நாங்களும் முஸ்லிம்கள்தான்
===========================
எங்களுக்கு நேரம் இருக்கிறது – ஆனால்
நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம்.
வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால்
விடியாமலே விரைந்து செல்வோம் விளையாட்டு மைதானத்துக்கு.
ஊர் முழுக்க வலம் வர உடம்பில் தெம்புண்டு – ஆனால்
ஒரு வக்து தொழுகைக்கும் இறையில்லம் வர மாட்டோம்.
மருந்து சாப்பிடுவதால் தொழ முடியவில்லை – ஆனால்
விருந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் தடையில்லை.
பள்ளிக்கு பக்கத்தில் பாங்கு சத்தம் கேட்போம் – ஆனால்
சத்தமே இல்லாமல் நடையைக் கட்டிவிடுவோம்.
வீதியில் சும்மாதான் இருப்போம் – ஆனால்
ஜும்ஆவுக்கு கடைக்கோடியில்தான் நிற்போம்.
ஒரு நாள் முழுக்க எங்களுக்கு ஓய்வுதான் – ஆனால்
உறங்குவது என்னவோ ஜும்ஆவில்தான்.
விருந்தில் முதல் பந்திதான் பிடித்த இடம் – ஆனால்
ஜும்ஆவில் கடைசி இடம்தான் எங்கள் புகலிடம்.
அளவின்றி அரட்டை அடிப்போம் – ஆனால்
மருந்துக்குக் கூட மார்க்க அறிவுரைகள் கேட்கமாட்டோம்.
ஒழு கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது – ஆனால்
உபதேசம் எங்களுக்கு அறவே பிடிக்காது.
பத்திரிகையை வரிக்கு வரி மேய்வோம் – ஆனால்
உலகப் பொது மறையில் ஒரு வரி கூடத் தெரியாது.
உலகப் பொதுமறை என்று முழங்குவோம் – ஆனால்
அதில் ஒரு கட்டளையைக் கூட மதிக்க மாட்டோம்.
பர்தா பேணாதவர் பாவி என்போம் – ஆனால்
பர்தா அணிந்தே பல பாவங்கள் புரிவோம்.
உடம்பு முழுக்க வியாதி இருக்கும் – ஆனால்
உணவில் கட்டுப்பாடு ஒரு துளியும் பேண மாட்டோம்.
தட்சணை ஆகாது என்று வீரம் பேசுவோம் – ஆனால்
கொல்லைப்புற வழியாக கொத்தாகப் பிடுங்குவோம்.
மஸ்ஜிதில்தான் திருமணத்தை நடத்துவோம் – ஆனால்
மறைமுகமாக மார்க்கம் மீறுவோம்.
ஒரு பருக்கை சோறு கூட பரகத் என்போம் – ஆனால்
திருமணத்தின்போது அண்டா சோற்றையே வீதியில் கொட்டுவோம்.
நீண்ட தேடலில் துணையை வசப்படுத்துவோம் – ஆனால்
நிமிடத்தில் ஜமாஅத்துக்கு வருவோம் விவாகரத்து மனுவோடு.
வீட்டின் சுற்றுபுறம் வரை சுத்தம் பேணுவோம் – ஆனால்
வீட்டுக் குப்பைகளை வீதியில் இறைத்து அசுத்தம் செய்வோம்
தாய் தந்தை நலம் பேண வேண்டும் என்போம் – ஆனால்
தாரம் வந்ததும் தாயகம் துறப்போம்.
என் பெற்றோர் மேல் எனக்கு உயிர் என்போம் – ஆனால்
அவர்தம் உயிர் பிரிந்த பின்னர்தான் ஊருக்கே வருவோம்.
குழந்தையின் உயர்வில் ஆர்வம் கொள்வோம் – ஆனால்
குர்ஆன் ஓத அனுப்பக் கூட நேரமில்லை என்போம்.
ஒருதாய் பிள்ளை என உரக்கச் சொல்வோம் – ஆனால்
உள்ளவன் இல்லாதவன், உள்ளூர் வெளியூர் என பிரித்து மேய்வோம்.
அடுத்தவன் காசு எனகெதற்கு என்போம் – ஆனால்
வடிகாலைக் கூட விட்டு வைக்காமல் வளைத்துப் போடுவோம்
இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்போம் – ஆனால்
படித்து பட்டம் வாங்கியதும் வெளிநாடு பறப்போம்.
மழை இல்லை என கவலை கொள்வோம் – ஆனால்
குளிக்கும் நீரின் அளவில் ஒழு செய்வோம்.
ஏழைகள் மீது பரிவு காட்டு என்போம் - ஆனால்
வட்டிக்கு பணம் விட்டு இரத்தம் உறிஞ்சுவோம்.
பகிர்ந்து உண்ண வேண்டும் என்று பேசுவோம் – ஆனால்
ஜகாத் பொருளை பதுக்கி வைப்போம்.
ஒற்றுமை கோஷங்கள் எழுப்புவோம் - ஆனால்
தேர்தலில் எங்களை நாங்களே தோற்கடிப்போம்
இவையெல்லாம் துணிச்சலாகச் செய்வோம் – ஆனால்
தயங்காமல் சொல்வோம் நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று.
No comments:
Post a Comment