Wednesday, 24 May 2017

பள்ளிவாசலும் சமூகத் தலைமையகமும்

பள்ளிவாசலும் சமூகத் தலைமையகமும்
======================================

முஸ்லிம்கள் ஒரு பகுதியில் திரளாக வசிக்கின்றார்கள் என்பதற்கான முதல் அடையாளமே பள்ளிவாசல்தான்.

இறையில்லம் என்ற கண்ணோட்டத்துடன் பள்ளிவாசல்களைப் பார்க்காமல் வெறும் ஒரு கட்டிடம் என்ற எண்ணத்துடன் மட்டுமே அவற்றைப் பார்க்கிறோம். ஆகவேதான் மக்களை ஒன்றிணைப்பதற்குப் பகரமாக.. சமூகத்தைப் பல கூறுகளாகப் பிரிக்கும் அடையாளமாக இன்றைய பள்ளிவாசல்கள் மாறிப்போயின. இது கவலைக்குரிய விஷயம்.

பள்ளிவாசல் என்பது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் உணர்ச்சியமயமாக இயங்கும் ஆலயமல்ல. சனிக்கிழமை மட்டும் பணிவோடு விழுந்து எழும் வழிபாட்டுத் தலமும் அன்று.

மாறாக இரவு பகல் எந்நேரமும் செயல்பட வேண்டிய ஒரு கலங்கரை விளக்கு. அப்படித்தான் அன்றைய பள்ளிவாசல்கள் இருந்தன. தொழுகையும் பயானும் முடிந்தவுடன்இன்றைய பள்ளிவாசல்கள் பூட்டப்படுவது பெரும் பரிதாபம்.

மஸ்ஜிதுந் நபவி என்று அழைக்கப்படும் அன்றைய மதீனத்துப் பள்ளிவாசல் எவ்வாறெல்லாம் செயல்பட்டது தெரியுமா..?

1) விடுதியுடன் கூடிய முதல் பல்கலைக் கழகம். அங்குதான் அஸ்ஹாபுஸ் ஸுஃப்பா எனும் புகழ்பெற்ற திண்ணைத் தோழர்கள் கல்வி கற்றனர்.

2) உடற்பயிற்சி மற்றும் இராணுவப் பயிற்சி மையம். மல்யுத்தப் போட்டி, குதிரைப் பந்தயம், ஒட்டகப் பந்தயம், ஆண்களின் ஓட்டப் பந்தயம் முதலான அனைத்துப் போட்டிகளும் அந்தப் பள்ளிவாசல் முற்றத்தில்தான் நடைபெற்றன.

3) பொருளியல் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகளைத் தீர்க்கும் இடம். தொழுகை முடிந்த உடன் மக்களை அழைத்து அன்றாடப் பிரச்சினைகளை மக்கள் மன்றத்தில் நபி (ஸல்) அவர்கள் எடுத்து வைப்பார்கள்.

4) மருந்தகம் (Medical camp). அறப்போரில் கலந்துகொண்ட பல வீரர்களுக்கு அங்கு வைத்துதான் சிகிச்சி அளிக்கப்பட்டுள்ளது.

5) விருந்தினர் இல்லமும் தூதரக அதிகாரிகள் தங்குமிடமும். நபிகளாரை சந்திக்க வரும் வெளிநாட்டுத் தூதுக் குழுக்கள் அங்குதான் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

6) பெண்களின் பள்ளிவாசல் வருகை. பாபுந்நிஸா - பெண்களுக்கான வாசல் என்று பொருள்படும் வாசல் ஒன்று அப்போதும் இப்போதும் அந்தப் பள்ளிவாசலில் இருக்கிறது.

7) நீதிமன்றம். பல தீர்ப்புகள் அங்கு வைத்துதான் வழங்கப்பட்டிருக்கின்றன. மட்டுமல்ல பள்ளிவாசலின் முற்றமே அன்றைய சிறைச்சாலையாக இருந்துள்ளது.

இன்னும் பலவகைகளில் அன்றைய பள்ளிவாசல் சமூகத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்காக இருந்துள்ளது.

ஆனால் இன்று...?

வாரத்திற்கு ஒருமுறை ஜும்ஆ தொழுகையின்போது மட்டுமே பள்ளிவாசல்கள் நிரம்பி வழிகின்றன. ஐவேளைத் தொழுகைக்கு ஆளே இல்லாமல் இறையில்லங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.

எனில், வாரத்திற்கு ஒருமுறை மட்டும் கூடுவதற்காக பலகோடி ரூபாயில் பள்ளிவாசல்கள் விசாலமாக்கப்பட்டு, மற்ற நேரங்களில் அதனைப் பயன்படுத்தாமல் பூட்டி வைப்பது எந்த வகையில் நியாயம்..?

நபிகளாரின் பள்ளிவாசலைப் போன்று அனைத்துப் பள்ளிவாசல்களும் செயல்பட்டால் முஸ்லிம் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு அதுவே பெரும் உறுதுணையாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நூஹ் மஹ்ழரி

No comments:

Post a Comment