Tuesday, 19 September 2017

நாங்களும் முஸ்லிம்கள்தான்

நாங்களும் முஸ்லிம்கள்தான் 
===========================

எங்களுக்கு நேரம் இருக்கிறது – ஆனால்
நேரத்தோடு பள்ளிவாசலுக்கு வரமாட்டோம்.

வைகறைத் தொழுகைக்கு வர இயலவில்லை – ஆனால்
விடியாமலே விரைந்து செல்வோம் விளையாட்டு மைதானத்துக்கு.

ஊர் முழுக்க வலம் வர உடம்பில் தெம்புண்டு – ஆனால்
ஒரு வக்து தொழுகைக்கும் இறையில்லம் வர மாட்டோம்.

மருந்து சாப்பிடுவதால் தொழ முடியவில்லை – ஆனால்
விருந்து சாப்பிடுவதற்கு ஒன்றும் தடையில்லை.

பள்ளிக்கு பக்கத்தில் பாங்கு சத்தம் கேட்போம் – ஆனால்
சத்தமே இல்லாமல் நடையைக் கட்டிவிடுவோம்.

வீதியில் சும்மாதான் இருப்போம் – ஆனால்
ஜும்ஆவுக்கு கடைக்கோடியில்தான் நிற்போம்.

ஒரு நாள் முழுக்க எங்களுக்கு ஓய்வுதான் – ஆனால்
உறங்குவது  என்னவோ ஜும்ஆவில்தான்.

விருந்தில் முதல் பந்திதான் பிடித்த இடம் – ஆனால்
ஜும்ஆவில் கடைசி இடம்தான் எங்கள் புகலிடம்.

அளவின்றி அரட்டை அடிப்போம் – ஆனால்
மருந்துக்குக் கூட மார்க்க அறிவுரைகள் கேட்கமாட்டோம்.

ஒழு  கூட எங்களுக்கு சரியாகத் தெரியாது – ஆனால்
உபதேசம் எங்களுக்கு அறவே பிடிக்காது.

பத்திரிகையை வரிக்கு வரி மேய்வோம் – ஆனால்
உலகப் பொது மறையில் ஒரு வரி கூடத் தெரியாது.

உலகப் பொதுமறை என்று முழங்குவோம்   – ஆனால்
அதில் ஒரு கட்டளையைக் கூட மதிக்க மாட்டோம்.

பர்தா பேணாதவர் பாவி என்போம் – ஆனால்
பர்தா அணிந்தே பல பாவங்கள் புரிவோம்.

உடம்பு முழுக்க வியாதி இருக்கும் – ஆனால்
உணவில் கட்டுப்பாடு ஒரு துளியும் பேண மாட்டோம்.

தட்சணை ஆகாது  என்று வீரம் பேசுவோம்  – ஆனால்
கொல்லைப்புற வழியாக கொத்தாகப் பிடுங்குவோம்.

மஸ்ஜிதில்தான் திருமணத்தை நடத்துவோம் – ஆனால்
மறைமுகமாக மார்க்கம் மீறுவோம்.

ஒரு பருக்கை சோறு கூட பரகத் என்போம்  – ஆனால்
திருமணத்தின்போது அண்டா சோற்றையே வீதியில் கொட்டுவோம்.

நீண்ட தேடலில் துணையை வசப்படுத்துவோம் – ஆனால்
நிமிடத்தில் ஜமாஅத்துக்கு வருவோம் விவாகரத்து மனுவோடு.

வீட்டின் சுற்றுபுறம் வரை சுத்தம் பேணுவோம் – ஆனால்
வீட்டுக் குப்பைகளை வீதியில் இறைத்து அசுத்தம் செய்வோம்

தாய் தந்தை நலம் பேண வேண்டும் என்போம் – ஆனால்
தாரம் வந்ததும் தாயகம் துறப்போம்.

என் பெற்றோர் மேல் எனக்கு உயிர் என்போம் – ஆனால்
அவர்தம் உயிர் பிரிந்த பின்னர்தான் ஊருக்கே வருவோம்.

குழந்தையின் உயர்வில் ஆர்வம் கொள்வோம் – ஆனால்
குர்ஆன் ஓத அனுப்பக் கூட நேரமில்லை என்போம்.

ஒருதாய் பிள்ளை  என உரக்கச் சொல்வோம் – ஆனால்
உள்ளவன் இல்லாதவன், உள்ளூர் வெளியூர் என பிரித்து மேய்வோம்.

அடுத்தவன் காசு எனகெதற்கு என்போம்  – ஆனால்
வடிகாலைக் கூட விட்டு வைக்காமல் வளைத்துப் போடுவோம்

இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை வைப்போம்   – ஆனால்
படித்து பட்டம் வாங்கியதும் வெளிநாடு பறப்போம்.

மழை இல்லை என கவலை கொள்வோம் – ஆனால்
குளிக்கும் நீரின் அளவில் ஒழு செய்வோம்.

ஏழைகள் மீது பரிவு காட்டு என்போம்  - ஆனால்
வட்டிக்கு பணம் விட்டு இரத்தம் உறிஞ்சுவோம்.

பகிர்ந்து உண்ண வேண்டும் என்று பேசுவோம் – ஆனால்
ஜகாத் பொருளை பதுக்கி வைப்போம்.

ஒற்றுமை கோஷங்கள் எழுப்புவோம் - ஆனால்
தேர்தலில் எங்களை நாங்களே தோற்கடிப்போம்

இவையெல்லாம் துணிச்சலாகச் செய்வோம் – ஆனால்
தயங்காமல் சொல்வோம் நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று.

No comments:

Post a Comment