Monday, 29 May 2017

📓திருக்குர்ஆனின் விளக்கங்கள் தொடர் - 11📓

*🎯மனிதருக்கு ஸஜ்தா செய்யலாமா?*

*📖அல்குர்ஆன்

*وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ*

*"ஆதமுக்குப் பணியுங்கள்!' என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான்.*

*திருக்குர்ஆன்  2:34*

🔘முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என *திருக்குர்ஆனின் 2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72* ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ளது.

 🔘இவ்வசனங்களைச் சான்றாகக் கொண்டு *பெரியார்களுக்கும், மகான்களுக்கும் ஸஜ்தா (சிரம் பணிதல்) செய்யலாம் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இது முற்றிலும் தவறாகும்.* நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் இத்தகைய வழக்கம் அறவே இருந்ததில்லை.
இது குறித்துத் தெளிவாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

🔘முதலில் *ஸஜ்தா* என்ற சொல்லின் பொருள் என்ன என்று பார்ப்போம். *(ஸலாத்) தொழுகை, (ஸவ்ம்) நோன்பு, ஸகாத்* போன்ற சொற்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அரபுகளால் பயன்படுத்தப்பட்டு வந்தன.

🔘ஆயினும், இப்போது நாம் பயன்படுத்துகின்ற பொருளில் இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை.

🔘 தொழுகையைக் குறிப்பிட *"ஸலாத்"* என்னும் வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த வார்த்தையின் நேரடிப் பொருள் பிரார்த்தனையாகும்.

🔘இப்பொருளில் தான் அரபுகள் இந்த வார்த்தையைப் பயன்படுத்தி வந்தனர். குறிப்பிட்ட சில காரியங்கள் அடங்கிய குறிப்பிட்ட வணக்கத்திற்கு *"ஸலாத்"* என்ற வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.

*🔘"ஸவ்ம்"* என்ற வார்த்தை நோன்பைக் குறிப்பிடுவதற்கு இன்று பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னர் *"கட்டுப்படுத்திக் கொள்ளுதல்"* என்ற பொருளில் இவ்வார்த்தை பயன்படுத்தப்பட்டது.

🔘இஸ்லாம் புதிய வார்த்தைகளைக் கண்டுபிடித்து வணக்கங்களுக்குப் பெயர்சூட்டவில்லை. மாறாக நடைமுறையில் இருந்த வார்த்தைகளில் பொருத்தமானதைத் தேர்வு செய்து வணக்கங்களுக்குப் பெயர் சூட்டியது. இது போலவே ஸஜ்தா என்ற வார்த்தையும் அரபு மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டு வந்தது.

*🔘நெற்றி, மூக்கு, இரண்டு உள்ளங் கைகள், இரண்டு மூட்டுக் கால்கள், இரு கால்களின் விரல்கள்* ஆகியவை தரையில் படும் வகையில் பணிவது *"ஸஜ்தா"* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

🔘 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விளக்கம் அளிப்பதற்கு முன்னால் இவ்வார்த்தைக்கு இவ்வாறு பொருள் இல்லை. *"நன்றாகப் பணியுதல்"* என்பதே இவ்வார்த்தையின் பொருளாக இருந்தது. பணிவைக் காட்டும் எல்லாக் காரியங்களும் *"ஸஜ்தா"* எனக் குறிப்பிடப்பட்டன.

🔘அகராதியில் மட்டுமின்றி திருக்குர்ஆனிலும் *"நன்றாகப் பணியுதல்"* என்ற பொருளில் இவ்வார்த்தை, பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

🔘 நீங்கள் இவ்வூரில் *ஸஜ்தாச்* செய்தவர்களாக வாசல் வழியாக நுழையுங்கள்! *(திருக்குர்ஆன்: 2:58, 4:154, 7:161)* இவ்வசனங்களில் அகராதியில் உள்ள பணிவு என்ற பொருளைத் தான் *"ஸஜ்தா"* என்ற சொல்லுக்குக் கொள்ள முடியும்.

🔘 இஸ்லாமிய வழக்கில் உள்ள *"ஸஜ்தா"*வுக்குரிய பொருளை இங்கே கொள்ள முடியாது. ஏனெனில் இந்த ஸஜ்தாவைச் செய்து கொண்டு வாசல் வழியாக நுழைய இயலாது.

🔘 மனிதர்கள் மட்டுமின்றி *சூரியன், சந்திரன், நட்சத்திரம், மரம், ஊர்வன, மலை* உள்ளிட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கு *ஸஜ்தாச்* செய்கின்றன என்று திருக்குர்ஆன் *22:18* வசனம் கூறுகிறது.

🔘 இவற்றுக்கு *முகமோ, மூக்கோ, கைகளோ, மூட்டுக் கால்களோ கிடையாது.* குனிந்து மரியாதை செய்வதற்கான முதுகும் கிடையாது. *மலைகளோ, மரங்களோ* இருக்கின்ற இடத்தை விட்டு நகர்வது கூட இல்லை. ஆனாலும், இவை தனக்கு *ஸஜ்தாச்* செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான்.

*🔘சூரியன், சந்திரன், நட்சத்திரம்* ஆகியவை ஓய்வின்றி இறைவன் வகுத்தளித்த திட்டப்படி சுற்றிச் சுழன்று வருகின்றன. இது தான் அவற்றுக்கான ஸஜ்தாவாகும்.

🔘 மரங்கள் பூத்துக் காய்த்துக் குலுங்குவது அவற்றுக்குரிய ஸஜ்தா ஆகும். இப்பூமி தடம் புரளாமல் தடுத்து நிறுத்தும் பணியை அல்லாஹ்வின் கட்டளைப்படி மலைகள் செய்து வருகின்றன.

🔘இது அவற்றுக்குரிய ஸஜ்தாவாகும். மொத்தத்தில் அனைத்தும் இறைவனது உயர்வையும், தங்களது தாழ்வையும் ஒப்புக் கொண்டு பணிந்து வருகின்றன. பணிந்து நடப்பது தான் இங்கே ஸஜ்தா எனப்படுகிறது.

*🔘 திருக்குர்ஆன் 12:4, 13:15, 16:48,49* ஆகிய வசனங்களிலும் பணியுதல் என்ற பொருளிலேயே ஸஜ்தா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைத் தெளிவாக அறியலாம்.

🔘வானவர்கள்
ஆதமுக்கு ஸஜ்தாச் செய்ததாகக் கூறும் மேற்கண்ட வசனங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதை வலுப்படுத்தும் இன்னும் பல காரணங்களும் உள்ளன.

🔘 வானவர்கள் மனிதனைப் போன்றவர்கள் அல்லர். அவர்களுக்கு என திட்டவட்டமான உருவம் ஏதும் இல்லை. அவர்களுக்கு நம்மைப் போல் ஸஜ்தாவின் உறுப்புகள் இருக்கின்றன என்பதற்கும் சான்று இல்லை.

🔘 சில நேரங்களில் நபிகள் நாயகத்திடம் *"ஜிப்ரீல்"* என்னும் வானவர் மனித வடிவத்தில் வந்துள்ளார். அதுவே அவரது வடிவம் என்று கூற முடியாது. ஏனெனில், வானத்தையும், பூமியையும் வியாபித்த வடிவத்திலும் அவர் நபிகள் நாயகத்துக்குக் காட்சி தந்துள்ளார்.

*🔘 வானவர்களுக்குச் சிறகுகளும் உள்ளன. (பார்க்க திருக்குர்ஆன் 35:1)* எனவே, வானவர்களை நம்மைப் போல் கருத முடியாது. எவ்வாறு அவர்களால் பணிவை வெளிப்படுத்த முடியுமோ அவ்வாறு பணிவை வெளிப்படுத்தினார்கள் என்று தான் கருத முடியும்.

🔘 நாம் இப்போது செய்வது போலவே அவர்கள் ஸஜ்தாச் செய்தார்கள் என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டால் கூட அதை நாம் பின்பற்ற முடியாது.

🔘 காரணம் ஸஜ்தாச் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டதால் தான் வானவர்கள் ஆதமுக்கு ஸஜ்தாச் செய்தனர். *"பெரியவர்களுக்குச் ஸஜ்தா செய்யுங்கள்"* என்று அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை.

🔘மாறாகத் தடை விதித்துள்ளனர். *இரவு, பகல், சூரியன், சந்திரன்* ஆகியவை அவனது அத்தாட்சிகளில் உள்ளவை. *சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்!* அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால் அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்! *(திருக்குர்ஆன் 41:37)*

 🔘படைக்கப்பட்டவற்றுக்கு *ஸஜ்தாச் செய்யக் கூடாது.* படைத்தவனுக்குத் தான் ஸஜ்தாச் செய்ய வேண்டும் என்பது தான் நமக்கு இடப்பட்ட கட்டளை.

*🔘முஆத் (ரலி), ஸல்மான் (ரலி)* போன்ற நபித் தோழர்கள் தமக்கு ஸஜ்தாச் செய்ய முன் வந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர். மனிதனுக்கு மனிதன் ஸஜ்தாச் செய்யக் கூடாது என்று பிரகடனப்படுத்தி விட்டனர். *(நூல்கள்: திர்மிதி 1079, இப்னுமாஜா 1843, அஹ்மத் 12153, 18591, 20983, 23331)*

🔘இவ்வாறு நமக்குத் தெளிவான தடை இருக்கும் போது வானவர்களுக்கு இடப்பட்ட கட்டளையை நாம் செயல் படுத்த முடியாது. பெரியவர்களிடம் பணிவாகவும், அடக்கமாகவும் நடந்து கொள்ளலாம்.

🔘 ஆனால் அவர்களின் *கால்களில் விழுவதையும்,* அவர்களுக்கு *ஸஜ்தாச் செய்வதையும்* இஸ்லாம் ஒரு போதும் அனுமதிக்கவில்லை.

(♻இன்ஷா அல்லாஹ் தொடரும்♻)

பதிவு நாள்: 30-05-2017

No comments:

Post a Comment