Tuesday, 21 November 2017

மர்யம் (அலை) அவர்களின் வரலாறு* தொடர்-13


மர்யம் (அலை) அவர்களின் உயரிய நன்னடத்தை

மர்யம் (அலை) அவர்கள் உலக பெண்களுக்கு உதாரணமாவார்.  ஏனென்றால் அவர்கள் தன்வாழ்நாள் முழுவதும் உயரிய நெறிகளோடு வாழ்ந்தார்கள். அல்லாஹ் அவர்களை விரும்பத்தக்க அழகு வாய்ந்த செடியினை போன்று உயர்த்தினான். மேலும் அவருக்கென்று அல்குர்ஆனிலே ஒரு முக்கிய இடத்தினையும் பொறுப்பினையும் வழங்கினான். அல்லாஹ் அவரை இம்ரானின் குடும்பத்தில் தேர்ந்தெடுத்து பிறக்க வைத்தான், அதிக இறை பக்தியும் இறை அச்சமும், இறைவன் மீது ஒப்பற்ற அளவு மரியாதையும் கொண்டவராக ஆக்கி மக்களிடையே மிக உயர்ந்த நன்னடத்தை கொண்டவராக ஆக்கி வைத்தான் .

ஜக்கரியா (அலை) அவர்களின் வளர்ப்பின்  மூலம் மர்யம் (அலை) அவர்கள் நன்நடத்தையினை அறிந்து கொள்ள முடிகின்றது. மேலும் அந்த வழிகாட்டுதலின் மூலமே மர்யம் (அலை) அவர்கள் இந்த மிகப்பெரிய உயர்வினை அடைய முடிந்தது .

இன்னொரு முக்கியமான  நன்னடத்தை என்னவென்றால் மர்யம் (அலை) அவர்கள்  சோதனையின் ஆரம்ப கட்டத்திலும்  , அவருடைய மக்கள் அவரின் பொறுமையினை சோதித்த பொழுதும்,  அவர்களின் சுய கணிப்பினாலும் நடக்காத ஒன்றினை நடந்ததாக கூறி அவர் மீது அவதூறு கூறியபோதும் ,அவர் தனது  உயரிய நிலையை  இழக்கவில்லை இந்நிலையில் அவரின் பொறுமையையும் , ஈமானையும் , இறை உறுதியையும் அவர் நம்பிக்கையையும் ,  தைரியத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது .

இன்னொரு முக்கியமான விசயத்தினை நாம் இங்கு கவனிக்கவேண்டும்.  இந்த சோதனை அவருடைய மக்கள் அவரை ஏற்றுக் கொள்வதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது  அந்நிலையில் அவர் தன்  புனிதமான ஈமானின் மூலம்  அல்லாஹ்விடம் சரண் அடைந்தார்கள். இதன் மூலமே அவர்கள் அம்மக்களின் அவதூறு மற்றும் அநாகரீகமான பேச்சுக்களிலிருந்தும் பாதுகாப்பு பெற்றார்கள்.  அவரின் முழுமையான இறை பக்தியையும், இறை அச்சத்தையும் அல்லாஹ் மிக விரும்பி அவருடைய பிரார்த்தனைக்குத் தன் அருளால் பதில் கொடுத்தான் .

நாம் இரண்டு வகைகளில்  நன்னடத்தையினை வெளிப்படுத்த முடியும் .  ஒன்று வார்த்தைகளாலும், இரண்டாவது   வாழும் முறையாலும் .  இதில் இரண்டாம் வகை மிகவும் உயர்வானதும் முக்கியமானதும் மிக சிறப்பு வாய்ந்த உண்மையான வழியுமாகும் என்பதனை  மர்யம் (அலை) அவர்களின்
நன்னடத்தையின் மூலம் எளிதில் புரிந்து கொள்ள இயலும். மேலும் ஒருவருடைய  நன்னடத்தையின் மூலமே அவரின்   இறை நம்பிக்கையையும் அவருடைய உண்மையான நிலையையும்  அவரின் இதயத்தையும் அறிந்து கொள்ள முடியுமென்பது தெளிவாகின்றது.

இத்தகைய சிறப்பு மிக்க மர்யம் அலை அவர்களிடம் நம் இஸ்லாமியப் பெண்மணிகளுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது. எத்தகைய சோதனைகளை அல்லாஹ் நம் மீது விதித்த போதும்  அவனிடமே பொறுப்பைச் சாட்டி  பொறுமைகொள்ள மர்யம் அலை வாழ்க்கையில் நமக்கு பல படிப்பினை உள்ளது.   அல்லாஹ் நம் அனைவர் மீதும் சாந்தியையும் சமாதானத்தையும் அருள்வானாக.... ஆமீன்.

தொடர் முடிவுற்றது.

🌴கியாமத் நாளை நோக்கி குழுமம்🌴

பதிவு நாள்: 21-11-2017.

No comments:

Post a Comment