ஒரு மனிதருக்கு அவருடைய உறவுகளிலேயே தூய்மையான, உணர்வுபூர்வமான, பரிசுத்தமான உறவு தந்தைக்கும் மகளுக்கும் இடையே உள்ளஉறவுதான்.
அந்த இருவருக்கும் இடையிலான நுட்பமான உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.
என் மகளிடம் கேட்டேன் “என் மேல் நீ வைத்திருக்கும் அன்பை என்ன வார்த்தைகளால் குறிப்பிடுவாய்?” என்று . “எப்படி விளக்குவது என்று எனக்கு புரியவில்லை” என்று சொன்னாள்.
ஒரு தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு, வயதாக வயதாக தூரமாகி கொண்டே போகும். ஆனால், ஒரு தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு வயதாக வயதாக அவளுக்கு திருமணமாகி கணவன் வீட்டிற்கு சென்று விட்டாலும் கூட நெருக்கமாகி கொண்டே இருக்கும்.
அகில உலகத்திற்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இதற்கு விதி விலக்கல்ல. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது அதிக அளவு பாசம் உடையவர்களாக இருந்தார்கள்.
ஒவ்வொரு முறையும் வெளியூர் செல்கின்ற போது முதலில் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டிற்கு சென்று அவரிடம் விடை பெற்று பிறகு மஸ்ஜிதிற்கு சென்று தொழுது விட்டு புறப்படுவார்கள்.
ஊரில் இருந்து திரும்பும் பொழுது முதலில் மஸ்ஜிதிற்கு சென்று தொழுது விட்டு பிறகு நேராக ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்கு சென்று விட்டு தான் தன் வீட்டிற்கு செல்வார்கள்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் தன் தந்தையான நபியவர்கள் மீது அளவு கடந்த அன்பு உடையவர்களாக இருந்தார்கள்.
ஒரு முறை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரிலிருந்து திரும்பி வரும் பொழுது ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வீட்டிற்கு சென்றார்கள். வீட்டு வாசல் வரை வந்து நபியவர்களை வரவேற்ற ஃபாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணலார் அவர்களின் புனித முகத்திலும் கண்களிலும் முத்தமிட்டு அழலானார்கள். ஃபாத்திமாவே! ஏன் அழுகிறாய்? என்று கேட்டதற்கு, யா ரஸூலுல்லாஹ்! தங்களுடைய நிறம் மாறி விட்டது. தங்களுடைய ஆடைகள் பழையதாகிவிட்டன! இவைகளை நினைத்து அழுகிறேன் என்று கூறினார்கள். ஃபாத்திமாவே! அழாதே! அல்லாஹ் உன்னுடைய தந்தையிடம் ஒரு காரியத்தை கொடுத்து அனுப்பியுள்ளான்.
அல்லாஹு தஆலா அக்காரியத்தை இந்த பூமியின் மீதுள்ள குடிசை, மாளிகை தோலினால் ஆன கூடாரம் அனைத்திலும் கண்ணியமாகவோ, கேவலமாகவோ, (மக்கள் மனம் விரும்பியோ, நிர்பந்தமாகவோ) நுழைய வைக்கா மல் விட மாட்டான். இறுதியாக இரவு இடம் சென்றடையும் வரை அக்காரியம் சென்றடையும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
(ஹயாதுஸ்ஸஹாபா).
உண்மையில்,யாருக்கு அல்லாஹ் பெண் குழந்தையை கொடுத்திருக்கிறானோ அவர்கள் அல்லாஹ்வின் கருணைக்கு உள்ளானவர்கள். யார் பெண் குழந்தைகளை பேணி காத்து ஒழுக்கமுள்ளவர்களாக வளர்த்து இறை அச்சமுடைய ஆண்மகனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்களோ நிச்சயமாக அந்த பெண் குழந்தைகள் அந்த தந்தை சொர்க்கத்திற்கு செல்ல தகுதியுடையவர்களாக ஆக்குவார்கள்.
பெண் குழந்தைகள் நம் குடும்பத்தின் கண்மணிகள். அவர்களை பேணி பாதுகாப்போம்.
யா அல்லாஹ்! எங்களின் பெண் மக்கள் ஈமானில் உறுதி உள்ளவர்களாகவும் நல்அமல்கள் செய்பவர்களாகவும் உன்னுடைய கருணைக்கு தகுதி உள்ளவர்களாகவும் ஆக்கி அருள்வாயாக.
ஆமீன்..........
கணியூர் இஸ்மாயீல் நாஜி
கியாமத் நாளை நோக்கி குழுமம்
பதிவு நாள்: 15-03-2019
No comments:
Post a Comment