Wednesday, 14 February 2018

இஸ்லாத்தை விட்டும் தடம்புரளும் இஸ்லாமிய சமுதாயம் - 2

இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அல்லாஹ் மிக அழகாக தன் திருமறையில் கூறுகிறான்:-

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் -23:1,2,9)

இறை நம்பிக்கையாளர்களின் பண்புகளை அல்லாஹ் இவ்வாறு மிகத் தெளிவாகக் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தாமும் செயல்பட்டு, தம் குழந்தைகளை அறியாமையினால் சில பெற்றோர்கள் செலுத்துகின்றனர்.

இன்றைய சூழலில் நம்முடைய சமுதாய மக்களில் யாருக்கேனும் இஸ்லாத்தை பற்றியும், மறுமையைப் பற்றியும் போதனை செய்தால், சிலர் கூறுகின்றார்கள் எப்படியென்று தெரியுமா?.
"மரணித்து போன பின்பு உயிரோடு எப்படி எழுப்பப்படுவோம்?.. '' இதையெல்லாம் இக்காலத்தில் நாம் எப்படி நம்புவது? - என்றும் கேட்கக்கூடியவர்களை நாம் பார்க்க முடிகிறது.
இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?.. இதில் கொஞ்சம் படிப்பினை பெற வேண்டாமா?..

"நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?'' என்று மனிதன் கேட்கிறான்.
"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
(அல்குர்ஆன்  19:66,67,68)

எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே!.. பின்பற்றி நடப்பதற்கோ இறைவேதமும், நபிகளாரின் போதனையும் நம் கையிலே இருக்கும்போது, அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டபடி எதை நோக்கி உங்களது பயணம் போய்க்கொண்டு இருக்கின்றது?..

எதற்கும் பயன்பெறாத இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியா???
இக்கவர்ச்சியில் நீங்கள் மயங்கியது ஏன்?. ஷைத்தான் உங்களது செயல்களை உங்களுக்கு  மிகவும் அழகானதாக்கி காட்டியுள்ளானா?..

இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் :-

மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன்  35:5)

இவ்வுலகில் வாழக்கூடிய நாம் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவழிக்கின்றோம்.

வீட்டிலே  தொலைக்காட்சி பார்த்து பொழுது போக்குதல்,
நண்பர்களோடு சுற்றுதல், விளையாட்டு என பல்வேறான பயனற்ற வழிகளிலே நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கும் நாம்,  அல்லாஹ்வை வணங்குவதற்கு  என்றைக்கேனும் நேரம் ஒதுக்கியுள்ளோமா??

ஏன் நாம்!. இறைவனை தொழ மறுக்கின்றாய்?.
தொழவில்லையெனில் நாம் சுவனம் செல்லமுடியாது என்ற சிந்தனை நம்மை விட்டும் ஷைத்தானால் மறக்கடிக்கப்பட்டுவிட்டதா?.

அல்லாஹ் கூறும் அழகிய அறிவுரையை பாருங்கள் :

நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள்.
  (அல்குர்ஆன் 30:31)

 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன்  4:103)

பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன்  11:114)

 (முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன்  29:45)

இறைநம்பிக்கை முஸ்லிமாகிய நமக்கு தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்றும், இதன் மூலமாக வெட்கக்கேடான செயல்களிலிருந்து  பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் நம்மைப் படைத்த இறைவன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மில் பலரும் இன்றைக்கு தொழுகைக்கான அழைப்பை பரிகாசமாக ஆக்கிக்கொள்கிறோமே? இது ஏன்?

 இவ்வாறு  செய்வதால் நமக்கு கேடு என்றல்லவா... அல்லாஹ் கூறுகிறான்!

தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன்  5:58)

அல்லாஹ்வை அன்றி வேரெவராலும் உதவி செய்யப்படாத அந்த நாளில் நம்மிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே - தொழுதாயா?. என்பதுதான்;

இக்கேள்விக்கு பதிலளிக்கும்படி நாம் சரியாக இருக்க வேண்டாமா??

ஆதலால், இஸ்லாத்தை நம்மால் இயன்றவரை சரியாக கடைப்பிடித்து தொழுகையையும், இன்னபிற வணக்க வழிபாடுகளையும்  நிறைவேற்றக் கூடிய மக்களாக நாமெல்லாம் மாற வேண்டும். அப்போதுதான் இறைவனின் நெருக்கமான அடியானாகவும் நாம் இருக்க முடியும் என்பதை உணருங்கள்!

விளதை - R. ரய்யான்.

No comments:

Post a Comment