Saturday, 23 December 2017

முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கான முயற்சி

அவசர அவசரமாக அவசர சட்டம் ஒன்றைக் கொண்டு வர இருக்கின்றது, மோடியின் அரசு. முஸ்லிம் தனியார் சட்டத்தில் தலையிடுவதற்கான திட்டமிட்ட முயற்சிதான் இது என்பதில் சந்தேகமில்லை.

முத்தலாக்குக்கு மூன்றாண்டு சிறை என்பதெல்லாம் மிகவும் ஓவர். இது முத்தலாக் பிரச்னையையும் தீர்க்காது. உல்டாவாக இது தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன...

இந்தச் சட்டத்தை எதிர்த்து எப்படி போராடப் போகின்றோம்? என்ன செய்யப் போகின்றோம்?

முதலில் ஆவேசப்படக் கூடாது. ஆத்திரப்படக் கூடாது. முடங்கிவிடவும் கூடாது.

அதே சமயம் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையே அளிக்காத வகையில் முஸ்லிம்கள் தம்முடைய நடத்தையை அமைத்துக் கொள்வதுதான் ஒரே வழி.

அதற்காக பின்வரும் பத்து அம்சத் திட்டத்தின் படிச் செயல்பட வேண்டும்.

1. முஸ்லிம்கள் மத்தியில் ஷரீஅத் பற்றிய அறிவை, தெளிவை, விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இடைவிடாத, தொடர் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

2. ஷரீஅத்தின்படி வாழ்வதில்தான் இம்மையிலும், மறுமையிலும் வெற்றியும் வளமும் சார்ந்து இருக்கின்றன என்கிற அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

3. மாநிலங்கமெங்கும், மாவட்டந்தோறும், ஊர்கள்தோறும், முஹல்லாகள் அனைத்திலும் இதற்கான பரப்புரையை மேற்கொள்ள வேண்டும்.

4. திருமணத்திற்கு முன்பு மணமக்களுக்கு கவுன்சிலிங் செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லா மட்டங்களிலும் இருக்க வேண்டும். கவுன்சிலிங் சான்றிதழை நிகாஹ்வுக்கான நிபந்தனையாக ஆக்க வேண்டும்.

5. கணவன் - மனைவிக்கு இடையில் பிரச்சினை முளைகின்ற போது அதனைத் தீர்ப்பதற்கான முறையான மெக்கானிஸம் முஹல்லாக்கள் தோறும் இருக்க வேண்டும்.

6. கட்டை பஞ்சாயத்து செய்வதைத் தவிர்த்து தாருல் கஸாக்கள் - ஷரீஅத் நீதிமன்றங்களை அமைத்து வழக்குகளை விரைவாகவும் நீதியுடனும் இஸ்லாமிய உணர்வுடன் தீர்த்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

7. குடும்ப வாழ்வு தொடர்பான இஸ்லாமியப் போதனைகளைப் பரப்ப வேண்டும். அவற்றின் படி வாழ வேண்டும்.

8. திருமணங்களில் வீண் விரயங்களைத் தவிர்க்க வேண்டும். வரதட்சணை, சீர்வரிசை, போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

9. பெண்களுக்கு மார்க்க விழிப்பு உணர்வை ஏற்படுத்த தீவிரமான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

10. இஸ்லாமிய ஷரீஅத்தின் படி வாழ்கின்ற உரிமையை நிலைநாட்ட சட்டரீதியான, அரசியல்ரீதியான அனைத்து வழிமுறைகளையும் அமைதியான, ஆக்கப்பூர்வமான முறையில் மேற்கொள்ள வேண்டும்.

செய்வோமா?

செய்வோம், இன்ஷா அல்லாஹ்

நன்றி - இணையம்

No comments:

Post a Comment