Saturday, 15 July 2017

ரமழானின் அடிமைகளா..? ரஹ்மானின் அடிமைகளா..?

ரமழானின் அடிமைகளா..?
ரஹ்மானின் அடிமைகளா..?
=========================

ரமழானில் பள்ளிவாசலை நோக்கி படையெடுத்து வந்த மக்கள் கூட்டம் ரமழானுக்குப் பின்னர் காணாமல் போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை. காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது. நமது மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதும் அவ்வாறுதானே..!

நோன்பு காலங்களில் பள்ளிவாசல்களில் சுனாமி போல் மக்கள் கூட்டம். பெருநாளுக்குப்பின் அலை அடித்து ஓய்ந்ததுபோல் பள்ளிவாசல்கள் எல்லாம் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

அனேக வணக்கங்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு வெறும் அடையாளங்களாக மாறிப்போயின. அடையாளங்கள் சமூகத்தில் எவ்வித தாக்கங்களை ஏற்படுத்துவதில்லை. நோன்பும் நமக்கு ஒரு சம்பிரதாயம் அவ்வளவுதான். சமூகத்தில் இந்த நோன்பு என்ன மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து செயல்படுவதாகத் தெரியவில்லை.

ஒரு மாதகாலம் உண்ணாமல் பருகாமல் தீமைகள் புரியாமல் மனக் கட்டுப்பாட்டுடன் இருக்கத் தெரிந்த நமக்கு 30 நாட்களுக்குப் பின்னர் அந்த உணர்வு காற்றில் கரைந்து போனதேன்..? மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என்று மாறிப்போனதேன்..?

எனில் நாம் ரமழானைத்தான் வணங்கியிருக்கின்றோமே தவிர ரஹ்மானை அல்ல. ரமழான் வரும் போகும்..ஆனால் அந்த ரஹ்மான்.. எப்போதும் நித்திய ஜீவனாக இருப்பவன். வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வந்து செல்பவனல்ல அவன். எப்போதும் நம்மோடு இருப்பவன் அவன். அந்த ரஹ்மான வணங்குவோம். ரமழானை அல்ல.

நோன்புகள் ஒருபோதும் முடிவதில்லை! திருக்குர்ஆனும் நம்மைவிட்டு எங்கும் சென்றுவிடாது! பள்ளிவாசல்கள் ஒருபோதும் மூடப்படுவதும் இல்லை! பிரார்த்தனைகளுக்கு ரமளானில் மட்டுமல்ல.. இனியும் பதில் கிடைக்கும்! நற்செயல்களுக்கு எப்போதும் நற்கூலி கிடைக்கும்! ஆகவே மரணம்வரை படைத்தவனை வணக்கும் மக்களாக மாறுவோம்!

ரமழானின் அடிமைகளாக அல்ல.. ரஹ்மானின் அடிமைகளாக மாறுவோம்!!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்யும் செயலையே அல்லாஹ் அதிகம் விரும்புகின்றான்” (புகாரி, முஸ்லிம்)

நூஹ் மஹ்ழரி
13-07-2017

No comments:

Post a Comment