ஒரே இறைவனாகிய அல்லாஹ்வையும், அவனது இறுதி தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் எற்றுக்கொண்டு, பின்பற்றி வாழக்கூடியவர்களே முஸ்லிம்கள்!.
இத்தகைய சிறந்த மார்க்கத்திலுள்ள நாம் இன்றைய நவீன காலகட்டத்தின் போக்கிற்கு ஏற்றவாறு இஸ்லாத்தை விட்டு மறக்கடிக்கப்பட்டும், உலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியும் சென்றுகொண்டே இருக்கின்றோம். இதில் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் இன்றைய நவீன அறிவியல் காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு, மார்க்கத்திற்கு புறம்பாக நடக்கக்கூடிய சூழ்நிலையை இன்று நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
இதை மறுக்க முடியாது!.
குழந்தைகளை சரியான மார்க்கப் பற்றோடு வளர்க்கக்கூடிய பெற்றோர்கள் தம்முடைய குழந்தைக்கு உலக விசயங்களையும், உலகக் கல்வியை மட்டுமே போதித்துக் கொடுத்துவிட்டு மார்க்கத்தை கற்றுக்கொடுக்க மறந்துவிட்டார்கள். இவ்வாறு செய்தால் நம்முடைய மரணத்திற்கு பின்பு நான் பெற்ற இக்குழந்தைகள் எனக்காக எப்படி துஆ செய்யும் என்பதை இப்பெற்றோர்கள் உணர்வதே இல்லை!
"ஏழு வயதை அடையும் குழந்தைகளை தொழுமாறு ஏவுங்கள்; பத்து வயது ஆகியும் தமது குழந்தை தொழவில்லையெனில் அவர்களை அடியுங்கள் '' (அறிவிப்பாளர் : அம்ரு இப்னு ஷூஜபு ; நூல் : அபூதாவூத் ) - என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கூறியிருக்க இம்மார்க்கத்தை பின்பற்றக்கூடிய முஸ்லிம்களாகிய நாமோ நம் குழந்தைகளை என்றைக்கேனும் தொழுமாறு ஏவுகிறோமா என்று கொஞ்சம் சிந்துத்து பார்க்க வேண்டும்!
இன்றைய சூழலில் முஸ்லிம்களாக இருக்கும் நாமோ நம் குழந்தைகளுக்கு அவர்கள் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து, அவர்களின் மனம்போன போக்கிலே திரியவும் விட்டு இறுதியில் அக்குழந்தைகள் நரகப்படுகுழியை நோக்கி செல்வதற்கு நாமே முக்கியக் காரணமாகி விடுகின்றோம்!.
சத்தியத்தை பிறருக்கு எத்திவைத்து அழைப்புப் பணி செய்யவேண்டிய இளைஞர் சமுதாயமோ இன்றைக்கு மார்க்கத்திற்கு முரணாக, அல்லாஹ்வின் தூதருக்கு மாற்றமாக நடந்துகொண்டு உலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியே தொடர்ந்து தம்முடைய பார்வையை செலுத்திய வண்ணமாக உள்ளனர்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.
(அல்குர்ஆன் 59:7)
"மாற்று சமுதாயத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்".
(அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
(நூல் : அபுதாவூத் 3512)
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இவ்வாறாக கூறியிருக்க இன்றைய இளைஞர் சமுதாயமோ Fashion என்ற பெயரில் யூதர்களைப் போன்று தங்களது முடிகளையும், தாடியையும் வைத்துக்கொண்டு சுற்றுகிறார்கள்;
மாற்றுமத பண்டிகைகளுக்கும், புத்தாண்டு தினத்திற்கும் வாழ்த்துச் சொல்லக்கூடிய அளவிற்கு பாதகமான வழியை நோக்கி சென்றுகொண்டு இருக்கின்றார்கள்.
அல்லாஹ் ஹராமாக்கிய மதுபானத்தையும், ஹெராயின், கோகைன், புகையிலை, கஞ்சா - போன்ற போதைப் பொருட்களையும், ஊக்கமளிக்கக்கூடிய ஊசிகளையும் பயன்படுத்தக்கூடிய ஒரு நிலைக்கு அவர்கள் ஆளாகியிருக்கின்றனர்.
இதோ அல்லாஹ் கூறுகிறான் :-
அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!
(அல்குர்ஆன் 2:195)
நம்பிக்கை கொண்டோரே! உங்களையே நீங்கள் கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் 4:29)
அல்லாஹ் கூறும் மேற்கண்ட போதனையை பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே போதித்து அதன்படியே அவர்களை நடத்தியிருந்தால் இத்தகைய சூழ்நிலைக்கு அவர்கள்ஆளாகியிருப்பார்களா?..
மார்க்க பற்றுள்ள சிறுவர்களோடு தம் குழந்தையை பழகுமாறு ஏவி, தம் குழந்தைகளை சரியாக கவனித்து வந்திருந்தால் இந்நிலைமை வந்திருக்குமா?.
இதோடு மட்டுமல்ல நம்முடைய சமுதாயத்தின் பெண்களை எடுத்துக்கொள்வோம்! இன்றைக்கு நம் சமுதாய பெண்களில் சிலரோ ஹிஜாப்பை விரும்பாத மக்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள்; இன்னும் சிலர் தம்முடைய அலங்காரத்தை வெளியே காட்டும்படியான இறுக்கமான ஆடைகளை உடுத்திக்கொண்டு நறுமணத்தையும் பூசிக்கொண்டு சாலைகளிலும், வீதிகளிலும் நடப்பதை நாம் பார்க்க முடிகிறது. இதுதான் நபிவழியா? நாம் சரியாக நபிவழிப்படி நடக்கிறோமா? என்று இம்மக்கள் சற்றே சிந்தித்து பார்க்க கடமைப்பட்டுள்ளார்கள்!.
இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :-
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தந்தையர், கணவர்களுடைய தந்தையர், புதல்வர்கள், கணவர்களின் புதல்வர்கள், சகோதரர்கள், சகோதரர்களின் புதல்வர்கள், சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : -
ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.
அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)
நூல் : நஸயீ (5036)
இன்னும் சில பெண்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்கின்றோம் என்ற பெயரில், அங்கே இருக்கக்கூடிய மாற்று மதத்தவர்களுடன் நட்பு ரீதியில் ஆரம்பமாகி இறுதியில் ''காதல்'' என்ற பெயரில் அவர்களோடு இணக்கமாகி இணைவைப்பாளராகவே பாதை மாறிச் செல்லக்கூடிய நிலையை இன்றைக்கு நாம் பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
இத்தகைய தடம்புரள்களுக்கெல்லாம் முக்கியக் காரணம் என்னவென்றால், " பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே மார்க்கத்தை முறையாகப் போதிக்காததே'' ஆகும்!.
இறைநம்பிக்கை கொண்டவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அல்லாஹ் மிக அழகாக தன் திருமறையில் கூறுகிறான்:-
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள்
எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு
இருப்பார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.
(அல்குர்ஆன் -23:1,2,9)
இறைநம்பியாளர்களின் பண்புகளை அல்லாஹ் இவ்வாறு மிகத் தெளிவாகக் கூறியிருக்க இதற்கு மாற்றமாக தாமும் செயல்பட்டு, தம் குழந்தைகளை அறியாமையினால் சில பெற்றோர்கள் செலுத்துகின்றனர்.
இன்றைய சூழலில் நம்முடைய சமுதாய மக்களில் யாருக்கேனும் இஸ்லாத்தை பற்றியும், மறுமையைப் பற்றியும் போதனை செய்தால், சிலர் கூறுகின்றார்கள் எப்படியென்று தெரியுமா?.
"மரணித்து போன பின்பு உயிரோடு எப்படி எழுப்பப்படுவோம்?.. '' இதையெல்லாம் இக்காலத்தில் நாம் எப்படி நம்புவது? - என்றும் கேட்கக்கூடியவர்களை நாம் பார்க்க முடிகிறது. இப்படிப்பட்டவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?.. இதில் கொஞ்சம் படிப்பினை பெற வேண்டாமா?..
"நான் இறந்து விட்டால் இனி மேல் உயிருள்ளவனாக எழுப்பப்படுவேனா?'' என்று மனிதன் கேட்கிறான்.
"முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்'' என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா?
உமது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பின்னர் அவர்களை நரகைச் சுற்றி மண்டியிட்டோராக நிறுத்துவோம்.
(அல்குர்ஆன் 19:66,67,68)
எனது அருமை இஸ்லாமிய சமுதாயமே!.. பின்பற்றி நடப்பதற்கோ இறைவேதமும், நபிகளாரின் போதனையும் நம் கையிலே இருக்கும்போது, அதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டபடி எதை நோக்கி உங்களது பயணம் போய்க்கொண்டு இருக்கின்றது?..
எதற்கும் பயன்பெறாத இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நோக்கியா???
இக்கவர்ச்சியில் நீங்கள் மயங்கியது ஏன்?. ஷைத்தான் உங்களது செயல்களை உங்களுக்கு மிகவும் அழகானதாக்கி காட்டியுள்ளானா?..
இதோ அல்லாஹ் கூறுவதை பாருங்கள் :-
மனிதர்களே! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்வு உங்களை ஏமாற்றி விட வேண்டாம். ஏமாற்றுபவன் (ஷைத்தான்) அல்லாஹ் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் 35:5)
இவ்வுலக வாழ்க்கை வீணும், விளையாட்டும் தவிர வேறில்லை. மறுமை வாழ்வு தான் வாழ்வாகும். அவர்கள் அறியக் கூடாதா?
(அல்குர்ஆன் 29:64)
அழியக்கூடிய இந்த உலக வாழ்க்கை வீணும், விளையாட்டுமே தவிர வேறில்லை என்று நம்மையெல்லாம் படைத்த இறைவன் கூறுகின்றானே நாமெல்லாம் இதைக்கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா?
நம்முடைய வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன?. இந்த குறுகியகால வாழ்வை இறைவன் நமக்கு ஏன் வழங்கியுள்ளான் என்று என்றைக்கேனும் நாம் சிந்தித்துள்ளோமா?.
மனிதர்களே! நன்றாக உணர்ந்துகொள்ளுங்கள் அனைத்தையும் படைத்து மாபெரும் அர்ஷின் மேல் அமர்ந்த ரப்புல் ஆலமீன் இந்த உலக வாழ்க்கையை நமக்கு ஓர் தேர்வுக்களமாக ஆக்கியிருப்பதாக கூறுகிறான். நாமெல்லாம் இதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா?.
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
(அல்குர்ஆன் 67:2)
இறைவன் நமக்கு கொடுத்துள்ள இந்த தேர்விலே நாம் வெற்றிபெற வேண்டுமென்று என்றைக்கேனும் நாம் நினைத்துள்ளோமா?.
இவ்வுலகில் வாழக்கூடிய நாம் எவ்வளவோ நேரங்களை வீணாக செலவழிக்கின்றோம். வீட்டிலே அமர்ந்துகொண்டு தொலைக்காட்சியிலும், கைபேசியிலும் சினிமா படங்களையும், பாடல்களையும் பார்த்துக்கொண்டும் , கேட்டுக்கொண்டும் பயனற்ற வழியிலே நேரத்தை செலவழித்துக்கொண்டு இருக்கின்றோம். ஆனால், நம்மை படைத்த அல்லாஹ்வை வணங்குவதற்கு என்றைக்கேனும் நேரம் ஒதுக்கியுள்ளோமா என்று யாரிடமாவது கேட்டால், ' மெளனம் ' தான் பதிலாக இருக்கின்றது. ஏன் மனிதா!. இறைவனை தொழ மறுக்கின்றாய்?.
தொழவில்லையெனில் நாம் சுவனம் செல்லமுடியாது என்ற சிந்தனை உன்னை விட்டும் சைத்தானால் மறக்கடிக்கப்பட்டுவிட்டதா?
அல்லாஹ் கூறும் அழகிய அறிவுரையை பாருங்கள்.
நீங்கள் அவன் பக்கமே திரும்பியவர்களாக இருங்கள்; அவனிடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்; தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்; இன்னும் இணைவைப்போரில் நீங்களும் ஆகி விடாதீர்கள். (அல்குர்ஆன் 30:31)
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(அல்குர்ஆன் 4:103)
பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலைநாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும். படிப்பினை பெறுவோருக்கு இது அறிவுரை.
(அல்குர்ஆன் 11:114)
(முஹம்மதே!) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலைநாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.
(அல்குர்ஆன் 29:45)
இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்றும், தொழுகை வெட்கக்கேடான செயல்களிலிருந்து நம்மை காக்கும் என்று படைத்த இறைவன் மிகத் தெளிவாகக் கூறியிருந்தும், நம்மில் பலரும் இன்றைக்கு தொழுகைக்கான அழைப்பை பரிகாசமாக ஆக்கிக்கொள்கிறோம். இவ்வாறு செய்வோருக்கு கேடுதான் என்று அல்லாஹ் கூறுகிறான் பாருங்கள்.
தொழுகைக்கு நீங்கள் அழைக்கும் போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்குக் காரணம்.
(அல்குர்ஆன் 5:58)
அல்லாஹ்வை அன்றி வேரெவராலும் உதவி செய்யப்படாத அந்த நாளில் நம்மிடம் கேட்கப்படும் முதல் கேள்வியே - தொழுதாயா?. என்பதுதான்;
ஆதலால், தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றக் கூடிய மக்களாக நாமெல்லாம் மாற வேண்டும். அப்போதுதான் நாம் இறைவனின் நெருக்கமான அடியானாக இருக்க முடியும்.
தொழுகை நிலைநாட்டுவதன் மூலம் நாம் செய்த வெட்கக்கேடான செயல்களிலிருந்தும், பாவங்களிலிருந்தும் இறைவனிடம் மன்னிப்பை பெற முடியும்!.
இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளைஞனுக்கு மறுமை நாளில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழல் கிடைக்குமென்று நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். ( நூல் : முஸ்லிம் 1869)
எனவே, இளைஞர் பருவத்தில் இருக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை வணங்குவதில் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். அப்போதுதான் அந்த அர்ஷினின் நிழலை பெறக்கூடிய நன்மக்களில் நாமும் ஒருவராக மாற முடியும்!.
அதேபோல பெற்றோர்களும் தம்முடைய குழந்தைகளுக்கு உலகக் கல்விகளுக்கு மட்டும் மிகுந்த முக்கியத்துவம் தருவதைப் போன்று , இதைவிட பலமடங்கு முக்கியத்துவம் கொடுத்து மார்க்கக் கல்வியையும் கற்றுக்கொடுத்து, அதன்படியே அக்குழந்தைகளை வளர்ப்போராக மாற வேண்டும். ஏனென்று கேட்டால் குழந்தைகள் என்போர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட ஓர் அமானிதங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
(அறிவிப்பாளர் :அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) )
(நூல் : ஸஹீஹ் புகாரி 5200 )
எனவே, இந்த அமானிதத்தை குறித்து அல்லாஹ் மறுமையில் நிச்சயம் கேள்வி எழுப்புவான். ஆகவே, நமது குழந்தைகளை ஒழுக்கநெறியோடும், மார்க்கப் பற்றோடும் வளர்த்தல் என்பது மிக முக்கியமானதாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன;
1) நிலையான அறக்கொடை
2) பயன்பெறப்படும் கல்வி.
3) அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை.
(அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி) )
(நூல் :ஸஹீஹ் முஸ்லிம் 3358 )
பெற்றோர்கள் உயிரோடு இருக்கும்போது தம் பிள்ளைகளை மார்க்க பற்றோடும், ஒழுக்க நெறிகளோடு வளர்த்ததன் பயன், மரணத்திற்குப் பின்பு அந்த பெற்றோரைப் போய் சேர்கிறது என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
ஆதலால், சத்திய மார்க்கத்தின் அடிப்படையில் தம் குழந்தைகளை வார்த்தெடுக்க நாம் அதிகமதிகம் முயற்சித்தல் வேண்டும்!.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும்.
(அல்குர்ஆன் 66:6)
இவ்வாறு மார்க்கத்தை முறையாக போதிக்கச் செய்வதன் மூலமாகத்தான் அக்குழந்தைகளும், அவர்களின் சந்ததிகளும் நரக நெருப்பிலிருந்து காத்து கொண்டு, அந்த மறுமை நாளில் வெற்றிபெறவும் முடியும்!.
எனவே, வரக்கூடிய காலக்கட்டங்களில் முறையாக இம்மார்க்கத்தை பேணி நடப்போராகவும், தொழுவோராகவும், தர்மம் செய்யக்கூடிய நல்ல மக்களாவும் ஆக்கி வல்ல ரஹ்மான் நம்மை ஜன்னத்துல் பிர்தெளஸ் என்று சொல்லக்கூடிய உயரிய சொர்க்கச்சோலையில் ஒன்று சேர்ப்பானாக!.
கட்டுரை ஆக்கம் :- விளதை ரய்யான்.
No comments:
Post a Comment