Tuesday, 24 April 2018

காவிரி பிரச்சனைக்கு இஸ்லாம் கூறும் தீர்வு!!!


இனம் மொழி பிரதேசம் போன்ற  உணர்வூகள் தூண்டப்படுவதன் காரணமாகவே காவிரி உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் தீர்வு காணப்படாமல் உள்ளன.

இந்த உணர்வுகளை ஓரம் கட்டி வைத்து விட்டு நியாயமான விதிமுறைகளை வகுத்து கொண்டு அந்த விதிமுறைகளை உறுதியுடன் நடைமுறைப்படுத்தினால் காவிரி பிரச்சனைக்கு விரைவாக தீர்வு காணப்பட்டு விடும்.

இஸ்லாம் இதற்கு நியாயமான பல விதிமுறைகளை வகுத்தளித்துள்ளது

தண்ணீர் யாருக்கும் சொந்தமானது அல்ல . அது அனைவருக்கும் பொதுவானது என்பது அதில் முதலாவது விதி.

தேவைக்கு மேல் இருக்கும் தண்ணீரை விற்க கூடாது என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்தனர் . ஆதாரம் : முஸ்லீம் (2925)

அடுத்ததாக தண்ணீர் ஓடும் பாதையில் (ஆறுகளில், வாய்க்கால்களில்) யார் அருகில் இருக்கிறார்க்ளோ அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது இரண்டாவது விதி .ஆதாரம் : புகாரி (2360)

ஆற்றுக்கு அருகில் உள்ளவர்கள் பயன்படுத்தியது போக மீதியை தான் மற்றவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். ஆயிரம் ஏக்கர் நிலத்தை பயிரிடும் அளவுக்கு தான் தண்ணீர் இருக்கிறது என்று வைத்து கொள்வோம் .

அனைவரும் உரிமை கொண்டாடி பத்தாயிரம் ஏக்கருக்கு பரவலாக விநியோகம் செய்ய முடிவெடுத்தால் அனைத்தும் பாழாகி போய் விடும். அந்த தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் போய் விடும் .

எனவே இருக்கும் தண்ணீரை மதிப்பிட்டு அதை எத்தனை ஏக்கருக்கு பயன்படுத்த முடியும் எனக் கணக்கிட்டு தண்ணீருக்கு அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அந்த அளவுக்கு விநியோகம் செய்ய வேண்டும் என்பது தான் இஸ்லாம் காட்டும் வழி .

தண்ணீர் உபரியாக இருக்கும் போது தேவையை விட அதிகமாக இருக்கும்போது தொலைவில் உள்ளவர்களுக்கு தடை செய்தால் அது கடுமையான குற்றம் என்று இஸ்லாம் கூறுகிறது .

நியாய தீர்ப்பு நாளில் மூன்று நபர்களிடம் அல்லாஹ் பேசமாட்டான் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் . அவர்களில் உபரி நீரை மற்றவர்களுக்கு தடுத்தவனும் ஒருவன் எனக் கூறினார்கள் . ஆதாரம் : புகாரி 2369, 7446,)

உபரி நீரை மற்றவர்களுக்கு தடை செய்யாதீர்கள் என்று கடுமையான உத்தரவையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் பிறப்பித்துள்ளார்கள். ஆதாரம் : (2353, 2354,)

காவிரியில் பல வருடங்களுக்கு போதுமான தண்ணீர் இருந்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தர கூடாது என்பது கர்நாடகத்தின் நிலையாக உள்ளது .

கர்நாடகத்தின் தேவைக்கே தண்ணீர் போதவிட்டாலும் திறந்து விட்டே ஆக வேண்டும் என்பது தமிழ் மக்களின் நிலையாக இருக்கிறது .

இந்த நிலை மாறினால் மட்டுமே இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும் .
தமிழன், கன்னடன், என்ற உணர்வுகளை மறந்து தண்ணீரின் அளவையும் தேவையையும் மதிப்பிட்டு தண்ணீரை விநியோகம் செய்ய அதிகாரம் படைத்த நியாயமான அமைப்பு ஏற்படுத்தப்பட்டு இந்த நிலையை தயவு தாட்சணயமின்றி நடைமுறைப்படுத்தினால் , ஓடும் தண்ணீர் குறித்த எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும் ...

இன்ஷா அல்லாஹ் .

நன்றி - இணையம்.

No comments:

Post a Comment