Wednesday, 24 May 2017

தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும்

தன்னம்பிக்கையும் இறைநம்பிக்கையும்

தன்மீதான அதீத நம்பிக்கை ஆபத்தானது. அதனால் சில வெற்றிகள் கிடைத்தாலும் அதிகஅளவு ஆபத்துகளையே அது தன்னுள் கொண்டுள்ளது. அதனால் கிடைக்கும் சில வெற்றிகள் தன்னம்பிக்கையுடையவர்களை கர்வத்தில் ஆழ்த்திவிடுகின்றன. தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.

உற்சாக மூடர்கள், மக்களின் ஏளனத்துக்கு ஆளானவர்கள், மக்களின் இரக்கப்பார்வைக்கு உள்ளாகும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரிடம் இவ்வகையான அதீத தன்னம்பிக்கை அதிகமாகக் காணப்படுகிறது. தம் கௌரவத்தை நிலைநாட்டும்பொருட்டு சாகச மனப்பான்மையுடன் பெரும்பெரும் காரியங்களில் அவர்கள் துணிவாக இறங்கிவிடுகிறார்கள்.

எதார்த்தத்தை கருத்தில்கொள்ளாமல் ஒருவித சாகச மனப்பான்மையுடன் முன்னெடுக்கப்படும் இதுபோன்ற செயல்கள் பெரும்பாலும் வெற்றியைத் தருவதில்லை. அவர்கள் மீண்டும் எழமுடியாதஅளவு பெரும் இழப்புகளையே ஏற்படுத்துகின்றன.

இஸ்லாம் ஒரு மனிதனிடம் இறைநம்பிக்கையைத்தான் ஏற்படுத்துகிறது, அவன்மீதான நம்பிக்கையை அல்ல. ‘இறைவனின் உதவியின்றி உங்களால் எதையும் சாதிக்க முடியாது. ஆகவே இறைஉதவியை வேண்டியவர்களாக, எதிர்பார்த்தவர்களாக களத்தில் இறங்குங்கள். வெற்றி உங்களைக் கர்வத்தில் ஆழ்த்திவிடக்கூடாது; தோல்வி உங்களை விரக்தியில் தள்ளிவிடக்கூடாது’ என்கிறது அது.

இறைநம்பிக்கை ‘எல்லாம் நன்மைக்கே’ என்ற நேர்மறையான சிந்தனையை நம்பிக்கையாளனிடம் ஏற்படுத்தி அவனை முன்னோக்கிச் செலுத்துகிறது. வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் அது அவனது மனநிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது.

தன்னம்பிக்கை இறைநம்பிக்கைக்கு மாறானது. “இவையனைத்தும் என் அறிவின், என் முயற்சியின், என் திறமையின் வெளிப்பாடு” என்று ஒரு மனிதன் கூறுவதை இஸ்லாம் வெறுக்கிறது. அது இறைவனின் அருட்கொடையை உணராத நன்றிகெட்ட ஒரு மனிதனின் கூற்று என்கிறது.

மக்கா வெற்றிக்குப் பின்னர் நடைபெற்ற ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்கள் எதிரிகளைவிட அதிக எண்ணிக்கையினராக இருந்தபோதிலும் ஆரம்பத்தில் தோல்வியைத் தழுவினார்கள். அந்த யுத்தத்தை விமர்சித்து இறக்கப்பட்ட பின்வரும் இறைவசனத்தைப் பாருங்கள்:

“அல்லாஹ் உங்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிபுரிந்துள்ளான். ஹுனைன் போர் நடைபெற்ற நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களை பூரிப்பில் ஆழ்த்தியிருந்தது. ஆயினும் அது உங்களுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை. பூமியானது விசாலமானதாக இருந்தும் உங்களுக்கு சுருங்கிவிட்டிருந்தது. நீங்கள் புறங்காட்டி ஓடிவிட்டீர்கள். பின்னர் தன் தூதர்மீதும் நம்பிக்கையாளர்கள்மீதும் அல்லாஹ் அமைதியை அருளினான். நீங்கள் காணாத படைகளையும் இறக்கி நிராகரிப்பாளர்களைத் தண்டித்தான். இதுவே நிராகரிப்பாளர்களுக்கான கூலியாகும்.” (9:25,26)

இஸ்லாம், இப்படிப்பட்ட நம்பிக்கையைத்தான் தன்னைப் பின்பற்றுபவர்களிடம் ஏற்படுத்த விரும்புகிறது.

No comments:

Post a Comment