Friday, 5 January 2018

ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 6


இஸ்ரவேலர்கள் காளைக் கன்றை வணங்க காரணம்

சில இஸ்ரேலியர்களின் மீது பண்டைய எகிப்திய மதத்தின் தாக்கம் படிப்படியாகவே ஏற்பட்டது.இஸ்ரவேலர்களை பிரவ்னின் அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்த மூஸா நபியவர்களிடம் அவர்கள் கேட்ட முதல் விடயம் பற்றி அல்லாஹ் திருமறையின் சூரத்துல் அஃராஃப் (சிகரங்கள்) இல் இப்படி கூறுகிறான்.

"நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், ''மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!'' என்று வேண்டினர்; ''நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்'' என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்."
(சூரத்துல் அஃராஃப் : 138)
இப்படி கேட்ட அந்த இஸ்ரேலிய சமூகம் இன்னுமொரு படி மேலே சென்று மூஸா நபியவர்களின் இப்படியொரு முட்டாள்தனமான கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தனர்.அந்த கோரிக்கை பற்றி திருமறையின் சூரத்துல் பகரா (பசுமாடு) இப்படி கூறுகிறது.
"இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்'' என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது."
(சூரத்துல் பகரா : 55)
திருமறையின் இந்த வசனத்தை நாம் நன்றாக ஆய்வு செய்யும் போது,இஸ்ரேலியர்கள் ஓரிறைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் அதனை விளங்கிக் கொள்ளகூடிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை அதனாலே அவர்கள் ஒன்றாக வாழ்ந்த சமூகமான பண்டைய எகிப்தியர்களின் தாக்கம் அவர்களிடம் ஏற்பட்டது.

இன்ஷா அல்லாஹ் தொடரும் .....

பதிவு நாள்: 06-01-2018.

No comments:

Post a Comment