Monday, 24 April 2017

உம்ரா செய்வது எப்படி

📌📌📌📌📌📌📌📌📌📌

       உம்ரா

📌📌📌📌📌📌📌📌📌📌

உம்ரா என்றால் என்ன?

நீ இஹ்ராம் கட்டி

நீ கஃபாவில் தவாஃப் செய்து

நீ இரண்டு ரக்அத்கள் தொழுது

நீ ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது
ஆகியவையே உம்ராவாகும்.

அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.

ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.

தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம். ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும்.

-----------------------
உம்ரா சட்டதிட்டங்கள்

உம்ரா

உம்ரா செய்வது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்வுக்காக உம்ராவையும் ஹஜ்ஜையும் நீங்கள் நிறைவு செய்யுங்கள். (2:196)

உம்ரா ஒரு முஸ்லிம் முடிந்தவரை திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய சிறந்த செயல்களில் ஒன்றாகும். உம்ரா செய்யக் கூடியவா உம்ராவுடைய வணக்கங்களில் முதன் முதலில் செய்ய வேண்டியது இஹ்ராமாகும்.


இஹ்ராம்

இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ரா உடைய வணக்கத்தில் பிரவேசிப்பதாகும். இஹ்ராமிலுள்ளவருக்கு அதற்கு முன்னர் ஹலாலாக இருந்த சில காரியங்கள் ஹராமாகி விடுகின்றன. ஏனெனில் அவர் ஒரு வணக்கத்தில் புகுந்து விட்டார். ஹஜ் அல்லது உம்ராவை விரும்புகிறவர் மக்காவிற்கு வெளியில் நபி (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்த எல்லைகளில் ஏதேனும் ஒரு எல்லையிலிருந்து முன்னோக்கி வருபவராக இருந்தால் இஹ்ராம் கட்டாயமாகும்.

எல்லைகள்

துல்குலைஃபா : இது மதீனாவிற்குச் சமீபமாக உள்ள ஒரு கிராமமாகும். தற்போது இதற்கு அப்யார் அலி என்று கூறப்படுகின்றது. இது மதீனாவாசிகளுக்குரிய எல்லையாகும்.
அல் ஜுஹ்ஃபா : இது ராபிஃக் என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய ஊராகும். தற்போது மக்கள் ராபிஃகிலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்கிறார்கள். இது சிரியா வாசிகளின் எல்லையாகும்.
கர்னுல் மனாஸில் : (ஸைலுல் கபீர்) இது தாயிஃபிற்குச் சமீபமான ஒரு இடம். இது நஜ்து வாசிகளின் எல்லையாகும்.
யலம்லம் : இது மக்காவிலிருந்து 70 கி.மீ. தூரத்திலுள்ளது. இது யமன் வாசிகளின் எல்லையாகும். (இந்தியாவிலிருந்து வருபவர்களுக்கும் இதுவே எல்லையாகும்.)
தாதுல் இர்க் : இது ஈராக் வாசிகளின் எல்லையாகும்.

இவ்வைந்து இடங்களும் மேலே குறிப்பிட்ட ஊர்வாசிகளுக்கு இவ்விடங்கள் வழியாக வருகின்றவர்களுக்கும் எல்லைகளாகும். இந்த எல்லைகளுக்கு உள்ளே உள்ளவர்களும் ஹரமில் உள்ளவர்களும் அவர்கள் இருக்கின்ற இடங்களிலிருந்தே இஹ்ராம் செய்து கொள்ள வேண்டும்.

இஹ்ராமின் சுன்னத்துக்கள்

இஹ்ராமுக்கு முன் செய்ய வேண்டிய சுன்னத்தான காரியங்கள் :

நகங்களை வெட்டுதல், அக்குள் முடிகளைப் பிடுங்குவது அல்லது மழிப்பது, மீசையைக் கத்தரிப்பது, மர்மஸ்தானத்தின் முடியை மழிப்பது, குளிப்பது, ஆடைகளிலன்றி உடம்புக்கு மட்டும் மணம் பூசிக் கொள்வது, ஆடைகளுக்குப் பூசக் கூடாது.

தையலாடைகளைக் களைவது, வேஷ்டி உடுத்தி, துண்டைப் போர்த்திக் கொள்வது, பெண் தான் விரும்பிய ஆடைகளை அணிந்து கொள்ளலாம். தன்னை மூடி மறைத்துக் கொள்வதிலும் அழகலங்காரங்களை வெளிப்படுத்தாதிருப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும். அன்னிய ஆடவர்கள் வரும்போது முகத்தையும் முன் கைகளையும் மறைத்துக் கொள்ள வேண்டும். கையுறைகளையும் முகத்தை மறைப்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிக்குச் சென்று அந்நேரம் தொழுகை நேரமாக இருந்தால் ஜமாஅத்துடன் தொழுவது அல்லது உளூவின் சுன்னத்தான இரு ரக்அத்துக்களை தொழுவது. அதன் பின்னர் இஹ்ராமைத் தொடங்குவது.

இஹ்ராம் முறை

''லப்பைக் உம்ரதன்'' என்று கூறி இஹ்ராம் செய்ய வேண்டும். இஹ்ராம் செய்த பின்னர் தல்பியாச் சொல்வதும் அதை இஹ்ராம் செய்ததிலிருந்து கஅபதுல்லாஹ்வை அடைந்து தவாஃப்-வலம் வருவதை ஆரம்பிக்கும் வரை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதும் சுன்னதாகும்.

தல்பியா

லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் லப்பைக்க லாஷரீக்கலக லப்பைக் இன்னல் ஹம்த வன்நிஃமத்த லகவல் முலக், லாஷரீக்க லக்.

(பொருள் : உன்னிடம் வந்து விட்டேன். இறைவா! உன்னிடமே வந்து விட்டேன். உன்னிடமே வந்து விட்டேன். உனக்கு யாதொரு இணையுமில்லை. உன்னிடமே வந்து விட்டேன். நிச்சயமாக புகழும் அருட்பாக்கியங்களுக்கும் ஆட்சியும் உனக்கே உரியன. உனக்கு யாதொரு இணையுமில்லை).

இஹ்ராமில் தடுக்கப்பட்டவை

இஹ்ராம் கட்டிக் கொண்டவருக்கு பின்வருபவை ஹராமாகும்.
தலைமுடியையும் உடம்பின் ஏனைய பாகங்களிலுள்ள முடிகளையும் நீக்குவது
எனினும் தேவையின் நிமித்தம் இலேசாகத் தலையைச் சொரிவதால் (முடி விழுவதால்) குற்றமில்லை
நகங்களை வெட்டுதல். எனினும் நகம் உடைந்த விட்டால் அதை வெட்டுவது குற்றமல்ல.
வாசனைப் பொருட்களை உபயோகிப்பது (வாசனைச் சோப்புக்கும் இதே சட்டம் தான்)
உடலுறவு கொள்ளல், அதைத் தூண்டக் கூடிய காரியங்களைச் செய்தல். உதாரணமாக திருமணம் முடித்தல், மனைவியை இச்சையுடன் பார்த்தல், அணைத்தல், முத்தமிடுதல் போன்றவை

கையுறைகள் அணிதல்

வேட்டைப் பிராணிகளைக் கொல்லுதல்

இவையனைத்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஹராமானதாகும். ஆண்களுக்கு அதிகப்படியாக இன்னும் சில ஹராமாகின்றன.

தையல் ஆடை அணிவது. எனினும் இஹ்ராமிலுள்ள பெல்ட், கண்ணாடி, வாட்ச் போன்ற தேவையுள்ள பொருட்கள் அணிவது கூடும்.

தலையை ஒட்டினாற் போல ஏதேனும் ஒன்றைக் கொண்டு தலையை மறைத்தல். தலையோடு ஒட்டாமல் சற்று உயரமாக வைத்து தலையை மறைத்துக் கொள்வது குற்றமில்லை. உதாரணமாக குடை, வாகனம், கூடாரம் போன்று!
காலுறை அணிவது,

----------------------

      ஒவ்வொரு முஃமினான இஸ்லாமியருக்கும் உம்ரா செய்வது நன்மையாகும்.

    யா அல்லாஹ் எங்களுக்கும் எங்கள் சமுதாய மக்கள் அனைவருக்கும் உம்ரா செய்யக்கூடிய பாக்கியத்தை தந்து அருள் புரிவாய்யாக

                 ஆமீன்

- மலுக்ஸா இம்ரான் - பள்ளப்பட்டி

📌📌📌📌📌📌📌📌📌📌

No comments:

Post a Comment