முஸ்லிம்கள் சரியான தலைமையை கண்டுகொள்வது எப்படி? தொடர் -1
ஒவ்வொரு மஹல்லாவிலும் ஒவ்வொரு நகரிலும் முஸ்லிம் உம்மத்திற்கு அல்லாஹ் உருவாக்கித் தந்துள்ள ஒரே தலைமை எது?
பதில் :
உலகம் முழுவதிலும் நபியின் வாரிசாக மஸ்ஜித்களில் கோலோச்சும் இமாம்களுக்கு ‘தொழுகைக்கு’ முன்னோக்குவதற்காக உள்ள திசை மஸ்ஜிதுல் ஹராமே ஆகும்.
ஆனால் மஹல்லாவிலுள்ள முஸ்லிம்களுக்கு ‘ஒரு தலைமையின் கீழ் ஒன்று சேர்வதற்கு’ முன்னோக்குவதற்காக உள்ள திசை மஹல்லாவின் மஸ்ஜித் ஆகும். எனவே முஸ்லிம்கள் எந்த மஹல்லாவில் இருந்தாலும் ஒரு சமுதாயம் என்ற வகையில் அவர்கள் தனது முகத்தை (ஒன்று சேர்தலை) மஸ்ஜிதின் பக்கமே திருப்ப வேண்டும். அங்கு அது தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்ளும்.
இவ்வாறாக, தர்க்கத்திற்கு இடமளிக்காத வகையில் முஸ்லிம் சமுதாயம் கண்டு கொள்ள வேண்டிய ஒரே தலைமை, ‘இமாம் – மஸ்ஜித் நிர்வாகமே’ ஆகும். நிச்சயமாக இதுதான் அவர்களின் இரட்சகனிடமிருந்து உள்ள உண்மையாகும் என்றவாறாக ஒரு பதிலை நாம் திருக்குர்ஆன் அத்தியாயம் 2 : 149,150 வசனங்களிலிருந்து ஒரு ஞானமாகப் பெற்றுக் கொள்வோம்.
பின்னர் இதற்குப் பின்பும் முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய ஒரே தலைமையைக் கண்டு கொள்வதில் தயக்கம் இருக்க முடியுமா? என்ற கேள்வி எழுப்பபட்டுள்ளது.
இந்த கட்டுரையில் முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய ஒரே தலைமையைக் கண்டு கொள்வதில் ‘எந்த வகையில் தயக்கத்தில் இருக்கின்றது?’ என்பதைப் பார்ப்போம்.
அத்துடன் முஸ்லிம் சமுதாயம் தான் கண்டு கொண்ட அந்தத் தலைமையின் கீழ் ‘எப்போது ஒன்று சேர முடியும்?’ என்பதையும் பார்ப்போம்.
உண்மையில் ‘முஸ்லிம் சமுதாயம்’ தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்வதில் எவ்விதத் தயக்கமும் இல்லை. ஆனால்...
இமாம் – மஸ்ஜித் நிர்வாகம் எனும் கூட்டுத் தலைமை, ‘தான்தான் முஸ்லிம் சமுதாயத்தின் ஒரே தலைமை’ என ஏற்றுக் கொள்வதிலும் செயல்படுவதிலும்தான் தடங்கல்கள் இருக்கின்றன.
அதாவது, இது சமுதாய மக்களின் குறைபாடால்ல; சமுதாயத் தலைமையின் குறைபாடே ஆகும்.
இமாம்களின் மீது இருக்கும் தடங்கல்கள் :
ஏதோ ஒரு காரணத்தால் அவர்கள் அதை ‘விரும்பாமல்’ இருக்கலாம்.
அல்லது ஏதோ ஒரு காரணத்தால் அது அவர்கள் மீது ‘அனுமதிக்கப்படாமல்’ இருக்கலாம்.
ஆனால் இரண்டிற்கும் தீர்வுகள் உண்டு.
எதிராளிகளின் அசுரப் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமுதாயத்தையும் தன்னையும் இமாம்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்றால்....
தனித்த ஒருவனாக அல்லாஹ் சதிகாரர்களை முறியடிக்க வேண்டுமென்றால்...
இமாம்கள் அந்தத் தீர்வுகளை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
முதலாவது தீர்வு :
முதலாவது தீர்வுக்காக திருக்குரானிலிருந்து கிடைக்கும் வழிகாட்டல் :
ஒவ்வொருவருக்கும் ஒரு திசை உண்டு. அவர் அதன் பக்கம் திரும்புபவராகவே இருக்கின்றார். நீங்கள் நன்மையானவற்றின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள். (2 ; 148)
இன்றைய அச்சுறுத்தல் சூழலில் இமாம்களும் முஸ்லிம் சமுதாயாமும் ஏங்க வேண்டிய அத்தியாவசிய நன்மை, எதிராளிகளிடமிருந்து பாதுகாக்கும் ‘அல்லாஹ்வின் பாதுகாப்பு’ ஆகும்.
அதற்காக இமாம்கள் மேற்கொள்ள வேண்டிய முதலாவது நன்மையான செயல், ‘நாங்கள் தொழிலாளிகள் அல்ல; நாங்கள் லீடர்கள்’ என்ற பொறுப்பை ‘வலித்தாலும்’ வலிய ஏற்றுக் கொள்வதாகும்.
இந்த நன்மைகளுக்காக இமாம்கள் ஒவ்வொருவரும் தாம் இருக்கும் ‘கருத்து வேறுபாடுகளால் பிரிந்தே இருப்பது’ என்ற திசையிலிருந்து வலுக்கட்டாயமாகத் திரும்ப வேண்டும். இது இமாம்கள் மேற்கொள்ள வேண்டிய ‘ஆரம்ப நன்மையான செயல்’ ஆகும்.
இல்லையென்றால் வெகு சீக்கிரம் சிரியா பர்மாவைப் போல் மனிதர்களுக்குக் கியாமத்தையும் –
ஸ்பெயின் நாட்டைப் போல் மார்க்கத்திற்குக் கியாமத்தையும் –
முஸ்லிம் சமுதாயம் அஞ்ச வேண்டி இருக்கும்.
அல்லாஹ் பாதுகாப்பானாக.
இரண்டாவது தீர்வு :
‘தாம் தலைமைப் பொறுப்பைப் பிரயோகிக்க அனுமதிக்கப் படுவதில்லை’ என்று இமாம்கள் கூறுகின்றார்களா?
அதற்கும் அல்லாஹ் வழிகாட்டலைத் தருகின்றான்.
நீங்கள் நன்மையானவற்றின் பக்கம் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் அல்லாஹ் உங்களை ஒன்று சேர்த்துக் கொண்டு வருவான். (2 ; 148)
மேலே கூறப்பட்ட இரண்டு நன்மைகளுக்காக ஒவ்வொரு மஸ்ஜிதின் இமாமும் ‘கருத்து வேறுபாடுகளைத் துறந்து’ ஒவ்வொரு நகரிலும் முந்திக் கொள்ளும்போது....
அங்கு அல்லாஹ் அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து ‘நகர இமாம்களின் கூட்டமைப்பை’ உருவாக்கி விடுகின்றான்.
இந்தக் கூட்டமைப்பு, அல்லாஹ்வின் உதவியைக் கொண்டு ‘வானளாவிய அதிகாரம் கொண்ட - பலம் பொருந்திய தலைமையாக’ உயர்ந்து விடுகின்றது.
இமாம்களின் இந்தத் தலைமை... ஆலிம்களின் கூட்டமைப்பு, ஹாஜிகளின் கூட்டமைப்பு மற்றும் இமாமைப் பின் தொடரும் ஜமாஅத் ஆகியவற்றின் துணையுடன் மஹல்லாவிலுள்ள ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் ஈமான் அமலுஸ் ஸாலிஹாத் உள்ளவர்களாக – முத்தக்கீன்களாக – உண்மையான முஸ்லிம்களாக ஆக்க வரிந்து கொண்டு களத்தில் இறங்கும்போது....
முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்வதில் எத்தகைய தடங்கலும் அல்லாஹ்வின் நாட்டத்தில் இருக்கப் போவதில்லை.
விளங்காத ஒரு விஷயம் :
அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்கும் மஸ்ஜித்களை ஆதாரமாக வைத்து –
‘அதிகாரமும் பலமும்’ கொண்ட ஒரு உயரிய தலைமையை ‘முஸ்லிம் சமுதாயத்திற்கு’ உருவாக்கித் தரும் வாய்ப்பை அல்லாஹ் இமாம்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து –
அதற்கு வழிகாட்டியும் இருக்கும்போது...
மஸ்ஜிதிற்கு வெளியில் –
கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தக் கூடிய வகையில் –
சமுதாய மக்களின் மீது முறையாக அதிகாரத்தை செலுத்தும் வாய்ப்பில்லாதிருந்தும் –
பிற ஆலிம்களுடன் இணைந்து சமுதாயத்திற்கு என இல்லாமல் ‘தமக்கு’ என ஒரு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருப்பது ஏன் என்பது விளங்கவில்லை.
இது வரை ‘இமாம்கள் மனது வைத்தால்’ முஸ்லிம் சமுதாயம் தனக்குரிய தலைமையைக் கண்டு கொள்ளும் என்பதை விளக்கமாக அறிந்தோம்.
இனி, முஸ்லிம் சமுதாயத்தை எவ்வாறு அந்தத் தலைமையின் கீழ் ஒன்று சேர வைப்பது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
No comments:
Post a Comment