Tuesday, 4 April 2017

பேசும் விலங்கு


😈மனிதன் பேசிக்கொண்டே இருக்கின்றான்.

மனிதர்கள் பேசுவதை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1) தனக்குத் தானே (மனசுக்குள்) பேசிக்கொள்வது. இதைத்தான் ‘சிந்தனை’ என்கிறார்கள். ஒரு மனிதன் வேறு யாரோடும் பேசிக்கொள்ளாத பட்சத்தில் தனக்குத்தானே பேசிக்கொண்டுள்ளான் என்று தான் பொருள்.

2) இறைவனோடு பேசுவது. தொழுகை, திக்ரு போன்றவற்றில் மனிதன் தன்னைப் படைத்த இறைவனோடு பேசுகின்றான்.  ஆனால். இபாதத்களில் ஆழம்காணும் முத்தகீயான முஸ்லிம்கள் மட்டுமே இறைவனோடு பேசமுடிகின்றது. என்னைப் போன்ற பெரும்பாலோரின் தொழுகைகள் வெற்றுக்கூடுகளாகவே காட்சி தருகின்றன. எவ்வளவோ முயன்றும் ‘அந்த’ தொழுகையை என்னால் தொழவே முடிவதில்லை.

3) மற்றவர்களோடு மற்ற மனிதர்களோடு பேசுவது. பொதுவான இதனை மட்டும்தான் நாம் ‘பேச்சு’ என்று கருதுகிறோம்.

🤓இந்தப் பேச்சைப் பற்றி நாளை மறுமையில் கண்டிப்பாக விசாரிக்கப்படும். வாயில் இருந்து உதிர்த்த ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு நூறு கேள்விகள் கேட்கப்படும். ஏன் சொன்னாய்? எதற்காக சொன்னாய்? உள்நோக்கம் ஏதேனும் இருந்ததா? இறைவனின் ஷரீஆவிற்கு உட்பட்டு பேசினாயா? வரம்பு மீறினாயா? என்றெல்லாம் கேள்விகள் தொடரும்.
இவையாவும் தக்க பேச்சிற்கு!
தகாத பேச்சைப் பொருத்தவரை இக்கேள்விகள் இன்னும் கடுமையாக கொடுமையாக இருக்கும். புறம், கோள், பொல்லாப்பு, பற்றவைப்பு, பொய், புரட்டு, போலித்தனம், பொய்ச்சாட்சி, வாக்குமோசடி, துரோகம் போன்ற வாயால் நிகழுகின்ற வார்த்தைகளால் வெளிப்படுகின்ற தகாத செயல்களை ஏன் செய்தோம் என்று பதில்சொல்லியே ஆகவேண்டும்.
நாம் பதில்சொல்கின்ற வரை பக்கத்திலேயே வானவர்கள் காத்திருப்பார்கள். சொன்னாலும் அடி, சொல்லாவிட்டாலும் அடி.
அவர்கள் காத்திருப்பார்கள். சரியான பதிலை நாம் சொல்கின்ற வரை!
ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு, 10 ஆண்டு, 100 ஆண்டு, 500 ஆண்டு - சரியான பதில் வெளிப்படும் வரை காத்திருப்பார்கள்.
உண்மையைச் சொன்னால் நரகம்.
சொல்லாவிட்டால் உதையும் அடியும்.
தக்க சொல், தகாத சொல் என்றில்லாமல் இன்னொரு சொல்லும் இருக்கின்றது. தெரியாத சொல். அறியாமலே பேசுவது.
இன்றைக்கு பலரும் முகநூலில் பேசுகிறார்களே, அதைப்போல்!
‘தெரியாதவற்றைப் பேசாதே!’ என்பது இறைவாக்கல்லவா? (17/36)
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ إِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ أُولَئِكَ كَانَ عَنْهُ مَسْئُولًا
இதற்கு பதில் சொல்லாவிட்டாலும் அடிதான்.

😆ஒரு மனிதன் ஒரு நாளில் தோராயமாக 7000 வார்த்தைகளைப் பேசுகிறானாம். இதனை எந்தளவுக்கு குறைக்கின்றோம் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கின்றது.
பேசாதிருப்போம், பேசுவதாக இருந்தால் இறைவனோடு மட்டும் பேசுவோம் என்பதை வைராக்கியமாக வைத்திருக்க வேண்டும்.
நான் முடிந்தளவு பேசாமல் இருக்கவே ஆசைப்படுகின்றேன்.
இறைவன் எனக்கு ஓர் அருட்கொடையை வழங்கியிருக்கிறான்.
எனக்கு பேசப்பிடிக்காது. அதுதான் அந்த அருட்கொடை.
மனைவியோடு கூட நான் பேசுவதில்லை. தேவையிருந்தால் ஒழிய!
ஒரு நாளில் நான் அதிகம் பேசுவது என்னிரு குழந்தைகளோடு மட்டும்தான்.
சில நாள்களில் காலை முதல் மாலை வரை யாருக்கும் போன் செய்யாமல் யாருடைய போனையும் ‘அட்டெண்ட்’ செய்யாமல் இருந்திருக்கிறேன்.
சில நாள்களில் காலையிலிருந்து இரவுவரை வெறும் 50 வார்த்தைகளை மட்டுமே பேசியிருக்கிறேன்.
அபூ பக்கர் ஸித்தீக் அவர்களைப் போல வாயில் கூலாங்கற்களைப் போட்டுக் கொள்ளாவிட்டாலும் முடிந்தளவு செல்போனை காதில் போட்டுக் கொள்ளாமலாவது இருக்கலாம், அல்லவா?

-abdur rahman umari

பதிவு நாள்: 05-03-2017

No comments:

Post a Comment