Friday, 29 December 2017

ஹாரூன் அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு தொடர் - 2


தங்களது நாட்டை விட்டு சென்று பல்லாண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய நபி மூஸா அலை அவர்களை இவர்கள் தான் அடையாளம் கண்டு கொண்டார்கள். அடுத்த நாள் நபி மூஸா அலை அவர்களுடன் இவர்கள் ஃபிர்அவ்னின் அரசவைக்கு சென்று அவனுக்கு நேர்வழியையும் இறைவனின் மாண்பையும் விளக்கினார்கள். நபி மூஸா அலை அவர்களது பிரச்சாரத்திலும் அதற்காக அவர்கள் போராடிய போராட்டங்களிலும் இவர்கள் அவர்களது வலக்கரம் போன்று விளங்கினார்கள்.

மூஸா நபியின் பிரதிநிதி

இரண்டாவது முறையாக மூஸா நபி அவர்கள் தூர்ஸினாய் மலைக்குச் சென்றபோது இவர்களையே அவர்கள் தங்கள் பிரதிநிதியாக நியமித்துச் சென்றார்கள். அப்போதுதான் ஸாமிரி பொன்னால் காளை மாட்டைச் செய்து அதனைக் கடவுளாக வணங்குமாறு பனீ இஸ்ராயீல்களை வழி கெடுத்தான். இவர்கள் எவ்வளவோ தடுத்தும் அந்த மக்கள் ஸாமிரியின் சூழ்ச்சிக்குப் பலியாகிவிட்டார்கள்.

சினத்துடன் திரும்பிய மூஸா அலைஹிஸ்ஸாம்

அதனை இறைவன் மூலம் உணர்ந்து அடங்காச் சினத்துடன் திரும்பிய நபி மூஸா அலை அவர்கள்,

(இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) ‘நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது; உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?’ என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) ‘என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) ‘பகைவர்களுக்கு என் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்’ இன்னும் என்னை அநியாயக்காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்’ என்று கூறினார். – அல்-குர்ஆன் 7:150

(இதற்கு ஹாரூன்:) ‘என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; ‘பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!’ என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்’ என்று கூறினார். – – அல்-குர்ஆன் 20:94

இறை ஆணைப்படி தௌராத் வேதத்தை வைப்பதற்கு ஓர் ஆலயத்தை நிர்மாணித்து அதன் நிர்வாகியாய் இவர்களை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நியமித்தார்கள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்......

பதிவு நாள்: 29-12-2017.

No comments:

Post a Comment