Monday, 19 February 2018

உண்மையான அறிவு எது?


அருமை அண்ணன் Siraj Ul Hasan அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்.

புத்தக ஆய்வுக்காக வந்திருந்த ததப்புருல் குர்ஆன் என்கிற புத்தம் புதிய குர்ஆன் விரிவுரை நூலின் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே, ‘நினைத்தாலே வியப்பாக இருக்கின்றது. ஒரு இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பும் தமிழில் இந்த அளவுக்கு மூலாதார நூல்கள் கிடைக்கின்ற நாள் வரும் என்று நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. புகாரி, முஸ்லிம் என்று நபிமொழி தொகுப்பு நூல்கள் முதல் குர்ஆன் விரிவுரை நூல்கள் வரை வந்துவிட்டுள்ளன’ என்று வியந்தார்.

‘உண்மைதான். இன்று கூகுளில் தட்டினாலே இஸ்லாத்தைப் பற்றிய அருமையான நூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் ஆய்வுகளும் வாசிக்கக் கிடைக்கும்’ என்று ஒப்புக் கொண்டு ‘என்றாலும்... ஒன்றைக் கவனித்தீர்களா? இத்துணை தகவல்கள் கிடைக்கின்ற தொலைவில் இருந்தும் மக்கள் மத்தியில் அறியாமை தானே இருக்கின்றது? நபிமொழி, ஆதாரம் என்று அழகாகப் பேசினாலும் அது மனத்தை ஈர்ப்பதாக இல்லையே, ஏன்?’ என்றேன்.

சிராஜுல் ஹஸன் சாகிப் யோசனையில் மூழ்கிவிட்டார்.

என்னுடைய அறைக்குத் திரும்பிய பிறகும் அந்தக் கேள்வியும் உரையாடலும் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.

முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு இன்று இஸ்லாத்தைப் பற்றிய நூல்கள் மிக அதிக அளவில் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. அவை பெரும்பாலும் விற்றுத் தீர்ந்தவாறு இருக்கின்றன.  என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு பள்ளிவாசல்தோறும் குர்ஆன் விரிவுரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நபிமொழி விளக்க வகுப்புகளும் நடக்கின்றன.  என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

முன் எப்போதைக்கும் இல்லாத அளவுக்கு வர்ட் டூ வர்ட் சொல்லுக்கு சொல் குர்ஆனைப் புரிந்துகொள்கின்ற வகுப்புகளும் பெரும் அளவில் நடக்கின்றன. இதில் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு பங்கேற்று வருகின்றார்கள். என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நம்முடைய இளவல்கள் நபிமொழிகளை வாசிக்கின்றார்கள். ஆதாரங்கள், வரலாற்று நிகழ்வுகள் போன்றவற்றையும் விரல் நுனியில் வைத்திருக்கின்றார்கள். அழகாக வாதிடவும் செய்கின்றார்கள். என்றாலும் சம்திங் மிஸ்ஸிங்.

நமக்கு முன்பு வாழ்ந்தர்கள் குர்ஆன் மொழிபெயர்ப்பு கிடைக்காத நிலையிலும் ஈமானிய ஒழுக்கத்திலும், நடைமுறை வாழ்விலும் நம்மை விட சிறந்த முஸ்லிம்களாய் முத்திரை பதித்திருக்கின்றார்கள்.

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு கூகுளில் தேடித் தெரிந்து கொள்கின்ற வாய்ப்பு இருக்கவில்லை. முகநூலில் உடனுக்குடன் ஆழிய செய்திகளைக் கற்றுக்கொள்கின்ற நற்பேறு கிடைத்திருக்கவில்லை. என்றாலும் அவர்களுடைய பேச்சும் வாக்கும் பெரும் வலிமை பெற்றிருந்தன.

எதனை மிஸ் செய்திருக்கின்றோம்? எங்கு தவறு இழைக்கின்றோம்? நம்முடைய பலவீனத்தின் ஆணிவேர் எது?
கேள்விகள் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.

இறுதியில் அண்ணல் நபிகளாரின் அமுத வாக்கு ஒன்றில் அந்தக் கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்துவிட்டது.

ஒரு முறை அண்ணல் நபிகளார்(ஸல்), ‘ஒரு காலம் வரும். அப்போது மக்களிடமிருந்து அறிவு அகற்றப்பட்டு விடும்’ என்று சொன்னார்கள்.

ஜியாத் பின் லபீத்(ரலி) என்ற தோழர் வியப்புடன், ‘இறைத்தூதரே. நாங்கள் குர்ஆன் ஓதுகின்றோம். எங்களுடைய பிள்ளைகளுக்கும் ஓதக் கற்றுத் தருகின்றோம். அவர்களும் ஓதுகின்றார்கள். அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளுக்கும் ஓதக் கற்றுக்கொடுப்பார்கள். மறுமை நாள் வரை (சங்கிலித் தொடர் போல) இது நடந்து கொண்டே இருக்குமே..’ என்றார்.

அண்ணல் நபிகளார்(ஸல்) , ‘ஜியாதே! உம்மை மதீனாவிலேயே சிறந்த அறிவாளி என்று நினைத்திருந்தேனே. யூதர்களும் கிறித்தவர்களும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அதிகமாக ஓதி வருவதை நீர் பார்க்கவில்லையா? நாள்தோறும் ஓதி வந்தாலும் அவற்றிலிருந்து பயனீட்டிக் கொள்வதில்லையே’ என்றார்.

மனத்துக்குள் வெளிச்சம்...

எது அறிவு? ஏடுகளை வாசிப்பதால் மட்டுமே அறிவு கிடைத்துவிடுவதில்லை. வாசித்தபடி வாழ்வதற்குப் பெயர்தான் அறிவு. அறிந்துகொண்டதை வாழ்வில் கடைப்பிடிப்பதற்குப் பெயர்தான் அறிவு. கற்றதற்கேற்ப செயல்படாமல் போகும் போது கற்றதால்தான் என்ன பயன்?

இன்று நாம் எப்படி நடந்துகொள்கின்றோம்?

அதிகமாக ஓதுகின்றோம். நாள்தோறும் ஓதுகின்றோம். மற்றவர்களுக்கும் கொடுக்கின்றோம். குர்ஆனிய செய்தியை விளக்குகின்ற கருத்துப் படங்களைப் பதிவிடுகின்றோம். ஒருவருக்கொருவர் குர்ஆனின் செய்தியைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைகின்றோம். அத்துடன் நின்றுவிடுகின்றோம்.

அதனைப் பின்பற்றி நடக்கின்றோமா? ஓதுகின்ற வசனத்தை வாழ்வில் கடைப்பிடிக்கின்றோமா?

செயல் செயல் செயல் ஒன்றே வெற்றி தரும். குர்ஆன் ஓதுவோம். குர்ஆனின்படி வாழ்வோம் வாருங்கள்.

Azeez luthfullah

No comments:

Post a Comment