வானம், பூமி, படைப்பினங்கள் அனைத்தும் உலகம் இயங்க தேவையுடையதாகவே படைக்கப்பட்டிருக்கிறது. உலகில் ஒவ்வொரு பொருளும் ஒன்றையொன்று சார்ந்ததாகவே படைக்கப்பட்டுள்ளது.
இவ்வுலக படைப்பினங்களில் மனிதன் மட்டுமே மற்ற உயிரினங்களிலிருந்து மாறுபடுகிறான்எ ன்பது நிதர்சனம். இந்த மாறுபாடுகள் பல வகையில் இருந்தாலும் மற்ற படைப்பினங்களுக்கு இல்லாத ஒரு தனித்துவம் மனித இனத்திற்கு இருக்கிறது என்றால் அது சிந்திக்கும் ஆற்றல் எனலாம். அத்தகைய சிந்திக்கும் ஆற்றல் கொண்ட மனிதன் நன்மை, தீமையை மனிதன் பகுப்பாய்வு செய்யும் தன்மை கொண்டவனாக இருக்க வேண்டும். கல்வி எனும் ஆயுதம் மனிதர்களின் கையில் இருந்தால் மட்டுமே இத்தகைய சிந்திக்கும் ஆற்றலானது பகுப்பாய்வின் பக்கம் மனிதனை கொண்டுச் செல்லும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாய கடமையாகும்."
மக்களுக்கும், மாக்களுக்கும் வித்தியாசமின்றி வாழ்ந்த அரபுலக மண்ணில் மனித நேயம், இரக்கம், சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை போன்ற புரட்சிகள் உருவாகிட முக்கிய காரணமாக அமைந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த கல்வியே!
"எந்த ஒரு சமூகம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை இறைவனும் மாற்றுவதில்லை"
முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி பற்றிய விழிப்புணர்வை பிற சமுதாயத்துடன் ஒப்பிடும் போது ஐந்து விழுக்காடு மட்டுமே முன்னேற்றம் அடைந்து உள்ளோம். இனி வரும் காலங்களிலாவது முஸ்லிம் சமுதாயம் எழுச்சி பெற வேண்டுமெனில் நாம் நமது அடுத்த தலைமுறையை ஒரு தொலை நோக்கு திட்டத்துடன் இலக்கை நிர்ணயித்து உருவாக்கிட வேண்டும்.
இறைவன் தனது வான்மறையில் கூறுகிறான்.
” அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா?' ( திருக்குர்ஆன் 39:09)
ஒருவர் கல்வியை அறிவாக பெற்று, ஆய்வு செய்து அதன் மூலம் உலக மக்களுக்கு நன்மையை ஏவி தீமையை எவ்வாறு தடுக்க வேண்டும் என போதிப்பவனும் கல்வியை கற்று அந்த கல்வியை பொருளாதார தேவைக்காக மட்டும் பயின்றவனும் சமமாவார்களா? இது கல்விக்கான தேடலின் முதல் வினா மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
“அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத் தருகின்ற கல்வியை, உலக ஆதாயத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருவர் கற்றுக் கொண்டால் மறுமை நாளில் சொர்க்கத்தின் வாடையைக்கூட அவர் பெற்றுக்கொள்ள மாட்டார்.” (அபூதாவூத் - 3664)
நபி (ஸல்) அவர்கள் கல்வியை அறிவாகப் பெற்று மக்களுக்குப் பயனளிக்கும் நபரைக் குறித்து ஓர் அழகிய உதாரணம் மூலம் விளக்குகின்றார்கள்,
‘அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது, நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும். அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்று ஏராளமான புற்களையும் செடி, கொடிகளையும் முளைக்கச் செய்தன. வேறு சில தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளும் தரிசு நிலங்களாகும். அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான். அதனை மக்கள் அருந்தினர்; (தம் கால் நடைகளுக்கும்) புகட்டினர் விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக் கொள்ளவும் இல்லை. புற்பூண்டுகளை முளைக்க விடவுமில்லை. இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து, கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக் கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
(புஹாரி)
இத்தகைய நபி மொழிகள் மற்றும் வான்மறையின் கட்டளைகளும் கல்வியை முறையாக கற்று அதைக் கொண்டு பயன் பெறுவதின் முக்கியத்துவத்தை நமக்கு எடுத்தியம்புகிறது. ஒரு மனிதன் பண்ட்டவனாக, பக்குவப்பட்டவனாக சிறந்த மனிதனாக மாற வேண்டுமென்றால் அது சிறந்த கல்வியால் மட்டுமே சாத்தியம். அத்தகைய சிறந்த கல்வியை நாம் அடைந்தோமா? அடைகிறோமா?
படித்து பட்டம் பெற்றவர்களெல்லாம் சிறந்த கல்வியாளர்களாக உள்ளார்களா என்பதை கவனிக்க வேண்டும். படிக்கும் போதே, மாணவர்களிடம் மாதம் ஒரு லட்சத்திற்கு குறைவாக சம்பாதித்தால், உன்னை சமுதாயம், உற்றார் உறவினர்கள் மதிக்கமாட்டார்கள் அதற்கு தகுந்தாற்போல் படி என்று பிள்ளைகள் மனதில் பணத்தாசையை விதைக்கிறார்கள். மாணவர்களும் அதை மையமாக வைத்து இலட்சம் என்ற ஒரே வார்த்தையை தங்கள் வாழ்வின் இலட்சியமாக கொண்டு பயணிக்கிறார்கள். இன்றைய மாணவர்கள் பூமி, கடல், காற்று, சூரியன், வானம், கோள்கள் என எல்லா படைப்பினங்களைப் பற்றியும் படிக்கிறார்கள். ஆய்வு செய்கிறார்கள். ஆனால், இவையனைத்தையும் செம்மையாய் படைத்த இறைவனின் ஆற்றலை இவர்கள் சிந்திப்பதில்லை. அவ்வாறு படைத்த இறைவனை அறிந்து கொள்ளாத பட்சத்தில், பயனற்ற கல்வியாகவே இக்கல்வி அமையும். இறைவனை பற்றி படித்தால் மட்டுமே இறையச்சம் வரும். லஞ்சம் வாங்க கூடாது, ஊழல் செய்யக் கூடாது, ஏழைகளிடம் அளவுக்கு அதிகமான மருத்துவ கட்டணம் வசூலிக்கக்கூடாது போன்ற தரமான எண்ணங்கள் உங்கள் மனதில் வளரும். நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே செல்ல போகிறோம் என்பதை பற்றிய ஆய்வு மாணவர்களுக்கு தேவை. நபி (ஸல்) அவர்கள் பயனுள்ள கல்வியை தருவாயாக ! என்று இறைவனிடம் து ஆ செய்யும்படி கூறுகிறார்கள்.
இத்தகைய கல்வி முறையானது ஒரு நல்ல மனித நேய மிக்க பண்பாளனை உருவாக்கி தரவில்லையென்றால் அந்த கல்வி பயனற்ற கல்வியே. கல்வி என்பது வெறும் மூளைக்கு மட்டும் பயிற்சியாக இல்லாமல் இதயத்திற்கும் இடம் கொடுக்கும் இன்பகரமானதாக இருக்க வேண்டும். அறிவுசார் கல்வியுடன் அறநெறியும் போதிக்கப்பட வேண்டும். நவீன கல்வி முறைகள் இத்தகைய அம்சங்களை கொண்டு திகழ்கிறதா என்பதை வரும் காலங்களில் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்...
குமரி அன்ஸாரி MCA
(தொடரும்...).
No comments:
Post a Comment