Tuesday, 19 March 2019

🇮🇳🇮🇳🇮🇳இந்திய சுதந்திர போரில் இஸ்லாமியர்களின் பங்கு🇮🇳🇮🇳🇮🇳



தொடர் - 3

✍முஹம்மது இப்ராஹீம் யூஸுஃபி

அபாதி பானு பேகம்..

புகழ்பெற்ற, முகமது அலி, சௌகத் அலி சகோதரர்களின் தாய் இவர். மிக இளம் வயதிலேயே, சௌகத் அலி கான் என்பவருக்கு மணமுடிக்கப்பட்ட இவர், ஒரு பெண்ணும், ஐந்து ஆண்குழந்தைகளுமாக, ஆறு குழந்தைகளுக்குத் தாயானார்.  முப்பது வயதிலேயே கணவரை இழந்தாலும், மன உறுதியோடு குழந்தைகளை வளர்த்தார். தன் நகைகளை அடமானம் வைத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தார்.

1921ம் வருடம், டிசம்பரில் அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்ட செய்தி வந்த போது, அதை அமைதியாகக் கேட்டார் பேகம். மேலும், முகமது அலி மன்னிப்புக் கேட்பாராயின் விடுவிக்கப்படுவார் என்ற செய்தி வந்த போது, 'அவன் இஸ்லாத்தின் மகன். ஒரு போதும் பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட மாட்டான்' என்று வீரமுடன் கூறினார்.

காந்திஜி, 'இந்த வயதான பெண்மணிக்குள், ஒரு இளவயதுப் பெண்ணின் வேகம் இருக்கிறது!' என்று புகழ்ந்துரைத்திருக்கிறார்.

பீ அம்மா என்றழைக்கப்படும் இவர் உணர்ச்சிமிக்க தேசியவாதி. இவரது குடும்பம் 1857 கிளர்ச்சியினால் அதிக பாதிப்புக்கு ஆளானது. இவர் பர்தா அணிந்தவாறே சுதந்திரத்திற்காக போராடவேண்டும் என்று கூட்டத்தில் கூடியிருந்த மக்களிடம் உத்வேகத்துடன் பேசியுள்ளார். வரலாற்றில் இவ்வாறு பேசிய முதல் பெண்மணி இவர். அபாதி பானு பேகம் சௌகத் அலி மற்றும் முகமது அலி ஆகியோரின் தாயாவார். இந்த சகோதரர்கள் கிலாபத் இயக்கத்திற்கும் ஒத்துழையாமை இயக்கத்திற்கும் தலைமை தாங்கினர். அவரது மகன்கள் கைது செய்யப்பட்ட பிறகு தனது பர்தாவை விலக்கிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய வங்கு வகித்தார். வெளிநாட்டுப் பொருட்களைத் தவிர்த்து இந்தியப் பெண்கள் காதி பயன்படுத்துவதை ஊக்குவித்தார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமைக்கு பெரும் பங்கு வகித்தார். பெண்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க உந்துதலளித்தார். 1924-ம் ஆண்டு காலமானார்.

மன உறுதி மிக்க இந்தப் பெண்களின் வாழ்வு, நமக்குள்ளும் ஒரு நம்பிக்கை விதையை ஊன்றுகிறது. பெண்கள் வலிமையானவர்கள் தான் எப்போதும்.

No comments:

Post a Comment