Sunday, 14 January 2018

தொடரும் மாணவர் தற்கொலைகள்

ஆலிமா S. நஜ்மா சித்தீக்கியா MA

  உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளாதீர் [அல் குர்ஆன் 2:195]

உலகம் தோன்றிய காலம் முதல் யுக முடிவின் காலம் வரை பிறப்பிற்காக சிரிப்பதும் இறப்பிற்காக அழுவதும் நடந்து கொண்டேதான் இருக்கும்.

ஒவ்வொரு மனிதனும் அவன் விரும்பியோ விரும்பாமலோ மரணம் எனும் விதி அவனை அடைந்தே தீர வேண்டும் என்பது இறைவனின் நியதி. இந்த நியதி ஒரு புறமிருக்க தங்களுக்கு தாங்களே முடிவை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொள்ளும் முட்டாள்கள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தகவலென்றால் இந்த கோழைத்தனமான முடிவிற்கு மாணவ சமுதாயமும் சமீபகாலமாக பலிகடா ஆகிவருவது வேதனையிலும் வேதனை!!
இதனை விவாத அரங்காக்கும் ஊடகங்கள்!
கல்வித்துறையை குற்றம் சாட்டும் கல்வியாளர்கள்!
ஆசிரியர்கள் மீது பழி சுமத்தும் பெற்றோர்கள்!
வளர்ப்பு முறையை விவாதிக்கும் கல்வி ஸ்தாபனங்கள்!

      இவ்வாறான சூழலில் கியாமத் நாள் வரை இவர்களின் விவாதங்களுக்கு விடை கிடைக்கப் போவதில்லை.பெற்றோர்களுக்கு இழப்பு மட்டுமே மிஞ்சுகிறது. உலகப் பொதுமறையான அல்குர்ஆன் வழியிலும் உத்தம நபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உபதேசத்தின்படியும் நம்முடைய குழந்தைகளை வளர்க்க வேண்டும் என ஒவ்வொரு பெற்றோரும் முடிவெடுக்க வேண்டும்.

இன்றைய அவசர உலகில் குழந்தைகளை கொஞ்சுவதற்கோ அன்பு பாராட்டுவதற்கோ கூட பெற்றோருக்கு நேரமில்லை.பெருமானார் (ஸல்)அவர்கள் தன் குழந்தைகளை அணைத்து முத்தமிட்டார்கள் என்பதையும், செல்ல பெயர்கள் கொண்டு அழைத்தார்கள் என்பதையும் படிப்பதோடு நிறுத்திவிடாமல் நம் வாழ்வில் செயல்படுத்திட முன்வர வேண்டும்.

கண்டிக்க வேண்டிய காரியங்களுக்கு குழந்தைகளை கண்டிக்கவும் தவறிவிடக்கூடாது. உங்களுடைய குழந்தைகள் அவர்கள் ஏழு  வயதுடையவர்களாகும்  போது  தொழும்படி  ஏவுங்கள்  பத்து  வயதுடையவர்களாகும்  போது  (தொழாவிட்டால்)  தொழச் சொல்லி  அடியுங்கள்………என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப்  (ரலி)நூல்கள்: அஹ்மத்,495 அபூதாவூத் 6689
இந்த ஹதீஸானது குழந்தைகளை கண்டிக்கும் விஷயங்களில் பெற்றோர்களின் பங்களிப்பு எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
அறியாத பருவத்தில் செய்தக் குற்றத்திற்காக அவர்கள் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள். ஆனால் பெற்றேர்களாகிய நாம் அவர்களை தவறு செய்யவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் நல்லவர்களாக வல்லவர்களாக வளருவார்கள் இன்ஷா அல்லாஹ்.

ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்களிடம் சதக்காவுடைய பொருட்கள் வந்தபோது அவர்களது பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் அதிலிருந்து ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து சாப்பிடலானார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் துப்பு! நபியின் குடும்பத்திற்கு சதக்கா ஹராம் என்று கூறினார்கள்.

நூல்கள்: புகாரி முஸ்லிம்

இன்றைய பெற்றோர்களில் பெரும்பாலானோர் சிறு குழந்தைதானே வளர்ந்தால் சரியாகிவிடும் என சில ஹராம்களை ஹலால் ஆக்கி விட்டுவிடுகிறார்கள். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பது போல பெற்றோர்கள் சரிபடுத்த முயலும் நேரத்தில் சரிபடுத்த முடியாமல் ஆகிவிடுகிறது.

தோல்விகள், ஏமாற்றங்கள் பின்னடைவுகளை எதிர்கொள்ளும் பக்குவத்தை குழந்தைகளுக்கு ஊட்டியே வளர்க்க வேண்டும். பிறக்கும்போது தந்தையை இழந்து, வளரும்போது வளர்ப்பு தந்தையை இழந்து ஆசையாய் பெற்ற ஆண்மக்களையும் இழந்து தன் சோதனைகள் அனைத்தையும் சாதனைகளாக மாற்றிய பெருமானார் (ஸல்) அவர்களின் வரலாறுகள் வாழ்வியல் இலக்கணங்களாய் நம் குழந்தைகளுக்கு புகட்டப்பட வேண்டும்.
இத்தகைய உணர்வுகள் ஊட்டப்பட்டு வளரும் குழந்தையானது மறுமை வெற்றியே தன் இலட்சியமாய், இம்மை எனும் குறுகிய காலப்பயணத்தில் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் எதிர்கொள்ளும் மனவலிமையை உருவாக்கிக் கொள்ளும்.
பெற்றோர்களும் குழந்தைகளுடன் நட்புணர்வோடு பழகி அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட ஆலோசனை கூற வேண்டும்.

"இந்தியா தற்கொலை நகரமாக மாறி வருகிறது" என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்றவியல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. மேலும் இந்தியாவில் 15 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் தான் அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

இத்தகைய புள்ளி விபரங்களை வெறும் செய்தியாக நாம் படித்துவிடாமல் பிரச்சனையாக களம் கண்டு, இதற்குரிய தீர்வை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையில் அணுகி இன்ஷா அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாககூடிய இளைய தலைமுறையை உருவாக்குவோமாக.

2 comments:

  1. மாணவ சமூகம் வளர்ச்சி பாதையில் செல்வதர்கும், வழி தவறி போவதற்கு முதல் தாயகிய பெற்றோறும் ,இரண்டாவது தாயாகிய ஆசிரியரின் பயிற்சிகளையும் தாண்டி தனிமனிதனின் மாற்றம் மிக முக்கியமான ஒன்றாகும்

    ReplyDelete