ஹிஜ்ரத் ஒரு மாபெரும் சகாப்தத்தின் துவக்கம்..

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா புறப்பட்ட நிகழ்ச்சிக்கு ஹிஜ்ரத் என்று சொல்லப்படுகிறது. வெளிரங்கத்தில் ஏதோ இரு மனிதர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்குப் புறப்பட்டார்கள் எனும் வகையில் ஒரு சாதாரணமான பயணமாகத் தெறியலாம்! ஆனால் அந்தப் பயணம் - அதன் விளைவைப் பொறுத்து மகத்தானதொரு நிகழ்ச்சியே!
ஆம்! ஹிஜ்ரத் ஒரு சாதாரணப் பயணம் அல்ல! அண்ணலார் அவர்கள் 13 ஆண்டுகாலமாக மக்காவில் ஆற்றிவந்த ஏகத்துவப் பிரச்சாரத்தின் வீரப்பயணம்!
இஸ்லாத்தின் அழைப்புப்பணி ஒளிவுமறைவு, பலவீனம் எனும் நிலையிலிருந்து விடுபட்டு மனத்திண்மையுடனும் வலிமையுடனும் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கத் தொடங்கிய பயணம்!
ஒரு மாபெரும் சகாப்தத்தின் தொடக்கமான இந்த ஹிஜ்ரத் பயணம் அன்று தோல்வி அடைந்திருக்குமாயின், இறுதித் தூதரின் உயிரே பேராபத்திற்குள்ளாகும் நிலைமை!
وقال: إن أقتل فأنا رجل واحد وإن قُتِلْتَ هلكت الأمة.
அபூபக்கர்ஸித்தீக் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் கொல்லப்பட்டால் எனக்கு மட்டும்தான் அழிவு. ஆனால் நபியே நீங்கள் கொல்லப்பட்டால் உம்மத்தே அழிந்துவிடும். அதனால் பயப்படுகிறேன் என்றார்கள்.
நூல்: تفسيررالبغووي பாகம் 4 பக்கம்.49
ஆகையால்தான் நபியவர்கள் அந்தப் பயணத்தை மிகமிக இரகசியமாக மேற்கொண்டார்கள்! மிகவும் முக்கியமானவர்களுக்குத்தான் அதன் இரகசியம் தெரியும். அத்தகையவர்கள் மட்டுமே அதில் துணைபுரிய அனுமதிக்கப்பட்டார்கள்!
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத்.
பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன.
அவற்றில் ஒரு சில பாடங்களை - படிப்பினைகளைப் பார்ப்போம்.
முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள்.
மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள்.
தன் வீட்டில் தன்னுடைய படுக்கையில் அலி(ரலி)அவர்களை படுக்க வைத்தார்கள்.
قال لعلى رضى الله عنه « نم على فراشى واتشح بردائى هذا الحضرمى فانه لن يخلص اليك شيء تكرهه منهم
ஹிஜ்ரத் இரவில் இறைத்தூதர் வீட்டில்தான் இருக்கிறார்கள் என்று எதிரிகள் எண்ணிக் கொள்வதற்காக அறிவுப்பூர்வமான ஒரு திட்டம் வகுத்தார்கள். அன்று இரவு இறைத்தூதரின் வீட்டில் இறைத்தூதரின் படுக்கையில் அலி(ரலி) அவர்களை படுத்து உறங்க வைத்தார்கள். .
எதிலும் நிதானம்.
நன்கு இருட்டியவுடன் அண்ணலார் அமைதியுடனும் நிம்மதியுடனும் தமது இல்லத்தைவிட்டு வெளியேறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தன்னுடைய பயணத்தை தன்னுடைய வீட்டின் தலை வாயில் வழியாகவே, எதிரிகள் அவர்களது வீட்டைச் சூழ்ந்திருக்கின்ற நிலையிலேயே தான் வீட்டை விட்டு வெளியேறினார்கள்..
عن ابن عباس وعلي وعائشة بنت أبي بكر رضي الله عنهم وعائشة بنت قدامة وسراقة بن جعشم دخل حديث بعضهم في بعض قالوا : « خرج رسول الله صلى الله عليه وسلم والقوم جلوس على بابه ، فأخذ حفنة من البطحاء فجعل يدرها على رؤوسهم ويتلو { يس . والقرآن الحكيم } [ يس : 1 - 2 ] الآيات ومضى ، فقال لهم قائل ما تنتظرون؟ قالوا : محمداً . قال : قد - والله - مر بكم . قالوا : والله ما أبصرناه! وقاموا ينفضون التراب عن رؤوسهم ،
அப்போது இறைத்தூதர் திருக்குர்ஆனில் 36 ஆவது அத்தியாயமான சூரா யாஸீனின் ஆரம்ப வசனங்களை ஓதிக் கொண்டே வெளியேறினார்கள். .
மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்லவிருந்த இரவுக்கு முன் மதிய உச்சி வேளையில் எதிர்பாரா விருந்தாளியாக அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்கள் இல்லத்திற்கு இறைத்தூதர் சென்றார்கள். வழக்கமாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அபுபக்கர்(ரலி) அவர்களது வீட்டிற்கு காலையிலோ அல்லது மாலையிலோ தான் வருவார்கள், ஆனால் அவர்கள் எப்பொழுதும் இதைப் போல உச்சி நேரத்தில் வந்ததில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். வழக்கத்துக்கு மாற்றமாக மதியம் உச்சி வேளையில் சென்றதும் திட்டமிட்ட செயலாகும். அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார்கள்.
வழித் துணைக்கு அபூபக்கர் சித்தீக் (ரலி).
அப்போது இறைத்தூதருடன் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்வது என்று முடிவை தெரிவித்தார்கள். அதாவது தனித்து செல்லாமல் வழித் துணைக்கு அபூபக்ரு சித்தீக் (ரலி) அவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஹிஜ்ரத் பயணத்திற்கென்றே அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் திட்டமிட்டு வளர்த்து வந்த இரு ஒட்டகங்களை தங்களின் வாகனமாக தேர்வு செய்தார்கள்.
பயண வழிகாட்டி.
அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மதினா பயணத்திற்கு வழிகாட்டுவதற்கென்றே ஒருவரையும் தயார்படுத்தி வைத்திருந்தார்கள். அந்த பயண வழிகாட்டி முஸ்லிமல்லாதவராக இருந்தார். ஆனாலும் அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருந்தார். அது மட்டுமல்ல அன்றைய கால பாலைப் பயணத்திற்கு வழி காட்டுவதில் மிகவும் தேர்ந்தவராகவும் அவர் இருந்தார். அவருடைய பெயர் அப்துல்லா இப்னு அர்கத் என்பதாகும்.
குகையில் மூன்று நாட்கள் தங்க திட்டம்.
عن مجاهد قال: مكث أبو بكر مع النبي صلى الله عليه وسلم في الغار ثلاثًا
இருவரும் மூன்று நாட்கள் குகையில் தங்கினார்கள்.
நூல்:تفسير طبري.பாகம்.14 பக்கம்.260
வடக்கு நோக்கிய அந்தப் பயணத்தில், ஏதாவது ஒரு குகையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தார்கள். எனவே அவர்கள் திட்டப்படி மக்காவின் வெளிப்புறத்தில் தென்பக்கமாக இருந்த ஸவ்ர் மலையில் இருந்த ஒரு குகைளில் தங்கி இருந்தார்கள். அந்த குகையில் மூன்று நாட்கள் தங்கி இருக்க வேண்டும் என்பது அவர்களது திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது..
ஸவ்ர் குகையில் நடந்த அற்புதம்.
إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன். அல்குர் ஆன்:9-40
لا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا } لم يكن حزن أبي بكر جُبْنًا منه، وإنما كان إشفاقًا على رسول الله صلى الله عليه وسلم.
அபூபக்கர்(ரலி)அவர்கள் கோழைத்தனத்தால் பயப்படவில்லை.மாறாக நபியின் மீது வைத்த அளவில்லாத அன்பால் நபிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்ற பயம்தான் காரணம்.
عمرو بن الحارث، عن أبيه: أن أبا بكر الصديق رحمة الله تعالى عليه حين خطب قال: أيُّكم يقرأ "سورة التوبة"؟ قال رجل: أنا. قال: اقرأ. فلما بلغ:(إذ يقول لصاحبه لا تحزن)، بكى أبو بكر وقال: أنا والله صاحبُه
அபூபக்கர்(ரலி) அவர்கள் ஒரு நாள் பிரசங்கம் செய்யும்போது உங்களில் யார் சூரத்துத் தௌபாவை எனக்கு ஓதிக்காட்டுவார் என்று கேட்டார்கள். அப்போது ஒருவர் நான் ஓதுகிறேன் என்று கூறி ஓத ஆரம்பித்தார். إذ يقول لصاحبه لا تحزن என்ற வார்த்தையை ஓதக்கேட்டதும் அபூபக்கர்(ரலி) அவர்கள் அழ ஆரம்பித்துவிட்டார்கள். பிறகு கூறினார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த தோழர் நான் தான் என்றார்கள்.
நூல்: درالمنثور. பாகம்.5 பக்கம்.77
ஹிஜ்ரி ஆண்டு துவக்கம்…
இந்த ஹிஜ்ரத்தை மையமாக வைத்தே இஸ்லாமிய ஆண்டு கணிக்கப்படுகிறது.
எனவே இந்த ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் குடியேறிய ஆண்டாகிய கி.பி. 622ம் வருடம் ஹிஜ்ரியின் முதல் ஆண்டாகவும் அவ்வாறே ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதம் முஹர்ரம் மாதம் எனவும் நிர்ணயிக்கப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அவர்களுக்கு அடுத்து வந்த ஜனாதிபதி அபுபக்கர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்திலும் நாம் தற்போது பயன்படுத்தும் ஹிஜ்ரி ஆண்டு பயன்படுத்தப்படவில்லை. உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இந்த ஹிஜ்ரி ஆண்டு துவங்கப்பட்டது.
அபூமூஸா(ரலி) அவர்கள் உமர்(ரலி) அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் உங்களிடமிருந்து கடிதம் வருகிறது, ஆனால் அதில் காலம் குறிப்பிடப்படுவதில்லை' என்று கூறியிருந்தார்கள். அப்போது
உமர்(ரலி) அவர்கள் மக்களை ஒன்றிணைத்து 'வருடத்தை எந்த நாளிலிருந்து துவங்கலாம்?' என ஆலோசனை கேட்டார்கள். அப்போது அலீ(ரலி) அவர்கள் 'நபி(ஸல்) அவர்கள் இணைவைப்பு பூமியை விட்டு விட்டு நாடு துறந்து சென்ற நாளை எடுத்துக் கொள்ளலாம்' என்றார்கள். அவ்வாறே உமர்(ரலி) அவர்கள் செய்தார்கள்.
எந்த மாதத்தை முதல் மாதமாக கணக்கிடுவது என்பதில் சிலர் ரஜப் என்றும் சிலர் ரமளான் என்றும் குறிப்பிட்டனர். உஸ்மான் (ரலி) அவர்கள் 'முஹர்ரம்' என்று கூறினார்கள். 'ஏனெனில் இந்த மாதம் கண்ணியமிக்க மாதம். (போர் தடைசெய்யப்பட்ட மாதம்) மேலும், மக்கள் ஹஜ் செய்து விட்டுத் திரும்பும் போது வரும் முதல் மாதம்'
என்று குறிப்பிட்டார்கள்.
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 16 அல்லது 17வது ஆண்டில் இந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது
(பத்ஹுல் பாரீ:பாகம்7,பக்கம் 268)
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ
مَا عَدُّوا مِنْ مَبْعَثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا مِنْ وَفَاتِهِ مَا عَدُّوا إِلَّا مِنْ مَقْدَمِهِ الْمَدِينَةَ
மக்கள் (ஆண்டுக் கணக்கை) நபி(ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட (அவர்களுடைய நாற்பதாவது வய)தில் இருந்தோ, அவர்களுடைய மறைவிலிருந்தோ கணக்கிடவில்லை. மதினாவுக்கு நபி(ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து) வந்ததிலிருந்தே கணக்கிட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் சஅத் (ரலி),
நூல்: புகாரி (3934)
No comments:
Post a Comment