*சுன்னாவை பாதுகாப்பதில் சஹாபாக்களின் பங்கு தொடர் - 2
*தன்னை விடுதலை செய்த எஜமானர் களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமையின் மீது அல்லாஹ்வின் சாபமும் மற்றும் மக்கள் அனைவருடைய சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வணக்கம் (நபி லான) கூடுதலான வணக்கம் எதையுமே அல்லாஹ் ஏற்க மாட்டான்.” அறிவிப்பவர்: யஸீத் பின் ஷரீக் அத்தைமி (ரஹ்) (நூல்: புகாரி-1870, 7300)*
*மக்கா வெற்றிக் கொள்ளப்பட்ட ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் மக்களின் மானம், மரியாதை, மக்காவின் புனிதம் மற்றும் குற்றவியல் சட்டங்கள் பற்றி கூறிய போது, யமன் வாசிகளில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! அதை எழுதித் தாருங்கள் என்று கேட்டார். அப்போது நபியவர்கள் இவருக்கு எழுதிக் கொடுங்கள் என கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்) (நூல்: புகாரி 112, 2434)*
*அம்ரு இப்னு உமையா(ரஹ்)அவர்கள் கூறியதாவது: நான் அபூ ஹுரைரா(ரலி) அவர் களிடம் ஒரு ஹதீஸை கூறினேன். அந்த ஹதீஸை அபூ ஹுரைரா (ரலி) ஏற்க மறுத்தார்கள். அப்போது நான் இந்த ஹதீஸை உங்களிடமிருந்துதான் செவியுற்றேன் என்று கூறினேன். என்னிடம் செவியுற்றிருந்தால் அது என்னிடம் எழுதப்பட்டிருக்கும் என கூறிவிட்டு என்னுடைய கையை பிடித்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து நபிகளாரிடமிருந்து கேட்டு எழுதி வைக்கப்பட்ட ஹதீஸ் நூல்களை எடுத்துக் காட்டி உமக்கு நான் ஹதீஸ் அறிவித்திருந்தால் அது என்னிடம் எழுதி வைக்கப்பட்டிருக்கும் என்றார்கள். (நூல்: பத்ஹுல் பாரி அர்ரத்து அலாமன் அன்கர ஹுஜ்ஜியதஸ் சுன்னா பக்கம்.465.)*
*சஹாபாக்களால் பதிவுசெய்து வைக்கப் பட்ட ஹதீஸ் தொகுப்பு ஸஹீபதுஸ் ஸஹீஹா என்றும் ஸஹீபதுஸ் ஸாதிகா என்றும் அழைக்கப்பட்டது. இந்த ஸஹாபாக்கள் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) அவர்களின் “முஸ்னத் அஹ்மதில்” பதிவாக்கப் பட்டுள்ளது. சஹாபாக்களின் மாணவர்களால் எழுதப்பட்ட தொகுப்பும் அவ்வாறே பாதுகாக்கப் பட்டது.*
*சஹீபாக்கள் என பிரபல்யமான தொகுப்புக்கள் பின் வருமாறு அறியப்பட்டது:*
*சஹாபா அபூபக்கர் சித்தீக்(ரலி)*
*சஹாபா அலி(ரலி)*
*சஹாபா அப்துல்லாஹ் இப்னு அவ்பா(ரலி)*
*சஹாபா அபூமூஸல் அஷ்அரி(ரலி)*
*சஹாபா ஜாபிர் இப்னு அப்துல்லாஹ்(ரலி)*
*சஹாபா அபூ ஹுரைரா(ரலி)*
*சஹாபா சஹ்த் இப்னு உபாதா அல் அன்சாரி(ரலி)*
*சஹாபா சும்ரத் இப்னு* *ஜூன்துப் (ரலி)*
*சஹாபா அப்துல்லாஹ் இப்னு அவ்பா(ரலி)*
*மூன்றாம் நூற்றாண்டில் ஹதீஸ் தொகுப்பின் பணியின்போது இவை அனைத்தும் திரட்டப்பட்டு பதியப்பட்டன. (நூல்: கிதா பதுஸ் சுன்னதின் நபவிய்யா பீ அஹ்தின் நபி (ஸல்) வஸ் ஸஹாபா வ அஸ ருஹா பி ஹிப்லிஸ் ஸுன்னதின் நபவி பக்கம் 28. இதத்வீனஸ் ஸுன்னதின் நபவிய்யா நஷ்அத்உ வ ததவ்வுருஉ மினல் கர்னில் அவ்வல் இலா நிஹாயதில் கர்னில் தாஸிஹில் ஹிஜ்ரி பக்கம்.78.)*
*அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மாணவர் பஷீர் இப்னு நஹீக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:*
*நான் அபூ ஹுரைரா (ரலி) யிடமிருந்து கேட்ட ஹதீஸ்களை எழுதிக் கொள்வேன். அவரை விட்டு பிரியும் போது “உங்களிடமிருந்து கேட்டு எழுதிக் கொண்ட ஹதீஸ்கள் இவைகள் சரிதானா என்று பாருங்கள்” என்பேன். அவைகளைப் பார்த்துவிட்டு “ஆம் சரிதான்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுவார்கள். (நூல்: அர்ரத்து அலாமன் யுன்கிர உஜ்ஜியதஸ் சுன்னா பக்கம் 457)*
*அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை ஹதீஸ்களை எழுதி வைத்துக் கொள்ளுமாறு தூண்டுவார்கள். என் அருமை பிள்கைளளே! ஹதீஸை நூலுடன் தொடர்ப்பு படுத்திக் கொள்ளுங்கள் என்றும் எழுதாதவரின் கல்வியை கல்வியாக நாங்கள் கணக்கிட மாட்டோம் என்றும் கூறு வார்கள். (நூல்: தத்வீனுஸ் ஸூன்னதில் நபவிய்யா பக்கம் 77)*
*ஹதீஸை நூலுடன் தொடர்புபடுத்திக் கொள்ளுங்கள் என உமர் (ரலி) கூறினார்கள். (நூல்: தத்வீனுஸ் ஸுன்னதின் நபவி பக்கம்77)*
*அப்துர்ரஹ்மான் இப்னு அபீயஃலா (ரஹ்) கூறுகிறார்கள்:*
*நான் 120 க்கும் அதிகமான அன்சாரி நபித்தோழர்களை சந்தித்துள்ளேன். அவர்களில் ஒருவர் ஒரு ஹதீஸை கூறினால் அதற்கு இன்னுமொரு நபித்தோழரை பொறுப்பாக்குவதை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள். அவ்வாறே ஏதேனும் ஒரு தீர்ப்பை கூறினால் அதற்கும் ஒரு தோழரை பொறுப்பாக்கிக் கொள்வதை விரும்பக் கூடியவர்களாக இருந்தர்கள். (நூல்: தத்வீனுஸ் ஸுன்னதின் நபவிய்யா பக்கம் 31)*
*ஹதீஸ்களை எழுதிவைத்துக் கொள்ள அனுமதி வழங்கிய நபி (ஸல்) அவர்கள் கடைசி வரை அந்த அனுமதியை ரத்துச் செய்யவில்லை என்பதை பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.*
*நபி(ஸல்) அவர்களுக்கு மரணம் நெருங்கி விட்ட நேரத்தில் “என்னிடம் ஒரு ஏட்டைக் கொண்டு வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு ஏட்டை எழுதித் தருகிறேன். அதன் பின் நீங்கள் வழி தவற மாட்டீர்கள்...” என கூறினார்கள். (நீண்ட ஹதீஸின் சுருக்கம். (நூல் :புகாரி 114, 7366, 4432, 5669)*
*இன்ஷா அல்லாஹ் தொடரும்.....*
No comments:
Post a Comment