Monday, 30 October 2017

நீர் மேலாண்மை குறித்து இஸ்லாம்.

இறைவன் இயற்கை வளங்களை நிலம் முழுக்க பரப்பி வைத்திருக்கிறான். அறிவாற்றல் பெற்ற நாமே அதைச் சரியாகப் பகிர்ந்தளிக்கத் வேண்டும்.
வானத்திலிருந்து “அருள் வளமிக்க” தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கிறோம். (அல்குர்ஆன் 50 : 09) என்கிறான் படைப்பாளன்.
வானத்திலிருந்து பொழியும் நீரே பூமியில் ஆறு, ஏரி, குளம், கிணறு, நிலத்தடி நீர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் அனைத்து நீர்களுக்குமான ஆதாரம். பெய்யும் மழை நிலத்தில் தங்கி நிலத்தடி நீராக சேமிக்கப்படுகிறது. பூமிப் பரப்பில் தேங்கும் தண்ணீர் ஆவியாகி வானேறி மேகமாகி பல்கிக் பெருகி பெருமழையாக பூமிக்குத் திரும்பி நிலத்தை வளப்படுத்தி செழிக்க வைக்கிறது.
தண்ணீர் சேமிப்பு
“காற்றை சூல் கொண்டதாக நாமே அனுப்புகிறோம். பின்னர், வானிலிருந்து நீர் பொழிவித்து, அதனை உங்களுக்கும் புகட்டுகிறோம். நீங்கள் அதனை சேமித்துவைப்போராய் இல்லை. (திருக்குர்ஆன் 15:22) அல்லாஹ் பூமியில் மழையை பொழியவைத்து ஆறுகளாக ஓடச் செய்கிறான். அதன் மூலம் நீராதாரங்கள் அனைத்திலும் தண்ணீர் சேமிக்கப்படுகிறது. அது அல்லாஹ்வின் ஏற்பாடு.
மனிதர்களும் தண்ணீரை சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மழை பெய்யாமலிருப்பது (மட்டும்) பஞ்சமில்லை. மாறாக, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதும் பஞ்சமாகும். இதை அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5563) பெய்யும் மழையை தேக்கி நிலத்தடி நீரை சேமிப்பது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறும் நீர் மேலாண்மையில் முதன்மையானது.
மழை நீரும், தேக்கி வைக்கப்படும் நீரும் மனிதர்களுக்கு மட்டும் உரியதல்ல! அனைத்து உயிரினங்களுக்கும் பங்குள்ளது. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது; “ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்” என்று அவர்களுக்கு அறிவித்து விடும். (அல்குர்ஆன் 54:28.)
ஆற்றங்கரை உரிமை உள்ளவர் அனைவரும் நீரை அவர்களின் தேவைகளுக்கு பயன்படுத்தலாம். அது மற்ற உரிமைதாரர்களின் உரிமையை பறிக்காத வகையில் அமைய வேண்டும். அதுதான் நடுநிலையான சிறந்த ஒதுக்கீட்டு முறை என்று இஸ்லாம் கூறுகிறது.
'(தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்கலாகாது. (அவ்வாறு) தடுத்தால், அதைச் சுற்றியுள்ள) புல் பூண்டுகளை (மேய விடாமல் கால்நடைகளைத்) தடுத்தாகி விடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 2354)
மூன்று பேரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும், அவர்களுக்குத் துன்பமிக்க வேதனையும் உண்டு. அவர்களில் ஒருவன், (மக்களின் பயணப்) பாதையில், தேவைக்கு மிஞ்சிய தண்ணீரைப் பெற்றிருந்தும் வழிப்போக்கர்கள் அதைப் பயன்படுத்த விடாமல் தடுத்துவிட்டவன். (புகாரி 2358)
மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர் பாய்ச்சி வந்த 'ஹர்ரா' (என்னுமிடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் ஸுபைர்(ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். இறைத்தூதர் (தம்மிடம் இந்த வழக்கு வந்தபொழுது), 'ஸுபைரே! நீங்கள் (உங்கள் பேரீச்ச மரங்களுக்குப்) பொது வழக்கப்படி (அளவோடு) தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு உங்கள் பக்கத்திலுள்ளவரு(டைய தோப்பு)க்கு அதை அனுப்பி விடுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அந்த அன்சாரி, 'இவர் உங்கள் அத்தை மகன் என்பதாலா (இவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தீர்கள்)?' என்று கேட்டார். உடனே, நபி(ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் சிவந்து) நிறம் மாறியது. பிறகு, 'ஸுபைரே! உங்கள் பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். தண்ணீர், வரப்பை நன்கு சென்றடையும் வரை தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள். (பிறகுவிட்டு விடுங்கள்)' என்று கூறி, ஸுபைர்(ரலி) அவர்களின் உரிமையை நிறைவாக வழங்கினார்கள். (புகாரி 2362 )
அடுத்து பொது இடத்தில் உள்ள நதி, ஆறு, நீரோடை, கடல், மழை மழையின் நீர் இதை வாங்கவோ விற்கவோ முடியாது என்பது இஸ்லாம் கூறும் நீர் உரிமை. ஏனெனில் தனிமனித தாகத்தை இலவசமாக தணிப்பது” இஸ்லாம் கூறும் அடிப்படை நீர் கொள்கை.
சேவைத் தொழில்களான கல்வி, மருத்துவம் - இவற்றோடு, தண்ணீரும் இன்று விற்பனைப் பொருளாக - மக்களைக் கசக்கிப் பிழியும் ஒன்றாக ஆகி வரும் சூழலில் இந்தக் கொள்கையை கவனத்தில் கொள்வது அவசியம்.
பூமியில் வாழும் உயிரினங்களுக்கு பொதுவான நீரை யாரோ சிலர் மட்டும் சொந்தம் கொண்டாட, மற்ற அனைவரும் பணம் செலுத்தித் தங்களுடைய தாகத்தைத் தனித்துக்கொள்ளும் நிலைமை வலிந்து உருவாக்கப்பட்டுள்ளது. தண்ணீர் மக்களின் சொத்து என்ற குரல் மிகவும் மெல்லியதாகவே கேட்கிறது.
உணவையும், நீரையும் காசுக்கு விற்பதே பெரும்பாவம்” என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. யாத்ரீகர்களுக்கு இலவச உணவும், தங்குமிடமும் அளிப்பதற்காகவே அக்கால மன்னர்கள் வழியெங்கும் “அன்ன சத்திரங்கள்” அமைக்கப்பட்டது. இன்று அந்த அறம் வறண்டு போய்விட்டது.
இறுதியாக நீரை வீணாக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் நீர் கொள்கையில் முக்கியமானது. வீணாகும் ஒரு சொட்டு நீரை பார்க்கும் போதும் இத்தண்ணீருக்காக, எங்கேயோ ஒரு சகோதரன் வறண்ட தொண்டையோடு, உலர்ந்த நாக்கோடு காத்திருக்கிறான் என்ற சிந்தனை நம்மிடம் வர வேண்டும்... இது எதுவும் சிந்தனைக்கு வராதவர்கள் படைப்பாளன் அல்லாஹ்வின் எச்சரிக்கையை செவியேற்கட்டும்.
“உங்களின் தண்ணீர் பூமியினுள் போய்விட்டால், அப்போது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதைத் தெரிவியுங்கள் என (தூதரே!) கூறும்.” (திருக்குர்ஆன் 67:30)

நன்றி இணையம்

No comments:

Post a Comment