால் இப்பெயர்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

பெயர் சூட்டும் போது அதன் பொருளில் இணைவைப்பு ஏதேனும் தென்படுகிறதா என்று கவனித்து சூட்ட வேண்டும். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

மறுமை நாளில் அல்லாஹ்விடத்தில் மிக வெறுப்பிற்குரிய பெயரைக் கொண்டவன் மலிகுல் அம்லாக் (அரசர்களுக்கெல்லாம் அரசன்) என்ற பெயருடையவனாவான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6205)

மக்கள் ஹானிஃ (என்ற நபித்தோழரை) அபுல் ஹகம் (ஞானத்தின் தந்தை) என்று குறிப்புப் பெயரால் அழைத்தார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகை தந்த போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை அழைத்து அல்லாஹ்வே ஞானமிக்கவன். அவனிடமே சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது. அவ்வாறிருக்க நீர் ஏன் ஞானமிக்கவன் எனக் குறிப்புப் பெயர்வைக்கப்பட்டுள்ளீர் என்று அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர் என்னுடைய சமுதாயம் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிணங்கிக் கொண்டால் என்னிடம் (தீர்ப்பு கேட்டு) வருவார்கள். அவர்களுக்கு (நல்ல) தீர்ப்பை வழங்குவேன். இரு கூட்டத்தாரும் (அதில்) திருப்தி அடைந்துகொள்வார்கள். (ஆகையால் இப்பெயரை எனது சமுதாயம் எனக்கு வைத்தது) என்று அவர் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு தீர்ப்புவழங்குவது எவ்வளவு சிறந்தது என்று கூறிவிட்டு உமக்கு எத்தனை குழந்தைகள் உள்ளனர் என்று கேட்டார்கள். அவர் ஷஸ்ரீரைஹ், அப்துல்லாஹ், முஸ்லிம் ஆகியோர் உள்ளனர் என்று கூறினார். இவர்களில் மூத்தவர் யார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதற்கு ஷஸ்ரீரைஹ் என்று கூறினார். அப்படியானால் நீர் அபூ ஷ‏ஸ்ரீரைஹ் (ஷஸ்ரீரைஹின் தந்தை) ஆகும் எனக் கூறிவிட்டு அவருக்காகவும், அவரது குழந்தைக்காகவும் பிரார்த்தனை புரிந்தார்கள். (அறிவிப்பவர் : ஹானிஃ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 5292)

அறியாமைக் காலத்தில் என்னுடையத் தந்தையின் பெயர் அஸீஸ் (மிகைத்தவர்) என்று இருந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு அப்துர் ரஹ்மான (அளவற்ற அருளாளனின் அடிமை) என்று (மாற்றி) பெயர்வைத்தார்கள். (அறிவிப்பர் : அப்துர் ரஹ்மான் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 16944)

கெட்டவர்களின் பெயரை சூட்டக்கூடாது

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியான உம்முசலமாவின் சகோதரனுக்கு ஒரு ஆண்குழந்தைப் பிறந்தது. அவர்கள் (உம்முசலமாவின் குடும்பத்தார்கள்) அக்குழந்தைக்கு வலீத் என்று பெயர் வைத்தார்கள். (இதை அறிந்தவுடன்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எகிப்து நாட்டு மன்னர்களின் பெயர்களையா அதற்கு வைத்தீர்கள்? இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் தோன்றுவான். அவனுக்கு வலீத் என்று சொல்லப்படும். ஃபிர்அவன் அவனது சமுதாயத்திற்கு தீங்கிழைத்ததை விட அவன் இந்த சமுதாயத்திற்கு அதிகம் தீங்கிழைப்பான் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : உமர் பின் ஹத்தாப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 104)

தீயவர்களின் பெயர்களை சூட்டுவதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை மேலுள்ள ஹதீஸின் மூலம் விளங்கிக்கொள்ள முடிகிறது.

குறிப்பிட்ட சில பெயர்களை சூட்டக்கூடாது

சில பெயர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுக் கூறி அவற்றை சூட்டக்கூடாது என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்கள் அடிமைகளுக்கு அஃப்லஹ் (வெற்றியாளன்), ரபாஹ் (இலாபம்), யசார் (சுலபம்), மற்றும் நாஃபிஉ (பயனளிப்பவன்) ஆகிய நான்கு பெயர்களைச் சூட்ட வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள். (அறிவிப்பவர் : சமுரா பின் ஜஸ்ரீன்தப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4328)

எங்களில் ஓருவருக்கு ஆண்குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அவர் காசிம் என்று பெயர் சூட்டினார். நாங்கள் (அவரிடம்) உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என குறிப்புப் பெயரால் அழைத்து மேன்மைப்படுத்திடமாட்டோம். (நபியவர்களுக்கு அபுல்காசிம் என பெயர் இருப்பதே இதற்குக் காரணம்) என்று சொன்னோம். ஆகவே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் (சென்று இதைத்) தெரிவித்தார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமது மகனுக்கு அப்துர் ரஹ்மான் என பெயர் சூட்டுக என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6186)

அன்சாரிகளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு "முஹம்மத்' என்று பெயர் சூட்ட அவர் விரும்பினார். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கேட்டார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அன்சாரிகள் செய்தது நன்றே. என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள். என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் 4324)

மேலுள்ள இரண்டு ஹதீஸ்களும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குறிப்புப் பெயரான அபுல்காசிம் என்றப் பெயரை யாரும் சூட்டக் கூடாது என்று அறிவிக்கின்றது.

பெயர் மாற்றம் செய்யலாம்

மோசமான அர்த்தங்களைக் கொண்டப் பெயர்களை சூட்டக்கூடாது.

 பெற்றோர்கள் அறியாமையினால் சூட்டிவிட்டால் அப்பெயர்களை மாற்றிவிட்டு நல்ல அர்த்தங்களைக் கொண்ட பெயர்களை வைத்துக்கொள்ளலாம்.

முஸய்யப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் தந்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களது பெயர் என்ன என்று வினவினார்கள். அதற்கு அவர் ஹஸ்ன் (முரடு) என்று சொன்னார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (இனிமேல் உமது பெயர்) சஹ்ல் (இலகு) ஆகும் என்று கூறினார்கள். அதற்கு அவர் எனது தந்தை எனக்கு இட்டப் பெயரை நான் மாற்றமாட்டேன் என்று கூறிவிட்டார். (இந்த ஹதீஸை அறிவிக்கும் முஸைய்யப் அவர்கள் கூறுகிறார்கள்.) இதன் பின்னர் எங்களிடம் (குணநலன்களில்) முரட்டுத்தன்மை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. அறிவிப்பவர் : முஸைய்யப் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6190)

ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு (முதலில்) பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது "அவர் தம்மைத் தாமே பரிசுத்தப் படுத்திக்கொள்கிறார்'' என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே, அவருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "ஸைனப்' என்று பெயர் சூட்டினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 6192)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆசியாவின் (மாறுசெய்பவள்) பெயரை மாற்றி (அவரிடம்) நீ ஜமீலாவாகும் (அழகானவள்) என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 4301)

ஆஸியா (عَاصِيَة) என்பதின் பொருள் மாறுசெய்பவள் என்பதாகும். இதில் முதலாவது எழுத்தாக அய்னும் இரண்டாவது எழுத்தாக ஸாதும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெயரை வைப்பது கூடாது.

ஆசியா (آسٍيَة) என்பதின் பொருள் பின்பற்றுபவள் என்பதாகும். இதில் முதலாவதாக அலிஃபும் இரண்டாவதாக சீனும் இடம்பெற்றுள்ளது. இப்பெயரை வைப்பதற்கு தடையில்லை.

அஸ்ரம் என்று சொல்லப்பட்ட ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருகை தந்த நபர்களில் ஒருவராக இருந்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரிடம் உம் பெயர் என்ன என்று வினவினார்கள். (அதற்கு) அவர் என் பெயர் அஸ்ரமாகும் (காய்ந்த செடிக் கொத்து) என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாறாக உன் பெயர் சுர்ஆவாகும் (மணிகள் கொண்ட பசுமையான செடிக்கொத்து) என்று (பெயர்மாற்றிக்) கூறினார்கள். (அறிவிப்பவர் : உஸாமா பின் அஹ்தரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 4303)

பெயர்வைக்கும் காலம்

மர்யமே அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகின்றான். மர்யமின் மகனான ஈஸா என்னும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும் மறுமையிலும் தகுதிமிக்கவராகவும் (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார் என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக. (அல்குர்ஆன் 3 : 45)

ஸகரிய்யாவே ஓரு புதல்வன் பற்றி உமக்கு நாம் நற்செய்தி கூறுகிறோம். அவரது பெயர் யஹ்யா இப்பெயரிடப்பட்டவரை இவருக்கு முன் நாம் ஏற்படுத்தியதில்லை. (என இறைவன் கூறினான்.) அல்குர்ஆன் 19 : 7)

முதல் வசனத்தில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பிறக்கப் போவதை மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மலக்குமார்கள் கூறுகிறார்கள். அப்படி கூறும் போது ஈஸா என்றப் பெயரையும் சேர்த்து கூறுகிறார்கள். இரண்டாம் வசனத்தில் ஸகரிய்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் குழந்தை பிறக்கப் போவதாக அல்லாஹ் சுபச்செய்தி கூறுகின்றான். பிறக்கப் போகும் குழந்தைக்கு அல்லாஹ் யஹ்யா என்று பெயரும் சூட்டுகின்றான். குழந்தை பிறக்கும் முன்பே பெயர் சூட்டலாம் என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

அவர் ஈன்றெடுத்த போது “என் இறைவா பெண் குழந்தையாக ஈன்றெடுத்துவிட்டேன் எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். “ஆண் பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். விரட்டப்பட்ட ஷைய்தானை விட்டும் இவளுக்கும் இவளுடைய வழிதோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன் எனவும் அவர் கூறினார். (அல்குர்ஆன் 3 : 36)

குழந்தை பிறந்தப் பிறகும் பெயர் சூட்டலாம் என்பதை மேலுள்ள வசனத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.

ஓவ்வொரு குழந்தையும் அகீகாவுடன் பிணைக்கப்பட்டுள்ளது. அது பிறந்த ஏழாம் நாளில் அதற்காக (ஆடு) அறுக்கப்படும். அதை விட்டு நோவினை (தலை முடி) அகற்றப்படும். அதற்கு பெயரும் வைக்கப்படும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : சமுரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அஹ்மத் 19327)

இந்த ஹதீஸில் ஏழாவது நாள் குழந்தைக்குப் பெயர் வைக்கப்படும் என்று வந்துள்ளது. இதனடிப்படையில் குழந்தை பிறந்து ஏழாவது நாளும் பெயர் சூட்டலாம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

Tuesday, 8 May 2018

சிரியா-வரலாறும் படிப்பினையும் (பகுதி-02)


✍சே.ச.அனிப் முஸ்லிமின்

ஹஃபீஸ் அஸ்ஸாத் ஒரு பார்வை:

இவர் 1930’ல் பிறந்தார் இவரை பற்றி எங்கு தேடினாலும் இவர் சிரியாவின் அலவிய பிரிவை சேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது ஆனால் இவர்
உண்மையில் சிரியாவின் மிக வழிகெட்ட பிரிவான நுசைரிய பிரிவை சார்ந்தவர். இவர்கள் சியாக்களின் 11 ஆவது இமாம் ஹசன் அல் அஸ்கரியின்
மாணவர் இப்னு நுசைர் என்பவரின் வம்சத்தினர் என அறியப்பட்டவர்கள். இவர்கள் சிரியாவில் வந்தோடிகளாக கருதப்பட்டனர். இவர் படிப்பால் ஒரு விமான
ஓட்டுனர். கம்யுனிஸ்ட் மீது கொண்ட பிடிப்பால் 26 வயதில் பாத் கட்சியில் இனைந்தார். சிரிய மற்றும் எகிப்திய ஐக்கிய அரபு குடியரசு ஆட்சியில் மீண்டும் பாத்
கட்சியை ஜதீத் மற்றும் அம்ரான் ஆகியோருடன் சேர்ந்து உயிரூட்டினார். 1963ல் பாத் கட்சி ஆட்சியில் இராணுவ அதிகாரியானார் பின் இராணுவத்தை வைத்தே 1971ல் ஆட்சியை கைப்பற்றினார்.

சிரியா 74 சதவீதம் சன்னி முஸ்லீம்கள் வாழும் நாடு. இந்த நாட்டில் பாத் கட்சியினரின் கொள்கை மற்றும் ஆட்சியதிகாரத்தை 1970 களில் இருந்தே சிலர் எதிர்த்தே
வந்துள்ளனர். பாத் கட்சியினர் பொதுவாக எந்த மதத்தையும் சாராமல் மேலைநாட்டு கலாச்சாரத்தோடு ஒட்டிய கொள்கையை கொண்டவர்கள். இஸ்லாமிய
வரைமுறைகள் அங்கு பின்பற்றும் சூழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட்டது. மக்கள் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பது போன்று அரசே மக்களை
திசை திருப்பியது. இதனால் இஸ்லாமிய கொள்கைகளை விரும்பம் முஸ்லீம்கள் அதை எதிர்க்கத் துவங்கினர்.

எப்போதெல்லாம் எதிர்ப்பு கிளம்பியதோ அப்போதெல்லாம் எதிர்ப்பவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது ஆஸ்சாத் அரசு. இத்தனை ஆண்டுகளில் ஒரு
எதிர் கட்சியும் இல்லை. ஆளும் வர்கத்தினருக்கு எதிராக யாரும் வாய் திறக்க முடியாதவாறும், புதிதாக எந்த கட்சியும், அமைப்பும் அரசுக்கு எதிராக குரல்
கொடுக்கும் தலைவர்களும் இருக்கும் இடம் தெறியாமல் ஆக்கப்பட்டார்கள். இவர் 2000 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிர் இழந்தார்

பஸ்ஸார் அல் அஸ்ஸாத்:

ஹஃபீஸ் அஸ்ஸாத்யின் மரணத்திற்க்கு பின் அவரது மகன் பஸ்ஸார் அஸ்ஸாத் பதவிக்கு வந்தார். மிகவும் எதிர்பார்க்க பட்ட இவர் தனது தந்தையின் பாதையை
விட மிக மோசமான் பாதையில் பயணித்தார்.

இவரது மிக மோசமான நடவடிக்கைக்கு சான்றாக 2011 நவம்பர் 9ல் அரசுக்கு எதிராக போராடியவர்கள் சுமார் 3500 பேர் சிரிய இராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
உலகம் மிக மோசமான சர்வாதிகாரத்தை பார்த்தது.250 பேர் 2 வயதே ஆன குழந்தை உள்ளிட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆவர். அதே போல் வரலாற்றில
இன்னொறு ஹாமா படுகொலை கடந்த 2012 ஜுலை 12ல் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கொள்ளப்பட்டனர். இவர்கள் ஆஸ்ஸாத்தின்
புதிய அரசியல் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவாகள்.மேலும் 11 வயதே நிறம்பிய சிறுமிகள் கூட வன்புணரப்பட்ட கொடுமைகளை அரசே நடத்தியது. இணையதளம்
உள்ளிட்ட ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள், யாரும் சுதந்திரமாக ஒரு மெயில் கூட அனுப்ப முடியாத, ஒரு பிளாக் கூட நடத்த முடியாமல் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட இணையதளசேவைகள் ஒட்டு மொத்தமாக முடக்கியது போன்ற ஊடக அடக்குமுறையையும் இந்த அரசு விட்டுவைக்கவில்லை. தனது அரசின் அனைத்து முக்கிய பொறுப்புகளிலும் அலாவி இன சியாக்களை அமர்த்தி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டதோடு எந்த மனிதாபிமானத் தன்மையும் இல்லாத ஒரு சூழலை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.

சிரிய விடுதலை போர்:

கடந்த 29 ஜுலை 2011ல் ரயீத் அல் அஸ்ஸாத் உள்ளிட்ட சில இராணுவ அதிகாரிகள் சேர்ந்து சிரிய விடுதலை இராணுவத்தை உருவாக்கினார்கள். இவர்கள் இந்த
அறிவிப்பை இணையதளம் மூலம் வெளியிட்டனர். வெல்வது அல்லது சாவது என்ற முழக்கத்துடன் துவக்கப்பட்ட இந்த படை சிரியாவின் மாற்றத்தை நோக்கிய
போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று வருகிறது.

கடந்த காலங்களில் அரபு நாடுகளில் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்தே சிரியாவிலும் கடந்த மார்ச் 11, 2011ல் போராட்டம் துவக்கப்பட்டது. போராட்டக்காரர்களை அடக்க ஏப்ரல் 2011ல் அதிபர் பஸ்ஸார் உத்தரவின் பேரில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த அடக்குமுறை சுமார் ஒரு மாதகாலம் நடைபெற்று வந்தது. அதன் விளைவே சிரிய விடுதலை இராணுவத் துவக்கத்திற்கு காரணமாகும். போராட்டக் காரர்கள் அரசு இராணுவ ஆயுதங்களை கைப்பற்றி
இராணுவத்திற்கு எதிராக துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு வருகின்றனர். சிரிய விடுதலை இராணுவத்திற்கு உலகம் முழுதும் ஆதரவு பெருகியுள்ளது, ஈரான், ரஸ்யா, சீனா
மற்றும் இந்திய உள்ளிட்ட நாடுகள் மட்டும்தான் சிரிய அரசை ஆதரித்து வருகின்றது. மற்ற யு.எஸ், யு.கே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளும் சிரிய விடுதலை படைக்கு ஆதரவளித்து வருகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ் திருப்பம்:

இந்த விடுதலைப் போரில் இனைந்த சில வீரர்கள் பின்பு தனியாக ஒரு பிரிவை தொடங்கினர் பின்னர் அவர்கள் கிலாபத்தை அறிவித்தனர் . இதன் விளைவாக இவர்களாது கிலாபத்தை எற்றுக்கொள்ளாத சிரிய விடுதலை இராணுவத்தையும் இவர்கள் தாக்கவும் கொல்லவும் ஆரம்பித்தனர். இதனால் சிரிய விடுதலை மிக பெரிய பின் அடைவை கண்டு நிற்கிறது.

நிகழ்வின் சாட்சியங்கள்:

1. 2011 ஆம் ஆண்டில் மார்ச் 18 ஆம் தேதி துவங்கப்பட்ட உள்நாட்டு புரட்சியில் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 2,40,381 ஆகும்.

2.கொல்லப்பட்ட பொது மக்கள் எண்ணிக்கை 111624 ஆகும்.

3.கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11964 ஆகும்

4.கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 7719 ஆகும்.

5.போரில் காணமல் போனவர்கள் எண்ணிக்கை 30000 ஆகும்

6.போரில் கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஆகும்.

7.ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20000 ஆகும் .

8.போரினால் காயமுற்று நிரந்தரமாக ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 20 லட்சம் பேர் அதாவது 2 மில்லியன் மக்கள் ஆவர் .

9.போரினால் அருகே புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சம் பேர் அதாவது 7 மில்லியன் மக்கள் ஆவர்

10. அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு தப்பித்து ஓடி வந்து பிற நாடுகளில் அகதிகளாக இருப்பவர்களின் எண்ணிக்கை 40 லட்சம் பேர் அதாவது 4 மில்லியன் என்பது மிடில் ஈஸ்ட் மானிட்டர் வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.

உணவிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான அகதிகள்:

1. அகதிகளுக்கு உணவு வழங்கும் நிலைமைகள் நாளடைவில் குறைந்து வருகின்றது . நிதிப்பற்றாக்குறையின் காரணமாக உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்க பணம் இல்லாமையால் முகாம்களுக்கு வெளியே உள்ள 229000 அகதிகள் உணவின்றி தவித்து வருகின்றனர்.

2.இதன் விளைவாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீட்கப்பட்டு வேலைக்கு செல்வதும், பணங்களை வசூலிக்க வெளியே செல்வதும் அதிகரித்து வருகின்றது .

3.இதன் படி ஜோர்டான் நாட்டின் அரசாங்கத்தின் கூற்று படி முகாம்களில் தங்க வைக்கபட்டிருக்கும் அகதிகள் எண்ணிக்கை 210000 ஆவர்.

4.முகாம்களுக்கு வெளியே உள்ள அகதிகள் எண்ணிக்கை 1.3 மில்லியன் ஆவர். இது வரை 1,772,535 சிரியா அகதிகளை துருக்கி வரவேற்று உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன .

அகதிகளை குறிவைக்கும் ஐரோப்பிய நாடுகளின் கிறிஸ்துவ மிஷன்ஸ்:

1.அகதிகளாக வருபவர்கள் பலரையும் கிறிஸ்துவ மதத்திற்கு திருப்பும் பணிகளை அபாரமாக செய்து வருகின்றது ஐரோப்பிய நாடுகள் .

2.இதில் சில இரானிய முஸ்லிம்கள் ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் உள்ள சர்ச்களில் கிறிஸ்துவத்தை தழுவுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளை விரிவாக வழங்கி உள்ளது .

3.சிலர் வாழ்க்கை மேம்பட்டிற்காகவும் மற்றும் ஐரோப்பிய குடியுரிமைக்காகவும் மாறி இருக்கலாம் அல்லது மாற்றப்படுவதாக ஊடகத்திற்கு செய்திகள் திட்டமிடப் படலாம் என்பது எனது பார்வை.

4..செய்திகளில் குறிப்பிட்டவர்கள் இரான் மற்றும் ஆப்கான் நாட்டின் அகதிகள் என அறிய முடிகின்றது. அவர்கள் உண்மை நிலவரம் என்ன என்பதை மேற்கத்திய ஊடகம் தரும் செய்தியை மட்டும் வைத்து கள ஆய்வு இன்றி தீர்க்கமாக முடிவு செய்து விட முடியாது.

5.அகதிகளாக வரும் பலரும் மதம் மாறவில்லை என்பது டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகளில் வரும் சில தகவல்களை வைத்து அறிய முடிகின்றது.

6.ஐரோப்பிய நாடுகள் அகதிகளை வரவேற்கின்ற காரணங்கள் கிறிஸ்துவ அழைப்பிற்கு என்பதே இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் ஆகும்.

ஸ்வீடன் செல்லும் வழியில் கற்பழிக்கப்படும் குழந்தை அகதிகள்:*

1.தஞ்சம் புகுவதற்கு ஆதரவு தேடும் சிறுவர் சிறுமிகள் 92 % சதவிகிதம் பேர். அவர்கள் 13 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்கள் ஆவர் .

2.பெற்றோர்கள் இன்றி அகதிகளாக ஸ்வீடன் வரும் குழந்தைகள் வாரம் தோறும் சுமார் 700 பேர் வருகை தருகின்றனர். அகதிகளாக வரும் குழந்தைகள் கடத்தல்காரர்களால் கற்பழிக்கப்பட்டும் தாக்கப்பட்டும் உடல் ரீதியான மற்றும் மனம் ரீதியான காயங்களுக்கு ஆளாகின்றனர்.

3.அகதிகளாக வரும் குழந்தைகள் பலரும் எலும்புகள் முறிந்த நிலையிலும் , தலையில் தாக்கப்பட்டு காயங்களுடனும் வருகின்றனர். நாடு கடத்தபப்டும் குழந்தைகள் பண்டமாற்றுவண்டிகளில் அழைத்து வரும் போது விழுவதாகவும் , குழந்தைகள் கனனத்தில் அறைந்து காத்து கேட்கும் தன்மை இழப்பதாகவும் செய்திக் குழுக்கள் தகவல் அழிப்பது வேதனையாக இருக்கின்றன .

4.இவர்களுக்கு மனம் ரீதியாக தைரியம் ஊட்டும் மக்களும் பாதுகாப்பு அளிக்கும் மனிதநேய குழுக்களும் உடனடி தேவையாக இருக்கின்றது.

தொடரும்….இன்ஷா அல்லாஹ்….

வெற்றியை நோக்கி - 4


குமரி அன்ஸாரி MCA

(கல்வி ஆலோசகர்)

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»

கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு    செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர். ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக் கொண்டவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.     (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர்(ரலி) நூல்கள்: அபுதாவூத், திர்மதீ,     இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.)

இன்றைய மாணவர்கள் நாளைய தலைமை பொறுப்பை கட்டி காப்பவர்கள்! ஆட்சியை ஆளப்போகின்றவர்கள்! அதிகாரிகளாக வரக்கூடியவர்கள்! நிர்வாகம் செய்ய கூடியவர்கள்!. இன்றைய மாணவர்களின் கல்வி எதனை நோக்கிச் செல்கின்றன, இன்னும் அவர்களுக்கு வழங்கப்படக் கூடிய கல்வி அவர்களை எந்த அளவு உள்வாங்கிச் செயல்படுகின்றார்கள் என்பதைப் பொறுத்தே, நாளைய உலகத்தை அவர்கள் எவ்வாறு அமைப்பார்கள் மற்றும் அதன் தன்மை எவ்வாறு இருக்கும் என்பதைக் கூற முடியும். கல்வி என்பது கடல் போன்றது. அதை ஒரு முஸ்லிம் தான் மரணிக்கின்ற வரை கற்றுக்கொண்டே இருக்கலாம். அல்லாஹ்வினால் பொருந்திக் கொள்ளப்பட்ட நபித்தோழர்களைப் பாருங்கள், தாங்கள் மரணிக்கும் வரையில் கல்வியை கற்பிப்பது மட்டுமல்ல, கற்கக்கூடியவர்களாகவும் இருந்தார்கள். அதாவது ஒரு மூஃமின் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்கவேண்டும்.
சமூகத்தில் ஒரு மனிதன் அறிவில் சிறந்தவனாக, அல்லது  இழிவான  தாழ்ந்தவனாக கருதபடுவது அவனிடம் இருக்கும் கல்வியின் மூலம் கிடைக்கும் அறிவை வைத்துதுதான், ஒருவன் அறிவில் மிகுந்த பெரிய அறிஞரை விட  உயர்ந்தவனாக (கண்ணியமானவனாக ) அல்லது மிருகத்தை விட தாழ்ந்தவனாக ஆகுவது ஒருவனின் முறையான கல்வி அறிவின் மூலம் தான், முறையாக  அறிவை வளர்த்தால் அறிஞனாகிறான் முறைகேடாக  விட்டால் மிருகமாகிறான். எனவே  தான் இஸ்லாம் அறிவு வளர்ச்சிக்கு காரணமாக  உள்ள எல்லா கல்வியைக் கற்பதற்கும்  ஆர்வமூட்டுகிறது படிப்பும், எழுத்தும் கல்விக்கு அஸ்திவாரமாக இருப்பதால் இறைவனின் முதல் வசனமே கல்வியை பற்றியதாக  இறைவன்  இறக்கிவைத்தான் .

தற்போதைய கல்வியில் மேற்கத்தியப் கலச்சாரங்கள் மிகுந்து விட்டதன் காரணமாக, சிறு குழந்தைகளில் இருந்து பல்கலைக் கழகங்கள் வரைக்கும் இந்த கலாச்சார சீரழிவினால் தீர்மானிக்கப்பட்ட கல்விக் கொள்கைகள் தான், அவர்களின் மூளைகளில் ஏற்றி வைக்கப்படுகின்றன. இதே போக்கிலே முஸ்லிம்களும் காலம் காலமாக இந்த மேற்கத்திய சிந்தனை வழிக் கல்வியினூடாகப் பயணம் செய்ததன் விளைவு, அவர்கள் தங்களை அறியாமலேயே தங்களது சுய அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடிய பிற்போக்குத் தனத்திற்குத் தள்ளப்பட்டு விட்டார்கள் என்பது தான் பரிதாபமான செய்தியாகும்.

இன்றைக்கு  நம் சமுதாய பெற்றோர்களில் பலர் தங்களது குழந்தைகளின் எதிர்கால நிலை என்னவாகும் என்பது குறித்து அச்சம் கொண்டவர்களாக உள்ளனர். அவர்களுக்காக நாம் சில ஆலோசனைகளை முன்வைக்கின்றோம். இதன் மூலம் வெற்றிகரமாக, நல்ல ஒழுக்கப் பண்புகளைக் கொண்ட, இஸ்லாமிய சிந்தனையின் மீது ஆசை கொண்ட சமூகத்தை உருவாக்கவும், அந்தக் குழந்தைகளின் வாழ்வில் அவர்கள் பயணிக்கவும் இது பயனுள்ளதாக அமையும்.

இருப்பினும், நம்முடைய குழந்தைகள் பலர் சமுதாய சிந்தையில்லாமல்  இந்த மேற்கத்திய கலாச்சாரங்களுக்குப் பலியாகி விடுகின்றார்கள், நம்முடைய எதிர்பார்ப்பைப் பொய்ப்படுத்தி விடுகின்றார்கள். இந்த மேற்கத்தியப் போக்கு அவர்களது வாழ்வில் ஒழுக்கமின்யையும், மரியாதை தெரியாத பண்பாட்டையும், சுயநலத்தையும் விதைத்து விடுகின்றது. அவர்கள் தங்களது வாழ்வை தங்களது நோக்கப்படி அமைத்துக் கொள்கின்றார்கள். மனம் போன வாழ்வை வாழ ஆரம்பித்து விடுகின்றார்கள். மற்றவர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்களாகவும் மாறி விடுகின்றார்கள்.
இந்த நிலை எவ்வாறு உருவானது என்பதை நாம் சற்று ஆய்வு செய்தோமென்றால், அவர்களுக்கு ஊட்டப்பட்ட கல்விக் கொள்கை தான் காரணமென்பதை வெகு எளிதாக அறிந்து கொள்ளலாம்.

 يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا قِيْلَ لَـكُمْ تَفَسَّحُوْا فِى الْمَجٰلِسِ فَافْسَحُوْا يَفْسَحِ اللّٰهُ لَـكُمْ‌ ۚ وَاِذَا قِيْلَ انْشُزُوْا فَانْشُزُوْا يَرْفَعِ اللّٰهُ الَّذِيْنَ اٰمَنُوْا مِنْكُمْ ۙ وَالَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ دَرَجٰتٍ ‌ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏

உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன்  (58:11)

படைத்த இறைவனின் பார்வையில் உயர்ந்த படித்தரத்தை பெற்றுத்தரும் கல்வியை போதிக்கும் பள்ளிக்கூடங்கள் தரமான பள்ளிக்கூடங்களே ! அறிவை வளர்க்கும் இப்படிப்பட்ட தரமான பள்ளிக்கூடங்களில், அறிவை அடகு வைக்கும் விதமான வணக்க வழிபாட்டு முறைகள், அறிவிற்கு இடமளிக்காமல் வலுக்கட்டயமாக பிஞ்சு உள்ளங்களில் திணிக்கப்படும் வணக்க வழிபாட்டு முறைகள், மூட நம்பிக்கையை வளர்க்கும் வகுப்புகள், சமூகத்தில் குரோதத்தை வளர்க்கும் விதமான பாடத்திட்டங்கள் என கேடு விளைவிக்கும் அம்சங்களை எந்த பள்ளி பெற்றிருந்தாலும் அது தரமான பள்ளிக்கூடமாக ஆகாது.
எனவே, பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுக்கும் போது அறிவை வளர்க்கும் கூடங்களை மட்டும் தேர்ந்தெடுத்து அறிவிற்கு பொருத்தமில்லாத காரியங்களை போதிக்கும் மடமைகூடங்களை புறக்கணிக்க வேண்டும்.

(தொடரும்).....

Tuesday, 1 May 2018

இஸ்லாம் கூறும் பெண்ணுரிமை -1


விளதை. R. ரய்யான்

 இறைவனது அற்புத மார்க்கமான இஸ்லாமில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பற்றியும், அவர்களை கண்ணியமாக நடத்த வேண்டிய விதத்தைப் பற்றியும் உலகிற்கு உரக்கச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
ஏனென்றால், பெண்களை இஸ்லாமிய சமூகம் அடக்குமுறை செய்வதாகவும், அவர்களது உரிமைகளை பறிப்பதாகவும் தொடர்ந்து தவறான கருத்துகள் பொதுவெளியில் பரப்பப்பட்டு வருகிறது.

இவ்வாறான பொய்க்கருத்துகளை பிரச்சாரம் செய்வோர் உண்மையில் பெண்களைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்று ஒருகணம் சிந்தித்து பார்க்க வேண்டும். அதுவே எமது ஆசையும் கூட!

ஏக இறைவனாகிய அல்லாஹ் கூறுகிறான் :-

ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
அல்குர்ஆன்  4:124

ஆணாயினும், பெண்ணாயினும் அவர்கள் இறைவனை அறிந்து, நம்பிக்கை கொண்டு, பல நல்ல காரியங்களை வேதத்தின் வழிகாட்டுதலின்படி செய்தால் அவர்களை நான் சொர்க்கச் சோலைகளில் நுழைவிப்பேன் என்று மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இறைவன் கூறுகிறான்.

இவ்வசனத்தின் மூலம் இறைவன் ஆண் - பெண் என்ற பாலின வேறுபாட்டின் அடிப்படையில் அல்லாமல், நற்காரியங்களின் அடிப்படையில் மட்டுமே நீதியாக கூலி கொடுப்பான் என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

மேலும், ஆண்கள் எப்படி பெண்கள் மீது உரிமை எடுத்துக் கொள்கிறார்களோ,  அதுபோல பெண்களுக்கும் ஆண்கள் மீது பல்வேறு உரிமைகள் உண்டு என்றும் இம்மார்க்கம் பெண்களுக்கான உரிமைகளை சரியாகக் கொடுத்து பாலின பாகுபாட்டைச் சுக்குநூறாகத் தகர்த்தெறிகிறது.

பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அல்குர்ஆன்  2:228

இன்றைக்கு எத்தனையோ கணவன்மார்கள் தம்முடைய மனைவியை அடிமைகளை போன்று நடத்துகிறார்கள். தாம் சொல்வதை மட்டுமே மனைவி கேட்டு நடக்க வேண்டும் வேறு எவற்றையும் பேசுவதற்கு கூட சிலர் அனுமதி தருவதில்லை. இவ்வாறு இருப்பதை இஸ்லாம்  விரும்பவில்லை! மாறாக, மனைவியிடத்தில் சிறந்தவரே, நற்குணம் கொண்டவர் என்று மனிதனின் நற்குணத்திற்கே அழகிய வரைவிலக்கணத்தை இஸ்லாமிய மார்க்கம் கொடுக்கிறது.

"இறை நம்பிக்கை கொண்டவர்களில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்." அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (1082)

மேலும்,  மனைவிமார்களை முகத்தில் அடிக்கக்கூடாது என்றும், அவளுக்கான அடிப்படை தேவைகளை சரியாக பூர்த்தி செய்து தர வேண்டுமென்றும், அவள் தவறிழைத்தால் அதனை அன்பான முறையில் மட்டுமே சுட்டிக்காட்டி திருத்த வேண்டுமெனவும் இம்மார்க்கம் வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபியவர்கள் (உமது மனைவி) உமது விளைநிலமாகும். உமது விளைநிலங்களுக்கு நீ விரும்பியவாறு சென்று கொள். (அவளைக் கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே! அவளை அசிங்கமாகத் திட்டாதே! நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய்! நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு! வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே!
நூல் : அஹ்மத்

"இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் (கணவன்), இறைநம்பிக்கை கொண்ட பெண்ணை (அவன் மனைவியை) வெறுக்க வேண்டாம். அவன் அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தாள், அவளிடமுள்ள வேறொரு நற்குணத்தைக் கொண்டு பொருந்திக்கொள்வானாக!.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் (2672)

இஸ்லாம் கூறும் மேற்கண்ட நல்ல போதனைகளின் படி கணவனும்,  மனைவியும் நடந்துவரும் பட்சத்தில் அவர்களுக்குள்ளே எந்தவொரு பிணக்கங்களும் ஏற்படாது,  மேலும் அவர்களது குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். இவ்வாறு குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்போது அவர்களது குழந்தைகளும் நல்லதொரு மார்க்கச் சிந்தனையோடு வளருவார்கள்.

 இதுபோன்று இஸ்லாம் பெண்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு உரிமைகளையும், அவர்களது பாதுகாப்பு நல அக்கறையில் இஸ்லாம் கூறும் தீர்வினையும் அடுத்தடுத்த தொடரில் காண்போம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்!....)