Tuesday, 24 April 2018

ரமலானை வரவேற்போம் !!!


எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானதாகும். அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிநடந்த முஸ்லிம்கள் மீதும் உண்டாகட்டுமாக!

ரமலான் பாக்கியம் நிறைந்த மாதமாகும். அதில்தான் அல்குர்ஆன் இறங்கியது. அது புனித புனிதமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறங்கியது. அவ்விரவு ஆயிரம் மாதங்களைவிட சிறந்ததாகும். ரமலான் வந்தால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகவாயில்கள் மூடப்படுகின்றன. ரமலானை நபி (ஸல்) அவர்கள் பல வருடங்கள் சந்தித்து அதன் சிறப்பையும், மகிமையையும் அடைந்து கொள்ள பலவழிமுறைகளை தனது சமுதாய மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளார்கள். அவற்றை ஒரு முஸ்லிம் அறிந்து செயல்படுவதால் நிச்சயமாக ரமளானின் பாக்கியத்தை அடைந்தவனாக ஆகுவான்,

2:185.ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).

ரமலானின் நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் சேர்க்கப்பட்டிருப்பதை சிறுபிராயத்திலேயே ஒரு முஸ்லிம் போதிக்கப்படுவது பெரியவனாகிய பின்பு அந்தக்கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான். சிறு பருவத்தில் நோன்பு நோற்கும் பழக்கப்பட்ட ஒரு முஸ்லிம் அதை நோற்கும் பருவ வயதெல்லையை அடைந்த பின்னால் அதைப் பாழடிக்க வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் கையாண்டு பாழடிக்கின்றான். தொட்டில் பழக்கம் சுடுகாடுவரை என்பதைப் பொய்ப்பிக்கின்ற இந்தத் தீய நடைமுறையை வெளிச்சூழல்களில் இருந்தே அவன் கற்றுக் கொள்கின்றான். ஆரம்ப காலங்களில் பட்டினி கிடந்து நோன்பு நோற்ற சின்னஞ் சிறுசுகளின் பட்டியலில் இவனும் ஒருவனாக இருந்தான் என்பதை நினைக்கின்ற போது அல்லாஹ்வின் கடமையில் எவ்வளவு குறை செய்கின்றான் என்று சிந்தித்துப்பாருங்கள்.

ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாள் கடமையாக நோன்பு நோற்று வந்தனர், ஸஹாபாப் பெண்கள் அதை நோற்றதோடு தமது குழந்தைகளையும் நோன்பு பிடிக்கச் செய்தார்கள். பசியினால் கதறும் போது பஞ்சினால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைக் கொடுத்து நோன்பு திறக்கும் நேரம் வரும் வரை அவர்களது கவனத்தை திசைத் திருப்பிவிடுவார்கள் என்ற செய்தியை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்களில் காண்கின்றோம். இவ்வாறான நிலை நம்மிடமும், நமது குழந்தைகளிடமும் வருவதற்கு என்ன முயற்சி செய்துள்ளோம் என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.

யார் இறை நம்பிக்கையுடனும், நன்மை நாடியும் லைலத்துல் கத்ர் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்திய பாவம் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி).

புனித லைலத்துல் கத்ரின் துஆ: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! புனித லைலத்துல் கத்ரை (அதன் அடையாளங்களைக் கொண்டு) நான் அறியும் தருணத்தில் எவ்வாறு பிரார்த்தனை செய்ய வேண்டும் ? என வினவியபோது

'அல்லா ஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ பஃபு அன்னீ '

பொருள்:-அல்லாஹ்வே! நீ (பாவங்களை) மன்னிப்பவன். என்னை மன்னித்து விடுவாயாக! என பிரார்த்தனை செய்வாயாக என்று பதிலளித்தார்கள் (ஆதாரம்: திர்மிதி).

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களில் அதிக கொடை வள்ளலாக இருந்தார்கள். ரமலான் மாதத்தில் அதிகமதிகம் வாரிவழங்கும் வள்ளலாகத் திகழ்ந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அது முடியும் வரையும் சந்திப்பார்கள். அவர்களை ஜிப்ரீல் (அலை) அவர்கள் சந்திக்கின்றபோது தொடர்ந்து வீசும் புயல்காற்றைவிட (வேகமாக) நல்லதை வாரி வழங்குவார்கள். (புகாரி).

உடலும் உள்ளம் நலம் பெறும் மாதம்

இயற்கை மருத்துவத்தில் உண்ணாமை என்பது மருத்துவம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

டாக்கர்: சூ கூறுகிறார் உணவில்லாததால் இறந்து விட்டவர்களை விட வேண்டாத வேளையில் உணவுண்டு இறந்தவர்கள் எண்ணிக்கையே அதிகம் என்று அவர் ஆராய்ந்து கூறுகிறார் முப்பது நாட்கள் நோன்பிருப்பதால் உடல் பலவீனம் தவறான கருத்தாகும்.

உலகறிந்த உயிரியல் விஞ்ஞானி பேராசிரியர்: ஹக்ஸ்ஸி சில மண் புழுக்களை வைத்து ஆராய்ச்சி செய்தனர் அவற்றுக்கு விருப்பமான வழக்கமான உணவை கொடுத்து வந்தார் ஒரே ஒரு மண் புழுவை மட்டும் தனியாக எடுத்து ஒரு வேளை உணவையும் மறு வேளை பட்டினியாக வளர்த்து வந்தார் தொடர்ந்து உணவை சாப்பிட்ட மண் பழு அழிந்துவிட்டன ஆனால் ஒரு வேளை உணவும் மறு வேளை பட்டினியாகவும் சாப்பிட்ட மண் புழு நீன்ட நாட்கள் வாழ்ந்தது என்று தனது ஆய்வில் கூறுகிறார்.

பேராசிரியர்: சைல்டு இளமையோடு இருப்பதற்க்கு நோன்பு உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்

ரமலான் காலங்களில் செய்யவேண்டிய முக்கியமான செயல்கள்:

'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுப்பேன்' என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் வாசம் அல்லாஹ்விடம் கஸ்தூரியின் நறுமணத்தை விட சிறந்ததாகும். நபிமொழி (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)இ திர்மிதி 761)

பாவ மன்னிப்பு தேடுதல், இமாம் ஜமாத்துடன் ஐந்து நேரத் தொழுதல, குர்ஆன் ஓதுதல, தராவீஹ் தொழுதுதல், தஹஜ்ஜத் தொழுதல், ஒற்றுமையாக இருத்தல, தஸ்பீஹ் செய்தல், குடும்பத்தார்களுக்கு உதவி செய்தல், ஏழைகளுக்கு உதவி செய்தல், உம்ரா செய்ய செல்லுதல், ஜாகத் உரியவர்க்கு முறையாக கொடுத்தல், நோன்பு திறக்க ஏழை எளியவருக்கு உதவி செய்தல், நன்மையை செய்ய பிற மக்களுக்கு உபதேசம் செய்தல், ஆர்வம் மூட்டுதல், உலக முஸ்லீம்களுக்காக துஆ செய்தல், இஃதிக்காப் இருத்தல்.

ரமலான் காலங்களில் செய்யகூடாத முக்கியமான செயல்கள்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நோன்பைத் தவிர ஆதமுடைய மகனின் ஒவ்வொரு செயலும் அவனுக்குரியதாகும்! நிச்சயமாக, நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலி கொடுப்பேன்!. என்று அல்லாஹ் கூறினான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கும்) கேடயமாகும்! எனவே, உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் அவர் கெட்ட பேச்சுகள் பேச வேண்டாம்! கூச்சலிட்டு சச்சரவு செய்ய வேண்டாம்! யாரேனும் அவரை ஏசினால் அல்லது அவருடன் சண்டையிட்டால். நான் நோன்பாளி!. என்று அவர் சொல்லட்டும்! மு'ம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு துறக்கும்பொழுது அவன் மகிழ்ச்சியடைகிறான், தன் இறைவனைச் சந்திக்கும் பொழுது நோன்பின் காரணமாக அவன் மகிழ்ச்சியடைகிறான்.'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள் .(நூல்: புஹாரி)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ''பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும்விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும்விட்டு விடுவதில் அல்லா';வுக்கு எந்தத் தேவையுமில்லை!'' என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் கூறினார்கள். .(நூல்: புஹாரி)

பொய் பேசுதல், பாவம் செய்தல், தொழுகை விடுதல், வீண் பேச்சுக்கள் பேசுதல், சன்டையில் ஈடுபடுதல், தொலைக்காட்சி பார்த்தல், அதைப் பற்றி பேசுதல், காரணயில்லாமல் நோன்பை விடுதல், புறம் பேசுதல், ஹரமான சம்பாத்தியம், ஹராமான உணவு சாப்பிடுதல், ஆடம்பரமான ஆடைகள் வாங்குதல், அண்ணிய பெண்களோடு பேசுதல், அண்ணியப் பெண்களைந் பார்த்தல், இரவு நேரங்களில் வீண் விளையாட்டுகள்.

✍நஜ்முத்தீன்
( காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தீனியாத் ஆசிரியர் )

நன்றி:அதிரை எக்ஸ்பிரஸ் இணையம்.

No comments:

Post a Comment