Saturday, 27 May 2017

ரமலானின் சிறப்புகள் - 1

 💜 *ரமலானின் சிறப்புகள்(1/2)*

🌐 *வர இருகின்ற ரமலான் மாதத்தின் சிறப்புகளாக அகிலத்தின் அதிபதியாகிய அல்லாஹ் கூறுவதாவது*

1. *திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம்.*

ரமாளான் மாதம் மற்ற மாதங்களைப் போன்று ஒரு மாதமானாலும், ‘அம்மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கப்பட்டது’ என்ற சிறப்பைப் பெறுகிறது.

அல்லாஹ் திருமறையில் சொல்கிறான்:

﴿ شَهْرُ رَمَضَانَ الَّذِيْ اُنْزِلَ فِيْهِ الْقُرْاَنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِّنَ الْهُدَى وَالْفُرْقَانِ ﴾

‘ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது’. (அல்குர்ஆன் 2 : 185)

2.  *நோன்புக்குரிய மாதம்.*

உலகமகா அற்புதமான திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் இறக்கப்பட்ட காரணத்திற்காக அந்த ரமளான் மாதத்தில் நோன்பு வைக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளை. இது அதற்குரிய மற்றொரு சிறப்பு.

அல்லாஹ் சொல்கிறான்:

﴿ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ ﴾

‘ஆகவே எவர் அம்மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்கட்டும்’. (அல்குர்ஆன் 2 : 185)

3. *சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.*

إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ

‘ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1898, முஸ்லிம் 1956)

மற்றொரு நபிமொழியில்,

..... وَفُتِحَتْ اَبْوَابُ اْلجَنَّةِ فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ…

‘..சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, அவற்றின் எந்த வாயிலும் மூடப்படுவதில்லை…’ நபிமொழி (அபூஹுரைரா (ரலி), திர்மிதி – 618, இப்னுமாஜா 1642)

முஃமின்களின் ஒரே குறிக்கோள் சொர்க்கத்தை அடைவதாகும், அந்த சொர்க்கத்தின் வாசல் கதவுகள் ரமளான் மாதத்தில் தட்டாமலேயே திறக்கப்படுகின்றன.

*அந்த சொர்க்கத்தில் நுழைவதற்குறிய தகுதியை அடைவதற்கு சிறந்த மாதம் தான் ரமளான் மாதமாகும்*

மொத்தத்தில் சொர்க்கத்தில் நுழைவதற்கு முஃமின்கள் இதன் மூலம் ஆர்வமூட்டப்படுகிறார்கள். அதாவது சொர்க்க வாசலை திறந்து வைத்து, அதில் நுழைவதற்குரிய முயற்சியில் ஈடுபடுமாறு அல்லாஹ் முஃமின்களை அழைக்கிறான்.

4. *வானத்தின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.*

إِذَا دَخَلَ شَهْرُ رَمَضَانَ فُتِحَتْ اَبْوَابُ السَمَاء ..…

‘ரமளான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன…’ – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1899)

வானத்தின் வாயில்கள் இரண்டே சமயங்களில் தான் திறக்கப்படும். ஒன்று ரமளான் மாதம் மற்றொன்று கியாமத்து நாள். அல்லாஹ் சொல்கிறான்:

﴿ وَّ فُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ اَبْوَابَا ﴾

‘வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும’; – (அல்குர்ஆன் 78 : 19)

ரமளான் மாதத்தில் வானவர்களுக்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு இருக்கும், ஏனெனில் அம்மாதத்தில் அவர்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

5. *அருளின் வாயில்கள் திறக்கப்படும் மாதம்.*

إِذَا كَانَ رَمَضَانُ فُتِحَتْ اَبْوَابُ الرَحْمَةِ …..

‘ரமளான் மாதம் ஆகிவிட்டால் அருளின் வாயில்கள் திறக்கப்படுகின்றன’…. – நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1957)

அருள் வாயில்கள் திறக்கப்பட்டு மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் ரமளான் மாதத்தில் மடை திறந்த வெள்ளம் போல் அபரிமிதமாக அருள் புரிகிறான். அல்லாஹ்வின் அருளினால் மட்டுமே சுவர்க்கம் செல்ல முடியும்.

🌷🌷🌷.தொடரும்.🌷🌷

பதிவு நாள்: 27-05-2017

No comments:

Post a Comment